பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்

                   பசி வந்திடப்  பத்தும் பறந்து போகும்
    
"பசி ருசி அறியாது "என்று 
கேள்விப்பட்டிருக்கிறோம். 
"பசித்தபின் புசி "என்று அறிவுரை
சொல்வதை அலட்சியப்படுத்தியிருப்போம்.

 இது என்ன பசி வந்தால் 
பத்தும் பறந்து போகும்?
அது என்ன பத்துப்பா... ?
தெரிந்து கொள்ள
ஆவலாக இருக்கிறதல்லவா!
எனக்கும் நெடுநாளாக அதே ஆவல்தாங்க.
யாரிடம் போய் கேட்பது?
என்னவென்று கேட்பது?

எந்தக் கேள்விக்கும் சரியான விடை 
வைத்திருப்பவர் யாராக இருக்கும்? 
இப்படி ஓராயிரம் கேள்விகளைக்
கேட்டு மனதைக் குழப்பிக்கொண்டு
அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

"அம்மா...."என்ற குரல் கேட்டு
நிமிர்ந்து பார்த்தேன்.
பாட்டி ஒருவர் பக்கம் வந்து நின்று
புன்னகைத்தார்.
"யாரம்மா நீங்கள்? என்ன வேண்டும்? "
என்றேன்.
"நடந்து வந்த களைப்பு.
சற்று இந்தத் திண்ணையில் உட்காரலாமா?
மரியாதையோடு அனுமதி கேட்டார் .

"ஓ....தாராளமாக அமருங்கள்"
என்றேன்.
திண்ணையில் உட்கார்ந்தவர்
முகத்தில் நடந்து வந்த களைப்பு
தெரிந்தது.
வீட்டிற்குள் சென்று ஒரு குவளையில்
தண்ணீர் எடுத்து வந்து நீட்டினேன்.

இதற்காகத்தான் காத்திருந்தவர்போல
தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு
மறுபடியும் என்னைப் பார்த்து
புன்னகைத்தார்.
இப்போது அவருக்கும் எனக்கும்
ஏதோ கூடுதலான ஒரு நெருக்கம்
 ஏற்பட்டது போல உணர்ந்தேன்.

"அம்மா....பசியோடு வந்திருப்பதுபோல்
இருக்கிறது. கொஞ்சம் பசியாறிவிட்டுச்
செல்லலாமே "என்றேன்.

"கொடு தாயி....அதற்காகத்தானே
ஊர் ஊராக அலைகிறேன்" என்றார்.

"என்ன கொண்டு வரட்டும்" என்று
அவர் விருப்பத்தை அறிந்து கொள்வதற்காக
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு 
வைத்தேன்.

"பசியார எதுவாக இருந்தால்
என்ன? கூழ் இருந்தாலும் போதும் தாயி"
என்றார்.

கூழ் என்றதும் வந்திருப்பவர் ஒருவேளை
அவராக இருக்குமோ என்று எனக்குள்
ஒரு ஐயம்.

"கேட்டுவிடலாமா? வேண்டாம்.
முதலாவது பசியாக வந்திருப்பவருக்கு
அன்னமிட்டு பசியாற்றுவதுதானே 
தமிழர் பண்பாடு "என்று நினைத்தபடி
சாப்பாடு எடுத்து வந்து பரிமாறினேன்.

வந்தவர் வயிறு நிரம்பும்வரை
நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.
ஐயோ பாவம்....ரொம்ப பசி
போலிருக்கிறது என்று மனதிற்குள்
சொல்லி பரிதாபப்பட்டேன்.

சாப்பிட்டு முடித்ததும் நிமிர்ந்து பார்த்தார்.
"நீ இன்னும் நின்று கொண்டுதான்
இருக்கிறாயா? 
பசியில் நீ நிற்பதையே மறந்துவிட்டேன்"
என்றார்.
"பரவாயில்லை" என்றபடி பக்கத்தில்
அமர்ந்தேன்.

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாழாண்மை _ தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் "

என்று பாடிவிட்டு என் முகத்தையே
பார்த்தார்.
அப்படியே அசந்து போனேன்.

வந்திருப்பவர் ஔவை என்று 
அப்போதுதான் எனக்குப் புரிந்தது. 

 " குழந்தைப் பசி கொள்ளிப்பசி" என்பார்கள்.
இது என்ன பத்தும் பறந்து போகிற பசி?
நல்ல    பசி ...பானையில் சோறு 
குறைவாக இருக்கிறது.
அடிப்பத்தையும் வழித்துப் போட்டு 
சாப்பிட மாட்டோமா என்ன ?

இதுதான் பாட்டி சொன்ன
பத்துக்கான பொருளாக இருக்குமோ ?
பத்துப்பாத்திரம் தேய்க்கிற
எனக்கு நினைப்பெல்லாம் 
அப்படிப்பட்ட திசையில் செல்வது
இயல்புதானே!

 பத்தின் பொருள் அறியாது
பரிதவித்து நின்றேன் என்றே
சொல்வேன்.

இவரை விட்டால் வேறு யாரிடம் போய்
விளக்கம் கேட்பது? 
துணிந்து,
" பாட்டி பசி வந்தால் பத்தும் பறந்து
போகும் என்கிறீர்களே...அது என்ன
பத்து ?"என்று கேட்டுவிட்டேன்.

விளக்கமும் நான்தான் கூற வேண்டுமா?
இதோ கேள் :
     
       1 .     மானம்
      
        2  .      குலம் 
       
        3  .    கல்வி
        
         4  .    வண்மை அதாவது வாய்மை
         
         5  .   அறிவுடைமை
         
         6  .  தானம் 
           
         7    தவம்
      
         8  .   உயர்ச்சி
         
        9  .     தாளாண்மை அதாவது ஊக்கம்
       
        10   .   காமம்

 போன்ற பத்து குணங்களும் 
பசி வந்தால் நம்மை விட்டுப் போயே
போய் விடும்.
சோத்துக்குப் பின்னால்தான்
மற்ற சிந்தனைகள் எல்லாம் 
புரிகிறதா? என்று படபடவென்று
சொல்லிவிட்டு 
விடுவிடுவென்று நடந்து போய்விட்டார்.

அம்மாடியோவ்.... பசி வந்தால்
பத்து குணங்களும் போயே போச்சா.?
பசிக்கு  இவ்வளவு ஆற்றலா?
ஆச்சரியத்தில் வாய் பிளந்து
நின்றேன்.

"எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்."
என்பார்கள்.
"எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்"
என்று சொல்வதுபோல் அல்லவா
இருக்கிறது?

உண்மைதாங்க.
வயிற்றுக்காகதானே இந்தப் பாடு.
நாமும் பசியின் கொடுமையை   
உணர்ந்திருப்போம்.
பசி வந்து காதெல்லாம் அடைத்துப்போன
தருணங்கள் வந்திருக்கலாம்.
அந்த நேரங்களில் நமது செயல்பாடு
எப்படி இருந்தது என்பதை
கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்த்தோமானால்
ஔவை சொன்னதில் உள்ள
உண்மையை ஒத்துக்கொள்வோம்.
ஒத்துக் கொள்வோம் என்ன?
ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

 நல்ல வயிற்றுப் பசி இருக்கும்போது
 எது கிடைத்தாலும் ...எந்த இடத்தில் 
இருந்தாலும்  ... என்ன உணவானாலும்
யார் கொடுத்தாலும்....வாங்கி சாப்பிட
 தயங்கமாட்டோம்.

 நாலுபேர் பார்ப்பார்களே ...
நான் எவ்வளவு பெரிய ஆள்.... 
என் குலம் என்ன... கோத்திரம் என்ன?
என்  படிப்பு என்ன?
 பதவி என்ன?
 அறிவு என்ன? அந்தஸ்து என்ன ?
நான் பாரி வள்ளல் பரம்பரை.
வீரவீர வீராதி வீரன்.
வீதியில் நின்று தின்பதா? 
எதுவுமே நினைவுக்கு வராது.

கொஞ்சம் கொடுத்துவிட்டு
சாப்பிடுவோமே இரக்கமே வராது.
ஐயோ நான் இன்று விரதம். அதனால்
சாப்பிடமாட்டேன் என்ற நினைப்பு
மறந்தே போய்விடும்.
அழகான பெண் பக்கத்தில் வந்து
நின்றாலும் எட்டிப் பார்க்க தோன்றாது.

நன்றாக சாப்பிட்டுவிட்டு பசி அடங்கியதும்
அங்கேயும் இங்கேயும் பார்ப்போம்.

"யாராவது பாத்திருப்பார்களோ?..."
திருதிருவென்று திருடனைப்போல விழிப்போம்.
பசி அடங்கியதும் மானம் 
மெதுவாக வந்து எட்டிப் பார்க்கும்.
நான் போய் இந்த ரோட்டோர கடையில்
சாப்பிட்டுருக்கேனே....என்று அந்தஸ்து
மெதுவாக தலையைத் தூக்கி நிற்கும்.

அந்தப் பெண் நல்லா இருக்கிறா இல்ல...
ஒருவிதமான ஆசை வந்து நம்மை
அசைத்துப் பார்க்கும்.

பசி இருக்கும்வரை  எந்த நினைப்பும்
கிட்ட வந்து எட்டிப் பார்க்க
அஞ்சும்.எல்லாம் உள்ளுக்குள்ளேயே
துஞ்சும்.

 இதைத்தான்" பசி வந்தால் பத்தும் 
பறந்து போகும் "என்று சொல்லி
விட்டுச் சென்றாரோ ஔவை.

ஔவை வாக்கு அரச வாக்கு.
அதுவே சாசனம்.
அனுபவமொழியாயிற்றே. இதற்கு
மாற்றுக் கருத்து இருக்கப் போகிறதா என்ன ?

 உலக நடைமுறையை 
நாலே  வரியில் நச்சென்று சொல்லிவிட்டு
கடந்து போய்விட்டார்.
"பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்."

உண்மை. உண்மையைத் தவிர 
வேறொன்றுமில்லை.

      
    
    
     
       

Comments

  1. பசிக்கு இப்படிபட்ட பத்து குணங்களெல்லாம் உண்டு என்பதை தெள்ளத்தெளிவாக பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete
  2. பசியைப்பற்றி ருசியான கதை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ருசியாக இருந்ததா?
      நன்றி பாலின்.

      Delete

Post a Comment

Popular Posts