கிண்ணிப் பெட்டியும் மிட்டாய்ப் பெட்டியும்

   கிண்ணிப்பெட்டியும் மிட்டாய்ப் பெட்டியும்


கிண்ணிப் பெட்டி என்றதும் ஏன்
கிண்கிணியென சிரிக்கிறீர்கள்?

கிண்ணிப் பெட்டி தெரியாதா?
அட போங்கங்க...
பர்கரைக் கையில் வைத்துக்
கடித்துக் கொண்டே அலுவலகம்
செல்கிறவர்களா நீங்கள்?
பாதி சுவை  தெரியாமலேயே
வாழ்ந்துவிட்டீர்கள் .

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி..."

என்ற கண்ணதாசன் பாடலைப்பாடி
புலம்புவதைத் தவிர வேறு வழி
தெரியவில்லை.

நீங்கள் கிண்ணிப்பெட்டி 
பார்த்திருக்க வாய்பில்லைதான்.
சிற்றூர்களில்  இருப்பவர்களே கிண்ணிப்பெட்டியை
மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
மும்பை போன்ற பெருநகரங்களில்
வசிக்கும் நீங்கள் பார்த்திருக்கவா முடியும்?

அது என்னங்க கிண்ணிப் பெட்டி...
என்று நீங்கள் கேட்பது 
என் காதுகளில் விழத்தான் செய்கிறது.
 
 நீங்கள் கிண்ணிப் பெட்டி என்ற சொல்லுக்கே 
 கூகுளில் பொருள் தேடும் நவீன கால
 மனிதர்கள்.
 உங்களிடம் கிண்ணிப்பெட்டி...கிண்ணிப்
 பெட்டி  என்று கிண்ணரம்  வாசிக்கிறேன்.

  அட...நீங்கள் சைனா கிளே பௌல்ஸ்
 பிரியர்கள் என்பதை மறந்தே போய்விட்டேன்.
நானும் உங்கள் ரகம்தாங்க.
 
இருக்கிறவரை  கிண்ணிப்பெட்டி
அருமை தெரியலைங்க...
யார் வீட்டிலாவது சைனா கோப்பையைப்
பார்த்தால் இந்தச் சைனா கோப்பையில்
 பண்டங்களை வைத்துத்  தின்னும்
காலம் நமக்கும் வராதா என 
ஏங்கியிருக்கிறேன்.

சைனா கோப்பையில் சாப்பிடுகிறவர்கள்
எல்லாம் பணக்காரர்கள்...நாகரீகமானவர்கள்
என்று ஏக்கத்தோடு பார்த்திருக்கிறேன்.
மும்பைக்கு வந்ததும் முதல் வேலையாக
பார்த்துப் பார்த்து வாங்கினேன்.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
அந்த உண்மை இப்பதாங்க புரியுது.

இப்போது விதவிதமான சைனா கோப்பையை 
வைத்துவிட்டு இது எப்போது ஒழியும்...நம்ம 
கிண்ணிப்பெட்டி காலம் எப்போது வரும்
என்று ஏக்கமாக இருக்குது.

எதுவுமே இருக்கும்போது அதன் 
அருமை தெரியாது.
இல்லாமல் போனால்தான் அதன் 
அருமை தெரியும் என்பது
நூற்றுக்கு நூறு உண்மை.

 கிண்ணிப்பெட்டியை மறந்து
 பல ஆண்டுகள் ஆயிற்று.
 இப்போது என்ன திடீரென்று கிண்ணிப்பெட்டி
 ஞாபகம் என்கிறீர்களா?
எல்லாம் பழைய நினைப்புதாங்க
பேராண்டி.

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே
கிண்ணிப் பெட்டியில்
போட்டுத் தின்ற
பண்டங்கள் எல்லாம்
ஒவ்வொன்றாக
ஞாபகம் வருதே!

தேங்காய்ப் போட்டு அவித்த புட்டும்
வறுத்து வைத்த நிலக் கடலையும் 
தேங்காய்ப்பூ தூவி தாழித்த 
ஏழிலை கிழங்கும்
காணப் பயறும் தட்டாம்பயறும்
ஒவ்வொன்றாக
ஞாபகம் வருதே!

சோளப்பொரியும்
பனங்கிழங்கும்
வைத்துத் தின்ற 
கிண்ணிப்பெட்டி
பண்டங்கள் யாவும்
ஒவ்வொன்றாக
ஞாபகம் வருதே!

நினைவுகள் நெஞ்சில் நின்று
நித்தம் நித்தம் சத்தமில்லாமல்
நாவில் எச்சில் ஊற வைத்து ..
ஆசையைத் தூண்டி
ஆராயிரம் மைல்களுக்கு அப்பால்
வந்த பின்னரும் ஆசைக் காட்டுது.

கிண்ணிப் பெட்டியியை
மோந்து மோந்து
பார்த்து பார்த்து மகிழ்ந்த
நாட்கள்  எல்லாம் ....
 இப்போது நினைத்தாலும் அந்தப்
பனையோலையின் மணம்.....
அதில் குடித்த பதநீர்...
ஓலைப்பட்டையில் ஊற்றி ஊற்றிக்
குடித்த உழுந்தம் கஞ்சியும்
காணத் துவையலும் 
எம்மோ...என்னை எங்கெங்கோ
இழுத்துச் செல்கிறதே!

 நல்லா ஞாபகம் வந்துச்சி போங்க...
எங்களையும் ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்களே
என்று கிண்ணிப்பெட்டியில்
தின்றவர்களின் நினைவலையில்
வெளியாகும் பெருமூச்சு
அப்படியே காற்றலையில்
மிதந்து எங்க வீடுவரை 
வெப்பக்காற்றாக வந்து மோதுதுங்க ..

அவித்த சிறுபயிற்றின்மீது
கொஞ்சம் சீனியும்
தூக்கலாக தேங்காய்த்
துருவலைத்  தூவி
கிண்ணிப் பெட்டியில் போட்டுத்  
தருவாங்க பாருங்க...
அடடா...எந்த ஸ்டார் ஓட்டல்
உணவும் கிட்ட நிற்க முடியாதுங்க...

கேழ்வரகு புட்டு அவித்து 
கிண்ணிப் பெட்டியில் போட்டு
தேங்காய்த் துருவலைத் தூவி...
தின்று பாருங்க...நாளைக்கும்
வேணும். ...வேணும் என்று 
கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க.....

கிண்ணிப் பெட்டியின் மணமே 
இன்னும் கொஞ்சம்  வேணும் என்று
கெஞ்ச வைக்கும்.கொஞ்ச வைக்கும்.

சுக்குமாவு  பிடிச்சு
கிண்ணிப் பெட்டியில் வைத்துத்
தின்னுப் பாருங்க...சுக்குமாவின்
மணம் பெட்டியின் மணத்தோடு 
சேர்ந்துகொள்ள ....
எம்மோ எனக்கு மட்டும் இவ்வளவுதானா?
என்று அடம்பிடித்து அதிகமாக வாங்கித்
தின்றதற்கான காரணம் இப்போது
புரியும்.
அடடா...என்னே சுவை!...என்னே சுவை!

பெட்டியோடு எடுத்துச் சென்று  
யாரும் கேட்டுவிடக்  கூடாது என்று 
ஒளிச்சு வைத்து....
கப்பு கப்புன்னு அள்ளி வாய்க்குள்ள
இருத்தி ....விக்கி...வெடவெடத்துப் போயி...
கண்விழிகள் துருத்த...
வீட்டுக்குள் போய் தண்ணீர்
எடுத்தும் குடிக்க முடியாமல்
திருட்டு விழி விழி விழித்து
வெள்ளை மீசையோடு வந்து
மாட்டிக்கொண்ட காலம்
கிண்ணிப் பெட்டி தந்த
இனிமையின் காலம்.

ஐயோ....என் கிண்ணிப் பெட்டியே!
நீ தந்த இன்பமே தனிதான்....

நினைத்த நேரத்தில் நினைத்த
உணவை ஆர்டர் பண்ணி 
உண்கிற நகர வாழ்க்கை
மகிழ்ச்சிதான். இல்லை என்று
சொல்லவில்லை.

எனினும் என் கிண்ணிப்பெட்டி
ஆசை மட்டும் மனதுக்குள் கிடந்து
எதையோ தொலைத்துவிட்ட
உணர்வைத் தந்து கொண்டே இருக்கிறது.

ஓடிப்போயி கிண்ணிப் பெட்டி வாங்கி
அதில்  சிற்றுண்டிகளை வைத்துச்
சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா!

இதோ ...இப்பொழுதே...
நமது மகளிர் சுய உதவி 
குழுக்கள் உங்க வருகைக்காக
காத்துக் கொண்டிருக்காங்க....

பனையோலை  கிண்ணிப் பெட்டியை
வாங்குங்க... வகை வகையான 
நம் பாரம்யரிய உணவுகளை 
கிண்ணிப் பெட்டியில் வைத்து
சாப்பிடுங்க....என்றுதானே 
சொல்ல வருகிறீர்கள்.

 சாப்பிடத்தான் நினைக்கிறேன். 
முடியலியே!

கூடுதலாக இன்னொரு பனையோலைப்
பெட்டியும் என்னைப் பாடாய்ப் படுத்துதே!

விருந்தினர் வீட்டிற்கு வரும்போது
ஓலைப்பெட்டியில் வைத்துக் 
கொண்டு வந்து தருவாங்க பாருங்க
அந்தத் தேன்குழல் மிட்டாயும் காரச்சேவும்
இனிப்புச் சேவும் தின்ற காலம்
தித்திப்பின் காலம்.
ஓலைப்பெட்டியின் காலம்
விருந்தினருக்காக காத்திருந்த
நல்விருந்து காலம்!

எங்காவது திருவிழா நடந்தால் 
வருவிருந்துக்காக வாசலிலேயே 
காத்திருந்த காலம்.....
வாசமுள்ள மிட்டாய்ப் பெட்டி காலம்.

என்று வரும் இந்தச் சுவையின் காலம்.?
சுகத்தின் காலம்...இனிமையின் காலம்...
தின்ற காலம்...தின்ன விரும்பும் காலம்
என்னைத் திரும்பிப் பார்க்க வைத்துத்
திணறடித்துக் கொண்டிருக்கும் காலம்.
அந்தக் காலம்  அது...அது 
வசந்தத்தின் காலம்.

கிண்ணிப்பெட்டியோடு
மிட்டாய்ப் பெட்டியும்
எந்தன் வீட்டிற்குள்
 ஏட்டிப் பார்த்து
குறுநகை புரியும்
வசந்த காலம் இனி வாராதோ?

என்றென்றும் கிண்ணிப் பெட்டி
நினைவில் நான்.




Comments

  1. கிண்ணிப்பெட்டியில் உண்ட சுகத்தை இனிமேற் கொண்டு கற்பனையில் தான் அனுபவிக்க முடியும்.பதிவு மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts