பல கற்றோம் யாமென்று....

பல கற்றோம் யாம் என்று. தற்புகழ வேண்டா...



"கற்றது கைம்மண்ணளவு;
கல்லாதது உலகளவு"
என்பார் ஔவை.

ஆனால் நிறைய புத்தகம் படிப்பவர்களுக்கு
நமக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு
வந்துவிடும்.அதன் காரணமாக இயல்பாக ஒரு
தற்பெருமை வந்து ஒட்டிக் கொள்ளும்.

எல்லாம் தெரியும் என்பது வேறு. 
நமக்கு மட்டும்தான் எல்லாம்
தெரியும் என்பது வேறு.

இப்படிப்பட்ட சிந்தை உள்ளவர்கள் 
வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும்
மனதிற்குள் ஓர் ஓரத்தில் இந்தப்
பெருமை பதுங்கியிருக்கும்.

நேரம் பார்த்து வெளியில் எட்டிப் 
பார்த்து உள்ளேன் ஐயா என்று
குரல் கொடுத்துச் செல்லும்.


"அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து
அடங்கல்" என்பார் அதிவீர ராமபாண்டியர்.

அந்த நினைப்பு கொஞ்சமாவது 
மனதில் இருந்தால் தற்பெருமை வராது.

படிப்பு என்பது வேறு. அனுபவ அறிவு
என்பது வேறு.
சில நேரங்களில் அனுபவ அறிவின்முன்
புத்தக அறிவு தோற்றுப் போவதும் உண்டு.

இதைத்தான் "ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது" என்று சொல்வார்களோ?

ஒருமுறை ஒரு வேளாண்துறை
உயர் அதிகாரி ஒரு கிராமத்திற்கு
வந்திருந்தார்.
அவர் அங்குள்ள விவசாயிகளை எல்லாம்
அழைத்து அதிக மகசூல் விளைய வைப்பது
எப்படி என்று சொல்லிக் கொடுத்துக்
கொண்டிருந்தார்.
என்ன உரம் போட வேண்டும்? 
எப்படி நீர்ப் பாய்ச்ச வேண்டும்? 
எந்தக் காலத்தில் என்ன பருவம்
செய்ய வேண்டும் என்று படித்தவற்றை
எல்லாம் ஒன்றுவிடாமல் ஒப்பித்துக்
கொண்டிருந்தார்.

இறுதியாக உங்கள் பகுதியில் உள்ள
மண் நிலக்கடலை பயிரிடுவதற்கு
ஏற்றது.நான் சொன்ன இந்த நடைமுறைகளை
எல்லாம் பின்பற்றி நிலக்கடலை
 பயிரிட்டால் ஒரு முறை பருவம் 
செய்தால் போதும் இரண்டு
மூன்று முறை அறுவடை செய்து
நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்
என்று சொல்லி முடித்தார்.
கூட்டத்தில் ஒரு சின்ன சலசலப்பு.
ஒரு சிலர் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.

நாம் என்ன தவறாக சொல்லிவிட்டோம்?
அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை.

"நிலக்கடலையை ஒருமுறை பயிர் 
செய்துவிட்டு விளைந்ததும் பிடுங்கி 
எடுத்துவிடுவோம்.
அது எப்படி நிலக்கடலையை 
மூன்றுமுறை அறுவடை செய்ய முடியும்?"
என்று கேட்டார் ஒரு விவசாயி.

அதிகாரிக்கு இந்தக் கேள்விக்கு
உடனடியாகப் பதில் சொல்லத் 
தெரியவில்லை.
படித்த அதிகாரிக்கு இப்போது
தர்மசங்கடமான நிலைமை.

அதிகாரியோடு வந்திருந்த உதவியாளருக்கு
அதிகாரி சொன்ன வார்த்தையில்
இருந்த தவறு புரிந்து போயிற்று.

வந்திருக்கும் விவசாயிகள் எல்லாம்
படிக்காதவர்கள். 
ஆனால் அனுபவ அறிவு மிக்கவர்கள்.
 
இப்போது நிலைமையை எப்படியாவது
 சமாளித்தாக  வேண்டும்.
ஐயா...என்று கையில் எடுத்து வந்த
தண்ணீர் பாட்டிலை எடுத்து
அதிகாரியிடம் நீட்டினார்.

அதிகாரி தண்ணீர் குடிக்கும் 
நேரத்தில் விவசாயிகளைப் பார்த்து
"ஐயா என்ன சொன்னாங்க என்றால்
இரண்டு மூன்று முறை தொடர்ந்து
நிலக்கடலை பயிரிட்டு லாபம்
சம்பாதிக்கலாம் என்பதைத்தான்
இரண்டு மூன்றுமுறை அறுவடை
செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்"
என்று விளக்கினார்.

 உற்ற நேரத்தில் சரியாகப்
பேசி அதிகாரிக்கு  வரவிருந்த 
அவமானத்தில் இருந்து
அவரைக் காப்பாற்றினார்.

"ஓ...அப்படியா .
இப்படி தெளிவாக சொல்லியிருக்கணும்
இல்லையா? "
என்றார் ஒரு விவசாயி.

"இரண்டு மூன்று முறை அறுவடை
 செய்யலாம் என்றதும் 
ஐயா....பூமிக்கு மேல் விளையும்
புதிய ரக நிலக்கடலை
ஏதும் இருப்பதாக சொல்கிறார்களோ
 என்று எனக்குக் குழப்பமாக
 இருந்தது "என்றார் 
மற்றொரு  விவசாயி.

நிலக்கடலையை ஒரு முறை பிடுங்கி
எடுத்துவிட்டால் மறுமுறை எப்படி
மகசூல் எடுப்பது? 

அதிகாரி படித்தவர்தான்.
ஆனால் படிக்காத உதவியாளருக்குத்
தெரிந்த நிலக்கடலை பயிர் பற்றிய
உண்மை அதிகாரிக்குத் தெரிந்திருக்கவில்லை.
அவர் பெற்றதெல்லாம் புத்தக அறிவு.
சில நேரங்களில் பட்டறிவுக்கு முன்னால்
புத்தக அறிவு தோற்றுப் போதல் உண்டு

உதவியாளரின் அந்தச் சொல்
அதிகாரியின் மானத்தைக் காப்பாற்றியது.

படித்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்களாக
இருப்பார்கள் என்று அர்த்தம் அல்ல.
 சில கற்றவரிடமும் அனுபவ அறிவு 
நிறைய இருக்கும்.
அது உற்ற நேரத்தில் கற்றவர்க்குக்
கைகொடுக்க முன் வந்து நிற்கும்.
 
ஆதலால் மெத்தப் படித்தவர்கள்
படிக்காதவர்களை இழிவாக
எண்ண வேண்டாம்.

இதைச் சொல்லித் தருகிறது  அறநெறிச்சாரம்.
இந்தப்  பாடல் .

"பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல் "
                                             அறநெறிச்சாரம்

 உலகமெல்லாம் கதிர் பரப்பி 
ஒளி தந்து தன் ஆட்சியின்கீழ்
வைத்திருக்கிறான்  கதிரவன். 
உலகை எல்லாம் தன் குடையின்கீழ்
வைத்திருக்கும் கதிரவன்
ஒளியை மறைக்க
கையிலுள்ள சிறிய குடை போதும்.
பெரிதாக எதுவும் கூடாரம் போட
வேண்டிய அவசியமில்லை.

 யாம் நிறைய கற்று விட்டோம்
 என்று  தன்னைத்தானே பெருமையாக
யாரும்  நினைத்துக் கொண்டிருக்க 
வேண்டாம்.
நீங்கள் படித்தவர்கள்தான்.
இல்லை என்று சொல்லவில்லை.
 
ஆனால்  சில நூல்களை மட்டுமே 
கற்றவர் பேச்சிலும்
பல கற்றோம் என்று பெருமை கொள்ளும்
மனிதர்கள் பேச்சுக்கு அச்சாணி போன்று 
அதாவது உதவுது போன்ற
 நல்ல சொற்கள் இருக்கக் கூடும்.
 
ஆதலால்  இவருக்கு என்ன அறிவு இருக்கப்
 போகிறது என்று யாரையும் 
தரக்குறைவாக நினைக்க வேண்டாம்.
படித்தல் வேறு. அறிவு வேறு .
அறிவுசார் வழிகளில் சிந்திக்கும்
திறன் பெற்றவர்களிடமிருந்து உயர்ந்த
கருத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இவர் என்ன படித்திருக்கிறார்? 
இவருக்கு என்ன தெரியப் போகிறது?
இப்படிப்பட்ட நினைப்பு வேண்டவே 
வேண்டாம்.

மொத்தத்தில்  மெத்தப் படித்துவிட்டோம்
என்று தற்பெருமை கொள்ள வேண்டாம்.
எல்லோரும் அறிவுடையவர்களே 
என்ற நினைப்பை மனதில் 
வைத்துக் கொள்ளுங்கள் என்று
சொல்லித் தருகிறார் முனைப்பாடியார்.

அருமையான கருத்து இல்லையா?

நல்ல  கருத்தினை மனதில் பதிய வைத்துக்
கொள்வதில் தப்பில்லையே!

Comments

  1. கதை சொல்லி பாடலை விளங்க வைத்திருக்கும் முறை சிறப்பு

    ReplyDelete
  2. அருமையான கருத்தாழமிக்க பதிவு.

    ReplyDelete
  3. தற்பெருமை கொள்ளல் ஆகாது என்னும் மையக்கருத்தை பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete
  4. Self-pride should not be there in any man's life. It will bring him low. Very good and meaningful moral explained through a story. Ceative and excellent.

    ReplyDelete

Post a Comment

Popular Posts