பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

                    பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க

         ஆல்போல் தழைத்து
         அறுகுபோல் வேரூன்றி
         மூங்கில் போல் சுற்றம் சூழப்
         பதினாறும் பெற்று
         பெரு வாழ்வு வாழ்க!


       திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்த அனைவரும் பயன்படுத்தும் அழகு கவிதை இது.
       எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.நாமும் நன்றாக இருக்கிறது என்று கேட்டுவிட்டு நடையைக் கட்டுகிறோம்.
       ஆல மரம் தெரியும்.
       அறுகம்புல் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
       மூங்கிலில் செய்த புல்லாங்குழலை சிறுவயதில் பூ...பூ..என்று ஊதிப் பார்த்து மற்றவர்கள் காதை செவிடாக்க முயற்சி பண்ணி இருப்போம்.
       இது என்ன பதினாறு?
       அதுவும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமாம்.
       இந்த பதினாறு பேறுகளும் என்ன என்று ஒருமுறை கூட நாம் சிந்தித்திருக்கிறோமா !
       இதில் இன்னொரு வேடிக்கை என்ன என்றால் சிலர் பதினாறும் பெற்று என்றால் பதினாறு பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றுதான் வாழ்த்துகிறார்கள் என நினைத்திருப்பார்கள்.
       பதினாறு பிள்ளைகள் பெற்றால் வீடு தாங்குமா!....நாடுதான் தாங்குமா!
       பதினாறு பேறு என்பது மக்கட்பேறு அல்ல.
       பதினாறு வகையான செல்வங்கள் பெற்று நல்வாழ்வு வாழ்க என வாழ்த்துவதாக அமையும்.
       அபிராமி அந்தாதி பதிகப்பாடல் ஒன்று இந்த பதினாறு வகையான செல்வங்கள் எவை எவை எனக் கூறுகிறது.
அதில் அபிராமி பட்டர்,
       கலையாத கல்வியும்
       குறையாத வயதுமோர்
       கபடு வராத நட்பும்
       கன்றாத வளமையும்
       குன்றாத இளமையும்
       கழுபிணி யிலாத உடலும்
       சலியாத மனமும்
       அன்பகலாத மனைவியும்
       தவறாத சந்தானமும்
       தாழாத கீர்த்தியும்
       மாறாத வார்த்தையும்
       தடைகள் வாராத கொடையும்
       தொலையாத நிதியமும்
       கோணாத கோலுமொரு
       துன்பமில்லாத வாழ்வும்
       துய்ய நின் பாதத்தில் அன்பும்
       உதவிப் பெரிய தொண்டரொடு
       கூட்டு கண்டாய்
       அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
       ஆதி கடவூரின் வாழ்வே ....
       என பதினாறு பேறு பற்றித் தெளிவாகப் பாடியுள்ளார்.
      
      
      பதினாறு வகையான பேறுகளாவன:
      
       1.   கலையாத கல்வி அதாவது வெற்றிக்கு வழிகாட்டக்கூடிய கல்வி
       2  . குறையாத வயது என்பதாவது நீடிய ஆயுள்
       3 .      கபடு வராத நட்பு அதாவது நம்பிக்கையான நல்ல நண்பர்கள்
       4.   கன்றாத வளமையும் என்பதாவது வாழ்க்கைக்குத் தேவையான குறைவில்லா செல்வம்
       5   குன்றாத இளமை    அதாவது உழைப்புக்குத் தளராத உடல் வலிமை
       6.  கழு பிணி இல்லா உடல்  அதாவது எந்தவித நோய்நொடியும் இல்லா உடல் நலம்
       7.       சலியாத மனம் அதாவது எதற்கும் கலங்காத         மனத்திண்மை
         8.  அன்பகலாத மனைவி அதாவது எக்காலத்திலும்    மாறாத அன்பைத் தரும்  இனிய மனைவி
         9.      தவறாத சந்தானம் அதாவது அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் எதுவும் குறைவில்லா குழந்தைகள்
        10.   தாழாத கீர்த்தி அதாவது மென்மேலும் பெருகி வரும் புகழ்
      
        11.      மாறாத வார்த்தை அதாவது சொல் பிறழாமை
         12.     தடைகள் வாராத கொடை அதாவது இல்லை என்று சொல்லாது எல்லோருக்கும் வழங்கும்படியான நற்பண்பு
        13.    தொலையாத நிதியம் அதாவது பணத்தைச் சிக்கனமாக கையாளும் நிதி மேலாண்மை
         14.     கோணாத கோல் அதாவது நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகப் பண்பு

        15. துன்பம் இல்லா வாழ்வு அதாவது வாழ்வில் துன்பமே வராத நற்பேறு
      16.    துய்ய நின் பாதத்தில் அன்பு  அதாவது இறை நம்பிக்கை
   
    இத்தகைய பதினாறு வகையான பேறுகள் கிடைக்கப் பெற்று நல்வாழ்வு வாழ்க எனத் தம்பதியரை வாழ்த்துவதுதான் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பதன் பொருள்.
   
       இவ்வளவு பெரிய வாழ்த்தா?
       பிரமிப்பாக இருக்கிறதா!.
       இவற்றை முழுவதுமாக நினைவில் வைத்து வாழ்த்த முடியாதல்லவா!
       அதனால்தான் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ... என்று ஒற்றை வரியில் கச்சிதமாக வாழ்த்துகிறோம்.
       வாழ்த்தும் வார்த்தைகள்  மணமக்களுக்கு வரமாய் இருக்கட்டும்.
      
       ஆல்போல் தழைத்து
       அறுகுபோல் வேரூன்றி
       மூங்கில் போல்
       சுற்றம் முசியாமல் வாழியவே!

புகழேந்திப் புலவரின் இந்தப் பாடலையும் திருமண வாழ்த்தாக பயன்படுத்தலாமே!
        

Comments

Popular Posts