பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல் 


திருமதி . வசந்தி தேவராஜன் B.Sc,B.Ed,

       த. தா. காய்க்வாட் தமிழ்ப் பள்ளி ,

       மும்பை - 37


                                                                               ,

 புகழ் மண்டிக் கிடக்கும் திண்டிவனத்தேன்

வேணுகோபால் சகுந்தலா இணையர் தேன்

மடியில் விழுந்த கன்னித்தேன் வசந்தத்தேன்

மன்னர் தேவராஜனுக்கு வாய்த்தக் கட்டித்தேன்!


மக்கள் இருவர் அழகுத்தேன் அமுதத்தேன்

 கூட்டுத்தேன் சுவை கூட்டுத்தேனென உரைத்தேன்

பணித்தேன் என்பதை உம்மிடம் படித்தேன்

பண்புத்தேன்  பணிவுத்தேன் உம்மில் கற்றேன்!


அறிவியல் பணிமனையில் உம்பணி கண்டேன்

கண்கள் பனித்தேன் இமைப்பதைத் துறந்தேன்

கலைத்தேன் கலைப் படைப்பினை வியந்தேன்

உள்ளத்தில் உன்னை ஓவியமாய் வரைந்தேன்!


தமிழ்ச்சங்க பரிசினை அள்ளுவதைக் கண்டேன்

எப்படி இப்படியென வியந்தேன் தொலைந்தேன்

கர்வம் தொலைத்தேன் கண்கள் திறந்தேன்

உள்ளத்தில் உனக்கொரு மேடை அமைத்தேன் !


புன்னகையை நின் அடையாளமாய் வைத்தேன்

ஓயா உழைப்பை வசந்தியாய்ப் பார்த்தேன்

கற்றேன் கற்பித்தேன் கற்றோர்படைத் தேனென

மாநகராட்சி வரலாற்றில்   நின்பெயர் பதிய வைத்தேன்!


ஓய்வின் நாட்களில் உவகைத்தேன் உயர்வுத்தேன்

நலத்தேன் நல்லாட்சி செய்திட விழைந்தேன்

நினைவில் திளைநத்தேன் பாவொன்று தொடுத்தேன்

வசந்தத்தேன் மலராள்  வளைகரம் கொடுத்தேன்!


                                              - செல்வபாய் ஜெயராஜ்


Comments

Popular Posts