பல, சில என்பவற்றின் புணர்ச்சி விதி

 பல ,சில என்பவற்றின் புணர்ச்சி விதி

பல நேரங்களில்  சில 
இடங்களில்  பல மற்றும் சில
ஆகிய சொற்களை எழுதும்போது
வல்லினம் மிகுமா ?மிகாதா...?
என்ற ஒரு குழப்பம் ஏற்படலாம்.

அதற்கான தீர்வாக நன்னூலார்,

"பலசில எனுமிவை தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலும் உளபிற "

 என்று எழுதியுள்ளார்.

பல,  சில என்னும் சொற்களுக்கு முன்
 அதே சொற்கள் வந்து புணரும்போது

இயல்பாக அப்படியே வருதல் உண்டு.
எடுத்துக்காட்டு:

பல + பல  = பலபல
சில  + சில = சிலசில

வல்லினம் மிகுந்து வருதலும் உண்டு.

எடுத்துக்காட்டு :
 பல  + பல  = பலப்பல
 சில  + சில  = சிலச்சில


லகரம் றகரம் ஆதலும் என்ற விதிப்படி
நிலைமொழி ஈற்றில் உள்ள அகரம் கெட
லகரம் றகரமாகி வருதலும் உண்டு.

எடுத்துக்காட்டு :

பல  + பல  = பற்பல
சில  + சில  = சிற்சில

இப்போது மூன்று வழிகளில் அவை 
எழுதப்படலாம் என்பது பற்றிய
தெளிவு கிடைத்திருக்கும்.

 பல மற்றும் சில ஆகிய
 சொற்களின் பின் வேறு சொற்கள்
 வந்தால் இயல்பாகவும் புணரும்.
 நிலைமொழி ஈற்று அகரம் கெட்டு
 புணர்வதும் உண்டு.


எடுத்துக்காட்டு:

 பல +  கலை. = பலகலை
 சில +  வளை  = சிலவளை

இவ்வாறு இயல்பாக வரலாம்.

பல +  கலை  = பல்கலை
சில +  வளை = சில்வளை

என்று நிலைமொழி ஈற்று அகரம்
 நீக்கப்பட்டும் எழுதப்படலாம்.

விகற்பமாதலும் உள என்று
கூறியிருப்பதால்

சில + நாள் = சின்னாள்
பல  + தொடை  = பஃதொடை
பல  +  மலர்.      = பன்மலர்
பல +  நாடு  =  பன்னாடு
சில  +  மலர்  =  சின்மலர்
சில + அணி  = சில்லணி
பல  + நலம் = பன்னலம்

என்றும் எழுதப்படலாம்.

விகற்பமாதல் என்பதால் ஒரே புணர்ச்சியில்
அகரம் கெட்டுப் புணர்தல்
அகரம் கெடாது நின்று புணர்தல் என்ற 
இருநிலைகளிலும் எழுதுவது ஏற்றுக்
கொள்ளப்படுகிறது.
 
 இப்போது பல, சில ஒவ்வொருவரும்
 வெவ்வேறு விதமாக எழுதுவதில்
 உள்ள உண்மையான இலக்கண விதி
 புரிந்திருக்கும். மற்றவர்கள் எழுதுவது
 தவறு என்ற கணிப்பு மாறியிருக்கும்.
 பிழையில்லாமல் தமிழ் எழுத
 வாழ்த்துகிறேன்.

Comments

Popular Posts