ஊருவிட்டு...


ஊருவிட்டு....

கதவைத் திறந்து மெதுவாக வெளியில் 
எட்டிப் பார்த்த நான் படக்கென்று கதவை 
சாத்திக் கொண்டு
கதவின் பின்னால் சாய்ந்து நின்று கொண்டேன்.

"என்ன...யாரும் வாராங்களா...?"
என்றாள் அக்கா ரமணி.

உஷ்....வாயில் கையை வைத்து
மெதுவாகப் பேசும்படி எச்சரித்துவிட்டு
கதவிடுக்கு வழியாக வெளியிலேயே பார்த்துக்
கொண்டிருந்தேன்.

கையில் பையோடு புறப்படத் தயாரான
அனைவரும் பையைக் கீழே வைத்துவிட்டு
எனது சிக்னலுக்காக காத்திருந்தனர்.

அம்மா மறுபடியும் ஒருமுறை சமையலறைப்
பக்கம் சென்று ஏதாவது விட்டு விட்டுவிட்டு
வந்தோமா என உறுதி செய்து கொண்டிருந்தார்.

அப்பாவின் கண்கள் எதையோ இழந்துவிட்டு
தேடுவதுபோல தேடிக்
கொண்டிருந்தது.
முகம் வெளிறிப் போய் அப்பாவைப்
பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.

"சீக்கிரம் பாருடா...நேரம் ஆகிடப் போவுது."
..என்று அவசரப்படுத்தினான்
கடைக்குட்டித் தம்பி ரமேஷ்.
அவனுடைய குரலில் முதன்முதலாக
இன்பச்சுற்றுலா செல்லும்
சிறுவனின் உற்சாகம் இருந்தது.
அவனைப் பொறுத்தமட்டில் இது 
இன்பச் சுற்றுலாதான்.
அடிக்கடி அம்மாவிடம் "எங்காவது 
பேருந்தில் வெளியில்
 கூட்டிப் போயேன்"
என்று நச்சரித்துக் கொண்டே இருப்பான்.

அம்மாவும், "போகலாம்...போகலாம் "என்று
போக்குக் காட்டிக் கொண்டே இருப்பார்.

இன்று பேருந்தில் செல்லும் வாய்ப்பு 
கிடைத்திருக்கிறது.அந்த மகிழ்ச்சியின் சாயல்
இந்தத் பேச்சிலும் செயலிலும்
எட்டிப்பார்த்தது.

 ஒருமாதத்திற்கு முன்பாக
இப்படித்தான் ஒருநாள் போவதற்காக
தயாராகிக் கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில் பட்பட்டென்று
யாரோ அவசர அவசரமாக
கதவைத் தட்டும் ஓசை.

அக்கா ரமணிதான் ஓடிப்போய்
 கதவைத் திறந்தாள்.
வாசலில் கீழத் தெரு மாமா 
பதட்டமாக வந்து நின்றார்.

அப்படியே எங்கள் எல்லோருக்கும் 
பேயறைந்ததுபோல்
இருந்தது. என்ன மாமா இந்த நேரத்தில்
என்று கேட்க நினைத்தேன்.
ஆனால் பேச முடியல.....

அம்மாதான் சுதாகரித்துக் கொண்டு "தம்பி
என்ன காலையிலேயே வரமாட்டியே ஏதாவது
அவசரமா...?என்று கேட்டு வைத்தார்.

என்ன...எல்லோரும் 
புறப்பட்டு நிற்பது போல் இருக்கு?
எங்கேயும் வெளியில போறீயளா?
என்று கேட்டார் மாமா.

"அதெல்லாம் இல்ல தம்பி....நீ சொல்லு "
என்று பேசி சமாளித்தார் அம்மா.

"அதை எப்படி சொல்ல....நல்லாதான்
தூங்க போனா...திடீரென்று மேல்மூச்சு
கீழ்மூச்சு வாங்கிகிட்டு கிடக்கா..."
என்றார் மாமா மொட்டையாக.

"யாரு..."பதறிப்போய் கேட்டார் அம்மா.

"வேறு யாரு நம்ம அம்மதான்..".என்றார் மாமா.

அவ்வளவுதான் . ஓவென்று ஒப்பாரி வைத்தபடி
கதவைத் திறந்து ஓடினார் அம்மா.

நாங்களும் பின்னாலேயே 
பாட்டி வீட்டுக்கு ஓடினோம்.
அங்கே பாட்டி மேல்மூச்சு
 கீழ்மூச்சு வாங்கி
இழுத்துகிட்டுக் கிடந்தாவ....
நாங்க பயந்தே போயிட்டோம்.

பாட்டிய இப்படி போட்டுகிட்டு 
போவமுடியுமா?

அதனால முதற்பயணம் தோல்வியில
முடிஞ்சுது. தோல்வியில் முடிஞ்சுதுது என்று 
சொல்வதைவிட ஒத்தி வைக்கப்பட்டது
என்றுதான் சொல்ல வேண்டும்.

நல்லவேளை பாட்டி பிழைத்துக் கொண்டார்.

பாட்டியை இந்த நிலைமையில்
பார்த்ததும் ஏதோ சகுனத்தடையாகதாதான்
இருக்கும் . கொஞ்சநாள் பொறுத்துப்
பாப்போம் என்று அப்பாவும் அம்மாவும்
பேசிக் கொண்டார்கள்.

அப்பாவுக்கு பிறந்த ஊரைவிட்டு
வெளியில் எங்கும் செல்ல மனமில்லை. 
எப்படியாவது
சமாளித்துவிடலாம் என்றுதான் பார்த்தார்.

அதற்காக வெளியில் இறங்கி 
கூலி வேலையாவது செய்யலாம்னு
ஒவ்வொருத்தரு கிட்டையா
வேலை கேட்டுப் பார்த்தார்.

 உடம்பு வலிக்க அப்பா எந்த வேலையும் 
 செய்து விடமாட்டார்
 என்று யாரும் வேலைக்குக் கூப்பிடவே இல்லை.
 
 எங்க தோட்டத்தில் வேலை பார்த்த சுயம்புவிடம்
" தம்பி எங்கேயாவது வேலை இருந்தா என்னையும்
 கூப்பிடு "என்று வெட்கத்தைவிட்டுச்
 சொல்லி வைத்திருந்தார். 
 
அவனும் "அண்ணாச்சி
 நீங்க கடுத்த வேலை எல்லாம் செய்துகிட 
 மாட்டீங்க "என்று சொல்லிவிட்டான்.
 
" கடுத்த வேலைச் செய்ய முடியாது என்றால் 
 வேறு எந்த வேலைக்குத்தான் போவது...?
 ஆபீஸ் வேலைக்கா போகமுடியும்?. ஊரும்
 ஊரில் உள்ள நிலத்தையும் சுத்திச் சுத்தி 
 வந்தவருக்கு இந்த மண்வெட்டியையும் 
 கலப்பையையும் தவிர
 வேறு என்ன தெரியும்?
 
ஆனால் எங்க அப்பாவால்
 இதற்கு மேலும் தாக்குப்
பிடிக்க முடியாது என்ற நிலைமை. 
வேறு வழியில்லாதுதான்
இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது
எனக்குத் தெரியும்.

 மழை பொய்த்துவிட்டது. 
 காடுகண்ணியில் ஒத்த விளைச்சல்
 இல்லை. நாளைக்கு நல்லது நடந்திராதா..?
 நாளன்னைக்கு நடந்துராதா....?
 என வானம் பார்த்து காத்திருந்துதான் 
 பார்த்தார் அப்பா.
அங்கேயும் இங்கேயும் கடனவுடன வாங்கி
 எவ்வளவு நாள்தான் சமாளிப்பது?
 
 எத்தனை ஆட்களிடம்தான் கடன் வாங்குவது?
 கடன் வாங்கியதை திருப்பிக் கொடுக்க
 தோட்டத்திலிருந்து வருமானம் வரணுமே?
 கடன் தந்தவர்கள் எல்லாம் மூஞ்சு சுழிக்க
 ஆரம்பித்துவிட்டனர்.
 ஒரு சிலர் வாங்கின கடனை திருப்பித் தர
 வக்கில்லை ...என்று முகத்துக்கு நேராக கேட்க 
 ஆரம்பித்துவிட்டனர்.
 
  சார மழைக் காலத்தில் நாலு துள்ளி
 சடசடன்னு விழுந்ததுதான் மிச்சம். அப்படியே 
 புழுதியைப் படிய வைத்துவிட்டு போயே போச்சு.
 மறுபடியும் அப்பப்போ ஈசானம் கறுக்கும்.
 அவ்வளவுதான்.
 அப்பா "இப்பவாவது மழை பெய்யுமா 
 தோட்டந்துறவுல...பயிர் பச்சைய 
 பார்த்திட மாட்டோமா?என்ற
 ஏக்கத்தோடு ஈசானத்தையே பார்த்திருப்பாரு...
 
 உழவு வேலைக்காவது யாராவது
 கூப்பிட மாட்டார்களா ?
 என்று சந்தியில போயி
 உட்காருவாரு....
 வாழ்ந்து கெட்ட குடும்பத்த யாரு கூப்பிடுவா...?
 மதியம் வரை நின்னுகிட்டு
 மறுபடியும் தலையைத் தொங்கப் 
 போட்டபடி வீட்டிற்கு
 வந்து கட்டிலில் முடங்கிக் கிடப்பாரு.
 
 வந்ததும் வராததுமாக "வேலை ஏதாவது கிடைச்சா...
 இல்ல இன்றைக்கும் பட்டினிதானா..."
 என்று கேட்டு அம்மா
 அப்பாவை நோகாமல் நோகடிப்பார்.
 
 அப்பாவைப் பார்த்தால் எனக்கே
  பாவமாக இருக்கும்.
 ஒட்டிய வயிறும் பல நாட்கள் தாடி எடுக்காத முகமும்
 குழி விழுந்த கண்களும் பார்ப்பதற்கே
 பரிதாபமாக இருக்கும்.
 
 நானாவது மூத்த பிள்ளையாகப் பிறந்திருந்தால்
 எங்காவது போய் செங்கமாலுல 
  வேலை பார்த்தாவது
 கஞ்சி ஊத்தி இருப்பேன்.
 பதினொரு வயசுகூட தாண்டாத எனக்கு யார்
 வேலை கொடுப்பார்கள்? நீங்களே
 சொல்லுங்க.....
 
 அப்பாவின் பாரத்தை கொஞ்சமாவது 
 சுமக்க முடியவில்லையே என்று 
 எத்தனையோ முறை வருத்தப்பட்டிருக்கேன்.
 வீட்டைவிட்டு வெளியில் போயி 
 மாடு மேய்க்கவாவது சேர்த்துகிடுங்க என்று
 ஒரு வீட்டுல போய் கேட்டுருக்கேன்.

"இப்போ மாடு மேய்க்க ஆள் வேண்டாம்.
மாட்டை விற்கலாம் என்று இருக்கோம்.
 என்று சொல்லிபுட்டாவ..."

  இந்த பட்டினிப் போராட்டத்துக்கு விடைதான்
 என்ன?
 அதனால்தான் தூத்துக்குடி போய்
 உப்பளத்திலாவது வேலை செய்யலாம் என்று
 முடிவெடுத்தார் அப்பா.
 
 மழை கீழே விழுவனா என்று 
 ஒரேயடியாக அடம்பிடிக்கும்போது
 ஏழை விவசாயியால் என்ன செய்ய முடியும்
 என்கிறீங்க....?
 
 குடும்பத்தோடு விட்டத்தைப் பார்த்துக் கொண்டு
 எத்தனை நாள் பட்டினி போராட்டம்
 நடத்த முடியும்?
 
 இப்படி எத்தனைநாள்தான் மழையோடு
 கண்ணாம்மூச்சு விளையாடுவது....?
 ஒரு கட்டத்தில் அப்பா விரக்தியடைந்துவிட்டார்.
 குடும்பத்தோடு விஷம் சாப்பிட்டு
தற்கொலை செய்துடலாமா என்றுகூட
புலம்பியிருக்கார்.

 வாழ்ந்த பவிசு என்ன....
 இப்படி ஒரு நிலைமை வரும்
 என்று அப்பா கனவில்கூட 
 நினைத்துப் பார்க்கவில்லை. 
 அப்பா மட்டுமா...நாங்களும்தான்.
 தீபாவளி என்றால் ஒன்றுக்கு நாலு டிரவுசர்
 வாங்கித் தருவாரு..
 இப்போ கிழிந்த டிரவுசரை துவைத்துப்போட
 சோப்பு வாங்க கையில கால் காசு இல்ல...
 
 கண்ணீர் விட முடியவில்லை.
 தண்ணீர் விட்டால்தானே 
 கண்ணீர் வரும்.

தண்ணீருக்குப் பஞ்சமாகியபோது
கண்ணீர் எங்கிருந்து வரும் ?

  இப்படி ஒரேயடியாக மழை
  வஞ்சனை செய்துவிடும்
 என்று யாருமே எதிர்பார்க்கல...
 கூலி வேலை செய்தவர்களுக்கு இதனால்
 பெரிய பாதிப்பு எழல...
 இந்த மடம் இல்லன்னா 
 சந்தை மடம் என்பதுபோல
 இன்னொரு வேலையைத் தேட முடிந்தது.
 இதுவரை வயல் வரப்புகூட வெட்டிப்
 பழக்கமில்லாத எங்களை மாதிரி குடும்பத்தால்
 என்ன செய்ய முடியும்....சொல்லுங்க ..?
 
  
ஒருநாள் மேலத் தெருவில் இருக்கும்
மூத்த அத்தை வீட்டுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு
சென்றார் அப்பா.
எங்கள் குடும்பத்தில் மூத்த அத்தை மட்டும்
கொஞ்சம் வசதியாக இருக்கிறாள்.
மோட்டார் தோட்டம்.... ஒரு இரண்டு மணி நேரம்
மின் மோட்டார் ஓடும் அளவுக்கு
நீரூற்று உள்ள கிணறு.
அதனால் ஏதோ இந்த பஞ்சத்திலும் அவளால்
குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம்
வந்து கொண்டிருந்தது.

ஒன்றிரண்டுமுறை அத்தையிடமும்
கடன் வாங்கியிருக்கிறோம்.
இந்தமுறை அத்தையும் கைவிரித்துவிட்டார்.

இப்படி ஒரேயடியாக மழை 
வஞ்சிக்கும் என்று யார் நினைத்தார் ?

எல்லோருக்கும் நாளைக்கு என்ன
நடக்குமோ என்ற பயம் உள்ளுக்குள்
இருக்கத்தானே செய்யும்.?

யார் யாருக்கு கொடுத்து உதவ முடியும்?
ஒன்றிரண்டு குடும்பத்தில் பிள்ளைகள்
படிச்சி வேலை பார்த்ததால சாப்பாட்டுக்கு
மாசாமாசம் பணம் வந்துடும்.

மத்தவங்க பாடெல்லாம் எங்கள மாதிரி
படுதிண்டாட்டம் தான்.
யாரை குத்தம் சொல்ல?
கடவுளத்தான் சொல்லணும்.
கடவுள் கண்முழிச்சிப் பார்த்தா போதும்
நம்ம தோட்டத்தில் விளைவதே நீ தின்னு..
நான் தின்னு என்று காலுக்குள்ளும்
கைக்குள்ளும் கிடக்கும்....
கடவுள்கண் முழிச்சி பார்க்கணும்..
என்று அப்பா சதா கடவுள் போட்டோவைப் பார்த்து
சொல்லிக் கொண்டே இருப்பார்.

கடனை உடனை வாங்கி நாலு பிள்ளைகளுக்கும்
கஞ்சி ஊத்தணும்... என்றுதான் அப்பா
இந்த பாடுபடுகிறார்.

கடன் கேட்டுப் போகிற வீட்டில் எல்லாம்
இப்படியேயா கடவுள் விட்டுருவாரு ....
பழையபடி முந்தைய மாதிரி ஊரு 
செழிக்கும் என்று ஏதேதோ பேசி 
ஆறுதல் படுத்தி அப்பாவை 
வெறுங் கையோடு திருப்பி 
அனுப்பி வைத்து விடுவர்.

வயிற்றுப் பசி இருப்பவனுக்கு வார்த்தையை
அள்ளிக் கொடுத்தால்....
பசி தீருமா?

ஒருநாள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு
திரும்பி வந்து கொண்டிருந்தார் அப்பா.
நானும் அப்பா கையைப் பிடித்தபடி வந்து
கொண்டிருந்தேன்.

அப்போது எதிரில் வந்த பெரியசாமி மாமா
"என்ன ஓய் ... ஒரேயடியா ஆளு ஓஞ்சு 
போயிட்டீரு..."
என்று விசாரித்தார் .

" அதெல்லாம் இல்ல...சும்மா தங்கச்சி
  வீட்டு வரை போயிட்டு வர்றேன்..."
என்று சொல்லி சமாளித்துப் பார்த்தார் அப்பா.

"என்ன முகமெல்லாம் வாட்டமா இருக்கு..."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை....ஏதோ 
நினைச்சுகிட்டே வந்ததால எதிரே உங்களை பார்க்கல...
ஆமா....மவன் வீட்டுக்கு தூத்துக்குடிக்குப்
போயிட்டு எப்போ வந்தீரு...."
என்று கேட்டு வைத்தார் அப்பா.

"வந்து இரண்டு நாள் ஆவுது.."

"மவன் பிள்ள குட்டி எல்லாம் சுகமா..."

"அதெல்லாம் நல்ல சுகம்..."

"வேலை கீலை இருக்கா...அங்கேயும் இப்படித்தானா.?."

"என்ன இப்படி கேட்டுட்டீரு...
அவன் உப்பளத்தில் வேலை பார்க்கிறான்...
அவனுக்கு எதுக்கு மழை..."

"அப்போ... மவன் பாடு
பரவாயில்லைன்னு சொல்லும்..."

"இங்க கிடந்தான்னா...இந்தப் பஞ்சத்தில 
பய ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்பான்.
இப்போ கடனில்லாம வயித்துப்பாட்டுக்கு
ஓடுது...பேசாம நானும் அவன்கூட போயி 
இருந்துடலாம் என்றுதான் பார்க்கிறேன்.
என் வீட்டுக்காரி என்றைக்கி என் 
சொல்ல கேட்டா...
ஒத்தப் பசுவை கட்டிகிட்டு 
அழுதுகிட்டு கிடக்குறா..."

"பால் கறக்குதா..."

"பச்சப்புல் தின்னாம பாலு எப்படி கறக்கும்..?
ஏதோ ஆழாக்கு பால் கரக்கும்.
வீட்டுக்கு மட்டுமாவது விலைக்கு வாங்காம
இருக்கலாம் என்று அந்த பசுவை 
கட்டிகிட்டு அழுறா..."

"பையன் வீட்டுக்கு இனி எப்போ போவீரு."
அப்பா மனதில் ஏதோ ஒரு எண்ணம்
தோன்ற மறுபடியும் மறுபடியும்
வலிய பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார்.

எனக்கு வயித்துக்குள்ள ஏதோ இரைச்சல்
வந்த மாதிரி இருந்தது.
இருந்தாலும் அப்பாவை தொந்தரவு
படுத்தக்கூடாது என்று அடக்கிக் கொண்டு நின்றேன்.

"ஒரு மாசத்துல போவணும்...சவம் பச்சபுள்ளைகள்
தாத்தா தாத்தான்னு காலை கட்டிகிட்டே கிடந்துச்சி..
கண்ணுக்குள்ளேயே நிக்குது...
புள்ளைகள் மேல ஒரே தேட்டமா 
இருக்கு...
மறுபடியும் இந்த மாதத்தில ஒரு எட்டு போய்
பார்த்துட்டு வந்துடணும்....
ஊருல இருக்கிறவரை அரைவயிறும்
கால்வயிறும் கஞ்சி குடிச்சி வளருர புள்ளைகள்
வம்பா போச்சி..
இப்போ புள்ளைகள் எல்லாம் நல்லா தெளிச்சலா
இருக்கு."
என்று மகன் பாடு பரவாயில்லை என்பதை
பெருமையாக சொல்லி முடித்தார் 
பெரியசாமி மாமா.

"மருமவ எதும் வேலைகீலை பார்க்கிறாளா..."

"ஆமாம். அவளும் வீட்டுல சும்மாதான 
இருக்கேன் என்று உப்பளத்தில்
வேலை பார்க்குறா...
நல்ல சம்பளம் கிடைக்கு ..
நீரும் இங்க கிடந்து ஏன் கஷ்ட படுறீரு...
தூத்துக்குடி ஈத்துக்குடி போய் 
பொழைக்கிறத பாரும்...."
என்று அப்பாவுக்கும் தூத்துக்குடியில்
பிழைக்க வழி இருக்கு என்பதை சொல்லிக்
வழிகாட்டினார் பெரியசாமி மாமா.

"போனா எங்க தங்குறது...எங்கப் போயி
வேலைத் தேடுறது..?.சும்மா எப்படி போய்
நிற்க முடியும்?"
மறுபடியும் அப்பா அதைப்பற்றியே
விசாரித்தார்.

"போகணுன்னா சொல்லும். 
ஏன் நம்ம புள்ள முத்து இல்ல....
அவன் நீர் போனீருன்னா 
பொதடிய புடுச்சி
வெளியில தள்ளிருவானாக்கும் ...
இங்க கெடந்து 
நாலு பிள்ளைகள வச்சுகிட்டு
நீர் படுற பாட்ட பார்க்க முடியல...
எத்தனை நாள்தான் வானத்தை பாத்துகிட்டே
கஞ்சி குடிக்காம கெடப்பீரு...?
நீரு கெடப்பீரு ...பச்சப்புள்ளைகள் கெடக்குமா...?
நீரும் தூத்துக்குடிக்குப் புறப்புடுறதப் பாரும் "
பெரியசாமி மாமா சொல்ல சொல்ல அப்பாவுக்கு
தலையாட்டுவதைத் தவிர அப்போது வேறு
எந்த பதிலும் சொல்லத் தெரியல....

வீட்டுக்கு வந்ததும் அன்னப்பழத்து கிட்ட
பெரியசாமி மாமா சொன்ன அத்தனையையும் 
ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார்.

அன்னபழம் வேறு யாருமில்ல....
எங்க அம்மா.

அப்பா சொன்னதும் 
"நீரு என்ன நினைக்குறீரு..போகணுமா..
இல்ல இப்படியே பட்டினி கிடந்து சாகணுமா.."?
என்று குதர்க்கமாகக் கேட்டார் அம்மா.

இருக்கும்வரை எங்க வீட்டுக்காரருக்கு
காணாது என்று தலையில் தூக்கி வச்சு
ஆடுனவாதான் இந்த அன்னபழம்.

இப்போ அப்பா கையில 
காசு இல்ல... அப்பாவ
ஒரு ஆளா கூட மதிப்பதில்ல...

இப்படியே போனால் கடைசியில் குடும்பத்தோடு
தற்கொலை செய்ய வேண்டிய நிலைதான்
வரும். இனி மானத்தைப் பார்த்தா முடியாது.
பிறந்த ஊரைவிட்டுப் போனா
 மதிப்பு இருக்காதுதான்.
அதுக்காக சாக முடியுமா...?
ஒரு துணிவோடு தூத்துக்குடி போவது
என்று முடிவு எடுத்தார் அப்பா.

அப்போதுதான் தாத்தாவை யார் 
 பார்த்துக் கொள்வது?
என்ற கேள்வி எழுந்தது.

"உங்க தம்பியிடம் தள்ளிட்டு வாங்க."
என்று ஒற்றைவரியில் தாத்தாவுக்கு முடிவுரை 
எழுதிவிட்டு முகத்தைத் 
திருப்பிக் கொண்டார் அன்னபழம்.

அப்பா மனம் கேட்கல...
இயல்பாகவே அப்பாவுக்கு இளகிய மனசு.
பெத்த தகப்பனுக்கு கஞ்சி குடுக்காதவன் என்று
நாலுபேரு சொல்லிறபிடாது....
தயங்கி தயங்கி சித்தப்பாவிடம் போய்
மட்டும் சொன்னார் அப்பா.

"ஊரைவிட்டு போரீயாக்கும்..."ஒரு நிமிடம்
அப்பா கையைப் பிடித்தபடி ஒன்றுமே பேசாதபடி
கண்கலங்கி நின்றார் சித்தப்பா.

"சரி...போயிட்டு வா...
நம்ம குடும்பத்துக்கு இப்படி ஒரு
கஷ்டம் வருமுன்னு நான் நினைச்சே பார்க்கல...
எல்லாம் நான் பார்த்துகிடுறேன் .
நீ தைரியமா போ "என்று
சமாதானப்படுத்தினார் சித்தப்பா.

"தம்பி. பால்தங்கம் சம்பதிப்பாளா..."
என்றார் அப்பா.
பால்தங்கம் சித்தி பொல்லாத ஆளு.
ஒரு மாசத்துக்கு மேல ஒரு நாள் அதிகமாக
வைச்சு தாத்தாவுக்கு கஞ்சி
கொடுக்க மாட்டாவ....
இப்படி மொத்தமா வச்சி பார்த்துகிட
சம்மமதிப்பாவளா என்ற தயக்கம்தான்
அப்பாவுக்கு... 

ஏதோ சித்தப்பா கொடுத்த நம்பிக்கையில்
அங்கிருந்து வீடு வந்தார் அப்பா.
ஆனாலும் அப்பாவுக்கு தாத்தாவை சுமையாக
நினைத்து மொத்தமாக சித்தப்பா
வீட்டில் இறக்கி வைத்துவிட்டு போக
மனம் வரல...
மனசுக்குள்ள ஒரு போராட்டம்.

 வீட்டில் வந்து ஒருவாய்
தண்ணீர்கூட வாங்கிக் குடிக்கல...
விட்டத்தைப் பார்த்தபடி அப்படியே படுத்திருந்தார்.
விழி ஓரத்தில் கண்ணீர் நிறைந்து நின்றது.

நடக்கக்கூடாத நாடகத்தை நடத்திக்
கொண்டிருந்து மழை.
அவன் நடத்திய நாடகத்தில் முதல்
பலிகடாவாக்கப்பட்ட
நாங்கள் காட்சியிலிருந்து மறைந்து 
போக நினைத்த நாள் இன்று.

ஊருல ஒருத்தருக்கும் தெரியாம ஊரைவிட்டு
போக நினைத்தோம்.

மறுபடியும் கதவைத்திறந்து யாராவது
தெருவில் தெருகிறார்களா என்று தெருவில்
நோட்டமிட்டேன்.
"யாருமில்லை....வாங்க...வாங்க..."
அவசரப்படுத்தினேன்.

ஆளுக்கு ஒரு பொட்டலத்தைத் தூக்கியபடி
எல்லோரும் கிளம்பினோம்.

ஓடிப்போய் அப்பா கையில் இருந்த 
தகரப் பெட்டியை
வலுக் கட்டாயமாக இழுத்தேன்.

"நீ சுமந்துகிட மாட்டாப்பா..".என்று 
சொல்லியபடி தர மறுத்தார் அப்பா.

"நான் சுமப்பேம்பா...."என்றபடி பெட்டியை வாங்கி
தலையில் வைத்தபடி முன்னால் நடந்தேன்.

"இனி எப்போதும் என் அப்பா சுமையை 
நான்தான் சுமப்பேன் "என்ற முடிவோடு
தூத்துக்குடியை நோக்கிய 
எங்கள் பயணம் தொடங்கியது.

ஊரைக் கடக்கும்வரை யாராவது
பார்த்துவிடக் கூடாதே என்று
மனசு பக்குபக்கு என்று
அடித்துக் கொண்டிருந்துது.
ஊரைக் கடந்ததும் திரும்பிப் பார்த்தேன்.

ஊரின் கடைசிக் காட்சியை
என் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக
மறைந்து கொண்டிருந்தது.






Comments

Popular Posts