அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்...

               உறவினர் யார்?




நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர்
அங்கமாக இருப்பது உறவுகள்.
உறவுகள் சூழ இருந்தால்தான்
மனதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.
உறவு என்பது வெறுமனே
 இரத்த சம்பந்தப்பட்ட
உறவுகள் என்பதல்ல.
குடும்ப உறவுகளைத் தாண்டி
நட்பும் உறவாகவே கருதப்படும்.
நம் இன்ப துன்ப காலங்களில் நட்பும்
கரம் கோத்து உடன் நடப்பதுண்டு.

எப்போதும்  நம்மைச் சுற்றி 
ஒரு உறவு வளையம் இருந்து 
கொண்டே இருக்கும்.

அதில் முதன்மையான உறவு
குடும்ப உறவு என்றார் ஔவை.
அதனால்தான்,

"கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி  பெறும் "
என்று தனது பாடலில் சொல்லி
வைத்தார் ஔவை.

இதே ஔவை இன்னொரு பாடலில்
தனது கருத்தில் சற்று மாறுபடுகிறார்.

அப்படி என்ன மாறுபடுகிறார் ? 
ஔவை மாற்றி மாற்றி பேசுபவர்
அல்லர்.
அப்படியானால் இந்த மாறுபாடு
எதற்கு? 
உறவு வேண்டுமா? வேண்டாமா?
எனக்குள் ஆயிரம் கேள்விகள்.
கேள்விகள் எழுந்தால் விடையைத்தேடி
யாரிடம் செல்ல முடியும் ?

குழப்பமான மனநிலையோடு 
தமிழாசிரியர்
வீடு நோக்கிச் சென்றேன்.

என் குழப்பத்தை ஆசிரியரிடம் கூறி
தெளிவுபடுத்தும்படி கேட்டேன்.

"ஒரு குழப்பமும் வேண்டாம்.
ஔவையை நீ சரியாக புரிந்து
கொள்ளவில்லை. அதுதான்
இவ்வளவு குழப்பத்துக்கும்
காரணம்."
என்றார் என் தமிழாசிரியர்.

"ஐயா!அப்படி என்ன தவறாக
புரிந்து கொண்டேன். சற்று
தெளிவாக கூறுங்கள்" என்றேன்.

"தைரியமாக கேட்க பழகிக்கொண்டாய்.
இந்த தைரியம் படிக்கும்போதே
இருந்திருந்தால் நான் மறுபடியும்
விளக்க வேண்டிய தேவை வந்திருக்காது."
என்று புன்னகைத்தார்.

எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு.

"என்ன சிரிப்பு?"

"ஒன்றுமில்லை...நீங்கள் விளக்குங்கள்"
என்றேன்.


"ஔவையின் பாடல்கள் பொழுதுபோகாமல் 
எழுதப்பட்டவை அல்ல.
அனுபவச் சாறு பிழிந்து கொடுக்கப்பட்ட
வாழ்வியல் விருந்து.
எந்த அகவையில்
உள்ளவரும் அருந்தி இன்பம்
காணவல்ல அருமருந்து
என்ற முன்னுரையோடு

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும்  நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு "

என்ற இந்த மூதுரைப் பாடல்தானே 
உனக்கு குழப்பம்" என்றார்.

"ஆம் ஐயா....ஆம்...குழப்பம்
என்பதைவிட சற்று  தடுமாற்றம்"

"தடுமாற்றமும் வேண்டாம்.
இனி தடமாற்றமும் வேண்டாம்.
சொல்கிறேன் கேள் .
குளத்தில் நீர் இருக்கும்போது
நீர்ப் பறவைகள் எல்லாம் சுற்றி
சுற்றி வருவதைப் பார்த்திருப்பாய்
அல்லவா !"

"ஓ...ஏராளமாக...அதுவும் அந்தக்
கொக்கு குளத்தங்கரையில்
தவமிருப்பதைப் பார்த்து
இந்தக் கொக்குக்கு காலே வலிக்காதா
என்று நானும் என் தோழியும்
சொல்லி சிரித்திருக்கிறோம் "

"உனக்கு மட்டுமல்ல...அனைவருக்கும்
இதே சந்தேகம் உண்டு.
அந்தப் பறவைகள் எல்லாம்
குளத்தில் நீர் வற்றிய பின்னர்
எங்கே போயிருக்கும் என்று
எப்போவாவது சிந்தித்தது உண்டா?"


"வேறு எங்கு ...எங்கு போயிருக்கும்?
 தண்ணீர் இருக்கும் இன்னொரு குளத்தை
நாடி போயிருக்கும் "

"சரியாகச் சொன்னாய்.
ஆனால் அதிலிருந்த ஆம்பல் ,நெய்தல்
போன்ற செடிகளெல்லாம்
எங்கும் போகலியே"

"அதெப்படி போக முடியும்? செடிகளுக்கு
நடக்க முடியுமா? இல்லை
பறக்கத்தான் முடியுமா?"

"விவாதம் வேண்டாம் ."

"மாட்டேன்...மாட்டேன்.."

ஆசிரியரிடம் எதிர்த்து கேள்வி
கேட்க முடியுமா என்ன!

"மறுபடி நீர் நிரம்பியதும்
அந்தச் செடிகள் எல்லாம் வளர்ந்து
அந்தக் குளத்திற்கு அழகு சேர்க்கும்.
பறவைகள் வளங்களை நாடி
ஓடி விடும். ஆனால் ஆம்பல்,
நெய்தல் போன்ற செடிகள் நீர்
இருந்தாலும் இல்லை என்றாலும்
குளத்தோடு கிடக்கும்."

"இதன் மூலமாக என்ன சொல்ல
வருகிறீர்கள்?"

"நம் கையில் பசை இருக்கும்போது
அதாவது பணம் இருக்கும்போது
உறவு என்று சொல்லிக்கொள்ள
ஒருகூட்டம் இருக்கும்.
நமக்கு ஒரு நொடிவிழுந்துவிட்டால்...
வியாபாரம் படுத்துவிட்டால்...
நோய் ஏற்பட்டு பொருளாதாரத்
தேவையில் சிக்கிக் கொண்டால்...
மழைதண்ணி இல்லாமல் விவசாயம்
நலிந்து கையில் பணப்புழக்கம்
இல்லாமல் போய்விட்டால்...
வேலை இழந்து வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டுவிட்டால்...
உறவு என்று சொல்லிக்கொள்ள
யாருமே இருக்கமாட்டார்கள்.

நம்மை நிராதரவாக விட்டுவிட்டு
அப்படியே போய்விடுவார்கள்.
இதுதான் உண்மை. 


நீர் இருந்தாலும் ....
இல்லாமல் போனாலும் கொட்டி, 
ஆம்பல், நெய்தல் போன்ற நீர்த்தாவரங்கள்
குளத்தைவிட்டு எங்கும் செல்லாமல்
இருப்பதுபோல
இன்பதுன்ப காலங்களில் உடன் 
 இருப்பவர்களே உண்மையான
உறவுகள் என்கிறார் ஔவை.
இப்போது புரிகிறதா "என்றார்.

"ஆமாம்....
வசதி இருந்தால் என் தாத்தா....என் மாமா ...
என் சித்தப்பா....என் பெரியப்பா... 
என் அண்ணன் ....என் தம்பி
என் மாமா... என் ஒன்றுவிட்ட மாமா
பிள்ளை....என் பாட்டியுடைய தம்பியுடைய
மகளுடைய மருமகன் ....
என்று எல்லாவிதமான உறவு முறைகளையும்
சொல்லிக் கொண்டாடும் உலகம் இது.
வறுமை வந்துவிட்டால்...
இடர் நேர்ந்துவிட்டால்...
நம்மிடம் உதவி கேட்டுவிடுவார்களோ 
என எட்ட நின்று கண்டு கொள்ளாமலே
போய்விடும்
கிட்டவர அஞ்சும்.
தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும்
பேசும். இல்லையா? 
எனக்கும் இதில் நல்ல அனுபவம்
உண்டு "என்றேன்.

"இதுதான்டா உலகம்.
அப்படிப்பட்டவர்கள் உனக்கு உறவுகளே 
கிடையாது.
அவர்களை உறவு என்று நம்பி
ஏமாந்துவிடாதே .
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல
என்ன நேர்ந்தாலும் உன்னோடு 
இருப்பவர்களைமட்டுமே உறவினர் 
என்ற பட்டியலில்
வைத்திரு. மற்றவர்களை அடையாளம்
கண்டு ஒதுங்கி இரு" என்று
அறிவுரை வழங்கி என்னை
அங்கிருந்து  அனுப்பி வைத்தார்
என் தமிழாசிரியர்.

உண்மைதாங்க...
உண்மையான உறவு நமக்குக் 
கிடைத்த வரம்.
வரமான உறவுகள் வாய்க்காவிட்டாலும்
பரவாயில்லை.குறைந்தபட்சம்
உண்மை உறவு எது என்பதையாவது
தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பல நேரங்களில் யார் உண்மையான
உறவு என்று கணிக்கமுடியாமல் 
தடுமாறிப் போய்விடுவோம்.
உறவுகள் நம்மை ஒதுக்கி 
வைத்திருந்தாலும் ஒரு திருமண
அழைப்பிதழை நீட்டிவிட்டால் போதும்.
முந்திப் போய் பந்தியில்
உட்கார்ந்திருப்போம்.

மேலோட்டமான பேச்சில்
மயங்கி உண்மையாகவே இவர்களுக்கு
நம்மீது அன்பு இருக்கிறது என்று
நம்பி ஏமாந்திருப்போம்.

உறவுகள் விலகி ஓடிய பிறகும்கூட
இதற்கான காரணம் என்னவென்று 
புரியாது திரும்ப திரும்ப
அவர்களிடம் போய் நின்றிருப்போம்.
அது நம் அறியாமையாக
இருக்கலாம்.

அவற்றுக்கெல்லாம் தீர்வாக
அமைந்ததுதான்  இந்தப் பாடல்.

வாழ்வியல் உண்மைகளை வாழ்ந்தவர்கள்
சொல்லித் தருவதைவிட வேறு யாரால்
இவ்வளவு அருமையாக 
சொல்லித் தந்துவிட முடியும்?



Comments

  1. Really this is very true in our day to day life. Wonderfully explained. Excellent Selvabai.

    ReplyDelete
  2. வாழ்க்கை உண்மைகளை மிகத் தெளிவாக ஔவையின் பாடல் மூலம் விளக்கியது மிக மிக அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts