இதனை இதனால் இவன்முடிக்கும்....


இதனை இதனால் இவன்முடிக்கும்......


"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் "
                             குறள்  _ 517

இதனை _ இச்செயலை
இதனால் _ இந்த முறையால்
இவன் முடிக்கும் _ இவன் செய்து முடிப்பான்
என்றாய்ந்து _ என்பதை ஆராய்ந்து
அதனை _ அந்தச் செயலை
அவன்கண் _ அவனிடத்தில்
விடல் _ விட்டு விடுக

இந்தச் செயலை இத்தகைய முறைகளால்
இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்த
பிறகு அச்செயலைச் செய்யும்படி அவனிடம்
ஒப்படைக்க வேண்டும்.

விளக்கம்

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை 
இருக்கும்.
 இந்தச் செயலை இவனைத் தவிர வேறு
 யாராலும் சரியாக செய்து முடிக்க முடியாது
 என்ற ஒரு திறமை ஒரு சிலரிடம்
 மட்டுமே இருக்கும்.
 எல்லோரிடமும் எல்லாவிதமான திறமைகளும்
 ஒருங்கே கொட்டிக் கிடக்க முடியாது.
 அந்தந்தத்  துறை சார்ந்த அறிவு,
 தனித்தன்மை , ஆர்வம் 
 இப்படி எல்லா கோணத்திலும்
 முழுமையாக ஒருவனைப் பற்றி
 ஆராய்ந்த பின்னரே  அவனிடம் 
 ஒரு பணியை  ஒப்படைக்க வேண்டும்.
 
 ஒரு செயலை தொடங்குவதற்கு முன்னர்
 என்ன செய்ய வேண்டும் ? 
எப்படிச் செய்ய வேண்டும் ?
என்ற  ஒரு திட்டமிடல் நமக்குள் இருக்கும்.

அந்தத் திட்டமிடலை மட்டும் 
வைத்துக் கொண்டு செயலில் இறங்கி
விடக்கூடாது. அதனைச் செய்து முடிப்பதற்கான
சரியான ஆளைத் தேர்வு செய்ய வேண்டும்.

சில குறிப்பிட்டப் பணியை குறிப்பிட்ட
சிலரால் மட்டுமே செய்து முடிக்க முடியும்.
இதனால் என்று கூறப்பட்டுள்ளதால்
இந்த இந்த  குணநலன்கள், திறன்கள்
கொண்டவர்களால் மட்டுமே இந்தச்
செயலைச் செய்ய முடியும் என்று 
சிறப்புத் தகுதியை ஆராய்ந்து பார்த்து
அதன் பின்னர் ஒரு செயலைச் செய்யும்
பணியை ஒருவனிடம் ஒப்படைத்து விடுக 
என்கிறார் வள்ளுவர்.

அரசியல், பொதுப்பணி எதுவானாலும்
நமது தேர்வு திறன் அடிப்படையில்தான்
இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து.

பணி ஆளுமைத்திறன் பற்றிய
எக்காலத்திற்கும் எத்துறைக்கும் உகந்த 
தெளிவான கருத்தைக் கூறும்
குறளாக இது அமைந்துள்ளது நோக்கத்தக்கது.


English couplet : 

" 'This man, this work shall thus work out', let
 thoughtful king command;
 Then leave the matter wholly in his servant's hand"

Explanation : 

After having considered, this man can accomplish
this, by these means let (the king) leave with him
the discharge of that duty.

Transliteration :

" Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu
Adhanai Avankan Vital "

 

  


 

Comments

Popular Posts