முளி தயிர் பிசைந்த

முளி தயிர் பிசைந்த காந்தள்....


அப்பாக்களுக்குப் பெண் பிள்ளைகள் மீது

பாசம் அதிகம். தன் பெண்ணை

தன் அம்மாவின் மறு உருவமாகவே பார்ப்பர்.  

மகள் கண்கலங்கினால்  அப்பாக்களுக்குப் தாங்காது

மனசு. கேட்டதை கேட்டதும் எப்பாடுபட்டாவது வாங்கிக் கொடுப்பர்.

அப்பாச் செல்லம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பெண் பிள்ளைகளின் ஓட்டும்
அம்மாவுக்குத்தான்.

அப்பா கரம் பிடித்து நடப்பதில்
ஆனந்தம்.

அப்பா தன் மகளுக்குப் பார்த்துப் பார்த்துத்

திருமணம் முடித்து வைப்பார்.

ஒரு நினைப்பு வந்ததும் ஓடிச் சென்று பார்த்து வருவார்.

கண்களாலேயே தன் மகள்

கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக

இருக்கிறாளா என அறிந்து 

கொள்வார்.

அப்பா  தரப்பு இப்படியிருக்க ,

மகளுக்கு தன் புகுந்த வீட்டின்

மரியாதையினைக் காப்பாற்ற

வேண்டிய கடமை இருக்கிறது. எந்த இடத்திலும்

தன் கணவனை விட்டுக் 

கொடுத்துவிடக்

கூடாது. அதற்காக மெனக்கெடுவது...

குறிப்பாக கணவன் வீட்டு வறுமையை

வெளியில் தெரியாமல்

மறைப்பதில் பெண்பிள்ளைகள்

புத்திசாலிகள்.சாமர்த்தியசாலிகள்

என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுதானே வேண்டும்.


அம்மாக்களுக்கு வேறுவிதமான கவலை.

அது என்ன வேறுவிதமான கவலை?


இங்கே ஒரு பெண்  திருமணம்

முடிந்து கணவன் வீட்டிற்குச்

சென்று விடுகிறாள்.

போனவள்  எப்படி இருக்கிறாளோ ? 

வீட்டில் இருக்கும் போது சாப்பிட்ட

தட்டைக்கூட கழுவ விடுவதில்லை.

வேலை செய்தால் கையில்

காய்ப்பு பிடித்துவிடும்.

அடுப்பில் வேலை செய்தால்

புகை பட்டு முகம்

பொலிவிழந்து போகும்.

அதனால் பொத்திப்  பொத்தி வளர்த்தேனே.

நம் வீட்டில் நம் மகள் மகிழ்ச்சியாக 

வாழ்ந்தாள்

போன இடத்தில் அப்படி ஒரு 

மகிழ்ச்சியும் வாய்ப்பும் கிடைத்திருக்குமோ என்னவோ?

 காதல் திருமணம் முடித்து தனியாகச் சென்ற மகளை நினைத்துக்
கலங்குகிறாள்.

கணவனோடு தனியாக வாழ்கிறாள்.

எப்படி இருக்கிறாளோ?

சமையல் செய்யத்தெரியாத பெண். வேலை செய்ய முடியாமல் 

என்னென்ன கஷ்டப்படுகிறாளோ?

இப்படி பலவாறு நினைத்து பெத்தமனம்

புலம்புகிறது.

அப்போது செவிலித்தாய் அங்கே வருகிறாள்.

"அட போங்கம்மா.

நான் போய் ஒரு எட்டு பார்த்துக் வருகிறேன் .நம் பிள்ளை

நன்றாகத்தான் இருப்பாள்"

என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள் செவிலித்தாய்.

மகளைப் போய் பார்க்கிறாள்.

தன் வளர்ப்பு எப்படி இருக்கிறது? 

அசந்து போகிறாள். மெல்ல புடவை

தலைப்பை எடுத்துக் கண்ணீரைத்

துடைத்துக் கொள்கிறாள்.


விதவிதமாகச் சாப்பிட்டு வளர்ந்தவள்.

இங்கே....

ஈதென்ன கோலம்?

என்னவொரு பக்குவம்!

நம் வீட்டுப் பெண்ணா இப்படி நடந்து

கொள்கிறாள்.?

நம்ப முடியவில்லை.


பெருமிதம் மேலிட வீடு திரும்புகிறாள்.

தான் கண்ட காட்சியை அப்படியே

பெற்ற தாயிடம் போய்ச் சொல்கிறாள்.


செவிலித்தாய் சொல்லிய அந்தப் பாடல் வரிகள் இதோ  உங்களுக்காக...


முளி தயிர் பிசைந்த

காந்தண் மெல்விரல்

கழுவுறு கலிங்கம்

கழாஅ துடாஇத்

குவளையுண் கண்

குய்ப் புகை கழுமத் 

தான் துழந் தட்ட

தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவனுண்டலின்

நுண்ணுதின் மகிழ்ந்தன்

றெண்ணுதன் முகனே

            -குறுந்தொகை 


முளி தயிர் பிசைந்த -கெட்டியான தயிர்

காந்தள் - காந்தள் மலர் போன்ற 

                    மென்மையான விரல் 


கழுவுறு கலிங்கம் -தூய ஆடை

கழாஅது - கழுவாது

குவளையுண் கண் -குவளை மலர்

போன்ற கண்கள்

குய்ப் புகை கழுமத் -தாளித்தபோது வரும்

புகையால் நிறைய

தான் துழந் தட்ட -பிசைந்து சமைத்த

தீம்புளிப் பாகர் -புளித்தத்  தயிர் குழம்பு 

இனிதெனக் -சுவையானது

கணவனுண்டலின் -கணவன் உண்ணும்போது

நுண்ணுதின் மகிழ்ந்ன்று -கவனமாகப்

பார்த்து மகிழ்ந்தது

ஒண்ணுதன் முகனே-ஒளிமிகுந்த

நெற்றியை முடைய முகம்

இதுதான் பாடலின் பொருள்.



செவிலித்தாய் தான் கண்ட காட்சியில் கரைந்து போகிறாள்.

மனம் நெகிழ்ந்து போகிறாள்.

அந்த நெகிழ்ச்சியை மகளின் நிலைமையை அப்படியே

பெற்றத் தாயிடம் ஒப்பிக்கிறாள்.

இல்லை விவரிக்கிறாள்.

"அம்ம கேள்....நான் நம் மகள் வீட்டிற்குச் சென்ற வேளையில் அவள் கணவன் உணவு உண்டுகொண்டிருக்கிறான்.

அருகில்  நம் வீட்டுப்

பைங்கிளி.

தயிர் பிசைந்த கையைக்கூட

கழுவாமல் நல்ல துவைத்து உடுத்திருந்த தூய்மையான சேலையின் முந்தானையில்

துடைத்துக் கொண்டு வந்து  நிற்கிறாள்.

தயிர்க்குழம்பு தாளித்திருக்கிறாள்.

குளிக்கும்போது புகை வந்து குவளை மலர் போன்ற அவளது கண்களை

 அப்பிக் கொள்கிறது.

அதையெல்லாம் அவள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

அவள் கண்கள்

கணவன் உண்பதையே பார்த்துக்

கொண்டிருக்கின்றன.

அவனோ மோர்க்குழம்பு ஊற்றி அருமையாக சுவைத்துச் சுவைத்து

உண்டு கொண்டிருக்கிறான்.

அதனைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறாள் நம் மகள் "என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறாள்.

நீ உன் மகளைப் பற்றி

கவலைப் போட்டுக்கொண்டிருக்கிறாய் .

அவளோ தன் வறுமையிலும் செம்மையாக கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இதுதான் நான் கண்ட காட்சி என்கிறாள்.

பெற்றவர்களுக்கு பிள்ளை மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்பதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.?

அதை வெறுமனே செய்தியாகச்  சொல்லி இருந்தால் பாடல் இந்த அளவுக்குப் பேசப்பட்டிருக்காது.

இலக்கிய நயமிக்க மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டும் வரிகளால் அழகுற

புனையப்பட்ட பாடல்.

உண்மையைச் சொல்லி உவக்க வைத்தப் பாங்கு.

வறுமை என்பதை நேரடியாக உரைக்காமல்

தயிரோடு தாளித்துக் கொண்டு 

வந்து நம்முன் படைத்தளித்த 

நம்மையும் தயிர்க்குழம்பு ருசிக்க வைத்த

நேர்த்தி.

புகை அப்பிய கண்கள்.

இறுதியில் அவள் முகம் மலர்ந்து நின்ற

காட்சி என்று வீட்டின் நிலைமையையும்

மகளின் மகிழ்ச்சியையும் கட்டி இழுத்துக்

காட்சிப்படுத்தி, கோவையாக  நம் மனதில்

பதிய வைத்து  வைத்துவிட்டார்

கூடலூர் கிழார்.


சிறப்பான கதை

ஒன்றை கவிதை நயத்தோடு

வாசித்த உணர்வு.

"முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்"

காலத்திற்கும் மறக்க முடியாத வரிகள்.








Comments

Popular Posts