ஆவாரை யாரே அழிப்பார்
ஆவாரை யாரே அழிப்பார்
நாம் நினைத்தபடி வாழ்க்கையில்
எல்லாம் அமைந்துவிடுகிறதா?
ஒருவருடைய வாழ்க்கை வசதி வாய்ப்போடு
நன்றாக இருக்கிறது.
அதற்குக் காரணம் முன்னோர் சேர்த்து
வைத்த பொருளாக இருக்கலாம்.
புண்ணியமாக இருக்கலாம்.
உழைப்பாக இருக்கலாம்.
ஏதோ ஒரு காரணம் ஒருவரின் வளர்ச்சிக்குத்
துணையாக இருந்திருக்கிறது.
மாறாக இன்னும் ஒரு சாரார் வாழ்க்கை
வயிற்றுக்கான போராட்டமாகவே
கடந்து போகிறது.
அவர்கள் உழைக்க வில்லையா?
அவர்கள் பெற்றோர் புண்ணியம்
செய்யவில்லையா?
ஆனால் அவர்கள் எது செய்தாலும்
தடை.
முன்னேற முடிவதில்லை.
இதற்கான காரணம் என்ன?
சிலர் கஷ்டப்படுவதைப் பார்த்தால்
கடவுளைப் பார்த்தால் நிற்க வைத்துக் கேள்வி கேட்க
வேண்டும் என்று தோன்றும்.
மலைக்கும் மடுவுக்குமான
வித்தியாசம் உள்ள வாழ்க்கை
நிகழ்வுகள் கண் முன் வந்து
ஏதேதோ எண்ண வைக்கின்றன.
யாரையெல்லாமோ கேள்வி கேட்க
வைக்கின்றன.
யாரை கேள்வி கேட்டு என்ன பயன்?
இந்த நிகழ்வுகள் எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம் என்று சொல்லி சிலநேரங்களில் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதாகத்தான்
இருக்கிறது.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுதான்
ஆக வேண்டும்.
விதி என்று மற்றொரு பெயரைச் சூட்டி
நம்ப வேண்டியதுதான்.
வேறு வழியில்லை.
ஔவையிடம் இதற்கான காரணம்
கேட்டால் ஒருவன் முன் வினைப் பயனே இவை எல்லாம் நிகழக் காரணம் என்கிறார்.
ஔவையார் சொல்வதைத் கேளுங்கள்.
பாடல் இதோ உங்களுக்காக...
"ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல்."
நல்வழி பாடல்:13
வளர்ச்சியை யாரால் அழிக்க முடியும்?
அதுவன்றி சாவாரை யாரால் தவிர்க்க
முடியும்?எவ்வளவு முயற்சி செய்தாலும்
இரப்பவரை யாரால் விலக்க முடியும்?
வளர வேண்டும் என்று இருந்தால் அந்த
வளர்ச்சிக்குத் தடையிட எவராலும் கூடாது.
அதைத்தான் ஔவை ஆவாரை யாரே அழிப்பார் என்று முதல் வரியிலேயே
முத்தாப்பாய்ச் சொல்லியிருக்கிறார்.
முதல் வரியிலேயே ஆவாரை யாரே அழிப்பார் என்று சொன்னவர் அடுத்த வரியிலேயே அதற்கு எதிர்மாறான
இன்னொரு செய்தியைச் சொல்லி நம்மை கலங்கடித்திருக்கிறார்.
அப்படி என்ன செய்தியைச் சொல்லி நம்மைக் கலங்க வைத்துவிட்டார் என்று கேட்கிறீர்களா?
சாவாரை யாரே தவிர்ப்பவர் என்றொரு செய்தியை முன் வைத்தால் கலங்காமல்
எப்படி இருக்க முடியும்?
உண்மை.
சாவைத் தவிர்த்தவர் எவரும் உண்டோ?
சாவு வந்தால்...
நாளை வருகிறேன்.
நாளை மறுநாள் வருகிறேன்.
இல்லை என் பிள்ளைக்குத் திருமணம்
முடித்து வைத்துவிட்டு வருகிறேன் என்றால்
நிற்குமா?
ஒரு நாள் கழித்து வா தம்பி என்று
சொல்லி அனுப்பிவிட முடியுமா?
இந்தக் கேள்வி நமக்குள்ளும் எழுகிறதல்லவா?
தவிர்க்க முடியாதது தள்ளிப் போட முடியாதது ...
வாய்தா வாங்க முடியாதது மரணம்.
அதனால்தான் சாவை யாரே தவிர்ப்பவர் என்று கேட்டு அப்படி ஒருவர் உண்டென்றால் சொல்லுங்கள் என்று தேர்வை நம் முன்னே
வைத்துவிட்டார் ஔவை.
மூன்றாவதாக ஒருவர் வறியவர் ஆகி பிறரிடம் பிச்சை
எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
அதனைத் தடுக்க நம்மால் கூடுமோ?
ஒரு நாள் உதவலாம். இரண்டு நாள் உதவலாம்.
காலத்திற்கும் உதவிக் கொண்டிருக்க முடியாது.
அதனால் அவர் பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
எப்படி வளர்ச்சியைத் தடுக்க முடியாதோ அதுபோல மரணத்தையும் தவிர்க்க
முடியாதது.
இரக்கும் நிலைக்குத் தள்ளப்படுதலையும் விலக்குதல் கூடாது.
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
இதுவும் சரியான கேள்விதான்.
மனம் ஏற்றுக்கொள்ளவில்லைதான்.
ஆனாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஒருவரின் வளர்ச்சி தடுக்க முடியாதது.
சாவு தவிர்க்க முடியாதது.
இரப்பு விலக்க முடியாதது
என்று சத்தான மூன்று கருத்துகளைச் சொல்லி முத்தாய்ப்பாய் தனது பதின்மூன்றாவது பாடலை முடித்திருக்கிறார்
ஔவை.
உலக எதார்த்த நிலையை உணர்த்தும் அருமையான பாடல்.
அனைவரையும் ஏற்றுகொள்ள வைத்தப் பாடல்.
சிந்திக்க வைத்தப் பாடல்
உதடுகள் ஓயாமல் உச்சரிக்கும் பாடல்
ஆவாரை யாரே அழிப்பார்.....
Comments
Post a Comment