தமிழ்ப் போட்டி
தமிழ்ப் போட்டி
ஒரு மாலை வேளை.
அங்குமிங்கும் உலாவிய சிங்கம்
காதுகளில் எங்கிருந்தோ வந்த
இனிய பாடல் ஒன்று கேட்க ஆரம்பித்தது.
என்னே இனிமை! என்னே இனிமை!
மெய்மறந்து அப்படியே நின்றார்
காட்டுராசா.
"தமிழுக்கு அமுதென்று பேர் -அந்தத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்...."
மறுபடியும் மறுபடியும் அந்தப் பாடல் வரிகள் நினைவில் வந்து
இனிமை தந்தன.
இப்போது சிங்கத்திற்கு
காட்டிலுள்ள விலங்குகளின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது என்று அறிய
வேண்டும் என்று ஒரு ஆசை.
அதனால் காட்டில் வாழும் விலங்குகளுக்கு எல்லாம் ஒரு போட்டி அறிவித்தார் காட்டு ராசா சிங்கம்.
ஆலமரம் போட்டி நடை பெறும் இடமாக அறிவிக்கப்பட்டது.
மறுநாள் பதினொரு மணிக்கு எல்லா விலங்குகளும ஆலமரத்தடியில் வந்து கூடும்படி அறிவிப்புக் கொடுக்கப்பட்டது.
அதன்படி எல்லா விலங்குகளும் வந்து ஆலமரத்தடியில் வந்து கூடின.
சிங்கத்தின் தலைமையில் போட்டி தொடங்கியது.
ஆசிரியராக இருந்து போட்டியை நடத்தித் தருவதற்கு
கரடி ஒப்புக் கொண்டது.
போட்டிக்கான விதிமுறைகளை
வகுத்து ஆசிரியர் கையில் அளித்தார்
சிங்க ராசா.
போட்டியின் விதிமுறைகளை
வாசித்தார் ஆசிரியர்.
விடை தெரிந்தவர்
எழும்பி நிற்க வேண்டும்.
ஆசிரியர் அனுமதி அளித்ததும்
முன்னால் வந்து நின்று பதில் சொல்ல வேண்டும்.
இடையில் எந்தக் குறுக்கீடுகளும்
இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இப்போது முதலாவது கேள்வியை
ஆசிரியர் கேட்க ஆரம்பித்தார்.
" தமிழ் எழுத்துகள் எத்தனை? "என்ற
கேள்வியைக் கேட்டார் ஆசிரியர்.
" பன்னிரண்டு "என்று பட்டென்று முன்னே வந்து சொல்லிவிட்டு இடத்தில் போய் அமர்ந்து கொண்டது முயல்.
"சரியான பதில்.
".அவை யாவை?" என்ற இரண்டாவது கேள்வியைக் கேட்டார் ஆசிரியர்.
"அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ ஔ ."..சொல்லிவிட்டு ஓடிப்போய் மரத்தில் தலைகீழாகத் தொங்கியது குரங்கு.
" ஐயைய்யோ....தப்பு
.. தப்பு. " ஒட்டு மொத்தமாக எல்லா விலங்குகளும் கத்தின.
" உஷ்...மற்றவர்கள் கத்தக்கூடாது.. அடுத்தவர் முயற்சி செய்யலாம் "என்றார் ஆசிரியர்.
குட்டிக்கரணம் போட்டபடி ஓடி வந்த குட்டி எலி
"அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ "என்று சரியாக சொல்லி இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.
" சரியான விடை..பாராட்டுக்கள் "என்றார் ஆசிரியர்,
இப்போது மூன்றாவது கேள்வி.
" மெய் எழுத்துகள் எத்தனை ? அவை யாவை?" என்று ஒட்டு மொத்தமாக இரண்டு கேள்விகளையும் ஒரே கேள்வியாக கேட்டு வைத்தார் கரடி ஐயா.
பதில் சொல்ல ஒருவரும் முன் வரவில்லை.
" ஏன் ஒருவருக்கும் தெரியாதா? "கோபமாக கேட்டார் ஆசிரியர்.
தந்திரக்கார நரி ஓடி வந்து "க ச ட த ப ற வல்லினம்"
" ய ர ல வ ழ ள இடையினம்"
" ஞ ங ண ந ம ன" மெல்லினம் "
.ஆக மொத்தம் பதினெட்டு .
அத்தனைக்கும் மேலே புள்ளி வைத்து எழுதுங்கள் .அது தான் மெய்யெழுத்து என்று தந்திரமாக பதில் சொல்லிவிட்டு ஓடிபோய் அமர்ந்து கொண்டது நரி..
வரிசையாக சொல்ல தெரியாவிட்டாலும் சாமர்த்தியமாக பதில் சொல்லி அத்தனைபேர் பாராட்டையும் பெற்றுக் கொண்டது நரி.
புத்திசாலித்தனமான பதில் பாராட்டினார் ஆசிரியர்.
"ஆனாலும்
க் ங்
ச் ஞ் ட் ண்
த் ந்
ப் ம்
ய் ர்
ல் வ்
ழ் ள்
ற் ன்
என்று வரிசையாகச் சொல்லியிருந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்றார் ஆசிரியர்.
"உயிர்மெய் எழுத்துகள் எத்தனை? " அடுத்த கேள்வியைக் கேட்டு வைத்தார் ஆசிரியர்.
தும்பிக்கையைத் தூக்கியபடியே முன்னால் வந்த யானை முப்பது
என்று சொல்லி ,பெருமிதமாக
ஆசிரியரைப் பார்த்தது.
"தவறு" என்றார் ஆசிரியர்.
யானையின் முகத்தில் அவமானம் அப்பிக் கொண்டது.
பரவாயில்லை.
"முயற்சி செய்தமைக்குப் பாராட்டுக்கள்" என்று கன்னத்தில் தட்டிக் கொடுத்தார்
ஆசிரியர்.
"எப்படி" என்பது போல அனைவரும் ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்து்க் கொண்டனர்.
இதுவரை எந்த பதிலும் சொல்லாத ஒட்டகச்சிவிங்கி "இருநூற்றுப் பதினாறு "என்றது.
சரியான விடை. என்றார் ஆசிரியர்
இருநூற்றுப் பதினாறா?
என்று வாயைப் பிறந்தன மற்ற விலங்குகள்.
ஆனால்
"எப்படி என்று சொல்லத் தெரியுமா? "கேட்டார் ஆசிரியர்.
" பன்னிரண்டு உயிர் எழுத்தும் பதினெட்டு மெய் எழுத்தோடு தனித்தனியாக சேர்ந்தால் மொத்தம் இருநூற்று பதினாறு உயிர்மெய் எழுத்துகள் கிடைக்கும் "என்று விளக்கமாகச் சொல்லி அனைவரின்
பாராட்டையும் பெற்றது ஒட்டகச்சிவிங்கி.
அறிவாளித்தனமாக பதிலளித்துவிட்டப்
பெருமையில் தலையை உயர்த்தி அனைவரையும் பார்த்தபடியே இடத்தை நோக்கி நடந்தது .
'பாராட்டுக்கள்' என்றார் ஆசிரியர்.
'நன்றி' என்பதுபோல தலையை ஆட்டியது
ஒட்டகச்சிவிங்கி.
கடைசி கேள்வியாக
"தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?" என்று கேட்டார் ஆசிரியர்
அத்தனை விலங்குகளும் மொத்தமாய் முன்னே ஓடி வந்தன.
" இதுவரை பதிலளிக்காத புலிக்குட்டிக்குத்தான் இந்த வாய்ப்பு தரப்படுகிறது "என்றார் ஆசிரியர்.
புலிக்குட்டியும் முன்னே ஓடி வந்து நின்றது.
ஆனால் உடனடியாக சொல்ல முடியவில்லை.
"முயற்சி செய்து பார் "என்றார் ஆசிரியர்.
ஏதோ மனக்கணக்கு போட்டுப் பார்த்து விட்டு,
"இருநூற்று நாற்பத்தாறு"என்று கூறிவிட்டு பெருமையாக இடத்தில் போய் நின்றது.
எல்லோரும் ஓஹோ..
என்று குரல் கொடுத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துப்
பாராட்டினார்கள்.
" தவறு "என்றார் ஆசிரியர்.
"இதுவும் தவறா ? எப்படி..." என்பதுபோல அனைத்து விலங்குகளும் கரடியைப் பார்த்தன.
"எப்படி என்பதை நீங்களே கண்டு பிடியுங்கள் "என்றார் ஆசிரியர்.
உயிரெழுத்துகள் பன்னிரெண்டு
மெய்யெழுத்துகள் பதினெட்டு
உயிர்மெய் எழுத்துகள் இருநூற்றுப் பதினாறு
ஆக மொத்தம் இருநூற்று நாற்பத்தேழு.
சரியாகத்தானே சொன்னேன்"
என்றது புலிக்குட்டி.
"ஆய்த எழுத்தை விட்டுவிட்டீர்களே."- என்றார் ஆசிரியர்.
"ஆய்த எழுத்தா...நாங்கள் படிக்கவே இல்லையே..."ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
" அஃதுல வருமே அந்த ஃ கா "அப்பாவியாக கேட்டது நரி.
" சரியாகச் சொன்னாய்" என்றார் ஆசிரியர்.
"அஃதா? "என்றபடி வாயைப் பிளந்தன அத்தனை விலங்குகளும்.
அஃதோடு போட்டியும் நிறைவு பெற்றது.
வெற்றியைக் கொண்டாட போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிங்கத்தோடு சிற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டது.
அமர்க்களமாக சிற்றுலா புறப்பட்டன
விலங்குகள்.
உயிரெழுத்துகள் பன்னிரெண்டு
மெய்யெழுத்துகள் பதினெட்டு
ஆக மொத்தம் முப்பது
முதலெழுத்துகள் முப்பது
முதலெழுத்துகள் முப்பது
லால்ல லால்ல லால்லா
லால்ல லால்ல லால்லா
மெய்யெழுத்துகள் பதினெட்டு- உயிர்
மெய்யெழுத்துகள் இருநூற்றுப்பதினாறு
ஆய்த எழுத்து ஒன்று
ஆக மொத்தம்
தமிழ் எழுத்துகள்
இருநூற்று நாற்பத்தேழு
இருநூற்று நாற்பத்தேழு
லால்ல லால்ல லால்லா
லால்ல லால்ல லால்லா
தமிழைப் படிங்கடா .. தம்பி....
தமிழ் எழுத்தைப் படிங்கடா...
இருநூற்று நாற்பத்தேழு
எழுத்துகளையும் இதயத்தில்
எழுதி வையுங்கடா -தம்பி
எழுதி வையுங்கடா
லால்ல லால்ல லால்லா
லால்ல லால்ல லால்லா
என்று பாடியபடியே குதுகலமாகக் கொண்டாட்டம் போட்டன விலங்குகள்.
Comments
Post a Comment