கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
அனைவருக்கும் கூற்றம், கூற்றுவன் என்றால்
ஒரு நடுக்கம். கலக்கம். அச்சம்.
அந்தச் சொல்லைச்
சொல்லாமலேயே கடந்து
போய்விட வேண்டும் என்று நினைப்பர்.
நாம் நினைத்த நேரத்தில்
வருவதற்கும் போ என்றால் போவதற்கும்
கூற்றுவன் என்ன நாம்
வைத்த ஆளா?
அது யாருப்பா? கூற்றுவன்?
நீ கண்டியா...என்று யாரிடமாவது
கேட்டுப்பாருங்கள். ஊ..ஹூம்
என்று உதட்டைச் பிதுக்குவர்.
யாரும் தெரியாத ஒருவர்மேல்
ஏன் இந்த அச்சம்?
ஏனிந்த கலக்கம்?
கூற்றமாவது ...கூற்றுவனாவது?
இப்படியொரு இறுமாப்போடு
நடந்தேன்.
"யார் சொன்னது யாருக்குமே
கூற்றம் தெரியாது
என்று...?
பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே
இருட்டு என்பது போலல்லவா
இருக்கிறது!"
இப்படி ஒரு குரல் கேட்க திரும்பிப்
பார்த்தேன். திருதிருவென்று விழித்தேன்.
அங்கே.......அதே புன்னகையாள்
என்னைப் பார்த்து
மெல்ல நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
"நீங்கள் கூற்றுவனைப் பார்த்தீங்களா?'
இந்தமுறை சற்று கடுமையாகவே
கேட்டுவிட்டேன்.
"இதுதானே உனக்குக் கூற்றம்" என்றார்.
"
"நான் என்ன கேட்கிறேன். நீங்கள்
என்ன சொல்கிறீர்கள்...?".முரட்டுத்தனமான
கேள்வியைக் கேட்டு அதிர வைக்கலாம்
என்று நினைத்தேன்.
"கூற்றத்தை எங்கே போய் தேடுகிறாய்?
உன் சொல்லில் இருக்கிறது கூற்றம் "என்றார்.
"என் சொல்லிலா?"
"ஆமாம்.... உன் சொல்லில்தான்.
கற்றுணர்ந்தவள் நான். என் சொல்லை
நம்ப மறுக்கும் கற்றறிவில்லாத
உன் சொல்லே
உனக்குக் கூற்றம் "என்றார்.
வாய் பேச முடியவில்லை..
மௌனியானேன்.
"என்ன பேச்சைக் காணோம்.
கூற்றம் என்றதும் கூடவே அச்சம்
வந்து அப்பிக்கொண்டதோ?"
என்றார்.
தலையை அங்குமிங்குமாக அசைத்தேன்.
"யார்யாருக்கு எது எது கூற்றம்
என்று பட்டியலிடட்டுமா? "என்றார்.
சற்று மகிழ்ச்சி.
அவர் என்னை மட்டும் சொல்லவில்லை.
என் துணைக்கு வேறு யாரெல்லாமோ
வரப்போகிறார்கள் .....
வரட்டும்...வரட்டும்....
நீயும் மாட்டினாயா...?...நீயும்
மாட்டியா?..... நானும் சிரிக்கத்தான்
போகிறேன் என்று
அதிகப்படியான ஆசை மேலோங்க
"சொல்லுங்கள்" என்றேன் உற்சாகமாக.
இதோ கேள் ....
"கல்லாத மாந்தருக்குக் கற்று உணர்ந்தார்
சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்
மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய்கூற்றம்
கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் "
மூதுரை : பாடல் - 27
என்று பாடி முடித்தார் ஔவை.
"கல்வி அறிவில்லாதவர்க்கு
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்.
தருமம் செய்ய விருப்பம்
இல்லாதவர்க்கு தருமம் அதாவது
அறம் கூற்றம்.
வாழை மரத்திற்கு
தான் ஈன்ற காய் கூற்றம்.
குடும்பத்தோடு ஒத்து வாழாத பெண்
வீட்டிற்குக் கூற்றம்.
இப்போது புரிகிறதா "என்றார்.
புரிகிறது ...புரிகிறது....
கூற்றம் என்றால் அழிவு ,
துன்பம் இப்படி அவரவர்
மனதிற்கு ஏற்றபடி பொருள்
எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறீர்கள்.
இல்லையா?
நான் இதுவரை கூற்றம்
என்றால் எமன் என்று
நினைத்திருந்தேன்." என்றேன்.
"எமன் என்றாலே அழிக்கப் பிறந்தவன்
என்றுதானே பொருள்."என்றார்.
கூடவே,
"கல்லாத மாந்தருக்குக்
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம் "
என்று சொல்லிவிட்டு
என் முகத்தைப் பார்த்தார.
எனக்குச் சுரீரென்றிருந்தது.
"மறுபடியும் என்மீது சாட்டையைச்
சுழற்றுகிறீர்களா?"என்றேன்.
புன்னகையை விடையாகத்
தந்து நகர்ந்துவிட்டார்.
படித்தவர்களிடம் ஏதாவது
கேள்வியைக் கேட்கிறேன் என்று
கூற்றத்தைக் கூடவே கூட்டி
அலையத் கூடாது என்ற தீர்மானததோடு
இங்கிருந்து செல்கிறேன்.....வரட்டா...?
Comments
Post a Comment