புதியதோர் உலகம் செய்வோம்....

 புதியதோர் உலகம் செய்வோம்....


"தமிழுக்கு அமுதென்று பேர்_ அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் "

என்ற தேன்தமிழ்ப் பாடல் வரிகளைத் தந்து
என்நேரமும் காதுகளில் தேனிசையாய்
ஒலித்துக் கொண்டிருப்பவர் பாரதி தாசன்.

உலகில் மாற்றங்கள் நிகழ்வதும்
அதை நாம் ஏற்றுக் கொள்வதும்
தொடர்ந்து நடைபெற்று வருவதும்
இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்
செயல் அல்ல.
மாற்றங்களை நோக்கிய பயணம்
எல்லா காலங்கிலும் நடைபெற்று
வந்திருக்கிறது.

அந்தப் பயணம்தான் புதிய படைப்புகளையும்
புதுமைகளையும் கொண்ட புதிய
சமுதாயத்தைப் படைக்கும்.

பழைமையிலேயே இருந்து கொண்டால்
புதுப்பித்தலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்
ஒரு முடக்கம் ஏற்பட்டுவிடும்.

எப்போதும் புதியவற்றை அறிய வேண்டும்
புதிய சமுதாயத்தைக் காணவேண்டும்
என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும்.

நமது கனவு எண்ணமாக மாறி செயல்வடிவம்
பெறும்போது சமூகமும் புதிப்பிக்கப்படக்கூடிய 
வாய்ப்பு உருவாகிவிடும்.

மாற்றம் தனிமனிதனால் ஏற்பட்டுவிடாது.
ஒருங்கிணைந்து செயலாற்றினால் மட்டுமே
புதிய உலகைக் காணலாம்.

அப்படிப்பட்ட புதிய மாற்றங்களுக்கான
 விதைகளாக இருப்பவை
 பாரதிதாசனின் பாடல்கள் .
 
பொதுவுடைமைக் கொள்கைக்கு ஊட்டம் தரும்
உணர்ச்சிமிக்க சொற்களைப் பாரதிதாசன்
கவிதைகளில் காணமுடியும்.

"ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ "

என்ற பாடலின் மூலம் எல்லோரும் எல்லாம்
பெற்றிட வேண்டும். உயர்வு தாழ்வில்லா
பொதுவுடைமைச் சமுதாயம்
காண வேண்டும் என்ற பாரதிதாசனின்
கனவு உணர்ச்சிமிகு வார்த்தைகளாக
வந்து விழுகின்றன.

சமுதாய அக்கறை மிகுந்த 
அவருடையப் பாடல்
வரிகள் நம்மை அவரை நோக்கிக்
கட்டி இழுக்கும்.

அவர் பாடல்களின் ஒவ்வொரு வரியும்
ஒரு உத்வேகம் கொண்டதாகவே இருக்கும்.

போராட்டமில்லாத அமைதியான உலகில்
வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின்
விருப்பமாக இருக்கும்.
அப்படியானால் நாம் எல்லோரும்
சேர்ந்துதான் அப்படிப்பட்ட
சூழலை உருவாக்க வேண்டும்.

பொதுவுடைமை கொள்கை எல்லா இடங்களிலும்
பரவ வேண்டும்.
அனைவருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும்.
இல்லாமை இல்லா நிலை வர வேண்டும்.
இருப்பவன் இல்லாதவனுக்குக்
கொடுத்து அனைவரையும் வாழ வைத்திடவேண்டும்.
பகிர்ந்து கொள்ளும் பண்பு வளர வேண்டும்
என்ற கனவுதான் பாரதிதாசனின்
புதியதோர் உலகம் செய்வோம்
என்ற இந்தப் பாடல்.
பாடல் இதோ:


"புதியதோர் உலகம் செய்வோம் _ கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம்
இதயமெலாம் அன்பு நதியில் நனைப்போம்
இதுஎனதென்னு மோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம்
இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் "


பாரதிதாசனின் கனவு, சமூக அக்கறை, 
விருப்பம்,கோபம்
அத்தனையையும் சுமந்து நிற்கும் அருமையானப்
பாடல் .                                 
திரைப்படப் பாடலாக அனைவர் இல்லங்களிலும்
இனிமை சேர்த்தப் பாடல்.

Comments

Popular Posts