எட்டாம் நம்பர் வீடு
எட்டாம் நம்பர் வீடு
"எட்டாம் நம்பர் வீட்டை
எட்டிப்பார்காதே...எட்டிப்பார்க்காதே என்று
எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.
நீ கேட்க மாட்டியா..."காதைப்பிடித்துத்
திருகினார் அம்மா.
"ஏன் போனால் என்னவாம்?"
குதர்க்கமாகக் கேட்டேன்.
"போகாதே என்றால் போனால்
என்னவாம்? எதிர்த்தா பேசுற.....?
இனி ஒருவாட்டி எதிர்த்துப் பேசினா வாயிலேயே
போடுவேன். "
அம்மா ஆத்திரத்தில் கையைப்
பிடித்து இழுத்துக் கூட்டிக்கொண்டு போனார்.
"போகல தாயி....போகல....
எதுக்கு எட்டாம் நம்பர்
என்றதும் இப்படி பயப்படுகிறாய்?
அதைச் சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கிடுவேன்
இல்லியா?" ஓர் ஆர்வத்தில் கேட்டேன்.
"உனக்குச் சொல்லிட்டுத்தான்
மறுவேலை பார்க்கணும்.
எப்பப் பார்த்தாலும் ஏன்? எதற்கு? என்று
ஆயிரெத்தெட்டுக் கேள்வி...
வாயை கொஞ்ச நேரம் கூட
சும்மா வைக்க மாட்டியா?"
அம்மா முணுமுணுத்தபடியே
முகத்தில்
முத்துமுத்தாக அரும்பி இருந்த
வியர்வையை முந்தானையால் துடைத்துக்
கொண்டார்.
ஏன் எட்டாம் நம்பர் வீடு
என்றதும் அம்மா இப்படிப் பயப்படுகிறார்?
எதற்கு அம்மாவுக்கு வியர்த்து
கொட்டுகிறது. பேச்சில்
அம்மாவிடம் ஒரு படபடப்பு தெரிகிறது. எட்டாம் நம்பர்
வீட்டிற்கும் அம்மாவிற்கும் ஏதோ ஒரு
தொடர்பு இருந்திருக்கிறது.
அதை மறைக்கத்தான்
அம்மா இத்தனை பாடுபடுகிறார்.
எப்படியும் அது என்ன என்பதைக்
கண்டுபிடித்தே ஆகணும்
என்ற முனைப்பு எனக்கும் கூடிக்கொண்டே
இருந்தது.
ஒரு பக்கம் அம்மாவைப் பார்த்தால்
பரிதாபமாகவும் இருக்கிறது.
என்னவாக இருக்கும்?
எப்படித் தெரிந்து கொள்வது?
அம்மா மூடி மறைக்கப் பார்ப்பதிலிருந்து
அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வம் எனக்குள் அதிகமாகிக்கொண்டே வந்தது.
அவசியம் இல்லாவிட்டாலும் எட்டாம் நம்பர்
வீட்டில் எழுதப்பட்டிருந்த
எட்டு என்ற எண் என்னை
வலிந்து வீட்டை நோக்கி இழுத்தது.
என்ன என்னவெல்லாமோ எண்ண அலைகள்
வந்து மண்டைக்குள் வந்து
முட்டி மோதின.
"அடிக்கடி இந்தப் பக்கமாக வா"என்று
ஏதோ ஒன்று என்னை அழைப்பது போன்ற
உணர்வு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
கூடவே ஏதோ ஒரு திகில் பட காட்சியில்
வரும் வீடுபோல மறுபடியும்
மறுபடியும் திரும்பிப் பார்க்க வைத்தது.
எட்டாம் நம்பர் வீடு எப்போதும்
பூட்டியேதான் இருக்கும்.
ஆள் இல்லாத வீட்டைப் பார்த்து
ஏன் பயப்பட வேண்டும்?
ஆள் இருந்ததற்கான
அடையாளம்கூட தெரியாமல்
சுவர் எல்லாம் பொசிந்து போய்
பத்து வருடங்களுக்கு மேலாக
வெள்ளையடிக்கப்படாமல்
சிதலமடைந்து கிடக்கும் ஒரு வீடு.
நடு இருக்கும் இப்படி ஒரு வீடு
ஆளில்லாமல் கிடக்கிறதென்றால்...
ஆனால் வீட்டுக்கு வெளியே எப்போதும்
ஓர் ஆட்டுக்குட்டி
கட்டிப்போடப்பட்டிருக்கும்.
மற்றவர்கள் எல்லாம் நெருங்காத
வீட்டின் முன்பு ஆட்டைக் கட்டிப்
போட்டது யார்?
எதிர் வீட்டில் உள்ளவர்களாக
இருக்கலாம் என்றால் அதற்கும்
சாத்தியம் இல்லை.
எதிர்வீட்டில் ஒரு வயதான தாத்தா
மட்டும்தான் இருக்கிறார்.
அவருக்கும் கண் சரியாகத் தெரியாது.
அப்படியானால் அந்த ஆட்டுக்குட்டி
யாருடையது என்று தெரிந்தால்
அந்த வீட்டைச் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஏதோ ஓர் ஆசையில் எட்டாம் நம்பர்
வீட்டுப் பக்கம் போய் நின்றேன்.
ஆட்டுக்குட்டிக்கு இரைக்காக ஒரு கட்டு
வாழைஇலை
தாழ்வாரத்தில் கட்டித் தொங்கப்
போடப்பட்டிருந்தது.
அரைகுறையாக தின்னும் தின்னாமலும்
படுத்திருந்த ஆடு என்னைப் பார்த்ததும்..மே..மே
என்று கத்தியது.
ஆட்டுச் சத்தத்தைக் கேட்டதும்
சற்று அதிர்ந்து போனேன்.
இதுதான் அதுவாக இருக்குமோ?
"சீ...சும்மா கெட....
அது இது என்று பயந்துகிட்டு"
என்னையே நான் மிரட்டி
அடக்கி வைத்தேன்.
யாராவது கதவைத் திறக்கிறார்களா
என்று எதிர்த்த வீட்டு சுவர்
ஓரமாக பதுங்கி நின்று எட்டிப்
பார்த்தேன்.
அதற்குள் ஏதோ ஒன்று
என் கண்களைப் பொத்தி
என்னை பின்னால் இழுத்துக் குப்புறப்
தள்ளி விட்டு விட்டது.
தள்ளிய வேகத்தில் ஆ....அம்மா
என்று அலறியபடி கீழே விழுந்தேன்.
சற்று நேரம்
என்னால் எழும்ப முடியவில்லை.
பயத்தில் உடம்பு வெடவெடத்துப்போனது.
உதடு, கன்னம் எல்லாவற்றிலும்
மண் ஒட்டிக் கொண்டது.
வேக வேகமாக எழும்பி
உதடுகளிலிருந்த மண்ணைத்
துடைத்தபடியே என்னைத் தள்ளியவர்
யார் என்று சுற்றும் முற்றும் திரும்பிப்
பார்த்தேன்.
ஒருவரையும் காணவில்லை.
என்ன இது? ஒருவரையும் காணவில்லை.
அப்படியானால் என் கண்களைப்
பொத்தி என்னைக் கீழே தள்ளியது....யார்?
யாராக இருக்கும்?
இப்போது பயம் கொஞ்சம் கொஞ்சமாக
அதிகரிக்கத் தொடங்கியது.
மூச்சுக்குழலை யாரோ அமுக்குவது போல
மூச்சு விடமுடியாமல் திணறினேன்.
முகம் வியர்த்துக் கொண்டு வந்தது.
கால்கள் தரையில் பதிய முடியாமல்
ஒரு தள்ளாட்டம் கண்டது.
மறுபடியும் வந்து ஏதாவது செய்துவிட்டால்.....
ஒருமாதிரியாக தட்டுத் தடுமாறி
வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.
நான் ஓடி வருவதைக் கண்டதும்
என் அக்கா ," என்ன...பேயைக் கண்டதுபோல
ஓடி வருகிற......மூஞ்சி எல்லாம்
பேய் அறைந்த மாதிரி இருக்கு....
என்ன ஆயிற்று? "என்று பதட்டத்தோடு
கேட்டாள்.
"என்ன இவள் பேய்...பேய் என்று
என்னைக் கூடுதலாகப் பயமுறுத்துகிறாளே."
இருந்தாலும் ஒரு கெத்தாக
"ஒன்றுமில்லையே....சும்மாதான்"
என்று சமாளித்தேன்.
"எட்டாம் நம்பர் வீட்டுப் பக்கம்
விழுந்து எழுந்து வந்ததுபோல தெரியுது.
கன்னத்தில் இருக்கும் மண்ணைச் சரியாக
துடைத்துக்கொள் "என்று சொல்லி
கிண்டலாகக் சிரித்தாள்.
இவள் என்ன....எல்லாவற்றையும்
கூடவே இருந்து பார்த்தது போல
கேட்கிறாள்?
ஒரு வேளை கீழே விழுந்ததை
பார்த்திருப்பாளோ?
சொல்லிவிடவா...வேண்டாமா.....?
என்ற குழப்பத்தில் அக்கா முகத்தையே
பார்த்துக்கொண்டு நின்றேன்.
"என்ன...பேயைப் பார்த்து வாயடைத்துப்
போனவள் நிற்கிற மாதிரி இருக்கு?
ஏதும் பேயைக்கீயைப் பார்த்தியா ?"
மறுபடியும் பேயை கூட்டி வந்து முன்னால்
நிறுத்தப் பார்த்தாள் என் அக்கா.
"எக்கா உன்னிடம் ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்வியா.....?"மெதுவாக
பேச்சுக் கொடுத்தேன்.
"ஏன் பேய் இருக்கா இல்லியா?
என்று கேட்கப் போறீயா?"
ஆ... மறுபடியும் பேயைச் சுத்திச் சுத்தி
வாறாளே.....
"ஆ...எப்படிக்கா என் மைண்ட் வாய்ஸ்ஐ
அப்படியே கப்பென்று
பிடித்துக் கொள்ளுற......அது...அது....அதேத்தான்.
பேய் உண்டா ?இல்லியா?
எனக்கு இப்போது இரண்டில்
ஒன்று தெரிந்தாகணும்."
முரட்டுப் பிடிவாதம் பிடிவாதத்தோடு
கேள்வியை முன் வைத்தேன்.
"இதுக்கு நான் எட்டாம் நம்பர்
வீட்டில் போய்தான் பார்த்து வரணும்."
என்றாள் சர்வ சாதாரணமாக.
"எட்டாம் நம்பர் வீட்டிலா?
அங்கு அப்படி என்னதான் இருக்கிறது?
பேய் இருக்கா?"
கேட்டுவிட்டு ஒரு திகிலோடு அக்கா
முகத்தைப் பார்த்து நின்றேன்.
பேய் இருக்கா ?இல்லையா?
அதெல்லாம் எனக்கு தெரியாது.
எல்லோரும் பேய் வீடு என்றால்
எட்டாம் நம்பர் வீட்டைத்தானே
சொல்வார்கள்.
அதனால்தான் சொன்னேன்.""சமாளிக்கப்
பார்த்தாள் அக்கா.
"பேய் வீடா? ஏன் அப்படி?
அது உண்மையிலேயே பேய் வீடு
என்று நீ நம்புறியா?"
கேள்விகளை அடுக்கிவிட்டு
அவள் முகத்தைத் கூர்ந்து பார்த்தேன்.
"அப்படிப் பார்க்காத....
உன் கண்ணைப் பார்க்கவே எனக்குப் பயமாக
இருக்கிறது.."
"சமாளிக்காதே...எட்டாம் நம்பர்
வீட்டில் பேய் இருக்கா? இல்லியா?
அதை மட்டும் சொல்லு"
"ஐயோ ...இந்த எட்டாம் நம்பர்
தொல்லை தாங்க முடியலியே...
அம்மாவை கூப்பிடுகிறேன் நீயே தெரிஞ்சுக்க...."
என்றபடி" அம்மா..".என்று குரல் கொடுத்தாள்.
ஓடிப்போய் வாயைப் பொத்தி குரல் வெளியில்
கேட்க விடாமல் அமுக்கிக் கொண்டேன்.
"ஏய்..நிஜமாகவே உனக்குச் பேய்
தான் பிடித்திருக்கிறது.
கொஞ்சம் விட்டால் சங்கை
நெறிந்து கொன்னுபிடுவா போலிருக்கு"
என்று என் கையைப் பிடித்து
தள்ளினாள்.
"எட்டாம் நம்பர் வீட்டுப்பக்கம்
போகாத...பேய் கூடவே வீட்டுக்கு வந்துடும்.
என்று எத்தனையோ முறை சொன்னேன்.
கேட்காமல்....இப்போ பாரு
பேயைக் கூடவே கூட்டிகிட்டு வந்து நிற்குது"
என்னை ஒரு பேயாகவே நினைத்துப்
பேச ஆரம்பித்தாள்.
"நீயும் நம்புறியா?"
"நம்பாம....சில நேரங்களில் அந்த வீட்டிலிருந்து
சின்ன பிள்ளை அழுகிற மாதிரி
அழுகைச் சத்தம் கேட்கும். நானே சில சமயங்களில்
கேட்டிருக்கிறேன்."
கூடுதலாக பயமுறுத்த ஆரம்பித்தாள்.
"நானும்தான் கேட்டிருக்கிறேன்.
அது புறா சத்தம்.......
அது கூடத் தெரியாதா?"
"அங்கு யார் புறா வளர்க்குறா?"
"ஆளில்லாத வீட்டில் புறா, ஆந்தை
எல்லாம் தான் கூடு கட்டும்.
இதுகூடவா தெரியாது"
"நீ நான் சொல்வதை என்னைக்குத் தான்
நம்பினாய்? இன்றைக்கு நம்புவதற்கு?
போ...அந்த எட்டாம் நம்பர் வீட்டுப் பக்கம்
போய் நங்கு நங்குன்னு ஆடு"
"நம்புறேம்பா.....சொல்லு அந்த வீட்டைச்
பற்றிய கதையை மட்டும் சொல்லு....."
"சொன்னால் பயப்பட மாட்டியே....""
"மாட்டேன்....எதுவாக இருந்தாலும் சொல்லு."
"அந்த வீட்டுல ஒரு பாட்டி இருந்தாங்க...."
"ஓ....கேரளப் சூனியக்காரப் பாட்டி
மாதிரின்னு சொல்லு."
"ஒருவிதத்தில் .அதேத்தான்....சரியான சூனியம்
பிடித்தக் கிழவி.....அந்தப் சூனியக்காரியால்தானே
இத்தனையும்..."
"இத்தனையும்னா......ஒன்றும்.புரியல..."
கையை ஆட்டி உதட்டைச் பிதுக்கினேன்.
"தெருவில் போறவுங்க வருகிறவுங்க
ஒருத்தர் விடாமல் வம்புக்கு
இழுக்கும் கிழவி.
எல்லோரையும் முறைச் சொல்லிக்கூப்பிட்டு
பேசி வம்பை விலை கொடுத்து வாங்கும்."
"ம்...அப்புறம்?..என்ன நடந்தது
என்பதைச் சொல்லு"
"இந்தப் பாட்டி ஒரு அநாதைப் பயலுக்கு
பாவம் பார்த்துச் சோறு கொடுக்கும்."
எந்த அநாதைகள் பயலுக்கு..?
"அதுதான் அந்தக் கணேசன் என்ற
ஒத்தக்காலன்."
"எனக்கு எந்த ஒத்தக்காலனையும்
தெரியாது...அது நடந்தப்ப நீ
கைப்புள்ள"
"அவன் என்ன வேலை செய்வான்?"
"ஒரு கடைகண்ணிக்குப் போயிட்டு வருவான்.
பாட்டிகூட பையைத் தூக்கிட்டு
கூடவே அலைவான்.
ஒரு வேளைச் சோறுக்காகப்
பாட்டி வாசலுல நிலையா
காத்துக் கிடப்பான்."
"அவனுக்கு வீடு இல்லியா?"
"வீடு இல்லியா ...?இருக்கா ?என்றுகூட
தெரியாது.ஏதோ அசலூருக்காரன்னு சொன்னாவ.
அம்மன் கோவில் வேப்பமரத்துக்குக்
கீழே வந்து படுத்துக் கிடந்துருக்காருக்கான்.
சோறுதண்ணி இல்லாம பாவம் போல
இருந்ததால பாட்டி வீட்டுக்குக்
கூட்டிட்டு வந்து கிடக்கிற பழையது கிழையதை
கொடுத்துருக்காவ"
"நல்ல பாட்டி "
"ஐயோ பாவம் பார்த்தாங்க....
அது ஊரே ஐயோ பாவம் என்று
சொல்லும்படி கொண்டு விட்டுட்டுது?"
"பாட்டிய என்னவும் பண்ணி
பண்ணிபுட்டானா?
என்ன நடந்ததுது என்று சொல்லுங்க...."
"என்னத்த சொல்ல...இப்போது
நினைச்சாலும் ஈரக்கொலையே நடுங்குது.
ஒரு கொலையா?....இரண்டு கொலையா?
மூணு கொலை....ஒரே எடத்துல....
ஊரே குலுங்கிச் போச்சுல்ல...."
"கொலையா?....யாரு யாரைக் கொன்னா?
எம்மோவ்.... கேட்டாலே பயமா இருக்கு"
நெஞ்சைப் பிடித்துக் கொண்டேன்.
"யாரு யாரைக் கொன்னான்னு
எப்படிச் சொல்ல?
யாருக்குத் தெரியும்?
அந்தக் கடவுளுக்குதான் தெரியும்."
"கடவுளுக்கு தெரிவது இருக்கட்டும்.
இப்போது உனக்குக் தெரிந்ததைச்
சொல்லு.
என்ன நடந்தது....?எப்படி கொலை நடந்தது....?"
"கேட்கும்போதே உனக்குப் பயமா இருக்குல்ல....
நேரில் பார்த்த எங்களுக்கு எப்படி
இருக்கும்?
ஈரக்குலை அத்துப் போச்சு"
"நீ வேற...ரொம்ப பயம் காட்டாத....
அந்தக் கொலையைச் பற்றிச் சொல்லு."
"அதெல்லாம் தெரியாது.
போலீஸ் காரங்க வந்து சொன்னதைப் பார்த்துதான்
என்ன நடந்தது என்று தெரிஞ்சுகிட்டோம்."
"போலீஸ்காரங்க என்ன சொன்னாங்க...?"
சாயங்காலம் ஒரு ஏழு மணி இருக்கும்.
ஊருக்குள்ள போலீசும் ஆம்புலன்சும்
வந்தது. என்னமோ... ஏதோ என்று
ஊரு சனமெல்லாம் வண்டி பின்னால் ஓடிருச்சு.
நானும் ஓடினேன்.
வண்டி பாட்டி வீட்டுப் பக்கம் வந்து நின்னுது.
அதற்கு முன்னாலேயே தலையாரி எல்லாம்
வந்து நின்னுகிட்டு இருந்தாங்க...
ஊரு மக்களை எல்லாம் துரத்திட்டு
போலீசு வீட்டுக்குள்ள போயி பார்த்தாங்க..
அப்புறம் ஒரு துணியில் ஏதோ பொட்டலத்தை
தூக்கிட்டு வருவது மாதிரி பாட்டியைத்
தூக்கிட்டு வந்தாங்க.
ஐயோ நான் எல்லாம் கண்ணைப் பொத்திகிட்டு
திரும்பி நின்னுகிட்டேன்."
"ஆ...பயங்கரமா இருக்கே.
என்ன நடந்ததாம்?"
".விளக்கு வைக்கிற நேரம்.
பாட்டி விளக்கை ஏற்ற
தீப்பெட்டி பாத்திருக்காங்க .தீப்பெட்டியில
தீக்குச்சி இல்ல....கருக்கலும் ஆயிட்டு.
சுயம்பு சுயம்பு என்று
சத்தம் கொடுத்துப் பாத்திருக்காங்க....
சுயம்பைக் காணோம் .
"
சவத்துப்பய....ஒருஆத்தர அவசரத்துக்குக்
கடைக்குப் போக
இல்லாம எங்க போயி தொலைஞ்சான்.?"
என்று சொல்லிகிட்டே நாம் ஒரு எட்டு போயி
தீப்பெட்டி வாங்கி வந்துடுவோமான்னு
கடைக்குப் போயிருக்காவ.
போகும்போது
கருக்கலுல கதவை சாத்தப்பிடாதுன்னு
பக்கத்து வீட்டு சுதாவை....பாட்டி வருகிறதுவரை
எங்க வீட்டை பார்த்துக்க மக்கா என்று
சொல்லிட்டு போயிருக்காங்க.
"சுதாவா? இது கேட்காத பெயராக
இருக்கே
"இருந்தால்தானே கேட்க முடியும்?"
"சுதா இல்லையா?
சுதாவையும் கொன்னுட்டாங்களா?"
"கேளு...குறுக்கே குறுக்கே
பேசாதே.
பாட்டி அந்தப் பக்கம் போகவும்
எப்போ நேரங் கெடைக்கும்
என்று காத்திருந்தது போல
மேல தெரு சன்னியாசிமவன்
வீட்டுக்குள்ள வந்து நுழைந்திருக்கான்...."
"யாரு....அந்த வாணுவாமலை
தாத்தா மதனா?
"அவனேதான். சனியன்..."
"அப்புறம்...."
"அதைப் பார்த்ததும் அந்தச் சுதாப் பொண்ணு
....ஏய் எதுக்கு வீட்டுக்குள்ள போறே ....
வீட்டுல பாட்டி இல்ல.. என்று
சத்தம் போட்டபடியே அவன்
வீட்டுக்குள்ள போவதைத் தடுத்திருக்கு?
களவாணிப் பய ...பச்ச புள்ளன்னிகூட
பார்க்காம புள்ளையைப் புடிச்சி
சுவத்து வாக்குல தள்ளியிருக்கான்.
புள்ள சுவத்துல முட்டி அம்மிக்கல்லு
மேல போயி
விழுந்துருக்கு."
"பாவி...அம்மிக் கல்லுல தள்ளி
கொன்று போட்டுட்டானா?
செத்தே போயிட்டாளா?
எம்மா மூச்சே நின்று போய்விடும் போல
இருக்கே"
!பிள்ளை மூச்சு பேச்சி இல்லாமல்
கிடந்த உடனே இனி நம்ம மாட்டிகிடுவோம்ன்னு
வெளியில் ஓடப் பார்த்திருக்கான்.
வாசலுல பாட்டி எமன் மாதிரி
வந்து நின்னுருக்காவ"
"மாட்டிக்கிட்டானா?"
"எவன்ல களவாணிப்பயல என்று சத்தம்
போட்டபடியே வெளியில் கிடந்த கோடாரியைத் தூக்கி
ஒரே வெட்டு...."
"எம்மா...பயங்கரமா இருக்க....
அப்புறம் சுயம்பும் செத்துட்டானா?
"சாகாம...."
" அந்த மூணாவது கொலை.....
மூணாவது கொலை அது
எப்படி நடந்தது?"
"மூணாவது நடந்தது கொலை இல்லை .
தற்கொலை."
"தற்கொலையா? யார் தற்கொலை செய்தது?"
"அந்த
சுயம்புபய தான்."
"அவனா ?அவன் எதுக்கு
தற்கொலை செய்துகிட்டான்?"
"அப்புறம் போலீஸ் வந்தது.
பாட்டி தான் கொலை செய்ததை ஒத்துக்
கிட்டாவ...."
"சுதாவைக் கொன்று போட்டதுக்குத்தானே
பாட்டி அந்தப் பயல
கொன்னாவ...."
"எதுக்குக் கொன்னா? யாரைக் கொன்னாவ
எந்தக் கேள்வியும் கிடையாது.
நேரே நட போலீஸ் ஸ்டேசனுக்கு
என்று ஜீப்பில் ஏற்றி கொண்டு
போய்விட்டாவ..."
"அப்புறம்....சுயம்பு என்ன ஆனான்?"
"பாட்டியை போலீஸ் அழைத்துச் செல்லவும்
வந்து கூப்பாடு போட்டான்.
பாட்டியை போலீசு வண்டியில்
ஏற்ற விட மாட்டேன்னு முன்னால் போய்
நின்று ஜீப்பை மறைச்சான்.
போலீசு அவனைப்புடுச்சு
தள்ளி கிட்டு பாட்டியைக்
கூட்டிகிட்டு போயி
ஜெயிலுல அடைச்சுட்டாங்க.
போலீஸ் வேன் பின்னாலேயே
அழுதுகிட்டு ஓடினவன்தான்.
.மறுநாள் பாட்டி
வீட்டு தாழ்வாரத்துல தூக்குல தொங்கிட்டான்னு
சொன்னாங்க....."
"எம்மா .!!!
ஒரே வீட்டுக்குள்ள
மூணு உயிரு போயிருக்கு...
அதுவும் வன்கொலையா...!
ரொம்ப பயமாத்தான் இருக்கு..."
"அதுதான் எட்டாம் நம்பர் வீட்டைக் கண்டா
எல்லோரும் பயப்படுவாங்க.
அம்மா அதனால்தான் அந்தப்பக்கம்
போகாதுங்க ...போகாதுங்க
என்பாங்க.
செத்த மூணு உயிரும் வன்கொலையா
போனதால
ஆத்மா அங்கேதான் சுத்திக்கிட்டு
அலையுமாம்...."
"யாரும் பார்த்தாகளாமா?"
"யாரு கண்ணுக்கும் தெரியல....ஆனால்
அப்படித்தான் ஊருக்குள்ள பேச்சு
நடக்குது....."
"அட போக்கா....நீ நம்புறியா?"
"நம்பல....ஆனாலும் எல்லாரும்
சொல்லும்போது ஒரு பயம்
வரத்தானே செய்யுது...."
"நான் நம்ப மாட்டேன்..."
"நீயே ஏறுக்குமாறு பேசுறவ தானே"
"வேப்பமர உச்சியில் நின்று
பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தை கொழுந்தினிலே
கிள்ளி
வைப்பாங்க...
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே
நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே.....
சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா?"
இப்படி நீ படிச்சதில்லையா?
"பாட்டெல்லாம் படிச்சதுபோதும்..
நம்பினால் நம்பு நம்பாட்டி போ.."
"உங்களை எல்லாம்
இன்னும் ஐந்நூறு பட்டுக்கோட்டையார்
வந்தாலும் திருத்த முடியாது."
என்று கூறிவிட்டு எட்டாம் நம்பர்
வீட்டை நோக்கி ஓடினேன்.
8 என்ற எண்ணைப் பார்த்ததும்
கால்கள் பின்ன...கண்கள் முன்னும் பின்னும்
பார்க்க....
சே....என்னாயிற்று எனக்கு...
பேய் இருக்கா? இல்லியா?
ஒருவேளை.....உண்மையாக இருக்குமோ?
முன்பு என்னை கீழே தள்ளி விட்டது ?
நான்தான் என்பதுபோல தோளில்
ஒரு கைவிழுந்தது....
அம்மா....அலறியடித்து ஓட
முற்பட்டேன்.
பயந்துட்டால்ல....பயந்துட்டால்ல...
சொல்லியபடி கலகலவென
ஒரு சிரிப்பு!
இந்தச் சிரிப்பை எங்கேயோ கேட்டிருக்கிறேனே...
அட நம்ம பஞ்சவர்ணம்.
எது இந்தப்பக்கம் வந்து திருவத்திருவ
முழிச்சிகிட்டு நிற்கிறா?
காலையிலேயும் இந்தப்பக்கம் வந்து
நின்னா.....காலையிலே
தள்ளி விட்டுவிட்டு ஓடியே போயிட்டேன்...
நீ என்னை பார்க்கல..சொல்லிவிட்டு
கலகலவென சிரித்தாள்.
ஓ...நீதான் அந்தப் பேயா?
எந்தப் பேய்?
எட்டாம் நம்பர் வீட்டுப் பேய்....
சொல்லிவிட்டு சிரித்தேன்.
Comments
Post a Comment