உரைப்பார் உ ரைப்பவை எல்லாம்....


உரைப்பார் உரைப்பவை எல்லாம்....

"உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ் "


                                                                          குறள்.  : 232 

உரைப்பார் -சொல்லுபவர்
உரைப்பவை -சொல்லுபவை
எல்லாம்-அனைத்தும்
இரப்பார்க்கு-  ஏற்பவர்க்கு
ஒன்று- ஒன்று
ஈவார்மேல் -கொடுப்பவர் மேல்
நிற்கும்-நிலைத்திருக்கும் 
புகழ்-- புகழ்

உலகத்தில் புகழ்ந்து சொல்பவர் சொல்
எல்லாம் இரப்பவர்க்குக் கொடுப்பதால்
கிடைக்கும் புகழாக நிலைத்து 
நிற்கும்.

விளக்கம்: 

இவ்வுலகத்தில் புகழ்ந்து பேசப்படுவது எது?
 ஈகை மட்டுமே பலராலும்
 பல இடங்களில் புகழ்ந்து பேசப்படும்.
இரப்பவர்க்கு இல்லை என்று
சொல்லாது வழங்கும் பெருந்தன்மையாளர்களையே
இவ்வுலகம் கொண்டாடி மகிழும்.

இந்தப் பாடலில் வள்ளுவர்
உரைப்பார் உரை என்ற
ஒரு சொற்றொடரைக் கையாண்டுள்ளார்.

உரைப்பார் உரை என்றால் என்ன?

ஒருவரைப் பலர் கேட்கும்படி
புகழ்ந்து பேசுதல் அதாவது நாலுபேர்
மத்தியில் நல்லபடியாகப் பேசுதல்
என்பதுதான் உரைப்பார் உரை என்பதற்கான
பொருளாகும்.

இப்படிப்பட்ட உரைப்பார் உரை யாருக்குக்
கிடைக்கும் என்றால் இல்லை என்று
வந்து நிற்பவர்க்கு இல்லை
என்று சொல்லாது வழங்கும் 
வள்ளல்களுக்கே உரைப்பார்
உரை கிடைக்கும்.

இரப்பவர்க்கு ஈதலால்  ஈட்டப்படும் புகழ்
ஒருவரோடு என்றென்றும் நிலைத்திருக்கும்.

புகழ் பல வழிகளில் வரலாம்.
அந்தப் புகழ் எல்லாவற்றிலும் உயர்ந்த
புகழ் என்று உண்டு.அந்தப் புகழ்தான்
கடைசிவரை நிலைத்திருக்கும்.

"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல் "

என்று அடுத்த குறளிலேயே உயர்ந்த
புகழ் மட்டுமே நிலைத்திருக்கும் என்று
வள்ளுவர் கூறியிருப்பார்.

அந்த உயர்ந்தப் புகழ் இரப்பவர்க்கு
ஒன்று ஈவதால்
மட்டுமே கிடைக்கும். அதுதான்
நிலையான புகழ். ஆகையால்
அந்த நிலையான புகழை வறியவர்க்குக்
கொடுப்பதின் மூலம்
ஈட்டிக்கொள்ளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"The speech of that speak agrees to crown
The men that give to those that ask with fair renown"

Explanation:

Whatsoever is spoken in the world will abide
as prise upon that man who gives 
alms to the poor .

Transliteration:

"Uraippaar uraippavai ellaam irappaarkkondru 
Eevaarmel nirkkum pukazh"

Comments

Popular Posts