சுரையாழ அம்மி மிதப்பு....


 சுரையாழ அம்மி மிதப்பு....


"என்ன இது?...
ஒன்றுமே புரியலியே!
நல்லவர்கள் எல்லாம் துன்பப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
தீயவர்கள் எல்லாம் வசதிவாய்ப்பும்
மகிழ்ச்சியும் என்று அமோகமாக
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? 
நல்லவனுக்கு காலமே இல்லையா?"
புலம்பிக்கொண்டிருந்தான் எழிலன்.

"என்ன எழிலா....ஒரே புலம்பலா
இருந்தாப்புல இருக்கு "
கேட்டான் நண்பன் அமுதன்.

"அட போப்போ... உலகத்தில்
என்ன நடக்கிறது என்று ஒன்றுமே
புரியல...ஒரே குழப்பமாக இருக்கு"

"அப்படி என்ன பெரிய குழப்பம் 
உனக்கு? "

"அதுதாம்பா அந்த மேலத்தெரு
தாத்தா வீட்டுல நடந்ததை 
நினைத்தால் அப்படியே இதயம்
வெடித்து விடும்போல் இருக்கு"

"நானும்கூட நினைத்தேன்.
தங்கமான மனுஷர். அவருக்குப்போய்
இவ்வளவு பெரிய துன்பம் !"

"அதுதான் ஏன் ....ஏன் என்று 
புரியாமல் இன்றுவரை 
கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்"

"நீ ஒருவன் கவலைப்படுவதால்
எல்லாம் சரியாகிவிடுமா...
எழும்பு.. எழும்பு ..அப்படியே
 மணிமுத்தாறு
கால்வாய் கரையோரமாக நடத்துவிட்டு
வருவோம் . கொஞ்சம் மனதுக்கு
இதமாக இருக்கும் வா..."
.கையைப்பிடித்து
இழுத்தான் அமுதன்.

"விடு விடு...வாறேன் "

இருவரும் ஆற்று நீரின் போக்கைப்
பார்த்தபடியே கால்வாய்
ஓரமாக  நடந்து  கொண்டிருந்தனர்.

"அப்பப்பா என்ன...அழகு நடை...
ஏறி இறங்கி நடந்து ஓடி
பம்மி பாய்ந்து  அப்படியே
இங்கேயே உட்கார்ந்துவிடலாம்போல்
இருக்கு "

"ஏன் உட்காராம்...யார்
வேண்டாம் என்றது?"

"நீரின் போக்கும் அதன் மேல்
நாட்டியம் ஆடிவரும் மிதவைகளும்
என்னை எங்கெங்கோ கொண்டு
செல்கிறது. உனக்கு அப்படி
எதுவும் தோணலியா?"

"என் மனம் எங்கும் செல்ல மறுக்கிறது.
தொடங்கிய இடத்திலேயேதான்
நான் நின்று கொண்டிருக்கிறேன்."

"விடுப்பா...உலகம் அப்படி பாதி.
இப்படி பாதி"

"நீ என்ன சொன்னாலும் என்னால்
இயல்பு நிலைக்கு வர முடியவில்லை"

" இந்த நீரில் மிதந்து வரும்
பொருட்களைப் பார்த்தால் நான் படித்த
ஒரு பழமொழி நானூறு பாடல்தான்
நினைவுக்கு வருகிறது."

நிமிர்ந்து பார்த்தான் முகிலன்.

"அப்படி பார்க்காதே...நான்
ஏதும் தப்பாகச் சொல்லலியே .."

"தப்பாகச் சொன்னாய் என்று
யார் சொன்னது ?
 என்ன நினைக்கிறாயோ
அதனைத் தாராளமாகச்  சொல்....அந்தப் 
பழமொழி என்ன என்பதை
நானும் தெரிந்து கொள்வேன் இல்லையா ?" 

"சொன்னால் கோபப்பட மாட்டியே..."

"நான் கோபப்படும்படியாக
முன்றுறையரையனார்
ஏதேனும் கூறியிருக்கிறாரா ?

" நற்பண்புள்ள சான்றோர் எல்லாம்
துன்பத்தில் வாடுகின்றனராம்.
தீய குணம் படைத்த கீழோர் எல்லாம்
 மகிழ்ச்சியாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றராம்"

"அதைத்தானே நான் ஏன் என்று
கேட்கிறேன்"

"ஏன் என்பதற்கு விடை 
சொல்ல எனக்கும் தெரியவில்லை.
ஆனால் இது எப்படி இருக்கிறது
தெரியுமா? "

"தெரிந்தால் நான் ஏன் உன்னிடம்
கதை கேட்டுவிட்டு
காத்திருக்கப் போகிறேன்?"

"பழமொழியைப் படித்ததும்  ஒரு சிறுகதையைப்
 படித்த உணர்வு ஏற்பட்டது.
ஒற்றை வரிக்குள் இதுதாம்பா
உலகம் என்று சொல்லிவிட்டார்"

"அப்படி என்ன பெரிய பழமொழியைச்
சொல்லிவிட்டார் "

"அந்த காலத்திலேயே இன்று
நடப்பதுபோல் இயற்கைக்கு
முரணான செயல்கள்
 நடைபெற்றிருக்கும் போலிருக்கிறது.
அதனால்தான் 
சுரையாழ அம்மி மிதப்பு
என்று ஒரு பழமொழியைச்
சொல்லிவிட்டுச் 
சென்றிருக்கிறார் புலவர்."

"அது என்ன சுரையாழ அம்மி மிதப்பு?"

"எங்கேயாவது சுரைக்குடுக்கை நீரில் 
அமிழ்ந்து போவதைப்
பார்த்திருக்கிறாயா?"

"அதெப்படி பார்க்க முடியும்?
சுரைக்குடுக்கை 
அது எடை குறைவானது. அதனால்
அது நீரில் அமிழ்ந்து போக 
ஞாயம் இல்லை.
அறிவியலும் இடம் கொடுக்காது"

"அறிவியலை விடு.
சுரைக்குடுக்கைக்கு வா.
அந்தக் காலத்தில்
யாசகம் கேட்க வருவோர் கையில்
ஒரு குடுக்கையைத்
தொங்கப் போட்டுக் கொண்டு
வருவார்கள். நாம் கொடுக்கும்
அரிசியை வாங்கி அதற்குள் போட்டுக்
கொண்டு செல்வார்கள் .
அதையாவது பார்த்திருக்கிறாயா?

" சாதுக்கள் கையில் 
இருக்கும். பார்த்திருக்கிறேன்."

"அது நீரில் அமிழ்ந்து செல்கிறதாம்"

"வேடிக்கையாக இருக்கிறதே"

" அம்மிக்கல் எங்காவது
மிதப்பதைக் கண்டிருப்போமா ?"

"என்ன அம்மிக்கல் 
நீரில் மிதக்குமா?"

"மிதக்காது இல்லியா?"

"மிதக்க வாய்ப்பே கிடையாது.
எடைகூடுதலாக உள்ள எந்தப்
பொருளும் நீரில் மிதக்காது.
இது இயற்கைக்கு மாறான செயல்"

" இவை எதுவும் நடக்காது. 
நடக்கவும் கூடாது
இல்லையா?
இப்படி இயற்கைக்கு மாறான 
செயல்தான்
உயர்ந்தோர் தாழ்ந்து போய்விட்டார்.
 கீழோர் உயர்நிலையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்று சொல்வதும்."

பாடலைக் கேள்.

"உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே
சுரையாழ அம்மி மிதப்பு "
                  - பழமொழி நானூறு

சான்றோர் ஒடுங்கி வாழ்தலும்
நற்குணமில்லாதோர் தலைநிமிர்ந்து
வாழ்தலும் பார்ப்பதற்கு சுரையானது
நீரில் ஆழ்ந்து போவது போன்றும்
 அம்மி மிதப்பது போன்றும் இருக்கிறது
 என்கிறார் புலவர்."

"ஆமாப்பா...ஆமா...அதுஉண்மைதான்.
உலகத்தில் எல்லாம் தலைகீழாகத்தான்
நடக்கிறது . இதைத்தான் அவரும்
சொல்லியிருக்கிறார் ."

"சுரை ஆழ்ந்துபோவதும் 
அம்மி மிதந்து வருவதும்
நடக்காத காரியம் . அதுபோல
சான்றோர் கெட்டுப் போவதும்
ஒரு நாளும் நடக்கப் போவதில்லை.
கீழோர் செல்வராய் உயர்ந்து
நிற்பதுபோல் தெரிந்தாலும்
அவர்களும் எல்லாச் சிறப்பும்
கொண்டவர்களாக வாழ்ந்துவிடப்
போவதில்லை.
 இதுதான் இந்தப் பாடல் நமக்குச்
சொல்லும் செய்தி."

"ஓகோ...அப்படியா செய்தி.
இந்தக் கருத்தை சாதாரணமாக
சொல்லிவிட்டுப் போனால் இந்த அளவு
அந்தக் கருத்து நம்முள் ஒரு தாக்கத்தை 
ஏற்படுத்தி இருக்காது.அதன்
உண்மையான பொருளை
அறிய வேண்டும் என்ற
ஆர்வமும் வந்திருக்காது 
என்று நினைக்கிறேன்."

"இயற்கைக்கு
முரணான செயலை நடப்பதுபோல்
சொல்லி நம் கவனத்தைப் 
பாடலின்பால் திருப்பி
சிந்திக்க வைத்திருக்கிறார் புலவர் .
புரிகிறதா?"

"புரிகிறது"

"இப்போது மனது கொஞ்சம்
லேசானது போல இருக்குமே"

"கொஞ்சம் என்ன....
முழு பாரத்தையும் இறக்கி
வைத்ததுபோல் இருக்கிறது.
"சுரையாழ அம்மி மிதப்பு"
எவ்வளவு அருமையாக உலக
நடைமுறைச் சிந்தனையை
விதைத்துப் போன பழமொழி
என்று வியந்து போய் நிற்கிறேன்."








Comments

  1. இலக்கிய இன்பம் தேனினும் இனிமையாக உள்ளது.மிக அருமை.👌👌🌷🌷🌷🌷🌺🌺

    ReplyDelete
  2. What a great moral the one line proverb taught. Selvabai is a very good literature teacher. Her knowledge is vast. Congratulations Selvabai.

    ReplyDelete

Post a Comment

Popular Posts