தீதும் நன்றும் பிறர் தர வாரா....

  தீதும் நன்றும் பிறர் தர வாரா....


எங்கேயோ கேட்ட குரல்.

ஒரு வேளை பள்ளியில் ஆசிரியர்

வாசித்திருப்பாரோ?

எப்போதோ படித்த வரி.

தேர்வுக்காக படித்திருப்போமோ?

பத்தோடு பதினொன்று அத்தோடு

 இது ஒன்று என விட்ட வரி.

நல்ல கருத்துள்ள பாடல்களை அப்படியே

அந்தந்த வகுப்புகளில் விட்டுவிட்டு

கடந்து போவதுதானே நம்மில்

பெரும்பாலோனோரின் வழக்கம்.

அப்படி விட்டு வந்த வரியாக இருக்குமோ?


ஆனால் முதல் வரி மட்டும்

உலகம் சுற்றும் வாலிபனாக என்றும்

இளமையோடு உலகம் முழுவதும் சுற்றி

வந்து கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாட்டு  சபை வாயிலில் நின்று

அனைவரையும் வரவேற்று நிற்கிறது.

தமிழரின் பெருமையே இந்த 

ஒற்றை வரியில்தான்

அடங்கி இருக்கிறது என்று உரத்தக் 

குரலில் உலகம் முழுவதையும்

சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது.


ஆனால் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும்

எவ்வளவு கனமானது. கருத்தாழமிக்கது

 என்பது அடுத்தடுத்த வரிகளை 

வாசிக்கும்போதுதான் 

புரியும்.இத்தனை நாளும் இந்தப் பாடலை

படித்தும் கண்டும் காணாமலும் கடந்து

போயிருக்கிறோமே என்று நம்மை

கலங்க வைக்கும்.

நான் எந்தப் பாடலைச் சொல்கிறேன் 

என்பது இப்போது உங்களுக்கு நன்றாகப்

புரிந்திருக்கும்.


கணியன் பூங்குன்றனாரின்

 "யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்று தொடங்கும் பாடல் தாங்க

இத்தகு பெருமைகளை நமக்கு

அள்ளித் தந்த பாடல்.


பாடலின் ஒவ்வொரு வரியும்

உயிரோட்டம் மிக்கது.

உளவியலோடு கலந்த உலக நடப்பைப்

பேசி நம்மை திரும்பிப் பார்க்க வைப்பது.

காலத்தால் அழியாத கருத்தோவியங்களைச்

சுமந்து நிற்பது.

உலக நடப்பை எவ்வளவு எளிமையாக

எதார்த்தத்தை மனம் ஏற்றுக்கொள்ளும்

விதமாக காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று

தொடர்புபடுத்தி கண்முன் கொண்டுவந்து

நிறுத்தி இருக்கிறார் புலவர் என்பது

பாடலைப் படிக்கும்போது புரியும்.

 பாடல் இதோ:

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ;

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதெனின மகிழ்ந்தன்றும் இலமே ;முனிவின்

இன்னாதென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானது

கல் பொருது மிரங்கு மல்லற்  பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
                          
                                புறநானூறு : 192

என்பது பாடல்.

முழு பாடலுக்குமான விளக்கம்

"யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற

தலைப்பில் வந்துள்ள

 கட்டுரையில் வெளியிட்டுள்ளேன்.


முதல் வரி "யாதும் ஊரே

யாவரும் கேளிர் "

அனைவரும் அறிந்த  ஒரு வரி.

எளிமையான பொருள்.

எல்லா ஊரும் எமது ஊர்தான்.

எல்லா மக்களும் எமது உறவுகள்தான்

என்ற சீரிய கருத்தைத் தாங்கி வரும் வரி.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

என்பது இரண்டாவது வரி.

இதுதான் இக்கட்டுரைக்கான மையப்பொருள்.

தீமையோ... நன்மையோ எதுவானாலும் பிறரால்

நமக்கு வந்துவிடப் போவதில்லை.

நடப்பது எதுவானாலும் அதற்கு

நாம்தான் காரணம்.

நாம் மட்டுமே காரணம் என்கிறது

இரண்டாவது வரி.

எவ்வளவு அருமையான கருத்து பாருங்க...


நல்லது வந்தால் நான்...நான்..

 என்னால்தான் இவை எல்லாம் நிகழ்ந்தது

என்று ஆயிரம் முறை சொல்லி சொல்லிப்

பெருமிதம் கொள்வோம்.

ஒரு தீயது நடந்து விட்டது என்றால்....

அவ்வளவுதான் .எதிராளியை நோக்கி

முதல் ஆளாக கை நீட்டி குற்றப்படுத்தத்

தவறமாட்டோம். உன்னால்தான்

இப்படி எல்லாம் நிகழ்ந்துவிட்டது 

நீதான் எல்லாவற்றிற்கும் காரணம்

என்று அது மறக்கும்வரை

குற்றப்படுத்திக் கொண்டே இருப்போம்.


இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கு அல்ல.

ஆனால் கணியன் பூங்குன்றனார் என்ன

சொல்கிறார் பாருங்கள்.

நமக்கு ஒரு நல்லது நடந்தால்

அதற்குக் காரணம் நாம்தானாம்.

அதே போல ஒரு தீங்கு வந்து விட்டாலும்

அதற்கும் நாம் மட்டும்தான் காரணமாம்.

இரண்டுக்கும் நாம்தான் காரணமா?

அது எப்படி ?....

ஒரே ஆள் நன்மைக்கும் தீமைக்கும்

காரணமாக இருக்க முடியும்?

எனக்கு நானே தீங்கு செய்து

கொள்வேனா? மனம் எகிறுது இல்லையா!

ஏற்க மனம் மறுக்கிறதல்லவா!

நன்மைக்குப் பொறுப்பேற்க தயாராக

இருக்கிறோம்.

 தீமைக்கு யார் காரணம் என்ற கேள்வி

எழும்போதுதான் இந்தத் தடுமாற்றங்களும்

தப்பிக்க வழி தேடல்களும் முன்

வந்து நம்மைத் தடுமாற வைக்கிறது.

நானல்ல....நானல்ல ...நான்

காரணமல்ல என்று கையை 

உதறிவிட்டு ஓட்டம் பிடிக்க வைக்கிறது.

யாராவது என்னால்தான் துன்பம்

வந்தது என்று ஒத்துக் கொள்வார்களா?

அப்படி ஒருவர் ஒத்துக்கொண்டால்

அவர் மகானாக அல்லவா இருக்க

வேண்டும் என்று கேட்கத் தோன்றும்.


என்ன சொல்லி தப்பிக்க நினைத்தாலும்

தப்பிக்க முடியாதுங்க.

உங்களுக்கு வரும் துன்பத்திற்கு 

காரணம் நீங்கள்தான்

என்பதை ஒத்துக்கொண்டுதான்

ஆக வேண்டும் என்கிறார்  பூங்குன்றனார்.


எதுவுமே நம்மை மீறி நடப்பதில்லை.

நல்லது செய்தால் நன்மை நிகழும்.

தீமை செய்தால் தீயதுதான் நிகழும்.

"தினை விதைத்தவன் தினைஅறுப்பான்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்."

"முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்."

ஒரு செயலின் விளைவு நம்மை 

நிழல் போல தொடர்ந்து 

வந்துகொண்டே இருக்கும்.

நாம் விதைக்கிற விதைதான் பெரிய

 விருட்சமாக வளரும்.

நமது எண்ணம்தான் செயல் 

வடிவம் பெறும்.


நாம் கண்ணாடி முன் நின்று என்ன

 செய்கிறோமோ அதுதான் நமக்குக்

காட்டப்படும்.

நாம் நல்லபடியாக இருந்தால் எல்லாம்

நல்லபடியாக நடக்கும் .

கோணலாக முகத்தை வைத்துக் கொண்டால்

 கோணலாகத்தானே தெரியும்.

நன்மை ...தீமை ...இரண்டுக்கும் காரணகர்த்தா 

நாம்தாம்.வெளியிலிருந்து யாரும் வருவதில்லை.

இதுதான் பூங்குன்றனார் உச்சந் தலையில்

ஓங்கி அடித்து நமக்குச் சொல்லிச் சென்ற

கருத்து.

அத்தோடு பூங்குன்றனார் நம்மை

விட்டுவிட்டாரா?

இதோடு முடியலைங்க....

இன்னும் ஒன்று இருக்கிறது கேட்டுவிட்டு

போங்க என்று நம்மை கையைப் பிடித்து

இழுத்து நிறுத்தி வைத்துக்

 கேட்க வைக்கிறார்.


"நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"

என்று இரண்டாவது வரியோடு சேர்ந்து

இந்த மூன்றாவது  வரியையும் முடிச்சு

போட்டு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

அதனால் வெறுமனே இரண்டாவது

வரியை மட்டும் படித்துவிட்டுக்

கடந்து போய்விட முடியாது.


அது என்னங்க?...

"நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"

என்று நம்மை

நின்று கேட்க வைக்கிறதல்லவா!

அவற்றோரன்ன என்றால் என்ன? 

இரண்டாவது வரியில் சொன்னேனே

தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்று அது போன்றதுதான் நோய்

வருவதற்கும் நோய் நீங்குவதற்கும்

நாம்தாம்  காரணம் என்கிறார் புலவர்.

எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி

பேசுகிறார் பாருங்கள்.


நோய் வருவதற்கு நான் காரணமா?

இதென்ன வேடிக்கையாக இருக்கிறது.

கிண்டலாகக்  கேட்க வேண்டும்போல்

தோன்றுகிறதல்லவா!


வேறு யாராக இருக்க முடியும் 

என்று நினைக்கிறீங்க.?

நீங்களேதான்.நீங்கள் மட்டும்தான்.


என்ன ....எங்களைக் குற்றப்படுத்துகிறீர்களா....?

இப்போதுதானே அடுத்தவர்களை

நோக்கி கை நீட்டாதீர்கள். எல்லாவற்றிற்கும்

காரணம் நாம்தான்

என்று சொன்னீர்கள் என்பீர்கள்.


சரியாகக் கேட்டீர்கள்.என்னை

விட்டுவிட்டேனா?

மன்னிக்கவும்.நாம்தான் காரணம்.

நாம் மட்டுமே காரணம்.

யாரும் விடுபட்டுப் போகவில்லையே..?


நமது உணவுப் பழக்கவழக்கங்கள், 

வாழ்க்கைமுறை ,சுற்றுச்சூழல் பராமரிப்பு, 

ஒழுக்கம் என்று நமது நடைமுறைகள்தான் 

நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

நம்மையும் நம் சுற்றுச் சூழலையும் 

பராமரிக்கும் பெரும் பொறுப்பு 

நம் கையில்தான் இருக்கிறது என்பதை 

உணர்ந்து அதற்கு ஏற்ப சூழலை

அமைத்துக் கொண்டு செயல்பட்டாலே 

பெரும்பாலான நோய்கள் வராது.


உணவுப் பழக்க வழக்கங்கள்

தாறுமாறாகிப் போனால் உடலும்

தாறுமாறாகிப் போகும்.

நோய்கள் வரக் காரணம் சுகாதாரக்கேடு,

 தவறான உணவு பழக்கவழக்கங்கள்

 என்று சுகாதார அமைப்புகள் பலமுறை

நம்மை எச்சரிக்கின்றன.

அப்படியானால் நோய்வரக்

 காரணம் யார் என்பது இப்போது

புரிந்திருக்கும் இல்லையா!


அவனிடமிருந்து வந்தது .

அந்த நாட்டிலிருந்து வந்தது.

இந்த நாட்டிலிருந்து வந்தது 

என்று அங்கேயும் இங்கேயும் 

விரலை நீட்டி  குற்றப்படுத்திக் கொண்டே

இருப்பதில் அர்த்தமில்லை.

அதை எப்படி தணிப்பது என்பதைப் 

பற்றி யோசிக்க வேண்டும்.

"வருமுன் காப்போம் "என்று சொல்லிக்

 கொள்கிறோம்.

 வரும் வரை வாசலைத் திறந்து

வைத்து வரவேற்றுவிட்டு வந்த பின்னர்

குய்யோமுறையோ என்று கூப்பாடு

போடுவதில் எந்தப் பயனும் இல்லை.

வந்த நோதலைத் தணிக்கும் திறனும்

நம் கையில்தான் உள்ளது 

என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்

என்கிறார் கணியன் பூங்குன்றனார் .

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."

என்று வள்ளுவர் முன்னமே எச்சரிக்கை மணி
அடித்திருக்கிறார்.


நோய் வந்தாகிவிட்டது.அதற்கு

இனி என்ன பண்ணமுடியும்?

நீ தானே நோய்க்கு இடம் கொடுத்தாய்.

அப்படியானால் அதிலிருந்து 

விடுபடும் வழியும்

நீதான் கண்டுபிடித்தாக வேண்டும்.

நேற்று நடந்ததற்கும் 

இன்று நடந்துகொண்டிருப்பதற்கும்

நாளை நடக்கப் போவதற்கும்

என்று எல்லாவற்றுக்கும் காரண கர்த்தா

நீயாக மட்டுமே இருக்க முடியும்.


எல்லாம் உன் செயலின் விளைவே.

நோய்க்குக் காரணம் நாமாக இருக்கும்போது

அதைத் தீர்க்கும் சக்தியும் நம்மிடம்தான்

உள்ளது என்பதை உணர வேண்டும்

என்பதை எவ்வளவு அழகாக

உணர்த்தியிருக்கிறார் பாருங்கள்.

அடேங்கப்பா....

யாரப்பா இந்தப் பூங்குன்றனார் ?

வியப்பில் புருவம் உயர்த்திப் பார்த்திட

வைத்துவிட்டார் பூங்குன்றனார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன....

எவ்வளவு அருமையான வரிகள்!

இன்றைய சூழலுக்கு உகந்த வரிகள்..!

உள்ளி உள்ளி உவந்த வரிகள்...!

நெஞ்சை நெகிழ வைத்த வரிகள்!

காலத்தை வென்ற வரிகள்.!
















Comments

  1. தன்னிலை தெரிவித்த தரமான வரிகள். செல்வபாய் ஜெயராஜ் ஆசிரியைக்கு பாராட்டுகள் பல.

    ReplyDelete

Post a Comment

Popular Posts