வெல்லும் சொல்லும் கொல்லும் சொல்லும்

வெல்லும் சொல்லும் கொல்லும் சொல்லும்




"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
என்றார் வள்ளுவர்.

நாம் பேசுகிற சொல்லை இன்னொரு சொல்
வெல்ல முடியாது என்பதைத் தெரிந்த
பின்னரே அந்தச் சொல்லைப்
பயன் படுத்த வேண்டுமாம்.
நமது சொல்லில் குற்றம்
கண்டுபிடித்துவிடக் கூடாது.
நமது சொல்தான் இறுதித் தீர்ப்புக்கு
உரியதாக இருக்க வேண்டும்.
உள்ளங்களை வெல்லும் சொல்லாக 
இருக்க வேண்டும்.


"சொல்லைப் பற்றி எங்களிடமேயா?
 அட...போங்கங்க...
நாங்கள் சொல்லுவதையும் சொல்லுவோம்.
 சொல்லாததையும் கூட  சொல்லுவோமில்ல...
  கூட்டிச் சொல்லணுமா?
  கழித்துச் சொல்லணுமா?
  பெருக்கிச் சொல்லணுமா ? 
  வகுத்துச் சொல்லணுமா?
   எல்லாம் கணக்குப் போட்டு பேசுவோமில்ல..."
என்ற மனக்கணக்கு எனக்குப் புரிகிறது.

" கணக்குப் போட்டுப் பேசுவது 
 எல்லாம் சரிதான்.
 கணக்கில்லாமல் பேசிவிட்டு 
 பேந்த பேந்த என்று எத்தனை
  இடங்களில் விழித்திரருப்பீர்கள்.
சற்றே பின்நோக்கித் திரும்பிப்
பாருங்கள்."
  

 " வெல்லும் சொல்... கொல்லும் சொல் ...
 அனைத்தும் யாம் அறிவோம்.... என்று
யாரே வசனம் பேசுவது போல் கேட்கிறதே!
 
  "அனைத்தும் அறிந்து விட்டால் ... 
  நீங்கள்  பேசும் சொல் யாவும் 
  வெல்லும் சொல் என்று 
கூறிவிட முடியுமா?"
  
  "வேறென்ன வேண்டும்....
  சுட்ட சொல் வேண்டுமா ?
  சுடாத சொல் வேண்டுமா?"
  
    "அட...நீங்கள் சுட்ட சொல் 
     என்றதும்தான்  எனக்கு ஒன்று 
     நினைவுக்கு வருகிறது."
     
   சிறுவன் ஒருவனிடம் 
   நாவற்கனி பறித்துத் தரும்படி கேட்கிறார் ஔவை.
   
  "  சுட்டபழம் வேண்டுமா?
   சுடாத பழம் வேண்டுமா "
   என்று கேட்டு ஔவையையே 
   சொல்லால் மடக்குகிறான் அந்தச் சிறுவன்.
   
    இதுதாங்க வெல்லும் சொல்.
   ஔவையின் உள்ளத்தையே
   வென்ற சொல்.
   இடத்திற்கு ஏற்ப
   நேரங்காலம் அறிந்து
   சொல்லப்பட்ட சொல்.
   
    பேசும் வார்த்தைகள்தான் ஒருவருடைய 
    வெற்றியைத் தீர்மானிக்கும்..
    சொற்கள் உயிருள்ளவை. 
    அதனால் பேசுவதில் கவனம் வேண்டும்.
    கடந்து போன காலத்தை நாம்
    திரும்பப் பெற முடியாது.
    அதேபோல் வாயிலிருந்து விழுந்த
    வார்த்தையையும் திரும்பப் பெற
    முடியாது

     "ஒரு சொல் வெல்லும். 
     ஒரு சொல் கொல்லும் "
     என்று கூறுவார்கள்.
     
  சொல்லைத் தவறாகப் பயன்படுத்திவிட்டால்
   தீராத பழிதான் வந்து சேரும்.
  கோவலன் அரசியின் காற்சிலம்பைக்
  களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டான்.
  
  பாண்டிய மன்னன் முன் கொண்டுவந்து
   நிறுத்தப்படுகிறான்.
   மன்னன் எதைப் பற்றியுமே 
   யோசிக்கவில்லை.
  சிலம்பு கிடைத்துவிட்டது .அவ்வளவுதான் .
  இனி அதற்குமேல் என்ன விசாரணை 
  வேண்டும் என்று நினைத்துவிட்டான்.
  
"கொன்று அக்கள்வனை கொணர்க" 
என்று ஆணையிட்டு விட்டான்.

மன்னன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?
 வீரர்களும் மன்னன் ஆணைப்படி
  கோவலனைக் கொன்று சிலம்பைக் 
  கொண்டு வந்து தந்துவிட்டனர்.
  
  கோவலன்     கள்வனா? இல்லையா? 
  என்பதை விசாரித்த பின்னர் அல்லவா 
  மன்னன் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
  ஆராயாமல் தீர்ப்பளித்து
  தீராத களங்கத்தைத் தேடிக் கொண்டான்
  பாண்டிய மன்னன்.
  
  ஆணையிடுவதற்குமுன் ஆயிரம் முறை
  விசாரித்திருக்க வேண்டும்.
   மன்னனின் கொல்லும் சொல்லால் 
   கோவலனும் கொலை செய்யப்பட்டான்.
   மன்னனும் உயிரிட நேர்ந்தது.
   
 இப்படித்தாங்க நாமும் .‌..ஒன்று சொல்ல வந்து ..
 .வேறு ஒன்றை சொல்லி மாட்டிக்கொண்டு 
 மலங்க மலங்க எத்தனை இடங்களில்
 விழித்துக்கொண்டு நின்றிருப்போம்.
 
 இதற்கு மன்னன் மட்டும் விதிவிலக்கா என்ன?
 
 சொற்களை மாற்றி சொல்லிவிட்டால் 
 அதற்கு வேறு பொருள் கற்பிக்கப்பட்டுவிடும்.
 
"  தகுந்த நேரத்தில் சொல்லப்பட்ட 
  சொற்கள் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட 
  பொற்பழங்களுக்கு சமம் " என்கிறது பைபிள்.
  
 இப்படிதாங்க ...   இரண்டாம் உலகப்போர்  
 நேரத்தில் ஜப்பானும் மாட்டிக் கொண்டதாம்.
 ஜப்பான் நாட்டிற்கு  அமெரிக்கா 
 தங்களுக்கிடையேயான பிரச்சினை தொடர்பாக 
 ஒரு கடிதம் எழுதியிருந்ததாம்.
 
  ஜப்பானியர்களுக்கு தாய்மொழியில் 
  மட்டுமே நல்ல புலமை உண்டு.
  ஆங்கிலத்தில் அத்தனை புலமை இல்லையாம்.
   படித்துவிட்டு  ஜப்பானிய மொழியில் 
   அதற்கான பதில் கடிதம் அனுப்பப்பட்டதாம்.
   
    கடிதத்தில் உங்கள் கோரிக்கையைப் 
    பரிசீலிக்கிறோம் என்று ஜப்பானிய மொழியில் 
     எழுதப்பட்டிருந்ததாம்.
      அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்த 
      மொழி பெயர்ப்பாளர் உங்கள் கோரிக்கையை 
      நிராகரிக்கிறோம் என்று தவறுதலாக மொழிபெயர்த்து 
      அமெரிக்காவிடம் தந்து விட்டாராம்.
      விளைவு இரண்டாம் உலகப்போர்.
      அதனால் பல இலட்சக் கணக்கான 
      மக்கள் உயிரிழந்தனர்.
      
 இங்கே    '  நிராகரிக்கிறோம் ' என்ற ஒற்றைச் சொல் 
 கொல்லும் சொல்லாக மாறி வரலாற்றில் 
 தீராத களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.
 
அதனால்தான் சொற்களைக் கையாளுவதில் 
அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 சொற்களை தகுந்த இடத்தில் சாதுரியமாக கையாளத் தெரிய வேண்டும்.
அப்போதுதான் அந்த சொற்கள் வெல்லும் சொல்லாக அமையும்.
 அலெக்சாண்டர்  இந்தியாமீது படையெடுத்து வந்தார்.
  இந்தியாவின்  வளம் அவர் கண்களை உறுத்தியது.
   பல இடங்களைக் கைப்பற்றினார்.
  போரஸ் மன்னன் ஆண்ட பகுதிகள்மீது
   அவர் கண் பட்டது.
   
   போர் தொடுத்தார்.  வெற்றிபெற்று
   போர்ஸ் மன்னன் ஆண்ட
    பகுதிகளைத் தனதாக்கிக் கொண்டார்.
   அத்தோடு விட்டுவிடவில்லை.
   வீர்களோடு போரஸ் மன்னனையும் 
   சேர்த்து சிறை பிடித்துச் சென்றார்.
   
வீரர்களோடு வீரராக மன்னனும் 
சிறையில் அடைக்கப்படுகிறார்.
 தனது அடிமைகளைப் பார்ப்பதற்காக மிடுக்காக
 சிறைக்கு வருகிறார் அலெக்சாண்டர்  .
  சிறையில் இருக்கும் போரஸ் மன்னனைப் பார்க்கிறார்.
  அவரைக் கண்டதுமே ஒரு நிமிடம் அந்த
  இடத்தில் நிற்கிறார்.
  
   எதிரியாகவே இருந்தாலும் போரஸ் 
   ஒருநாட்டு மன்னனாக இருந்தவர் அல்லவா?
    ஆனால் இப்போது அவர் அலெக்சாண்டரின் அடிமை.
    ஒரு கர்வத்தோடு மன்னனைப் பார்த்து 
    உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் அலெக்சாண்டர்.
    
  "   இப்போது  நீர் என் அடிமை.
  அதாவது என்னுடைய பிணையக் கைதி.."
   பீடிகையோடு பேச்சைத் தொடங்கினார்.
   
 "  மன்னனாகிய என்னை மற்ற 
 கைதிகள்போல நடத்துகிறீர்களே  
 என்று   நீ  நினைக்கலாம்.
  அதனால் உனக்கு ஒரு வாய்ப்பு தர
  விரும்புகிறேன்.
  உன்னை நான் எப்படி நடத்த வேண்டும்
   என்று நீ எதிர் பார்க்கிறாய்  ?என்பதை நீயே சொல்."
    நக்கலாக  கேட்டார் அலெக்சாண்டர்.
    
    ஒரு நிமிடம் அலெக்சாண்டர் 
    முகத்தையே பார்த்தார் போரஸ்.
    எப்படியும் இவர்  தனக்கு 
    விடுதலை தரப் போவதில்லை.
    மரண தண்டனைதான் விதிக்கப் போகிறார்.
    கோழையாக சாவதைவிட
     ஒரு வீரனாகவே சாகலாமே என் நினைத்தார்.
    அதனால் துணிச்சலோடு,
   "நான் ஒரு மாவீரன் .என்னை 
    ஒரு  வீரனைப்போல் நீங்கள் நடத்த வேண்டும் 
    என்று எதிர் பார்க்கிறேன்." 
    என்று துணிச்சலாக பதிலளித்தார்.
    
   நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்ட அலெக்சாண்டர்,
 "    ம்..அப்புறம்..." என்றார்.
 
     " அப்புறம்....நான் ஒரு நாட்டின் மன்னன். 
     என்னை ஒரு மன்னனைப் போல 
     நீங்கள் நடத்த வேண்டும்
      என்று எதிர் பார்க்கிறேன் " 
   என்று துணிந்து அலெக்சாண்டரிடம் பேசினார்
    போரஸ்.
    
     ஒரு  போர் கைதியிடமிருந்து இந்தப் பதிலை 
     எதிர் பார்க்காததால் அப்படியே 
     மலைத்துப் போய் நின்றார் அலெக்சாண்டர்.
     
  தோல்வியிலும் துவளாத போரஸின் 
  துணிச்சல் அலெக்சாண்டரைப்
   பிரமிக்க வைத்தது.
   
     "உனது துணிச்சலை நான் மெச்சுகிறேன் "
     என்றபடி போரஸ் மன்னனின் தோள்களைத் 
     தட்டிக் கொடுத்தார் அலெக்சாண்டர்.
     
      ஒரு மாவீரன் இருக்க வேண்டிய இடம்
       இதுவல்ல என்று கூறி நாட்டை
        அவரிடமே திரும்ப ஒப்படைத்தார்.
        
     "ஒரு மன்னனாகவே நீ வாழ வேண்டும் "
     என்று பாராட்டிவிட்டு திரும்ப சென்றார்.

 சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த
போரஸை மீட்டுக் கொண்டு வந்து
மறுபடியும் அரியாசனம் ஏற வைத்தது
அவரின் வெல்லும் சொல்.
     
இதுதான் சொல்லால்
வென்றவன் வரலாறு.
நாம் பேசும் பேச்சு நம்மை 
வாழ வைக்கும்.
நம் பேச்சு எப்போதும் 
பிறர் உள்ளத்தில் 
தைப்பதாக இருக்க வேண்டும். 
வெல்லும் சொற்களைக் 
கையாளுதலும் 
ஒரு கலைதான்.

வெல்லும் சொல்லைக்
கையில் எடுத்து வெற்றிபெற
 வேண்டும் என்று 
முடிவு எடுத்துவிட்டீர்களல்லவா!
இனி உங்கள் வெற்றிக்கு 
எந்தக் கொல்லும் சொல்லும்
 குறுக்கே வந்து நிற்று தடை போட
முடியாது.
      
கொல்லும் சொல்லோடு 
கொள்ளுங்கள் பிணக்கு.
வெல்லும் சொல்லோடு தொடங்கட்டும் 
உங்கள் வெற்றி கணக்கு.
     
     
     
    
    
    
      
      
      
        

Comments

Popular Posts