புலிகிடந்த தூறாய் விடும்

 புலிகிடந்த தூறாய் விடும்


 "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்"

என்பார் வள்ளுவர்.

மனைவி மாண்புடையவளாக இருத்தல்
வேண்டும். நற்பண்பு இல்லாத
மனைவி வாய்த்தால் ....
அவ்வளவுதான்.
குடும்பம் குடும்பமாக இராது.

எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
மனைவி வீட்டில் இருந்தால்
எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?

செல்வமும் புகழும் இருந்து 
என்ன பயன்?
வீட்டில் அமைதி இல்லையே!
எல்லாம் இருந்தும் அமைதி 
இல்லை என்றால்
 ஒன்றுமில்லாது போன்ற 
 வெறுமையைத்தான் உணர முடியும்.
 
 வெளியில் சென்ற கணவனுக்கு 
 வீடு திரும்ப
 மனம் வராது.
 மனைவியோடு பேசவே அச்சம் ஏற்படும்.
 எந்த நேரத்தில் 
 சண்டையிட்டுக் கொள்வாளோ
  என்ற அச்சத்தோடே 
 வாழ்க்கை நடத்த
 வேண்டியிருக்கும்.
 
"புகழ்புரிந்த இல்லில்லோர்க்கு இல்லை
இகழ்வார்முன்
 ஏறு போல் பீடு நடை  "

பீடு நடைஎப்போது வரும்?
பணத்தால் வருமா?
பதவியால் வருமா?
புகழால் வருமா?

இல்லை.

நமது புகழைக் காக்க விரும்பும்
மனைவி அமைந்தால் மட்டுமே
ஏறுபோல் பீடு நடை நடக்க
முடியும்.

 அனைவருக்கும் நல்ல மனைவி
 வாய்க்க வேண்டும் என்றுதான்
 ஆசை. அப்படி வாய்க்கவில்லை என்றால்?

அந்த வீடு எப்படி இருக்குமாம்?

இதை ஔவையிடம் 
கேட்டுவிடுவோம் வாருங்கள்.


"இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாமே யாமாயின்
இல்லாள் 
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல்
அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்"

   மூதுரை பாடல் : 21

என்கிறார் ஔவை

"நற்பண்புள்ள இல்லாள் வீட்டில் இருந்தால்
எல்லா செல்வமும் நிறைந்திருக்கும்.
அந்த இல்லாள் நற்பண்பு இல்லாதவளாக
இருந்தால் ...?

அந்த வீடு
புதருக்குள் மறைந்து புலி ஒன்று
இருப்பது போன்று இருக்கும் "
என்கிறார் ஔவை.

வீடு புலிவாழும் பதறானால்
புதருக்குள் இருக்கும் புலி
யாராக இருக்கும்?

மனைவி என்பது சொல்லவும் வேண்டுமோ?


நற்பண்பில்லா இல்லாளுக்குப் புலியை
உவமையாக்கியதோடு அல்லாமல்
 பதுங்கியிருந்து பாயும்
புலியைக் கண்முன் 
கொண்டு வந்து நிறுத்தி நம்மைக்
கிலி பிடிக்க வைத்துவிட்டார்
ஔவை.

நற்பண்பில்லா மனைவி
புலியா?
புலியோடு குடித்தனம்
நடத்த முடியுமா?
அச்சமாக இருக்கிறதல்லவா?

கூடாது .அப்படி ஒரு
வாழ்க்கை அமைந்துவிடக்
கூடாது என்பதுதான்
அனைவரின் ஆசை.


மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.


 






Comments

Popular Posts