தாலாட்டு

                  தாலாட்டு
ஆராரோ ஆரிரரோ-என்
ஆனந்தமே ஆராரோ
ஆடிவரும் பூங்காற்றோ _ எம்மை
ஆளவந்த மகராசரோ
ஆராரோ ஆரிரரோ _ என்
ஆனந்தமே ஆராரோ 

பாட்டி மடியினிலே
பஞ்சு மெத்தை தொட்டினிலே
தாத்தா வருமுன்னே 
தங்கமே நீ கண்ணுரங்கு!

சித்திரமே முத்தமிழே _என்
செங்கரும்பே நறுந்தேனே
செல்லமே என் சிங்கராசாவே
சிணுங்காமல் நீயுரங்கு!

அன்னமே என் அழகு ரதமே
அம்புலியே அதிசயமே
அம்மான் தந்த தொட்டிலிலே
செம்மாந்து நீயுரங்கு!

ஆராரோ ஆரிரரோ_ என்
ஆனந்தமே ஆராரோ!
ஆடிவரும் பூங்காற்றோ_ எம்மை 
ஆள வந்த மகராசரோ
ஆராரோ ஆரிரரோ _என்
ஆனந்தமே ஆராரோ

அம்மா வரும் வரையில்
ஆச்சி துணை இருந்திடுவேன்
ஆடிவரும் தூலிகையில்
அரசன்போல்  நீயுரங்கு!

புட்டிப்பால் தருவாரோ
போக்குக் காட்டி வைப்பாரோ
பொழுதுமட்டும் கலங்காமல்
பொன்மகனே நீ கண்ணுரங்கு!

அம்மா குரல் கேட்க
அலைபேசி அருகில் வைப்பேன்
அன்னமே என் அழகு ரதமே
அது கேட்டு நீயுரங்கு!

ஆராரோ ஆரிரரோ_என்
ஆனந்தமே ஆராரோ!
ஆடி வரும் பூங்காற்றோ_ எம்மை 
ஆள வந்த மகராசரோ
ஆராரோ ஆரிரரோ _ என்
ஆனந்தமே ஆராரோ!

கலையே என் காவியமே _ உன்னைக்
கன்னமிட்டுச் செல்லாமல்
கண்ணுக்குள்ளே வைத்திருப்பேன்
கனவு கண்டு  நீயுரங்கு!

தங்க தேர்  மாமன்போல
அங்கம் வேண்டுமென்று
அடம்பிடித்து அழுதிடாமல்
ஆதவன்போல் நீயுரங்கு!

அஞ்சு மணிக்குள்ளே 
அம்மா அப்பா வந்திடுவார்
அதுவரைக்கும் தியங்காமல்
அம்மாச்சி சொல் கேட்டுரங்கு!


ஆராரோ ஆரிரரோ _ என்
ஆனந்தமே ஆராரோ!
ஆடி வரும் பூங்காற்றோ _ எம்மை
ஆள வந்த மகராசரோ
ஆராரோ ஆரிரரோ _ என்
ஆனந்தமே ஆராரோ!

தொலைதூரம் இருந்தாலும்
தொட்டில் அருகினிலே
தொடர் நினைவாய் உன் தாயிருப்பாள்
தூயவனே  நீ கண்ணுரங்கு!

கதிரவனே கண்மணியே _என்
கற்கண்டே கனியமுதே
கண்ணிமையைச் சாத்தி நீயும்
காத்திராமல் கண்ணுரங்கு!

பாசமுள்ள மாமன் தந்த
வாசமுள்ள வேட்டியிலே
தேசம் ஆளப் பிறந்தவனே
தேசிங்கு ராசாப்போல்  நீயுரங்கு !

 ஆராரோ ஆரிரரோ _ என்
 ஆனந்தமே ஆராரோ!
 ஆடிவரும் பூங்காற்றோ _எம்மை
 ஆள வந்த மகராசரோ
 ஆராரோ ஆரிரரோ _என்
 ஆனந்தமே ஆராரோ!




Comments

Post a Comment

Popular Posts