பினாங்குக்காரர்

   பினாங்குக்காரர்


கண்ணம்மாவைத்  தெரியாதவர் யாரும்
அந்த ஊரில் இருக்க முடியாது. 
அவ்வளவு பிரபலம்.
எல்லாருக்காகவும் ஓடி ஓடி உதவும் குணம்.
 ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால் 
முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது 
கண்ணம்மா மட்டும்தான்.
கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா...
கண்ணம்மாவைத் தவிர யாரும்
அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது.

எந்த வீட்டுல குழந்தை பிறந்தாலும்
கண்ணம்மாவின் ஆஜர் இருக்கும்.

கண்ணம்மா வந்தாலே அந்த இடம்
கலகலப்பாகிவிடும்.
முடுக்கிவிட்டு வேலை வாங்குவார்.
 என்ன பண்ணணும் ஏது 
பண்ணணும் என்று சொல்லிக் கொடுப்பார்.
வீட்டில் கிடக்கும் தட்டு மூட்டு வேலைகளை
கூட இருந்தே செய்து கொடுப்பார்.

ஆனால் யார் வீட்டிலும் அநாவசியமாக
கை நனைக்க மாட்டார்.
கறாரானப் பேர்வழி.

இப்படி ஓடி ஓடி ஊருக்கு உழைத்து வரும்
கண்ணம்மா ஓய்ந்து போய்
விட்டத்தைப் பார்த்தபடி கிடக்கிறாள்.
நினைவலைகள் எங்கெங்கோ சுற்றி
வருகின்றன.

பினாங்குக்காரர் மட்டும் இருந்திருந்தால்....
எங்கு போனாலும் இந்தப் பினாங்குக்காரர்
நினைவு மட்டும் நெஞ்சைவிட்டு
அகலவே மாட்டேங்குது....
இனி நினைச்சு என்ன ஆவப்போவுது 
என்று எவ்வளவோ நாள் அந்த 
நினைப்பிலிருந்து விடுபட நினைத்திருக்கிறார்.
ஆனால் இந்தப் பாழும் மனம்
அந்த ஒரு இடத்தில் மட்டும் நின்று
கண்ணம்மாவைப் பாடாப் படுத்தும்.

 எப்போது எல்லாம் பினாங்குக்காரர் நினைப்பு
 வருகிறதோ அப்போவெல்லாம்
 இப்படித்தான் நோய்வந்தக் கோழிபோல
 கீழே விழுந்து கிடப்பாள் கண்ணம்மா.

முப்பது வயசுல மூன்று பிள்ளைகளைக் 
கையில் கொடுத்துவிட்டு பினாங்கு போயிட்டு
வாரேன் என்று போனவருதான்.
இன்றைக்கு வரை மனைவி என்ன ஆனா...
பிள்ளைகள் என்னாச்சு...
என்று வந்து ஒரு எட்டு வந்து எட்டிப்
பார்த்திட்டுப் போக மனம் வரல...

ஆரம்பத்தில் ஒரு ஆண்டு ஒழுங்காக
கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் பினாங்குக்காரர்.
பணமும் மாதாமாதம்
டாணென்று வந்து நிற்கும்.
ஊரே கண்ணம்மா குடுத்து வச்சவ...
பிடிச்சாலும்புடிச்சா 
கண்ணம்மா புளியங்கொம்பால்லா
பிடிச்சிருக்கா என்று பேசுவர்.
அதற்கு ஒரு சின்ன சிரிப்பு மட்டும்தான்
பதிலாக வரும்.
பினாங்கு மாப்பிள்ளை பினாங்கு மாப்பிள்ளை 
என்று ஊரே ஒச்சியப் பட்டுக் கிடந்தது.

கண்ணம்மாவும் சும்மா சொல்லக்கூடாது.
வாலிபத்தில் பார்க்க வசீகரமாகத்தான்
இருப்பாள். முகம் முழுக்க மஞ்சள்பூசி
ஒரு மாசு மரு இல்லா முகம்.
யாரையும் ஒருமுறைக்கு இருமுறை
திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு.
அழகைக் கொடுத்த ஆண்டவன் ஆஸ்தியைக்
கொடுக்கல...

கூப்பிட்ட வீட்டுக்கு வேலைக்குப் போகும்
நிலையில்தான் கண்ணம்மா குடும்பம் இருந்தது.
ஆனால் என்னதான் வறுமை இருந்தாலும்
கண்ணம்மாவை பொத்தி பொத்தி வைத்துதான்
வளர்த்தார் கண்ணம்மாவின் அம்மா.
ஒருநாள் தண்ணீர் இறைக்க ஊர்க் கிணற்றுக்குப்
போனவளை பார்த்திருக்கார் பினாங்குக்காரர்.
ஆமா...அவரை ஊருல பினாங்குக்காரர் என்றுதான்
கூப்பிடுவாங்க.

கண்ணம்மாவைப் பார்த்ததும் 
பினாங்குக்காரருக்குப் பிடிச்சுப் போச்சு.
பினாங்குக்காரருக்குத் தாய்தகப்பன் இல்ல.
பக்கத்து ஊருல பாட்டி வீட்டுல நின்னு வளந்தாரு.
இங்கே சித்தப்பா வீட்டுக்கு அப்பப்போ 
வந்துட்டுப் போவாரு.
அப்படித்தான் இந்தமுறையும் வந்திருந்தார்.

சித்தப்பாவிடம் சொல்லி பெண் கேட்டுப்  பார்த்தார்
பினாங்குக்காரர்.
கண்ணம்மாவின் அம்மாவுக்கு இந்தச் சம்பந்தம்
அவ்வளவா பிடிக்கல... 

காரணம் தொலைதூரத்து ஊருல புள்ளய 
கெட்டிக் குடுத்தா சட்டுன்னு போய்
பார்த்துட்டு வரமுடியாது.
ஒரு நோவு நொம்பலம்ன்னா யாரு
பாப்பா என்று பயப்பட்டாவ..

ஆனா கண்ணம்மாவைப் பார்பதற்கு என்றே
ஊரு கிணற்றங்கரையைச் சுற்றிச் சுற்றி
வர ஆரம்பித்தார் பினாங்குக்காரர்.

ஒரு கட்டத்தில் கண்ணம்மாவும் தண்ணீர்
இறைப்பதுபோல ஓரக்கண்ணால் பினாங்குக்காரரைப்
 பார்க்க...இப்படியாக ஆரம்பித்தது 
 இருவருக்குமான காதல்.
இது அரசல்புரசலாக கண்ணம்மாவின்
அம்மா காதுகளில்
விழ, அவ்வளவுதான் பத்திரகாளியாட்டம்
ஆடித் தீர்த்து விட்டார்.

நீ தண்ணீர் எடுத்த லட்சணம் போதும் என்று 
கண்ணம்மாவை வீட்டுக்காவலில்
வைத்தார் அம்மா.
ஆனால் கண்ணம்மாவால் பினாங்குக்காரரை
மறக்க முடியல.
பினாங்குக்காரரும் கண்ணம்மாவை 
விட்டுவிடுவதாக இல்லை.
சின்ன பிள்ளைகளைத் தூது
அனுப்பி யாருக்கும் தெரியாமல்  இருவரும் 
காதலை வளர்த்து வந்தனர்.

ஒருநாள் காதலர் இருவரும் ஊரைவிட்டே
ஓடிப் போய் விட்டனர்.
கேள்விப்பட்டதும் நிலைகுலைந்துப் போனார்
கண்ணம்மாவின் அம்மா.
அவள் என் கண்ணுலேயே முழிக்கப்பிடாது
என்று காட்டுக் கத்தல் கத்தினார்.

தாயின் வைராக்கியம் எல்லாம்
எத்தனை நாளைக்கு?
ஒத்தப் புள்ள பொறக்கிறதுவர 
ஒதுங்கி இருப்பாவ...
பேரனைக் கண்டதும் மெதுவா கிட்ட
நெருங்கிடுவாவ.
இதை எத்தனை வீடுகளில் பார்த்திருக்கோம்.
இதுதான் கண்ணம்மா வாழ்க்கையிலும்
நிகழ்ந்தது.

மூத்த மவன் பிறந்த பிறகு தாய் வீட்டுக்கு
சகஜமாக வந்துபோய் இருக்க ஆரம்பித்தாள்
கண்ணம்மா.
நாலு வருசத்துல மூணு பிள்ளைகளைக்
கொடுத்துட்டு ஊரைச் சுத்தி சுத்தி
வந்தாரு பினாங்குக்காரரு.

அப்போதுதான் பினாங்கிலிருந்து ஒரு கடிதம்
வந்தது.
உடனே தடபுடலாக விசா எடுத்துப் 
புறப்பட்டுப் போனவருதான்.
போகும் போது விசா எல்லாம்
எடுத்த பிறகு வந்து கூட்டிட்டுப்
போறேன் என்று சொல்லிப்
போனவரு...
இன்றுவரை வரவே இல்லை.
ஆரம்பத்தில் வாரத்தில் ஒரு கடிதம் டாணென்று
வந்து நிற்கும்.
மாதாமாதம் பணமும் வந்துவிடும்.

பிறகு கடிதப் போக்குவரத்து
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 
கொண்டே வந்தது.
இப்படியாக ஒரு வருடம் ஓடியிருக்கும்.
மறுபடி பணம் அனுப்புவதும் நின்னுப்
போச்சு.

கண்ணம்மா  படிக்கத் தெரியாதவ...
அதனால பக்கத்து வீட்டு மல்லிகா
அக்கா கிட்ட போய்
லட்டர் எழுதி வாங்கி லட்டருக்கு மேல்
லட்டர் எழுதி அனுப்புவா...
ஆனால் எந்த லட்டருக்கும் பதில் வரல..
ஒரு கட்டத்துல லட்டர் எழுதி எழுதி
ஓய்ந்து போய்விட்டாள் கண்ணம்மா.

கையில காசு இருக்கிற வரை ஒன்றும் தெரியல...
பிள்ளைகள் வளர வளர  என்ன பண்ணுவது
என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
வீடு வீடா போய் பத்து பாத்திரம் தேய்க்கலாம்
என்றால் கிராமத்துல அந்த வேலைக்கு
ஆள் வைக்க மாட்டாங்க...

அப்போது தோன்றியதுதான் கீரை வியாபாரம்.
கையில பணம் வேண்டியது இல்ல. முதல் 
இல்லாமலேயே செய்யும் தொழில்.
 மலங்காடும் காடுமாக உள்ள ஊருல பொழப்பு
நடத்த இது மட்டுந்தான் இப்போது
வழியாப்பட்டது.அம்மாவுக்கும்
வயசாகிப் போச்சு.

துணிஞ்சு ஒரு நாள் காட்டுக்குக் கீரை பறிக்கப்
புறப்பட்டாள் கண்ணம்மா. 
ஆரம்பத்தில் புள்ளைகளை விட்டுட்டுப்
போவது கஷ்டமாதான்
இருந்தது. இதைப் பார்த்தால்...வயித்துப்பாட்டைப்
பார்க்கணுமே...
காலையிலையே கஞ்சிக் கலயத்தோடு புறப்பட்டுப்
போய்விடுவாள்.
கடலை காட்டுக்குள்ள இறங்கி கீரை பறித்து வருவா...
ஒவ்வொரு நாள் மலை பக்கமா போய்
சுண்டைக்காய் பறித்து வந்து விற்பாள்.
இப்படியாக கண்ணம்மா வாழ்க்கை ஓடியது.

மூணு புள்ளைகளுக்கும் வயித்துப் பாட்டுக்கு
வஞ்சகம் இல்லாம கூழோ கஞ்சியோ வயிறார
ஊற்றினாள்.
இதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும்? 
மலங்காடு பக்கம் போனா நல்ல கனகாம்பரம்
பூத்துக் கிடக்கும்.
கண்ணம்மாவுக்கு 
பெண் பிள்ளை இல்லாததுனால
பூவச்சி அழகு பார்க்க ஆசைப் படுவா..
அதனால இளையவனுக்கு கொண்டை வளர்த்து 
சீவி பூ வச்சி அழகு பார்ப்பா..

கிராமத்தில ஐந்தாம் வகுப்புக்கு மேல
பள்ளிக்கூடம் இல்ல...அதனால மூத்தவன்
ஐந்தாவது முடிச்சதும் பக்கத்து ஊருக்கு
படிக்க அனுப்புனா...
படிக்கப் போனவன் பள்ளிக்கூடத்துக்குப்
போறேன்னுட்டு முந்திரிக் காட்டுக்குள்ள 
சுத்திகிட்டு அலஞ்சுருக்கான்.
பள்ளிக்கூடத்துல இருந்துதேடி வந்தப்பதான்
கண்டம்மாவுக்கு விசயமே தெரிஞ்சுது.
போட்டு விளாசு விளாசுன்னு விளாசிப்
பார்த்தா கண்ணம்மா.

ஒரு கட்டத்துல என்ன செய்வ என்று
எதுத்து திமிரிகிட்டு நின்னான் மூத்தவன்.
இவன் சரிப்பட மாட்டான் என்று ஊருல
ஒரு வீட்டுல மாடு மேய்க்க கொண்டு
விட்டாள்.
அதிலும் ஆயிரம் திருக்குத்தாளம் பண்ணுவான்.

முன்னேர் போனமாதிரிதானே பின்னேரும்
போகும்.
மூணுபேருமே படிப்ப நிறுத்திட்டு ஊர்ல 
கிடச்ச வேலைய செய்ய ஆரம்பிச்சுட்டானுவ.
ஒருத்தன் சாராயத்துக்கு சர்க்கரை சுமக்கும்
வேலையில் போய் சேர்ந்து கொண்டான்.

கடைசி பையன் ஒரு காப்பி கடையில
கையாளா வேலை செய்தான்.

இப்படி பிள்ளைகளால பிரச்சனைகள் வந்து
நின்னப்பதான்  கண்ணம்மா 
ரொம்ம பினாங்குக்காரரை  நினைக்க ஆரம்பிச்சா..

ஒரு ஆம்பிள இல்லாததுனால இந்தப்
புள்ளைகள் தன்னை என்னா பாடுபடுத்துது
என்று...சொல்லிச் சொல்லி புலம்புவா....

பினாங்குக்காரர் மட்டும் இப்போ இருந்துருந்தா....
பிள்ளைகள் இப்படி படிப்பை விட்டுவிட்டு
அலைந்திருக்காது என்பது கண்ணம்மாவின்
கணிப்பு.

நினைத்தவளுக்கு கண்ணீர் முட்டிக்
கொண்டு வந்தது. 

வயசான அம்மா கூடவே இருந்து
வீட்டைக் காத்துக் கிடப்பதால் ஏதோ ஒரு பாதுகாப்பு
இருப்பதுபோல உணர்ந்தாள் கண்ணம்மா.

ஆனாலும் அப்பப்போ பினாங்குக்காரர்
நினைப்பு வந்து கண்ணம்மாவ...
நிலை குலைய வைத்திடும்.
ஒவ்வொரு நாளு காட்டுக்குள்ள கீரை
பறிக்கும்போது நினைப்புவர அப்படியே ஒரு
மரத்துக்குக்கீழ உட்கார்ந்து அழுவா...

ஆனாலும் ஊருக்குள்ள வந்ததும்
எந்த நினைப்பும் இல்லாததுபோல 
பந்தா காட்டித் திரிவா...
கட்டுனவன் சரியில்லன்னா எந்தப்
பொண்ணுக்குத்தான் கவலை இருக்காது.

அதுவும் போனவன் இருக்கானா இல்லையா
என்று ஒரு துப்பும் இல்லாம இருக்கும்போது
கலங்காமல் எப்படி இருக்க முடியும் ?

பினாங்குக்காரர் வருவார் என்ற 
எதிர்பார்ப்போடு கண்ணம்மா நாட்களைக் கடத்திக் 
கொண்டிருப்பதுபோல எத்தனை கண்ணம்மாக்கள்
தங்கள் கணவன்மார்களை வெளிநாடுகளுக்கு
அனுப்பிவிட்டு விட்டத்தைப் பார்த்தபடி 
விழி மூடாது காத்திருக்கிறார்களோ?

அவர் வருவாரா?









Comments

Popular Posts