கல்லாதான் கற்ற கவி

கல்லாதான் கற்ற கவி 



போலச் செய்தல் சிறுபிள்ளகள்
செய்யும் செயல்.
நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே 
செய்து காட்ட நினைப்பது
குழந்தைகளின் இயல்பு.
அது வேடிக்கையாக இருக்கும்.
அதுதான் அவர்களுக்குப்
 படிப்பினையாகவும்
இருக்கும்.

அதுபோல நாமும் பிறரைப் போல
நடக்க வேண்டும் என்று முயற்சிப்போம்.
அது நல்லதா கெட்டதா என்பது
செய்யும் செயலைப் பொறுத்தே
அமையும்.

எல்லா இடங்களிலும் இந்தப்
போலச் செய்தல் எடுபடாது.

ஒவ்வாத ஒரு செயலை 
பிறரைப் போல செய்ய நினைத்தால்
பிறருடைய பார்வைக்கு அது 
நகைச்சுவையாகதான்
இருக்கும். எப்போதுமே நாம்
நாமாக இருப்பதுதான் நல்லது.
 அப்போதுதான்
நம் தனித்தன்மை வெளிப்படும்.

ஒரு பேச்சாளர் இன்னொரு பேச்சாளர் போல
பேச நினைத்தால் அவர் தோற்றுத்தான் 
போவார்.
நமது எழுத்தோ அல்லது பேச்சோ 
யாரைப் போன்றும் இருக்கக்
கூடாது.
அவரைப்போல் இவரைப் போல்
என்று ஒன்றிரண்டு படித்து
வைத்துவிட்டுச் பேசவோ எழுதவோ
 நினைத்தால் நாம் எழுத்தாளராகவோ 
பேச்சாளராகவோ நம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது.
இசையமைப்பாளரும் இன்னொரு இசையமைப்பாளரைப்போல இசையமைத்தால் எத்தனை நாளைக்குத்தான் அவர் இசையமைப்பாளராகத் தொடர முடியும்.
 
இப்போது கவிதைக்கு வருவோம்.

ஒருவருக்குக் கவிதை பாட 
ஆசையாம். பிரபலமான ஒருவரின்
கவிதையை மனப்பாடம் செய்து
வைத்துக்கொண்டார்.
அவ்வாறு தான் மனப்பாடம்
செய்து வைத்திருந்த கவிதையை
 தான் எழுதியது போல 
 பெருமையாக வாசித்து நின்றாராம்.
அது இயல்பாக இருக்குமா?

கவிதை உச்சரிப்பும் 
பாவனைகளும் எந்தெந்த இடங்களில்
நிறுத்த வேண்டும்.
எந்தெந்தச் சொற்களைச்
சேர்த்துப் படிக்க வேண்டும்
என்பது கவிதையை எழுதியவருக்கு
மட்டுமே தெரியும்.
வாசிப்பவர் ஏதோ எழுதி வைத்ததை
வாசிக்கும் குழந்தை போல வாசித்துவிட்டுச் செல்வார்.
அதில் உணர்வு இருக்காது.

இப்படியொரு கவிதையைக் கேட்ட ஒருவருக்கு சிரிப்பு வந்திருக்கிறது.
கூடவே சட்டென்று இன்னொரு நினைப்பு
வந்திருக்கிறது.
அது என்ன நினைப்பு
என்று கேட்கிறீர்களா?

இதோ பாடலைக் கேளுங்கள்
உங்களுக்கே புரியும்.


"கான மயிலாடக் கண்டிருந்த 
வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்-
தானுந்தன்
பொல்லாப் சிறகைவிரித் தாடினாற்
போலுமே
கல்லாதான் கற்ற கவி"

 மூதுரை - பாடல் - 14


"கல்வி அறிவில்லாத ஒருவன்
பிறர் எழுதிய கவிதையை
மனப்பாடம் செய்துகொண்டு
தான் எழுதியதாக பிறர் 
முன்னால் வாசித்து நிற்கிறானே
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
காட்டில் மயில் தோகை விரித்து ஆடுவதைப்
பார்த்து நானும் அதுபோல் ஆடுவேன் என்று
ஒரு வான்கோழியானது
தன் அழகில்லாதத் தோகையை
விரித்து ஆடுவதுபோல
 இருக்கிறது"
என்கிறார் ஔவையார்.

மயிலும் வான்கோழியும்
ஆடுவதை நம் கண்முன்
கொண்டுவந்து நிறுத்தி
எது ஆடுவது அழகு என்பது உங்களுக்கே தெரியும்.

அதுபோல யார் கவிதை  வாசித்தால்
அழகாக இருக்கும் என்று
நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள் என்கிறார்
ஔவை.

 ஆடுவதில் மயிலுக்கும் வான்கோழிக்கும்
போட்டி.
ஆட்டத்தைப் பாருங்கள். எது அழகாக இருக்கிறது என்று போட்டி நடைபெறும் இடத்திற்கே அழைத்துச் சென்று 
முடிவை நமது தேர்வுக்கு விட்டுவிட்டார்.

 நல்ல போட்டியை அருமையாக நிகழ்த்திக்காட்டி இல்லாதான் கற்ற கவி
இப்படித்தான் இருக்கும் என்று
சொல்லி பதிய வைத்துவிட்டார்.

இனி வான்கோழி படுவதைப் பார்க்கும்போதெல்லாம் கல்லாதான் கற்ற கவி கண்முன் காட்சியாக வந்து
நிற்பது உறுதி.

அருமையான காட்சியை உவமையாக கொண்டு வந்து நிறுத்தி தனது கருத்திற்கு சரியான சாட்சியைக் களத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்  ஔவை.
இனி காட்சியும் சாட்சியும் நம் நினைவைவிட்டு கடந்து போய்விட
முடியுமா என்ன!


 



 
 
 











Comments

Popular Posts