உப்பிட்டவரை உள்ளளவும் நினை

உப்பிட்டவரை உள்ளளவும் நினை 


"உப்பில்லா பண்டம் குப்பையிலே"
உப்பு போடாவிட்டால் உணவில் சுவை
இருக்காது.
திருமண வீடுகளில் உணவு பறிமாறும்போது
இலையில் முதலாவது வைப்பது உப்பு.
புகுமனை புகுவிழாவிற்குச் செல்லும்போது
உப்பு கொண்டுபோவது வழக்கம்.

" ஒரு நாளாவது உங்க உப்பை
தின்னுருக்கான் இல்லியா...
அதற்கு கொஞ்சமாவது நன்றி
விசுவாசம் காட்ட வேண்டாமா ?
கொஞ்சம்கூட நன்றி கிடையாது...."

பல நேரங்களில் நாம் கேட்ட குரல்...
கேட்டுக் கொண்டிருக்கும் குரல்....

உப்பைத் தின்றால் நன்றி 

இருக்கணுமா?

உப்புக்கும் நன்றிக்கும் என்ன தொடர்பு?
என்றாவது சிந்தித்தோமா?

"கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா?
நீ சோத்துல உப்புதானே போட்டு
சாப்புடுற...."
இந்தக் கேள்விகளும் நம் காதுகளுக்கு
வந்திருக்கலாம்.

சூடு சொரணை வர வேண்டுமானாலும்
உப்பு  வேண்டுமாம்.

சூடு சொரணை என்றால் என்ன ?

கார சாரமா இருக்கணும். அதாவது மானஸ்தனாக

இருக்கணுமாம்.

அதை எப்படி எல்லாம் சுற்றி வளைத்து

உப்பு போட்டுத் தாராங்க பாருங்கள்....

சோறு என்றால் சுவை வேண்டும்.
சுவை இருந்தால் மட்டுமே உண்பதில்
மகிழ்ச்சி கிடைக்கும்.
உப்பு இல்லாமல் சப்பென்று இருந்தால் 
சாப்பிட பிடிக்காது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

உப்பு என்றால் சமையலுக்குப் பயன்படுத்தப்படும்

ஒரு பொருள் என்று அகராதியில் பொருள்

போடப்பட்டிருக்கும்.


ஆனால் இந்த உப்புக்கு இன்னொரு பொருளும்

உண்டாம்.

உப்பு என்றால் மகிழ்ச்சி என்பது பொருள்.

ஆஹா....உப்புக்கு இப்படியும் ஒரு பொருளா?

கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா!

 மகிழ்ச்சியைத் தருவது உப்பு.

அப்படியானால் உப்பிட்டவர் என்றால் 

மகிழ்ச்சியைத் தந்தவர் என்று எடுத்துக்

கொள்ளலாம்.
எல்லாமே இதுவரை தெரியாத 

செய்தியாக இருக்கிறதே!

இன்று தெரிந்துவிட்டீர்களல்லவா!

அப்படியானால் தாராளமாக இனி  உப்பைச்
சேர்த்துக் கொள்ளலாம்....

தாராளமாகவா...என்ற உங்கள் 
சிரிப்பு என் காதுகளில் விழுகிறது.

நான் தாராளமாக என்றதும் ஏராளமாக 

உப்பைக் கொட்டி உணவின் சுவையைக் 

கெடுத்து விடாதீர்கள்.உப்பு அதிகமாகிவிட்டாலும் 

உண்ண முடியாது.காளமேகப் புலவரின் அத்தை

மகள் சமைத்து வைத்த கரிக்காய் பொரியலும்

கன்னிக்காய் தீயலும் பரிக்காய்

பச்சடியும் அப்பைக்காய் நெய்த் துவட்டலும்

உண்ண முடியாமல் சீ...சீ என்று

உமிழும்படியாக ஆகிவிட்டதுபோல 

தின்ன முடியாமல் போய்விடும்.

அது எப்படி என்று கேட்கிறீர்களா?

அன்பு மிகுதியால் அத்தை மகனுக்குச்

செய்த உணவில் உப்பையும் அதிகமாக

போட்டுவிட்டாளாம்.

பிறகு என்னாயிற்று என்கிறீர்களா?

சீச்சீ....என்று உமிழும்படியாக ஆகிவிட்டதாம்.

இதனைக் காளமேகப் புலவரே கூறியுள்ளார்.

தாறுமாறாக உப்பை அள்ளிப் போட்டால்

உண்ணவா முடியும் ?

அதிகமானால் அமிர்தமும் நஞ்சுதான்

அட ...உப்பு கதையைச் சொல்லி ...சொல்ல

வந்த கருத்தை விட்டுவிட்டேன்
பாருங்கள்....

 சொல்லாலோ செயலாலோ ஒருவர்செய்த
உதவி மகிழ்ச்சி தருவதாக இருந்தால் 

அவரை உயிர் உள்ளவரை மறக்கக் கூடாதாம்.

என்றென்றும் நம் நினைவில் வைத்திருக்க
வேண்டுமாம்.அதாவது நன்றியுள்ளவர்களாக

இருக்க வேண்டுமாம்.

"தினைத்துணை நன்றி செயினும்

 பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார் "

என்று வள்ளுவர் இதனால்தான்

சொல்லி இருப்பாரோ!

" காலத்தினாற்  செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."

" பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது"

என்று நன்றியின் முக்கியத்துவத்தை பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார்
திருவள்ளுவர்.

இந்த நன்றியை வலியுறுத்த வந்ததுதான்
இந்த உப்புப் பழமொழி.

நன்றி மறவாதிருக்க வேண்டும் என்பதற்காக,

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "

என்று கூறி நன்றி மறந்தால் 

உங்களுக்கு ஒரு நாளும் நல்லதே

நடக்காது என்பதுபோல எச்சரிக்கையும் செய்திருக்கிறார் வள்ளுவர்.

உப்புக்கும் நன்றிக்கும் இப்படி ஒரு உறவா!

 இவ்வளவு விசயம் உப்புக்குள் இருக்கிறதா?

அதனால்தான் உயிருள்ளவரை என்ற ஒரு
வார்த்தையையும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறதோ....
இருக்கலாம்...இருக்கலாம்.

ஒருவர் செய்த நன்றியை உயிருள்ளவரை

மறக்கக்கூடாதுங்க.

இன்னும் யார்யார் எல்லாம் உப்புப்பற்றி

பேசி இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

பைபிளில் இயேசு கிறிஸ்து தனது மலை
பிரசங்கத்தில்  உப்பைப்  பற்றி
பேசியிருப்பார்.

"நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள்.
உப்பானது சாரமற்றுப் போனால் எதினால் சாரமாக்கப்படும் ?
வெளியே கொட்டப்படுவதற்கும் மனிதரால்
மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும்
உதவாது"
என்று தன் சீடர்களுக்கு உபதேசித்தார்.

சாரமற்ற உப்பாக அல்ல பிறருக்குப்
பயன்படும் சாரமுள்ள உப்பாக இருக்க வேண்டும்.
நல்லது செய்ய வேண்டுமா?
நீங்கள் உப்பாக நடுநிலை தவறாது...அதாவது
கூடவும் குறையவும் இடங்கொடுக்காமல்
இருங்கள் என்கிறார் கிறிஸ்து.

இந்திய விடுதலைப் போராட்டத்தில்
முக்கிய பங்கு வகித்தது காந்திஜியின்
உப்பு சத்தியாகிரகம் என்பதை நாம்

மறந்திருக்க முடியாது.

அப்படியானால் இந்திய விடுதலைக்கு முக்கிய 

காரணமாக இருந்ததும் உப்புதான்.

வரலாற்றிலும் உப்பு முதன்மையான

இடத்தைப் பிடித்து வைத்துள்ளது.


உப்பு நம் உணர்வோடு உயிரோடு உணவோடு

கலந்துவிட்ட ஒரு பொருள்.

உப்பிற்கும் நமக்கும் ரொம்ப நெருக்கம்.

நாம் வாங்கிய கடனை எப்படியாவது
அடைத்துவிடலாம்.
ஆனால் ஒருவருக்கு நன்றிக்கடன் 
பட்டிருந்தால் காலம் முழுவதும்
அதனை அடைக்க முடியாதுங்க..

ஒருவருக்குப்பட்ட நன்றிக்கடனை

 அடைக்க வேண்டும் என்றால்

வாழ்க்கை முழுவதும் நாம் நன்றி

உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் "உப்பிட்டவரை உள்ளளவும்

நினை" என்ற பழமொழி வந்ததாம்.

இனி உப்பிட்டவரை காலத்துக்கும்

மறக்கமாட்டோம் இல்லையா ?


Comments

  1. உப்பின் மகத்துவத்தை பல உதாரணங்களுடன் பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts