தந்தை தாய்ப் பேண்

தந்தை தாய்ப் பேண்
"தந்தை தாய்ப் பேண் "

அனைவருக்கும் பிடித்தமான 
ஆத்தி சூடி பாடல் வரி இது.

அடிக்கடி பலர் உதடுகள் உச்சரிக்கும்
வரி.

பெற்றோரை நினைவுபடுத்திக் கொண்டே 
இருக்கும் வரி.

பெற்றோரைப் பேணி பாதுகாத்துக் கொள் 
என்று வேறு யாராவது நினைவுபடுத்த
 வேண்டுமா என்ன?

"மறந்தால்தானே  நினைப்பதற்கு..
உன்னை நெஞ்சிலேயே 
வைத்திருக்கிறேன் "என்று
எத்தனைமுறை வீர வசனம் பேசியிருப்போம்.

ஆமாங்க...மறந்தால்தானே நினைவூட்டல் வேண்டும்.
நாம்தான் பெற்றோரை மறக்கவில்லையே...
பிறகு எதற்கு இந்த நினைவூட்டல் 
என்கிறீர்களா....?

மறந்தவர்களுக்கு நினைவூட்டல் தேவை 
அல்லவா!.

அதனால் தான் "தந்தை தாய்ப் பேண் "
என்று நினைவூட்டிக்
கொண்டே இருக்கிறார் ஔவை.

பெரும்பாலான வீடுகளில்
வயது முதிர்ந்ததும்  பெற்றோர் 
பிள்ளைகளுக்குச்
சுமையாகிப் போகின்றனர்.
அந்நியமாகிப் போகின்றனர்.
ஏதோ வேண்டாத விருந்தாளி
வந்து உட்கார்ந்திருப்பதுபோல்
வெறுப்போடு நடத்துகின்றனர்.
பார்த்தும் பார்க்காதது போல்
முகத்தைத் திருப்பி வைத்துக்
கொள்கின்றனர்.

மகன்கள் எப்படி இருக்கீங்க?என்ற
ஒற்றை வரி  நலம்
விசாரிப்போடு முடித்துக்
கொள்கின்றனர்.

இளமை என்றும் நிரந்தரமா?
ஏன் வயதான பெற்றோர்களைப்
கண்டால் அப்படி ஒரு வெறுப்பு?

உங்களுக்கு எதிராக அவர்கள்
அப்படி என்ன அநியாயம் செய்து
விட்டார்கள்?

காலமெல்லாம் உழைத்து வீடு நிலபுலன்
வாங்கி வைத்துவிட்டு
தனக்கென பணம் கையில் வைத்திராத
பெற்றோருக்கு கடைசிகாலத்தில்
புறவாசல்தான் படுக்கை அறை.

வாழ்நாளெல்லாம்
உழைத்து சம்பாதித்த பணத்தை
நிலம் வாங்க வீடுகட்ட
என்று செலவழித்துவிட்டு ,
கடைசி காலத்தில் பிள்ளைகள்
தன்னைப் பார்க்கவில்லை என்று
கண்ணீர்விட்டு அழும் பெற்றோர் 
பலரை நான்
அறிவேன்.


காய்ந்த ஓலை விழும்போது
 பச்சை ஓலை சிரித்ததாம்.
அதற்கு காய்ந்த ஓலை
 நாளை நாளைத்தான்
என்றதாம்.

அந்த நாளை நாளைத்தான் 
என்ற தொடரின் பொருள்
என்ன ?
நாளைக்கு உனக்கும் இதே நிலைதான்
என்பதுதான்.

ஆனால் பெரும்பாலானோர் 
இதை உணர்வதே இல்லை.

முதுமை வராமல் யாரும் என்றும் 
இளமையாய் யாரும் இருந்துவிடப் 
போவதில்லை.இந்த உலகம்
யாருக்கும் நிரந்தரம் இல்லை.
நாளைக்காக பொருள் சேர்த்து
வைப்பதற்காகதான் இந்த ஓட்டம்.
நாளை என்பதே உண்மை இல்லை.

இருந்தாலும் நமது செயல்கள் 
எல்லாம் நாளைய
நலன் கருதியே இருக்கும்.
நமது எண்ணங்கள்
நாளைய தினத்தைக் குறித்த
கவலையும் அக்கறையும் கொண்டதாகவே
ஓடிக்கொண்டிருக்கும்.
ஏனோ நாளைக்கு நமக்கும் முதுமை வந்து
முடக்கிப் போடும் என்ற எண்ணம்
மட்டும் பெரும்பாலோருக்கு வருவதே இல்லை.

அப்படிப்பட்ட எண்ணம் வந்திருந்தால்
இப்படிப்பட்ட நினைவூட்டலுக்குக்கான
தேவையே இருந்திருக்காது.

தனக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால்
போதும் அனைவரும் அப்படி
தூக்கி வைத்துக் கொண்டாடுவோம்.

பார்த்துப் பார்த்து வளர்ப்போம்.
விதவிதமான ஆடைகள் போட்டு 
அலங்கரித்துப் பார்ப்போம்.

இதையேதான் நமக்கும் சிறுபிள்ளையாக
இருக்கும்போது நம் பெற்றோர் செய்திருப்பர்.

ஆனால் அவற்றை எல்லாம் மறந்து
விடுவோம்.

பிள்ளைகளை ஊட்டி ஊட்டி 
வளர்க்கும் நாம்
நம் பெற்றோருக்கு என்றாவது 
ஊட்டி விட்டாமா?

ஆசைப்பட்ட பண்டத்தை எல்லாம் நேரம் காலம்
பாராமல் ஓடிப்போய் பிள்ளைகளுக்கு 
வாங்கி வந்து்  கொடுக்கிறோம்.

குறைந்த பட்சம் உங்களுக்கு ஏதாவது
தின்ன ஆசை இருக்கிறதா? 
என்றாவது பெற்றோரிடம் கேட்டோமா?

என் பிள்ளைகள் வளர்கிற வயசு.
அவர்கள் வயதானவர்கள் அவர்களுக்கு எதுக்கு
இவைகளெல்லாம் ?

உடம்பில்வேறு ஆயிரத்து எட்டு நோய்கள்.
கண்டதையும் தின்று படுத்துகிட்டா யார்
பார்க்கிறது...?
என்று ஆசைப்பட்ட  பண்டத்தைக்
கண்ணில்  காட்டுவதே இல்லை.

வயதானால் பெரியவர்களும் குழந்தைகள்தான்
என்ற உண்மை என்றாவது நம் மனதுக்குள்
வந்து போனதா?

இன்றும் பிள்ளைகளைப் படிக்க வைத்து,
நிலபுலனை விற்று
 வேலை வாங்கிக் கொடுத்து,
திருமணம் செய்து வைத்துவிட்டு,
அரைக்கிலோ திராட்சைப்பழம் வாங்கி வந்து 
தரமாட்டானா....?
என ஏங்கும் பெற்றோர்
எத்தனை எத்தனை பேர்?

இலட்சக் கணக்கில் செலவு செய்து 
படிக்க வைத்துவிட்டு கையில்
ஒரு காசு இல்லாமல் ...மாசாமாசம்
ஒரு ஆயிரம் ரூபாயாவது அனுப்பு தம்பி
என்று பெற்ற பிள்ளையிடம் கெஞ்சும்
பெற்றோர் எத்தனை எத்தனை பேர் ?

கால்வலியில் படுக்கையில் புரண்டு
அழுதுகொண்டு கிடக்கும்போது
அருகில் வந்து எப்படி அம்மா 
இருக்கிறது என்று கேட்கமாட்டானா
என ஏங்கும் பெற்றோர் எத்தனை
எத்தனை பேர்?

குளிராக இருக்கிறது. போர்த்திக்க  
ஒரு போர்வை வாங்கித் தரமாட்டார்களா  
என்ற ஏக்கத்தோடு
மேலாடையை இழுத்துப் போர்த்தி முடங்கிக்
கிடக்கும் பெற்றோர் 
எத்தனை எத்தனை பேர் ?

ஓட்டலிலிருந்து பிள்ளைகளுக்கு 
வாங்கி வந்து கொடுக்கும் உணவுப்பண்டங்களில்
நமக்கும் ஒரு துண்டு தரமாட்டார்களா
என்று ஏக்கத்தோடு படுத்திருக்கும் பெற்றோர்
எத்தனை எத்தனைபேர்? 

நல்ல நாளும் பொழுதும் வந்தா
நமக்கும் நாலு பேரை மாதிரி 
ஒரு நல்ல துணி வாங்கித்
தரமாட்டானா என மகன் வரவுக்காக
காத்திருந்து ஏமாந்து போகும்
பெற்றோர் எத்தனை எத்தனை பேர்? 


இவற்றை எல்லாம் பார்த்ததால்தான்
ஔவை தந்தை தாய்ப் பேண் என்று
நமக்கு நினைவூட்டுகிறாரோ?

ஒரு காட்டில்  ஒரு நாவல் மரம் நின்றது.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறுவன் அந்த நாவல்
மரத்தின்கீழ் வந்து விளையாடிவிட்டுச் செல்வான்.
சிறுவனைப் பார்ப்பதற்கு மரத்திற்கு மகிழ்ச்சியாக
இருக்கும்.
ஒருநாள் திடீரென்று அந்தச் சிறுவன் வரவில்லை.
பொழுது சாயும்வரை ஆவலோடு காத்திருந்த 
மரத்திற்கு ஏமாற்றமாய் போய்விட்டது.
மறுநாள் அந்தச் சிறுவன் வந்தான்.
ஆனால் என்றும்போல் மனதில் உற்சாகம் இல்லை.
"ஏன் தம்பி கவலையாக இருக்கிறாய்?"
என்று கேட்டது மரம்.

"தீபாவளி வந்துவிட்டது. எல்லோருடைய
கைகளிலும் துப்பாக்கி இருக்கிறது 
என்னிடம் மட்டும் ஒன்றுமே இல்லை. பிறகு 
எப்படி மகிழ்ச்சியாக இருப்பது எனக் கேட்டான்?"
சிறுவன்.
"ப்பூ....இதுக்குப் போய் வருத்தப்படலாமா....
நான் பழங்களைத் தருகிறேன்.
நீ விற்று அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து
உனக்கு வேண்டிய துப்பாக்கியை வாங்கிக் கொள்"
என்றது மரம்.

மரம் பழங்களை உதிர்த்துவிட
சிறுவனும் மகிழ்ச்சியோடு பழங்களை
பொறுக்கி விற்று துப்பாக்கி வாங்கி
மற்ற சிறுவர்களைப்போல மகிழ்ந்தான்.

 மகிழ்ச்சியில் சிறுவனுக்கு மரத்தைப் 
 பற்றிய நினைப்பே இல்லை.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் 
மறுபடியும் வாலிபனாக 
மரத்தின்கீழ் வந்து அமர்ந்தான்.

"தம்பி நீ நெடுநெடுவென்று வளர்ந்து விட்டாய்.
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது"
என்றது மரம்.

" வளர்ந்து என்ன பண்ண...நாலுபேர்
 மதிக்கும்படி இல்லையே "என்றான் வாலிபன்.
 
" தம்பி இப்போது உனக்கு என்ன பிரச்சினை"
என்று கேட்டது மரம்.

"இப்போது நான் கல்லூரிக்குச் செல்கிறேன்.
எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு 
 அழகான ஆடை அணிந்து
வருகிறார்கள். நல்ல ஆடைகூட
இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை "சலித்துக் 
கொண்டான் வாலிபன்.

அதற்கு தன்னால் எப்படி உதவ முடியும்? 
யோசித்தது மரம்.

" நல்ல ஆடைகள் வேண்டும் அவ்வளவுதானே!
 உன் கவலையை விடு.
 என்  மரக் கொம்புகளை வெட்டி
விற்று அதில் கிடைக்கும் பணத்தில் 
நல்ல ஆடைகள் வாங்கிக்கொள் "என்றது மரம்.

 வாலிபனும் நல்லது என்பது போல
மரக்கொம்புகளை வெட்டி விற்று
நல்ல ஆடைகள் வாங்கிக் கொண்டான்.

 ஆனால் மறுபடியும் நான்கு ஆண்டுகள்
கழித்து அதே கவலை 
தோய்ந்த முகத்தோடு மரத்தின் 
அருகில்  வந்து அமர்ந்தான்.

 இத்தனை கவலை ஒரு போதும் 
 அவன் முகத்தில் பார்த்ததில்லை. 
 பதறிப்போன  மரம் என்னப்பா தம்பி 
 இவ்வளவு சோகமாக இருக்கிறாய்?
என்றது. 
"அட..போங்கங்க...ஒரு நாளும் 
நிம்மதி இல்லை. என் மனைவி நாளும்
என்னை நச்செரித்தே கொன்றுவிடுவாள் 
போலிருக்கிறது."
என்றான் விரக்தியோடு.

"அப்படி என்ன நச்செரிக்கிறாள் ?"என்றது மரம்.

"எல்லோரும் நல்ல வசதியாக
வாழ்கிறார்களாம். எனக்கு அப்படி
வாழவைக்க வழி தெரியலையாம்"
 என்றான்.

"நான் இருக்கிறேன். என்னை வெட்டி விற்று 
அதில் கிடைக்கும் பணத்தில் 
முடிந்த அளவு வசதியாக வாழ் " என்றது மரம்.

சரி என்றபடி  மரத்தை வெட்டி 
விற்று அந்தப் பணத்தில்
மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தான்.

பணம் தீர்ந்து போயிற்று.
மறுபடியும் வீட்டில் பிரச்சினை.

மறுபடியும் அந்த நிலத்துக்கு அருகில் வந்து 
சோகமாக நின்றிருந்தான்.
அந்த நிலத்திற்குள் செல்ல விடாமல்
முள்வேலி போட்டு அடைக்கப்பட்டிருந்தது.

வேலி ஓரமாக ஒரு சின்ன செடி
வெளியே தலை நீட்டி எட்டிப் பார்த்து நின்றது.
அதன் பக்கத்தில் 
 அப்படியே உட்கார்ந்து விட்டான்.

இப்போது அந்த சின்னச் செடிக்கு
தன்னிடம் கொடுப்பதற்கு எதுவுமில்லை.

"தம்பி ஏன் சோர்வாக இருக்கிறாய்?"
என்று கேட்டது அந்தச் செடி.

"ஒன்றுமில்லை....என்ன செய்தாலும் 
வீட்டிலுள்ளவர்களுக்குத் திருப்தி இல்லை.
எனக்கும் நிம்மதி இல்லை" என்று
விரக்தியாகப் பேசினான்.

"பரவாயில்லை. என்னிடம் உனக்குக் கொடுப்பதற்கு
ஒன்றுமில்லையே..."சொல்லி
அந்த மனிதனுக்காக பரிதாபப்பட்டது அந்தச் செடி....இல்லை இல்லை மரம்.

அந்த மரத்தின்  நிலைமைதாங்க பெரும்பாலான பெற்றோரின் நிலைமை.
என் பிள்ளைக்குத் தானே என்று மொத்தப் பணத்தையும் கொடுத்துவிட்டு
கடைசி காலத்தில் உயிர் மட்டும் தான் 
மிச்சம்.

 பெற்றோரிடம்  இருந்த
 மொத்த பணமும் நம்மைப்
 படிக்க வைக்க  ...வீடு கட்டித்தர..
நிலபுலன்களை வாங்கிப்போட
திருமணம் செய்து வைக்க என்று
தீர்ந்து போயிருக்கும்.

கடைசியில் கையில் காசு இருக்காது.
காலையில் ஒரு ஐந்து ரூபாய்க்கு
டீக்கடையில் போய்
ஒரு டீ குடிக்க வேண்டும் என்றாலும்
உங்கள் முகத்தை முகத்தைப்
பார்ப்பார் உங்கள் அப்பா.
நீங்களோ மனைவி முகத்தைப்
பார்க்க....அவர் முறைக்க
.
 கண்டும் காணாதது போல
கடந்து போயிருப்பீர்கள்.
அல்லது 
முகத்தைத் திருப்பிக் 
கொள்வீர்கள்.

ஒரு ஐந்து ரூபாய் மதிப்புக்கு ஒரு அப்பாவுக்கு இல்லையா?
நீங்கள் ஒரு நூறு ரூபாய் கொடுக்க என்று
கொடுத்து வைத்தவர்கள் போல கேட்டிருப்பீர்கள். இன்று உங்கள் அப்பா
உங்கள் முன்
கூனிக்கூறுகி
நிற்க வேண்டிய நிலைமையில்
இருக்கிறார்.

பெற்றோர் கை 
எப்பவுமே வெறுங்கைதான்.

நாமோ ஆசையால் நிம்மதியைத்
தொலைப்பதோடல்லாமல்
 இதுவரை பாதுகாப்பளித்து வந்த
பெற்றோரையும்  தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

நமது மகிழ்ச்சியைத் தவிர நம்மைச் சுற்றி
இருக்கிறவர்கள் மகிழ்ச்சி கண்ணுக்குத்
தெரிவதில்லை.
 தன்பிள்ளை தன்மனைவி என்ற போர்வையைப்
போர்த்திக் கொண்டு நமக்கு
 உயிர் தந்த தாய் தந்தை
நலனைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
அவர்கள் ஆசைகளை நிறைவேற்றாமல்
உதாசீனப்படுத்துகிறோம்.


நமக்கு  வாழ்வு கொடுக்க தங்கள் வாழ்க்கையையே 
அர்ப்பணித்த
பெற்றோரை மறக்கலாமா?

என் பிள்ளை என்னைப் பார்க்கவில்லையே
என்று நம் பெற்றோர் கண்ணீர்
விடலாமா?

பெற்றோர் கண்ணீர் பெரும்
சாபம் என்று சொல்வார்கள்.

அதனால்தான்,
 
"மொட்டையாய்ப் போனாலும் வெட்டையில்
நின்றாலும் நமக்காகவே வாழ்ந்து
இன்றும்  நம் நினைவோடு நாட்களைக்
கடத்திக் கொண்டிருக்கும் பெற்றோரை
மறந்து விடக் கூடாது தம்பி.
வயதான காலத்தில் பெற்றோரைப்
பேணி உன்னோடு பாதுகாத்து
வைத்துக் கொள்ளணும் தம்பி" என்று 
நமக்கு நினைவூட்டிக் கொண்டே
இருக்கிறார் ஔவை.

"தந்தை தாய்ப் பேண் "

உன் தாய் தகப்பனை நன்றாகப் 
பாருடா என்று யாரும் 
நினைவூட்ட வேண்டுமா என்ன?









Comments

  1. தந்தை தாயை மறந்து வாழும் ஜனங்களுக்கு அருமையான பாடம் இந்தப் பதிவு.

    ReplyDelete
  2. 👏❤❤👌👌👌💖💖💖💌💗💚💙💛🧡💜💕🇨🇮🇮🇳🇮🇳🇮🇳

    ReplyDelete
  3. உண்மையிலும் உண்மை. வாழ்த்துக்கள் செல்வபாய் ஜெயராஜ் ஆசிரியை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts