பாகப்பிரிவினையில் அம்மா


            பாகப்பிரிவினையில்  அம்மா


   பாட்டி...பாட்டி" கதவைத் தட்டினான் செல்வன்.

  "  யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கிறேன்" குரல்
   கொடுத்தபடியே   தட்டுத்தடுமாறி வந்து
    கதவைத் திறந்தார் பாட்டி.
   
   கதவைத் திறந்ததும் "யாரும்மா..
   மூத்தவன் பிள்ளையா?"

"ஆமா...நான்தான்"

    கையைப் பிடித்த பாட்டி "செல்வனா..
   பள்ளிக்கூடத்துக்குப் போகல"
    கரிசனமாக கேட்டார்.
   
   "போகல..."ஒற்றை வார்த்தையோடு
   பேச்சை முடித்துக் கொண்டான் செல்வன்.
  
   " ஏன் போகல...அம்ம வீட்டுல இல்லையா?"
  
  "இருக்காங்க..இருக்காங்க."சலிப்பாக பதில் வந்தது.
 
    "பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?"
   
   "ஒருத்தரும் அடிக்கல...போகல்ல
    என்றால் போகல்ல
    .விடுங்களாம் பாட்டி."
   
   " பள்ளிக்கூடம் போகாமல் இருக்கலாமா..."
     என்ற  பாட்டி.,
   "உங்க அப்பாவும் இப்படித்தான்.
   பள்ளிக்கூடம் போன்னா எங்கேயாவது
   போய் ஒளிந்து கொள்வான்.
   சாயங்காலம் பள்ளி விடும் நேரத்தில்
   டாண் என்று வீட்டில் வந்து நிற்பான்.
   அதனால்தான் படிக்காமல் போய்விட்டான்."
   மகனுக்காக  இப்போது வருத்தப்பட்டார் பாட்டி.
  
" பாட்டி பேசாம  புறப்படுங்க...புறப்படுங்க.."
.கையைப்பிடித்து இழுத்தான் பேரன்.

" எங்க போகணும் ... "

" இன்றைக்கு என்ன நாளு....

சொல்லுங்க பார்ப்போம் "

" எனக்கு என்ன தெரியும். கண்ணா தெரியுது.."

" வாங்க...எங்க வீட்டுக்கு போக வேண்டிய நாள் ...
வாங்கன்னா...வாங்க..."

பாட்டிக்கு இதற்குமேல் ஒன்றும் கேட்க
தெரியவில்லை.புரிந்து போயிற்று.

மனசுக்குள் அன்று நடந்த நிகழ்வு

ஒரு வலியாக வந்து

சுருக்கென்று குத்தியது.

நாலு பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு பூமணி
பாட்டி பட்டபாடு கடவுளுக்கு ஏற்காது.

சூரியன் உதிக்கும் முன்னே காட்டில் போய்
நிற்பாள்.
கீரை பறித்து வந்து நாலுபணம் 

கொண்டு வந்தாதான்
நாலு புள்ளைகளுக்கும் வயிறார சோறு போட
  முடியும்.
  தாத்தா காட்டு காவல்காரர்.
  நல்லா காடு விளைஞ்சா விளைக்கு
  நாலு மரக்கால்
கடலை   கிடைக்கும்.
  இல்லை என்றால்...வயிற்றுப்பாட்டுக்கே
  தகினத்தோம் போட வேண்டியதுதான்.


தாத்தாவுக்கு ஒருமுறை கால் ஒடுஞ்சிப்போனதால
ஒத்தக்காலை தாங்கித்தாங்கி நடப்பாவ...
கனத்த வேலைக்குப் போகமுடியாது.

சும்மாவே இருக்கிறதைவிட
கங்காணி வேலைக்காவது போகலாம்
என்றுதான் ஊர் பெரிவுகிட்ட 

கங்காணி வேலை கேட்டு பார்த்தாவ.....

அவுங்களும் பாவம் பாத்து கங்காணி
வேலை செய்ய ஒத்துக்கிட்டாவ...
காலையில் போனா சூரியன்

அடஞ்சாதான் வீட்டுக்கு வருவாவ...
வீட்டுல ஒரு ஆட்டுக்குட்டி கிடக்கு.
அதுக்கு ஒரு கொடுக்குபோல கொழைகிளைபறிச்சி
கக்கத்துல வச்சுகிட்டு வந்து
நிற்பாவ...

  பூமணி பாட்டியும்  ஓடி ஓடி உழைச்சதால
  கால்காசு சேர்க்க முடிந்தது.
 
  ஊரு மெப்புக்கு இல்ல என்று சொல்லாம
  நாலுபேருக்கும் நாலு நாலு சென்ட்
இடம் வாங்கிப் போட்டுருந்தாவ.
அதுல ஒரு பெறைய மடக்கி
நாலு பேரையும் கலியாணம் பண்ணி 

தனித்தனியாக
வச்சிட்டாவ...
 
தாத்தா இருப்பது வரை பிள்ளைகள்
தனியாக இருப்பது  பாட்டிக்கு பெருசா தெரியல...
இருவரும் பொங்கி ஆக்கி தின்னுகிட்டு
நல்லாதான் இருந்தாவ.
பாட்டிக்கும் முன்ன மாதிரி காட்டுக்குப் போக முடியல..
தாத்தாவும் தளர்ந்து போய் வீட்டிலேயே
முடங்கிப் போனார்.

இருக்கிறதை வைத்து கஞ்சியோ கூழோ

வீட்டு சத்தம் வெளியில் கேட்காம

 காலத்தை ஓட்டினாவ....

போனமாசம் வந்த ஒரு நாளு வயித்துப்
போக்குல தாத்தா கொளக்குன்னு
விழுந்துட்டாவ.....பாட்டி ஓடிப் போயி
நர்ஸ் அம்மா கூட்டிட்டு வந்து பார்த்தாவ..
ஒண்ணும் இல்ல...எல்லாம் முடிச்சுப் போச்சுன்னு
நர்ஸ் கையை ஆட்டி உதட்டைப்பிதுக்கிட்டு
போய்விட்டாவ.

பாட்டி அழுது பார்த்தாவ...

எல்லாம் முடிஞ்சி போச்சு.

நாலு மக்களும் வந்து காரியத்தை

ஊரு மெப்புக்கு பெருசா நடத்தி முடிச்சாவ...

தாத்தா காரியம் முடிஞ்சு

 போனதும் விசயம்

பெருசா போச்சு.
அம்மாவுக்கு யார் சோறு கொடுப்பது ?என்ற
விவகாரம் பேச்சு வார்த்தைக்கு  வந்தது.

யாருக்கும் தாயை கூட வைத்துப்
பார்க்க விருப்பம் இல்லை.

ஆளாளாளுக்கு கையை உதறிவிட்டு

விலகப் பார்த்தாவள தவிர

யாருக்கும் தாயைப் பார்த்துக்க மனமில்லை.

 பாட்டி வேண்டாம் மக்கா....

மாசம் நாலு பக்கா அரிசி தந்தாஒரு கஞ்சி

வச்சி குடிச்சிகிட்டு ஒரு மூலையில் முடங்கிகிடக்கேன்னுதான்

சொன்னாவ...


 விசயம் ஊர்ப்பெரியவர் காது

 வரைப் போனதால வழக்காகிப் போச்சி.
 
" யாராவது ஒருத்தர் வீட்டுல 

வச்சி பார்த்துங்கப்பா..."
என்று பெரியவர் பேசிப் பார்த்தார்.

"அது எப்படி ஏத்துக்க முடியும்..
மூத்தவனுக்குத்தான சிறுவாட்டுப்
பணம் எல்லாம் கொடுத்தாவ
..அவனையே கூட வச்சுப்
பார்த்துக்கிட சொல்லுங்க"
என்று ஏறுக்குமாறா
பேசினான்
இளையவன்.

"என்ன பேச்சு பெசுறல...
உன்னைத்தான் பத்தாவது வரை படிக்க
வச்சாவ...என்னை மூணாவது
படிக்கும்போதே காட்டுக்கு
கூட்டிட்டுப் போயி என் படிப்பை ஒண்ணும்
இல்லாம ஆஙக்கிப்புட்டாவ ...ஞாயமா
பார்த்தா நீதான் சாப்பாடு போடணும்"
என்றான் மூத்த  மகன்.

"ஆமா...பார்க்கிறது பார்த்துடலாம்.
கிடையில விழுந்துட்டா என்றால்
யாரு பார்க்கிறது... ?அதையும்
பேசி முடியுங்க "என்றான் நடுலவர்.

"பெத்த தாயை ஆளாளுக்கு இப்படி ஏலம் போடுறீகள
இது நல்லாவா இருக்கு..."
என்றார் பூமணி பாட்டியின் தம்பி.

" ஏன் அவ்வளவு பாசம் பொங்கிட்டு வருதுன்னா
நீங்க கொண்டு வைத்து பார்க்கிறது.
உங்க உடப்பிறந்தாள் தான..."
சீறினான் இளையவன்.

" அட...சும்மா இருங்கப்பா...
ஆளுக்கு ஒண்ண பேசிகிட்டு...
தாயை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து
நிறுத்துன பயக்க..." என்றார் பக்கத்து
வீட்டு தாத்தா.

" பெரியவரே...நீங்க   என்ன நினைக்கியளோ அதைத்
உங்க தீர்ப்பா
சொல்லுங்க  கட்டுப்படாம எங்க போவானுவ..."என்றார்
சின்ன தாத்தா.

அப்போதான் "ஆளுக்கு ஒருமாசம்
பெரியம்மாவுக்கு சோறு கொடுங்கப்பா..
அவுங்க இப்போ இருக்கிற வீட்டுலேயே

இருக்கட்டும்.
நாளை மத்தநாளு ஏதாவது  ஒண்ணு

ஆச்சுன்னா ஒரு பய பார்க்காண்டாம்.
 நான்  என் பெத்த தாயை மாதிரி

பார்த்துகிடுவேன் போதுமா?

தாயை நடத்தெருவுல கொண்டு விட்ட

பயக்க....போங்கல ...

போய் வேலை ஜோலிய பாருங்க."

என்று கோபமாகப் பேசிவிட்டு
விருட்டென்று எழும்பிப் போய்விட்டார்
ஊர் பெரியவர்.

மாசம் பொறக்க இரண்டுநாள்
இருந்ததால யாரும்  வந்து கூட்டிட்டுப் போகல...
தம்பி வூட்டுல இருந்து தம்பி மக்க
சோறு கொண்டுவந்து கொடுத்தாங்க..

 இன்று ஒன்றாம் தேதி.
அதுதான் மூத்த மவன் புள்ள பாட்டியை
கூட்டிட்டுப் போக வந்திருக்கிறான்.!


 பேரன் கையைப்பிடித்தபடி  தெருவில்
  நடந்தார் பாட்டி.
 
எதிரில் வந்த பெரியவர் ஒருவர்
  "என்ன பெரியம்மா சௌக்கியமா" 

என்று விசாரித்தார்.
 
"ஆமாங்க...ஆளு தெரியல...யாருங்க"

" நான் தெற்குதெரு பலவேசம் மகன்
மூத்தவன் மாடசாமி"

" ஐயா...நல்லா இருக்கியளா...
  கண்  கொஞ்சம் மங்கலா இருக்கு..
  ஒரு ஆளு இனம் தெரிய மாட்டேங்குது"
 
" ஆமா  ....பெரியம்மா  இப்போ எங்க
புறப்பட்டாப்புல  இருக்கு"

" மூத்தவன் மவன் வந்து கூப்பிட்டான்.
அதுதான் மூத்தவன் வீட்டுக்குப் போறேன்ய்யா..."

" அட...இன்னைக்கி ஒண்ணாம் தேதி இல்ல..
இந்த மாசம் மூத்தவர் முறையா ? "

"என்ன முறையோ போங்க....
கிடச்ச எடுத்துல நாலு பருக்கைய
தின்னுகிட்டு சத்தம்காட்டாம
ஒரு மூலையில முடங்கிக் கிடணும் "
என்றார் பாட்டி.

"பெரியாளு சரியாத்தான் சொல்லுறீயம்மா....
காலம் கலிகாலம்.... வேற என்னத்தச் சொல்ல...
மாடுகீடு வருகிற நேரம்.....பாட்டிய
பாத்து கூட்டிட்டுப் போப்பா "
என்று செல்வன் கிட்ட சொல்லிட்டுப் போனார்
அந்த மாடசாமி தாத்தா.


" இன்றிலிருந்து  இன்னும் ஒரு மாசம்
எங்க வீட்டில்தான் பாட்டிக்கு  சாப்பாடு.
பாட்டி, கையை சிக்குன்னு பிடிச்சுகிட்டு வாங்க "
என்று   பெருமையாக கூறியபடி
முன்னே நடந்தான் செல்வன்.

" ஆமா....நாலு புள்ளைகளும்
ஆளுக்கொரு மாசமா பெரியம்மாவ
பங்கு போட்டுகிட்டாவல்ல......அதுதான்
பாவம் பெரியம்மா ....மூத்தவ மவன் வீட்டுக்குப் போகுது"
என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு
போனார் அந்தத் தாத்தா.

"அவளுக்கென்ன நாலும் ஆம்புள புள்ள...
என்று சொன்னவர்களே  ...நாலு புள்ளையை
பெத்து எதுக்கு? 

நாய்படாத பாடுதான் "என்று பேச   ஆரம்பிச்சுட்டாங்க..
ஆமாங்க..ஊரு மெப்புக்குத்தான்
பூமணி   பாட்டிக்கு நாலு புள்ள.

வயசான காலத்துல கூட வச்சி 

கஞ்சி தண்ணி கொடுக்க ஒத்த பிள்ளை இல்லை.

பாட்டி ஓயாம சொல்லுவார்....
ஒரு பொட்டபுள்ள என் வயித்துல
தங்கல....என்ன பாவம் பண்ணினேனோ....
செத்தா அழகூட பொட்ட புள்ள இல்லன்னு

புலம்பிட்டே இருப்பாவ"

" சும்மா இரு. எதுக்குப்
பொட்டபுள்ள...பொட்டபுள்ள 

என்கிறா? எந்த பிள்ளையும் கடைசி

காலத்துல நம்மள பார்க்காது. 

நம்ம கால் கை திடமா இருக்கிற 

வரைக்கும்தான் சோறு. அதுக்குப் பிறகு

உயிரோடு இருப்பதெல்லாம் நாய் பிழைப்பா

தான்இருக்கும் "என்பாவளாம் தாத்தா.

தாத்தா சொன்ன மாதிரியே 

நாலு மவனுகளும் ஏலம் போட்டுட்டானுவ.

சொல்லி அழகூட ஆளு இல்லன்னு

பாட்டி புலம்புறாவ....

என்ன புலம்பி என்ன செய்ய?

பெத்தவள கூட வச்சி சோறுகொடுக்க

வக்குல்ல...இவவனுக எல்லாம் என்ன மனுஷங்க....

நாளைக்கு  இவனுவ பக்கமும்

திருப்பி அடிக்கும் காலம்  வராமலா போகும்?"

பார்க்கிற சனமெல்லாம் இதைத்தான்

சொல்லி ஆறுதல்படுத்திகிட்டுப்

போகுது.

ஆனாலும் பாட்டி மனசு  ஒரு பொட்டப்பிள்ள

இல்லாமல் போச்சே என்று வாதிச்சுகிட்டுதான்

கிடக்குது.

பொட்டபிள்ளை இருந்தா மட்டும் இந்தப்

பாகப்பிரிவினையைப்   தடுத்திருக்கவா போகுது?





                 

Comments

Popular Posts