ஓடிக் கொண்டே இரு

 ஓடிக்கொண்டே இரு


வாழ்க்கை  என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம் தான்.

இங்கு ஜெயிக்கிறவன்தான் கொண்டாடப்படுகிறான்.

தோற்றவர்கள் திரும்பி கூட பார்க்கப்படுவதில்லை.


ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகளாக 

தான் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

கொஞ்சம் பின் தங்கி விட்டால் கூட 

புறந்தள்ளப்படுவோம்.

வேண்டாம் என்று நிராகரிக்கபப்படுவோம்.


 ஒரு குதிரை ஜெயிக்கலாம்.

 ஒரு குதிரை தோற்கலாம்.

 எல்லாம் கடந்து போகட்டும்.மறந்து போகட்டும்

நான் ஜெயிக்கிற குதிரையாக இருக்க வேண்டும்.


இரவு என்றால் பகலும் உண்டு.

எப்போதும் பகலாய் இருந்தால் 

நிகழ்வுகள் மகிழ்ச்சியைக் கொடுக்காது.


இரவாகவே இருந்து விட்டால் உலகம் தாங்காது.

மாறி மாறி வரும்போதுதான் அடுத்தது

என்ன .....அடுத்தது என்ற ஓர் எதிர்பார்ப்போடு வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும்.  


மாற்றம் என்ற சொல்லைத் தவிர 

இந்த உலகில் மாறாதது 

என்று எதுவும் இல்லை.

நேற்று பார்த்த செடி இன்றும் நாளையும்

அப்படியே இருக்க வேண்டும்  என்று எதிர்பார்த்தால் அதன் பலனை எப்போது அனுபவிப்பது?


நேற்று என் பெற்றோர் இப்படித்தான் 

 இருந்தனர்.அதனால் நானும் அப்படித்தான் 

 இருப்பேன் என்றால் நாமும் தாத்தா 

 பாட்டி போல கொண்டையும் கடுக்கானும் 

 போட்டுக்கொண்டு அலைய வேண்டியதுதான்.


 காலச் சூழல் பொருளாதாரம் தொழில்நுட்ப 

 வளர்ச்சியின்மை ஆகியவை அவர்களை 

 அப்படி இருக்க வைத்தது.

ஆனால் இன்று எல்லாவிதமான 

வசதி வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இந்தச் சூழலில் நாம் நம்மை மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் ஓட கற்றுக்கொள்ள வேண்டும்.

ஓட பழகவில்லை  என்றால் எல்லோரும் நம்மை முந்தி சென்று விடுவர்.

நாம் நின்ற இடத்திலேயே நின்று அவர்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

நமது பெயர் தோற்றவர் பட்டியலில் எழுதப்பட்டு விடும்.


தோற்றவர்கள்  என்ற முத்திரை குத்தப்பட்டால் மனதுக்குள்  ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்ளும்.

ஒருமுறை அந்த மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டு விட்டால்  அதிலிருந்து மீண்டு வெளிவருவது கடினம்.

யாரையும் விட நான் தாழ்ந்தவன் அல்லன் என்ற உறுதி மனதிற்குள் இருந்துகொண்டே

இருக்க வேண்டும்.

 வேட்டி அணிந்து ஓட்டப் பந்தயத்தில் ஓடமுடியாது.

 ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் வேட்டியைக் கழட்டி வைத்துவிட்டு அரைக்கால் சட்டையோடு ஓடுவதில் எந்த தப்பும் இல்லை.

    

நான் அரைக்கால் சட்டை அணிய மாட்டேன் .முட்டு தெரியும் முழங்கால் தெரியும் என்று முனங்கிக்கொண்டிருந்தால் வேட்டியைக் கட்டிப் பிடித்துவிட்டு ஓரமாய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான்.


இவர் என்ன சொல்லி விடுவாரோ அவர் என்ன சொல்லி விடுவாரோ என்று அங்குமிங்கும் பார்த்தால் எதுவுமே செய்ய  முடியாது.

அவர் யார் எனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு? எனக்கான சான்றிதழ் நான் வாங்கியதாக இருக்க வேண்டும்.

எனது முயற்சியில் எனது உழைப்பில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.

அதுதான் எனது அடையாளம்.

அந்த அடையாளத்தைத் பெற வேண்டுமானால் அடுத்தது என்ன ....அடுத்தது என்ன ....என்ற கேள்வி நம்மை ஓயவிடாது துரத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தேடலை நிறுத்திவிட்டால் நாம் தேங்கிய நீர் ஆகிவிடுவோம்.

 நமது பயணம் நாளும் புது வெள்ளத்தைச் சுமந்து செல்லும் நதிபோல இருக்க வேண்டும்.

 நாம் குளமாக இருக்க வேண்டுமா..?

நதியாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமா.....?


நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஓடும் பயணத்தில் ஓராயிரம் பாடங்கள் கிடைக்கும். கிடப்பவற்றை அள்ளிக் கொண்டு ஓடும் புது வெள்ளம் போல ஓடவேண்டும்.

    ஓய வேண்டும் என்ற நினைப்பு 

ஓரமாய்கூட வந்துவிடக்கூடாது.

அது சோம்பலைக் கொடுக்கும்.


 கண்டவற்றைப் படிக்கவேண்டும்

 என்ற தாகம் ஏற்பட வேண்டும்.

 அறிவுப்பசி ஏற்பட்டுவிட்டால் கண்கள் புத்தகங்களைத் தேடும்.

 கால்கள் தானாக நூலகங்களை நோக்கி ஓடும். 

  பலரின் வாழ்க்கைப் பாடங்கள் நம்மை 

ஓர் இடத்தில்  நிற்க விடாமல் துரத்தும்.  


அவை ஆயிரம் கதைகளைச் சொல்லித் தரும்.தோற்றவர்கள் கதையைத் தேடித் தேடிப் படியுங்கள்.

அவர்கள் தோற்ற இடம் அடையாளம் காட்டப்படும்.

அவை தோற்ற இடத்தைத் தவிர்த்து வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கான  வழிகளைக் காட்டும்.

வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் எப்படி நீந்திக் கரையேறுவது என்ற பயிற்சியைக் கொடுக்கும்.

ஒருசெடி எப்போது முழுமை பெறுகிறது என்றால் இலை, பூ, காய் ,கனி என்று அடுத்த கட்டத்தை நோக்கி தன்னை நகர்த்தும் போதுதான் என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

    

அந்த முழுமை நம்முள் ஏற்பட வேண்டும் என்றால் 

நகர்ச்சியும் வளர்ச்சியும் நடந்துகொண்டே இருக்க வேண்டும்.

    

குட்டையாக தேங்கி கிடப்பதும் நீரோடையாக ஓட்டம் 

 எடுப்பதும் நமது கையில்தான் உள்ளது.

தேடுவது குற்றமாக கருதப்பட மாட்டாது. தேடாமல் முடங்கிக் கிடப்பதுதான் குற்றம்.


வருவதைக் கண்டு மயங்காதே. 

போவதைக் கண்டு கலங்காதே.

எனது ஓட்டம் நதி போல இருக்கட்டும்.

இது மட்டும் மனதில் எழுதி வைக்கப்பட்ட பாடமாக இருக்கட்டும்.

 ஓடவேண்டிய பாதையை மட்டும் 

நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஓட்டத்தை நிறுத்தாதே.

கடைசி நேரத்தில் கூட உங்கள் வெற்றி

தீர்மானிக்கப்படலாம்.


ஓட வேண்டும் ...வெற்றிபெற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்கள் அல்லவா?


ஏன் நிற்கிறீர்கள்?


மேலே போர்த்தியிருக்கும்  எதிர்மறை

சிந்தனை என்ற போர்வையைத் தூக்கி வீசுவிட்டு ஓடுங்கள்.

நேர்மறை சிந்தனை என்னும் சட்டையை

அணிந்து கொண்டு இன்றே இப்போதே இங்கிருந்தே ஓடுங்கள்.

உங்கள் வெற்றி கடைசி பக்கத்தில்
எழுதப்பட்டாலும் பரவாயில்லை. 
வெற்றி பட்டியலில் இடம்பெற வேண்டும்.

எதிர்மறை சிந்தைகளோடு கொள்ளுங்கள் பிணக்கு.

நேர்மறை சிந்தனையோடு

இன்றே தொடங்கட்டும் உங்கள் வெற்றிக்கணக்கு.

பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்.

     

Comments