காமராசர் ஓர் ஆச்சரியம்
"சோலை என்றால் பூத்துக் குலுங்க வேண்டும்.
தோட்டம் என்றால் காய்த்துக் கனிதர வேண்டும்.
தலைவன் என்றால் மக்கள் பணி ஆற்ற வேண்டும்"
என்பதற்கு இணங்க மக்கட்பணியை
மட்டுமே செய்த மகத்தான தலைவர் காமராசர்.
அரசியல்வாதிகள் மத்தியில் காமராசர்
ஓர் ஆச்சரியம்.
பாட்டாளி வர்க்கத்தின் அடையாளம்.
இப்படியும் ஓர் அரசியல்வாதியா?
ஆச்சரியப்படத்தக்க அரசியல் செய்தவர்
காமராசர்.
வெளிநாட்டுக் காரும் பெட்டி நிறைய
பணமும் என்று சுற்றிக் கொண்டிருக்கும்
அரசியல்வாதிகள் மத்தியில் பணமில்லா
பாமரன்.
அவரைப்பற்றிய ஆச்சரியப்படத்தக்க
செய்திகள் உங்களுக்காக...
* ஒருமுறை உலகக் கண்காட்சி
திறப்புவிழாவிற்காக அன்றைய பிரதமர்
நேருவுடன் காமராசரும் டெல்லிக்குச்
சென்றிருக்கிறார். கண்காட்சியை அனைவரும்
சுற்றிப் பார்த்தாராம். கண்காட்சியில்
காசு போட்டு எடை பார்க்கும் எந்திரம்
ஒன்று வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
எந்திரத்தைப் பார்த்ததுமே ஆளாளுக்கு
எடை பார்க்க அவர்முன் போய் நின்று கொண்டனர்.
நேருவுக்கும் எடை பார்த்துவிடலாமே
என்று ஓர் ஆசை. முயற்சி செய்யலாமே
என்று காசு போட்டு எடை மேடையில்
ஏறி எடை பார்த்தார்.
எடை பார்த்து முடித்ததும் பக்கத்தில்
நிற்கும் காமராசரைப் பார்க்கிறார்.
காமராசர் மட்டும் எடை பார்க்காமல்
சற்று ஒதுங்கியே நின்றுகொண்டிருக்கிறார்.
"வாங்க மிஸ்டர் காமராஜ்...
நீங்களும் ஏறி நின்று எடை பாருங்கள்" என்று
காமராசரை எடை பார்க்க அழைத்தார் நேரு.
"வேண்டாம்...வேண்டாம்..பரவாயில்லை
இன்னொரு நாள் பார்த்துக்கலாம் ".
பிடிவாதமாக மறுத்தார் காமராசர்.
பிரதமர் கேட்டுக் கொண்ட பின்னரும்
பிடிவாதமாக மறுக்கிறாரே என்று கூட வந்தவர்கள்
திகைத்துப் போய் நேரு என்ன சொல்லப்
போகிறாரோ என்று நேருவின்
முகத்தைப் பார்த்தனர்.
நேருவுக்கு காமராசரைப் பற்றி நன்கு
தெரியும். அவர் கையில் ஒரு போதும்
பணம் இருக்காது.
கட்சிப் பணத்தையோ அரசு பணத்தையோ
அநாவசியமாக தனக்கென்று ஒருபோதும்
எடுத்துக் கொள்ளமாட்டார்.
இப்போதும் எடை இயந்திரத்தில் போட
அவரிடம் கையில் காசு இருக்காது.
அதனால்தான் மறுக்கிறார் என்பது
நேருவுக்குப் புரிந்து போயிற்று. ,
"காமராசர் எதற்கு மறுக்கிறார்
என்று எனக்குத் தெரியும்.
இந்த எந்திரத்தில் ஏறி நின்று காசு போட
காமராசரிடம் இப்போது கையில்
காசு இருக்காது. என்ன மிஸ்டர் காமராஜ்"
என்றார் நேரு.
காமராசர் பதிலேதும் சொல்லவில்லை.
"பணமில்லை என்றால் என்ன?
பரவாயில்லை வாருங்கள்...
நான் காசு போடுகிறேன்"என்று
வலு கட்டாயமாக நேரு எந்திரத்தில்
காசு போட ... வேறு வழி இல்லாமல்
காமராசர் எடை எந்திரத்தில் ஏறி
எடை பார்த்தாராம்.
" இந்தியாவே உன்னிடம் இருக்கிறது.
ஆனால் உன் சட்டைப்பை
காலியாக இருக்கிறது"
என்று காமராசரைப் பற்றி மு.மேத்தா
அவர்கள் எழுதியதுதான்
நினைவுக்கு வருகிறது.
கால் காசுகூட இல்லாமல் இப்படியும்
ஒரு அரசியல்வாதியா!
ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?
இதுதாங்க காமராசர் .
👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
*
"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்.
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்."
பணப் பையை நிரப்பப் பார்க்கும்
அரசியல்வாதிகளுக்கு மத்தியில்
ஏழைப் பிள்ளைகளின் இரைப்பையை
நிரப்ப என்ன வழி எனச்
சிந்தித்தவர் காமராசர்.
அதற்குக் காரணம் வயிற்றுக்காக
வெயிலில் கால்நடைகள் பின்னால்
கால்நடையாக அலையும் சிறுவர்கள்தான்.
ஒருமுறை காமராசர் ஒரு கூட்டத்தில்
பேசுவதற்காக போய்க் கொண்டிருக்கிறார்.
போகும் வழியில் ரோட்டோரமாக
ஆடு மேய்க்கும் ஒரு சிறுவனைக்
காண்கிறார். பள்ளிக்குப் போகாமல்
இவன் ஏன் ஆடு மேய்த்துக் கொண்டு
அலைகிறான். உடனை தன் காரை
நிறுத்தச் சொல்லி காரிலிருந்து
இறங்கி அந்தச் சிறுவனிடம்
செல்கிறார் காமராசர்.
"தம்பி...நீ பள்ளிக்கூடம் போகலியா"?
என்று கேட்டார்.
"எங்க ஊருல பள்ளிக்கூடம் எங்க இருக்கு?"
முன்பின் யோசிக்காமல் திருப்பிக்
கேட்டா ன் சிறுவன்.
"உங்க ஊரிலேயே பள்ளிக்கூடம் இருந்தா
பள்ளிக்குப் போவியா ?"
கேட்டார் காமராசர்.
" போவேன்...ஆனால் நான் பள்ளிக்கூடம்
போயிட்டேன்னா மதியம்
சோறு யார் தருவா?"
எதிர்க்கேள்வி கேட்டு மறுபடியும் காமராசரை
மடக்கினான் சிறுவன்.
"அப்போ சோறு போட்டா பள்ளிக்கு
வருவா இல்லியா ? "
"ஓ...கட்டாயமாக... .சோறு போட்டா
கண்டிப்பாக பள்ளிக்கூடம்
வருவேன் ".யாரிடம் பேசுகிறோம்
என்பதுகூடத் தெரியாமலே பேசினான் சிறுவன்.
ஒரு நிமிடம் நின்று யோசித்தார் காமராசர்.
இந்தத் தம்பி சொல்வது எவ்வளவு பெரிய
உண்மை.
ஏழைகள் பள்ளிப்பக்கம் வராமல் ஒதுங்குவதில்
இருக்கும் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டார்.
வயிற்றுப் பசி இருக்கும் ஒருவனைப்
படி ...படி என்றால்
அவனால் எப்படி படிக்க முடியும்?
முதலாவது அவன் வயிற்றுப் பசியைப்
போக்க ஏதாவது செய்ய வேண்டும்.
சோறு போட்டா இந்த தம்பியை
மாதிரி எத்தனையோ சிறுவர்களைப்
பள்ளிக்கு கொண்டு வர
முடியும்." என்று அப்போதே அவரது
மனம் கணக்குப்போட ஆரம்பித்தது.
சிறுவன் சரியாகத்தான்
சொல்லியிருக்கிறான்.
நாம்தான் இதுவரை
இந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை
என்ற காமராசரின் எண்ணத்தில்
உதயமானது மதிய உணவுத் திட்டம்
என்ற மகத்தானத் திட்டம்.
மதிய உணவுத் திட்டம் மூலம்
மாணவர்களைப் பள்ளிகளை
நோக்கி வர வைத்தார்.
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
என்றார் பாரதி.
விளம்பரத்தை விரும்பாத அரசியல்வாதி
காமராசர்.
எழுத்தறிவித்த இறைவனுக்கு
அடுத்த இலக்கு கிராமங்களாக இருந்தது.
சாப்பாட்டிற்கு வழி செய்தாகிவிட்டது.
மூன்று மைல்நான்கு மைல் தூரம்நடந்து
சென்று சிறுபிள்ளைகளால் எப்படி
படிக்க முடியும்?
அருகிலேயே பள்ளி இருந்தால் இன்னும்
ஏராளமான குழந்தைகளுக்கு கல்வியறிவு
ஊட்டிவிடலாம். அதன் மூலம் கிராமங்களும்
கல்வி பெற்றுவிடும்
என்று என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
300 பேர் வசிக்கும் கிராமத்துக்கு
ஒரு ஆரம்பப் பள்ளி என்ற திட்டம் உருவானது.
ஒருமுறை , " மூன்று லட்சம் ரூபாய்
இருந்தால் அரசின் சாதனையைப்
படமாக எடுக்கலாம் "என்று அதிகாரி
ஒருவர் கூறினாராம்.
"அந்தத் தொகையில் பத்து ஊர்களில்
பள்ளிகள் கட்டுவேனேன்னேன்"
என்றாராம் தலைவர்.
அரசியல்வாதின்னாலே ஒரு விளம்பரம்தானே
என வாழும் உலகில் விளம்பரம்
வேண்டாம் என்பதற்கு ஒரு தலைவரா?
ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
இதுதாங்க காமராசரை இன்றுவரை
கொண்டாட வைக்கிறது.
எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால்
ஊர்கள்தோறும் பள்ளிகள் அமைத்து
எழுத்தறிவு பெற வழிவகை செய்த
காமராசரைக் கல்விக் கடவுள் என்பதில்
தவறேதும் இல்லையே !
காமராசர் ஒரு ஆச்சரித்திலும் ஆச்சரியம்!
👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍
*
" தாயில் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"
தாயைத் தன் மனக் கோவிலில் வைத்திருந்த
காமராசர் தான் முதல்வராக இருக்கும்போதுகூட
தன் தாயைத் தன்னோடு சென்னையில்
அரசு வீட்டில் குடிவைத்திருக்கவில்லை.
அம்மாவை கூடவே வைத்திருந்தால்
என்ன என்று யாராவது கேட்டால்...
அது சரிப்பட்டு வராது "என்பார்.
"அம்மா இருந்தால் அம்மாவைப் பார்க்க
வந்தேன் என்று சொல்லி ஊருக்காரங்க..
உறவுக்காரங்க வருவாங்க.
அரசுச் செலவுல சாப்பாடு போட்ட மாதிரி
இருக்கும். அந்தப் பிரச்சினை எல்லாம்
வேண்டாம். அம்மா ஊரிலேயே இருக்கட்டும்"
என்பார்.
ஒருமுறை முன்னாள் குடியரசுத் தலைவர்
வெங்கட்ராமன் காமராசர் வீட்டிற்குச்
சென்று காமராசரின் அம்மாவைப்
பார்த்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் வந்த நேரத்தில்
அம்மா ஒரு மின்விசிறி கூட இல்லாமல்
கையில் ஒரு ஓலை விசிறியை
வைத்து விசிறிக் கொண்டிருந்தார்களாம்.
ஒரு முதல்வரின் அம்மா கையில்
ஓலை விசிறியா?
உடனே தன் உதவியாளரிடம் சொல்லி
அம்மாவுக்கு வசதியாக இருக்கட்டும் என்று
ஒரு மின்விசிறி வாங்கி வீட்டில்
பொருத்தும்படி கூறியிருக்கிறார்
குடியரசுத் தலைவர்.
மின்விசிறி வாங்கிக் கொடுத்துவிட்டு
அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்
என்பதையும் சொல்லித் தந்துவிட்டுச்
சென்றாராம் குடியரசுத் தலைவர்.
சில நாட்கள் கழித்து காமராசர் தன்
அம்மாவைப் பார்க்க ஊருக்கு வந்திருக்கிறார்.
அம்மா சுகமாக மின்விசிறியின்
அருகில் அமர்ந்திருக்கிறார்.
மின் விசிறியைப் பார்த்ததும்
காமராசருக்கு அதிர்ச்சி.
இந்த மின்விசிறி யாது ? "
என்று விசாரித்திருக்கிறார்.
அம்மாவும் குடியரசுத் தலைவர் வந்து
வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்ற
கதையைப் பெருமையாக
ஒன்றுவிடாமல் ஒப்பித்திருக்கிறார்.
"ஊரில் இருக்கும் எல்லோரும்
பனையோலை விசிறியை வைத்துதானே
விசுறுறாங்க....அவங்களுக்கெல்லாம் மின்விசிறி
வாங்கிக் கொடுத்துருக்கானா?
ஊருல உள்ளவங்களுக்கெல்லாம்
வாங்கி கொடுக்காமல் உனக்கு மட்டும்
ஏன் மின்விசிறி வாங்கி கொடுத்தான்.?
முதல் மந்திரி அம்மா என்பதற்காகதானே....!
அதுவும் ஒத்த ஆளு உனக்கு
மின்விசிறி எதற்கு?
யாரிடமும் எதுவும் அன்பளிப்பாக
வாங்கக்கூடாது. அன்பளிப்பு என்பதுகூட
ஒருவிதத்தில் லஞ்சம்தான். புரியுதா?"
என்று அம்மாவைக் கோபித்துக்
கொண்டாராம் காமராசர்.
அத்தோடு நடந்தது நடந்துவிட்டது
போனால் போகட்டும் என்று விட்டுவிடவில்லை.
உடனே எடுத்துக்கொண்டு கட்சி
அலுவலகத்தில் வைக்கும்படி
சொல்லிவிட்டாராம்.
அன்பளிப்புகூட வாங்காத அரசியல்வாதியா?
லஞ்சம் வாங்கமாட்டேன்....
லஞ்சம் வாங்க மாட்டேன் என்று வாய் பேசும்.
கை விலை உயர்ந்த பொருட்களை
அன்பளிப்பாக வாங்கி குவிக்கும்.
கணவனுக்குத் தெரியாமல் அரசியல்வாதி
மனைவி பணம் வாங்கி குவிக்கும் காலம் இது.
ஏன் அரசியல்வாதியின் ஓட்டுநரும்
உதவியாளருமே பணத்தில் புரளும்
இடம் அரசியல்.
லஞ்சத்திலேயே புரளும் அரசியல்வாதிகள்
மத்தியில் அன்பளிப்புகூட பெறகூடாது
என்று அரசியல் செய்தவரை
பார்த்ததுண்டா?
தாயாக இருந்தாலும் அரசு பணம்செலவிடக்
கூடாதாம்.
இப்படியும் ஓர் அப்பழுக்கில்லாத மனிதரா?
காமராசர் ஓர் ஆச்சரியம் என்பதைத் தவிர வேறென்ன
சொல்ல முடியும்.!
"சீசரின் மனைவி சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்
என்னும் பொதுவாழ்வின் இலக்கணத்தைக்
கடைபிடிக்கும் காமராசரைப் போன்ற
அரசியல்வாதிகளைக் காண்பது
அரிதினும் அரிது "என்ற தமிழருவி மணியனின்
கூற்று எவ்வளவு உண்மை பாருங்கள்!
அப்பழுக்கற்ற அரசியல் செய்த
காமராசர் ஆச்சரியமோ....ஆச்சரியம்
என்பதைத் தவிர வேறென்ன சொல்வது.?
"இன்னும் பத்தாண்டுகள் காமராசர்
ஆட்சி நீடித்தால் தமிழகத்தில்
படிக்காதவர்களே இல்லை என்ற நிலை
உருவாகிவிடும் "என்றாராம் பெரியார்.
நாம்தான் நல்லவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பைத் தர
தயங்குகிறவர்களாயிற்றே!
பெரியார் மேலும் ,"கல்வி சம்பந்தப்பட்ட எந்த
நிகழ்ச்சியாக இருந்தாலும் காமராசர்
வாழ்த்துப் பாடவேண்டும்" என்று
சொல்லியிருக்கிறார்.
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்.
அப்படியானால் நம் கல்விக்கண் திறந்த
காமராசருக்குப் பள்ளிகளில் வாழ்த்துப்பாடல்
பாடுவதில் தப்பில்லையே!
இப்படிப்பட்ட அரசியல் மகானை
இருக்கும்போது கொண்டாடத் தவறிவிட்டோம்.
சொந்தத் தொகுதியிலேயே தோற்கடிக்க
வைத்து வேடிக்கைப் பார்த்திருந்தோம்
என்று நினைக்கும்போது நெஞ்சம்
கனக்கிறது.காலத்திற்கும் தீராப்பழி
ஒன்றை சுமந்தவர்களாக நிற்கிறோம்
என்பதுதான் உண்மை.
💐. 💐. 💐. 💐 , 💐 💐 💐 💐
Really Shri.Kamarajar is a great leader. The way she put it the article is fantastic. The concluding instance is really heart breaking. Excellent, Selvabai.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகாமராசரைப் போன்ற தலைவரை எக்காலத்திலும் காண இயலாது.அவரைப் பற்றிய பதிவு மிக அருமை.
ReplyDeleteகாமராசர் கட்டுரை அருமை
ReplyDeleteபொய்யாம்மை பொய்யாமை
ReplyDeleteஎன்ற வள்ளுவரின் அறம்
நாம் அனைவரும் கை கொள்ளவேண்டிய
அறம் என்பதனை அழமாக அறிவுருத்துகிறது