விமர்சனங்கள் வீழ்த்துவதில்லை
விமர்சனங்கள் வீழ்த்துவதில்லை
நம்மை நோக்கி வீசப்படும் சொற்கள்
நேர்மறையாக நாம் இருக்கலாம் எதிர்மறையாக வரும் இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் நாம் நமக்குச் சாதகமாக தந்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விமர்சனங்கள் எதிர்மறையாக வந்ததால் நாம் எந்த இடத்தில் சறுக்கி இருக்கிறோம் என்று பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும்.
நேர்மறையாக வந்தால் அந்தப் பெருமையை தலையில் அதிகமாக ஏற்றிக் கொள்ள கூடாது.
எப்படி இருந்தாலும்
காய்தத மரம் கல்லெறிபடத்தான் செய்யும்.
இந்த இடத்தில் இந்தப் பழமொழி மிகவும் ஏற்புடையது.
அருமையான அனுபவமொழி.
அனுபவித்து எழுதப்பட்ட மொழி.
ஒரு மரம் காய்த்திருந்தால் மட்டுமே பிறரைத்
திரும்பிப் பார்க்க வைக்கும்.
மொட்டையாய் ஒரு மரம் நின்று கொண்டிருந்தால்
யாருமே அதனை எட்டிப் பார்ப்பதில்லை.
ஏதோ ஒரு மரம் நிற்கிறது அவ்வளவுதான்.
அதற்குமேல் அந்த மரத்தை யாரும்
அண்ணாந்துகூட பார்க்க மாட்டார்கள்.
மரம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால்
அதாவது
இலை, காய், கனிகள் என்று பார்ப்பவரைக் கவரும் விதத்தில் இருந்தால்
அண்ணாந்து பார்க்க வைக்கும்.
அனைவர்க்கும் அந்த மரத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட வைக்கும்.மரத்தைப் பார்த்துப்
பொறாமைப்பட வைக்கும்.
அதன் தண்டினைத் தட்டிப் பார்க்க
வைக்கும்.
கிளைகளை ஆட்டிப் பார்க்க வைக்கும்.
காய்களின் மீது
கல்லெடுத்து வீச வைக்கும்.
வண்டுகளையும் தேனீக்களையும்
பட்டாம்பூச்சிகளையும் சுற்றி சுற்றி பறந்து வர வைக்கும்.
அரிவை விருந்துக்கு அழைக்கும்.
இவை எல்லாம் நடப்பது எதனால்?
மரத்தின்மீது இருக்கும் விருப்பத்தினாலா?
இல்லை. மரத்தின் பலனை நாமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை.
நமக்கும் ஏதாவது
கிடைக்காதா என்ற ஏக்கம்?
வழிப்போக்கர்கள் கண்களை எல்லாம்
உறுத்தும்.
அந்த உறுத்தல் கைகளில் கல்லை எடுத்து
வீச வைக்கும்.
எதுவரை காய், கனிகள் இருக்கிறதோ
அதுவரை கல் வந்து விழத்தான் செய்யும்.
மொட்டையாக இருந்தால் கிட்ட யாரும் வருவதில்லை.
கல்லெறியும் படுவதால் மரம் பல நேரங்களில்
காயப்பட்டுப் போகலாம்.
அதற்காக அடுத்த வருடம் நான்
காய்க்கவே மாட்டேன் என்று முரண்டு பிடித்தால்...
யாரும் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள்.
பொட்டல் காட்டில் நிற்கும் மொட்டை மரமாக
தனிமையில் நிற்க வேண்டியதுதான்.
எது எப்படியோ கல்வீசும் நபரைவிட
மரம் உயரத்தில் இருப்பதென்னவோ உண்மை.
வளர்ச்சி இருக்கும் இடத்தை நோக்கி
கற்கள் வீசப்படுவது எதார்த்தம்.
இது போன்றதுதான் நம்மீது வீசப்படும்
விமர்சனங்களும்.
விமர்சனங்கள் ஒருபோதும் வீழ்ச்சியடைய வைப்பதில்லை.உங்களில் வளர்ச்சி இருந்தால் மட்டுமே
உங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படும்.
உங்களிடம் ஏதோ ஒரு தனித்தன்மை
மற்றவர்களை விடவும்
அதிகமாக இருக்கிறது. அதனால்தான்
மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம்
திரும்புகிறது.
உங்களை நோக்கி விமர்சனக் கணைகள்
வீசப்படுகின்றன.
அவை உங்களைக் காயப்படுத்தலாம்.
அதற்காக நீங்கள் பின்வாங்கி
அப்படியே நின்றுவிட்டால்....
மொட்டை மரமாக வெறுமையாய்
எதற்கும் உபயோகமற்றவர்களாய் நிற்க வேண்டியது வரும்.
என்ன வந்தாலும் வரட்டும்.
காய்ப்பது என் கடமை.
ஓடுவது என் உரிமை.
நதி போல நான் ஓடிக்கொண்டே இருப்பேன்.
என்மீது வீசப்படும் கற்கள் அங்கேயே வீழ்ந்த
இடத்தில் கிடக்கலாம். அல்லது சற்று தூரம்
வரை உருண்டு வரலாம்.. ஆனால் தொடர்ந்து நம்
பயணத்தில் கூடவே வர முடியாது.
விமர்சனங்களும் அப்படித்தான்.
சில விமர்சனங்கள் சற்று சலனப்பட
வைக்கும். சில அப்படியே காணாமல் போகும்.
எதற்காகவும் நம் பயணம் தடைபட்டு விடக்
கூடாது என்பதில் நாம் உறுதியாக
இருக்க வேண்டும்.
போற்றுவார் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்.
நான் என் கடமையை உண்மையாய் செய்து
கொண்டே இருப்பேன்.
என் உழைப்பை ஒருபோதும்
யாருக்காகவும் எதற்காகவும்
எந்த இடத்திலும் நிறுத்திவிடப்
போவதில்லை .
என் இலக்கை அடையும்வரை நில்லாமல் ஓடிக்
கொண்டே இருப்பேன் என்று நமது ஓட்டம் இருக்கட்டும்.
கல்லெறியட்டும்...அவை காணாமல் போகும்.
என் பாதையை அது அடைக்கப் போவதில்லை.
எந்தச் சொற்களும் என் பாதையைத் தடுத்து விடப் போவதில்லை.
என் பாதை வலுவான சொற்களால் கட்டமைக்கப்பட்டது.
அதிலுள்ள சொற்களை யாரும்
விமர்சனக் கணைகளால் வீழ்த்திவிட முடியாது.
இந்தப் புரிதலோடு நம் பயணம் தொடரட்டும்.
வாழ்த்துகள்.
Comments
Post a Comment