உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்....


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்....

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்"

                     குறள் : 394

உவப்ப - மகிழும் படியாக
தலைக்கூடி- கலந்து பழகி
உள்ள - நினைக்கும்படியாக
பிரிதல்- நீங்குதல்
அனைத்தே- அத்தன்மை கொண்டது
புலவர் -கற்றறிந்தார்,ஆசிரியர்
தொழில் - செயல்,இயல்பு


மகிழும்படியாகக் கூடிப் பழகி,
 நினைத்து நினைத்து
வருந்தும்படியாகப்
பிரிந்து போதல் கற்றறிந்த
புலமை உள்ளவர்களின் இயல்பாகும்.

விளக்கம்:

நம் உள்ளம் மகிழும்படியாக 
இனிமையாக பேசும்
இயல்புடைய ஒருவரோடு பழகினால்
பிரிய மனமிருக்காது.
அப்படியே பிரிய வேண்டிய
சூழல் ஏற்பட்டாலும் மறுபடி இவரை
எப்போது பார்ப்போம் என்ற
எதிர்பார்ப்பும் ஆவலும் மேலோங்கி இருக்கும்.

அப்படிப்பட்ட நல்ல பண்பு உள்ளவர்களும்
இருக்கிறார்களா?
என்று கேட்கத் தோன்றும்.
ஏன் இல்லை?
நல்ல ஆசிரியரிடம் கல்வி கற்கிறோம்.
அந்த ஆசிரியரின் பிரிவு நம்மை
வருத்தப்பட வைக்கவில்லையா?
இப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும்
வாய்ப்பு இனி எப்போது வாய்க்கும்
என்று எத்தனை நாள் 
எத்தனை ஆசிரியர்களை
நினைத்து நினைத்து ஏங்கியிருப்போம்.
.
ஆசிரியர் மட்டுமல்ல. நல்ல கல்வி அறிவும்
புலமையும் இருப்பவர்களுக்கு இயல்பாகவே
பிறரோடு  இனிமையாகப் பேசும் பண்பு
இருக்கும்.
அந்தப் பண்பு அவர்கள்பால் ஓர்
ஈர்ப்பை ஏற்படுத்தும். மறுபடியும் மறுபடியும்
பார்க்க வேண்டும். அவர்களோடு பேச 
வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்.
அதுதான் கற்றறிந்தவர்களிடம்
இயல்பாகவே அமைந்திருக்கும் ஒரு பண்பு.

புலவர் தொழில் என்று சொல்லப்பட்டுள்ளதால்
புலமைமிக்கவரின் செயல்  அதாவது கற்பிக்கும்
தொழிலைக் கொண்டிருக்கும் ஆசிரியரின்
செயல் என்று பொருள் கொள்ளுதல்
ஏற்புடையதாக இருக்கும்.

ஆசிரியரை சிறப்பிக்கும் வகையில்
இந்தக் குறள் அமைந்துள்ளது.
மாணவர்கள் ஆசிரியருடன் 
உவப்பதலைகூடி
கல்வி கற்பர். பிரியும்போது 
உள்ளம் நிறைய 
அவர் நினைவோடு பிரிந்து செல்வர்.


அதாவது ஆசிரியர் என்றென்றும்
நம் உள்ளத்தில் குடிகொண்டிப்பவர் 
என்று ஆசிரியரின் பெருமையை
அழகாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.



English couplet :

"You meet with joy,  with pleasant thought you part
Such is the learned scholar's wonderous art"


Explanation :

It is the part of the learned to give joy to
those whom they meet ,and on leaving
,to make them think oh!when shall we
meet them again.

Transliteration :

"Uvappath thalaikooti ullap piridhal
Anaiththe pulavar thozhil"

 


Comments

Popular Posts