நாகாக்க...


நாகாக்க....


காக்க ....காக்க...நாவைக் காக்க..

      அதென்ன நாவைக் காக்க...

       நாவைக் காக்க முப்பத்து இரண்டு

       காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?

       இன்னும் வேறு எத்தனை காவலாளிகள் 

       போட்டு காக்க வேண்டும்?

       நானூறு காவலாளிகள் போட்டாலும் போதாதுங்க...

       நாமதான் அதை அடக்கி வைக்கணும்.

      பகலில் பக்கம் பார்த்துப் பேசணும்.

       இரவில் அதுவும் பேசக் கூடாது தெரியுமிலல...

       

      "  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

        சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

       என்கிறார் வள்ளுவர்.

எதைக் காக்காவிட்டாலும் நாவைக் 

மட்டுமாவது காத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி காத்துக் கொள்ளாதிருந்தால்

தவறான சொற்களைப் பயன்படுத்திவிட்டு

துன்பப்பட நேரிடும்.


 வள்ளுவரின் வாய்மொழியை மதியாமல்  

 வாங்கிக் கட்டிக் கொண்ட

   கதைகள் பல உண்டு.

  ஓர் ஊரில்  ஒரு  கழுதையும் 

  ஒரு நரியும் நண்பர்களாக இருந்து வந்தன. 

  கழுதை பகல் முழுவதும் பொதி சுமக்கும்.

 இரவு வந்ததும் தன் நண்பன் நரியோடு 

 சேர்ந்து வெள்ளரித் தோட்டத்தில் புகுந்து 

 வெள்ளரிக்காய்களைத் திருடித் தின்னும்.

 

 ஒருநாள் இரவு திருட செல்லும்போது

கழுதை தன்னைப் பற்றி நரியிடம் 

பெருமையாகப் பேசிக் கொண்டே வந்தது.


" நான் நன்றாக பாடுவேன்...கேளேன்..."

என்றது கழுதை.


 "நீ வாயைத் திறந்தாலே கொடூரமாக இருக்கும். 

 நீ பாடப் போறியா? "

 கிண்டலடித்தது  நரி.

 

"  நான் நன்றாக பாடுவேன்....ஒருமுறை கேளேன்...

ப்ளீஸ்..".மறுபடியும்...மறுபடியும் கெஞ்சியது கழுதை.


" திருடுகிறவன் தும்மல் வந்தால் 

கூட தும்ம கூடாது....தெரியுமில்ல.."


" தெரியும்..களவு செய்கிறவன் 

தூங்க கூடாது அதுவும் தெரியும்."

என்றது கழுதை.


" எல்லாம் தெரிந்து வைத்துவிட்டு

 எந்த தைரியத்தில் நீ பாடுகிறேன்... 

 பாடுகிறேன் என்கிறாய்?" என்றது நரி.

 

"  ஒருமுறை கேளேன்...."

  வாயைத் திறந்து பாடுவதில் குறியாக 

  இருந்த கழுதை எப்படியாவது பாடவேண்டும் 

  என்று பிடிவாதம் பிடித்தது.

  

  "சரி பாடு...  உன் ஆசையை ஏன்

  கெடுப்பானேன். ? நான் காவலாளி வருகிறாரா

   என்று பார்த்துக் கொள்கிறேன். 

   நீ  முதலாவது வெள்ளரிக்காய்களைப் 

   பறித்துவிட்டு வா . வெளியில் வந்து

   அப்புறம் பாடு."

   என்று கழுதைக்குப் பாட அனுமதி

   அளித்தது நரி.

   

கழுதை வெள்ளரி வயலுக்குள் சென்றது.

நரி வெளியில் மறைந்து நின்று யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டு நின்றது.


 கழுதை வயலுக்குள் புகுந்து வயிறு புடைக்க 

  வெள்ளரிக்காய்களைப் பறித்துத்

  தின்றது.

  போதுமான மட்டும் தன் நண்பன்

தரிக்கும் பறித்து வைத்துக் கொண்டது.

வயிறு புடைக்க தின்றாகி விட்டது

இனி என்ன

மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.

பாட ஆசை வந்துவிட்டது.

வயலில் நின்றபடியே உரக்கக் 

கத்திப் பாடியது.

ஒரு முறை மட்டுமல்ல .

இரண்டு மூன்று முறை கழுதை

பாடியது.

தொலைவில் காவலாளி கையில்

காம்போடு ஓடி வருகிறார்.

நரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மறைந்து நின்று கொண்டது.


கழுதையின் சத்தம் கேட்டு ஓடி வந்த 

காவலாளி வயலுக்குள் சென்று கழுதையை நையப் புடைத்து விட்டார்.


அடிபட்டு கழுதை கனைத்தபடியே  வெளியில் ஓடி வந்தது.

தன் நண்பனைக் தேடியது.

அங்கே நண்பன் இல்லை.

யாரையும் நம்பக்கூடாதுப்பா என்று சோகத்தோடு  புலம்பிய படி வீடு வந்து

சேர்ந்தது.


 களவெடுக்க போன இடத்தில் கானமா?

களவெடுக்கப் போகிற இடத்தில் தும்மல் வந்தால் கூட தும்மக் கூடாது என்று நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது.

இனி நினைத்து என்ன பயன்?

  எங்கே வாயைத் திறக்கணும் 

  எங்கே வாயைத் திறக்கக் கூடாது 

  என்று நரிக்குத் தெரிந்த விவரம் 

  எனக்கு இல்லாமல் போய்விட்டதே

என்று புலம்பியது.

  

 வாயிருக்கிறது என்று எல்லா 

 இடங்களிலும் திறக்கக் கூடாது.

 பேசுவதற்குமுன் ஆயிரம் முறை யோசிக்கணும்.

பேசிவிட்டோமா....அதன் பிறகு ஒருமுறை கூட 

அதைப்பற்றி யோசிக்கக் கூடாது.


 கன்னா பின்னா என்று கண்டதையும் 

 பேசிவிட்டு எத்தனை இடங்களில் 

 அவமானப்பட்டுப் போயிருப்போம்.

 

   சட்டென்று வாயில் வந்ததை 

   சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொள்வது...

   சொல்வதைத்தான் சொல்லி ஆயிற்றே 

   இனி நாக்கைக் கடித்து என்ன பயன்?

   

    வாயைப் பொத்தி என்ன பயன்?

     வார்த்தைகள் வாயில் இருக்கும்வரைதான் நீ 

     அதற்கு எஜமான்.

   வார்த்தைகள் வாயிலிருந்து வெளி வந்துவிட்டால்.....

    அந்த வார்த்தைகள்தான் உனக்கு எஜமான்.

    

    ஐயோ என்றாலும் கட்டுப்படாது.

    அம்மா என்றாலும் கேட்காது.

    வாயைத் திறக்க பைசாதான் கொடுக்க வேண்டும் 

    என்று யாராவது பெயர் 

    வைத்தாலும் பரவாயில்லை.

    

   அமைதியாக இருந்தபடி

    அடுத்த கட்டத்தை நோக்கி

     நகர்ந்து விட வேண்டியதுதான். 

     

 மண்ணுக்குள் இருக்கும் தவளை சும்மாவே கிடக்காது.

  மழை வந்துவிட்டால் போதும் கறிசட்டி ...

  புளிச்சட்டி ...என்று காது கிழிய கத்தும். 

 அதுவும் மொத்த தவளைகளும் 

 ஒற்றைக் குரலில் கத்தும்.

 மழைக்காலங்களில் தவளைகளின் கத்தல் இல்லை...

 இல்லை...இசை...  அந்த இசை 

 இன்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

தவளைகள் சும்மா கத்தாதாம்.

வித்தெடு... விதை எடு ....ஏர் எடு .....கலப்பை எடு... 

என்று உழவர்களைத் தூங்கவிடாமல் 

எழுப்புவதற்காக கத்துமாம். 

இப்படி கிராமப்புறங்களில் சொல்வதைக்

கேட்டிருக்கிறேன்.


 இந்தத் தவளைக்குத்தான் எத்துணை

 அறிவு என்று வியந்திருக்கிறேன்.

 

ஆனால் என்ன அறிவு இருந்து 

என்ன பயன்?


தான் இருக்கும் இடம் எதிரிகளுக்குத் 

தெரிந்துவிடக் கூடாது என்ற 

அறிவு மட்டும் இருப்பதில்லை.


மண்ணுக்குள் கிடந்து சதா கத்திக் கொண்டிருப்பதால்

 எதிரிகள் எளிதாக தவளை இருக்கும் 

 இடத்தைக் கண்டுபிடித்துவிடுமாம்.

 அப்படியே பிடித்து விழுங்கி விடும்.

 

 வாயை வைத்துக்கொண்டு சும்மா

  இருக்கத் தெரியாததால் தவளைகள்  

  மாட்டிக் கொண்டு உயிரை மாய்த்துவிடும். 

 இதைத்தான் முன்றுறையரையனார் என்ற புலவர்,

      "மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

      நுணலுந்தன் வாயால் கெடும்" என்று கூறுவார்.

      

  இப்படித்தாங்க நம்ம நாக்கும்.

   சும்மா இருக்காமல் சில நேரங்களில் வம்பை... 

   விலைக்கு வாங்கி வந்துவிடும்.

   பாவம் புண்ணியம் கிடைப்பது எல்லாம் 

   இந்த நாவால் மட்டும்தானாம்.

    நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் 

    நம்மைப் பற்றிய மதிப்பீடு

     உயர்வதற்கோ தாழ்வதற்கோ 

     காரணமாக இருக்கும்.

     

             " அழகு மௌனமாக இருந்து பேசும்."

 அதனால்தான் அழகாகப் பேசுபவர்கள்மீது 

 அனைவருக்கும் அலாதி பிரியம் ஏற்படுகிறது.

 

 துருக்கி நாட்டில் இனிமையான குரல்வளம்  

        கொண்ட தாரஸ் எனப்படும் ஒருவகை 

        நாரை இனம் உண்டு.

    அவற்றின் குரல் வெகுதூரம்வரை 

    கேட்கக் கூடியதாக இருக்கும்.

    அவற்றின் குரலைக்  கேட்டதும் எங்கிருந்தாவது

     வந்து பருந்து அதனை கொத்திச் சென்று விடுமாம்.

     

    தமது குரலே தமக்கு ஆபத்தாக 

     இருப்பதை உணர்ந்த நாரைகள்

   என்ன செய்வதென்று யோசித்தனவாம்.

   

   ஒலி எழுப்புவதுதானே பிரச்சினை.

   பறப்பதற்கு முன்பாக வாய்க்குள் 

   கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டால்.....

   வாய் திறக்க முடியாதல்லவா!

      அதனால்  பறக்கும்போது வாய்க்குள்

       கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டு 

       பறக்க ஆரம்பிக்குமாம்.

       

    இப்படி பறப்பதால் நாரைகளுக்கு 

    குரல் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் 

    ஏற்பட்டாலும் அவற்றால் வாய் திறக்க முடியாதாம்.

     பயண நேரங்களில் தங்களைக் காத்துக்கொள்ள 

   தாரஸ் நாரைகள் இந்த உத்தியைத்தான் 

   பயன்படுத்துமாம்.

   இதனால் நாரைகளின் உயிரானது

    எதிரிகளிடம் இருந்து காக்கப்படுகிறது.

    

     நாரைகளுக்கு மட்டுமல்ல.

    பல நேரங்களில் நமக்கும் இந்தக்

    கட்டுப்பாடு தேவைப்படுகிறது.

    

      "  தன் வாயையும் தன் நாவையும் 

      காக்கிறவன் தன் ஆத்துமாவை 

      இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்" 

      என்கிறது பைபிள்.

      

    பேசுவதற்குமுன் யோசிக்க வேண்டும்.

    யோசிப்பதை எல்லாம் பேசிவிடக் கூடாது.

        

  அதிக காலம் சிறை வைக்கப்பட வேண்டிய 

    ஒரு பொருள் உண்டென்றால் அது நாவு மட்டும்தான் என்று சொல்வார்கள்.

  நாவைப் காப்போம். 

   தாரஸ் பறவைகளைப்போல விவேகமாய் இருப்போம்.

  நம்மைப் பிறர் சிறைபிடிக்க 

  இடங்கொடாதிருப்போம்.


யாகாவாராயினும் நாகாக்க 

  

        

Comments

Popular Posts