அன்னச்சேவலே....

அன்னச்சேவலே....



கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும்
ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே
நண்பர்களாக இருந்து வந்தனர் என்பது
வரலாறு.
பார்க்காமலேயே ஒருவரை ஒருவர் எப்படி நட்பு பாராட்டிக் கொள்ள முடியும்?

இந்த அறிவியல் வளர்ச்சியில் எல்லாம் சாத்தியமாகிறது.
முன்பு கடிதப் போக்குவரத்து கூட இல்லாத காலம்.
பின்னர் இது எப்படி சாத்தியமாயிற்று?

இந்தக் கேள்வி நமக்குள் எழாமலில்லை.
இன்றைய அறிவியல் வளர்ச்சியில்
எல்லாம் சாத்தியப்படும் கூடியதுதான்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின்
அசுர வேகம்  காணாமலே தகவல்களை
அன்பை பரிமாறிக் கொள்ள
உதவுகிறது. இது போக்குவரத்து வசதிகள் இல்லாத அன்றைய காலகட்டத்தில் சாத்தியமில்லாத
ஒன்று.
அப்படி இருக்க பிசிர்ந்தையாரும்
கோப்பெருஞ்சோழனும் நட்பாக
பழக வாய்ப்பே இல்லை.

பிறகு எப்படி அவர்கள் இருவரும் நண்பர்கள்
என்று உலகுக்கு தெரிய வந்தது.

ஏதேனும் தூது விட்டு நட்பை
வளர்த்துக் கொண்டிருப்பார்களா?

இந்தக் கேள்விக்கு
விடையளித்து நம்முன் வந்து சாட்சி 
சொல்ல வந்து நிற்கிறது ஒரு
பாடல்.
இந்தப் பாடல் இவர்கள் 
இருவரின் நட்புக்கு நல்லதொரு சாட்சி.

மேகத்தைத் தூது விடலாம். புறாவைத்
தூது விடலாம்.நாரையைத்
தூது விடலாம்.

இங்கே தூது போயிருப்பது யார் தெரியுமா?
ஒரு சேவல்.
சேவலும் தூது போகுமா?
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

பாடலை வாசித்தால்  புரியும்.


ஒரு மாலைப்பொழுது.மாலை
பிசிராந்தையாரை மயக்கமடைய
 செய்கிறது. ஏதோ ஒரு தேடல்.

நண்பனைப் பார்க்க வேண்டும் என்ற
வேட்கை உந்திக் தள்ள நிலை தடுமாறிப்
போகிறார்.ஏனோ என்றுமில்லாதபடி
இன்று கூடுதலான தேட்டம் வந்து
மனதைக் குமைத்துப் போடுகிறது.

நேரில் போக  முடியாத சூழல்.
என்ன செய்வது? 
கையைப் பிசைந்தபடி 
சுற்றும்முற்றும் பார்க்கிறார்.

அதோ தொலைவில்
அன்னச்சேவல் வருகிறது.

இதனைத் தூதுவிட்டால் என்ன?
என்று நினைப்பு எழ மனதில் புது தெம்பு வந்தது.கூடவே 
கவிதையும் வந்து
அன்னத்தோடு அழைத்து அளவளாவி
மகிழ வைத்தது.
பாடல் உங்களுக்காக...


அன்னச் சேவல்! அன்னச்சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம்போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல்மாலை யாம் கையறுபு கரையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின்,இடையது
சோழ நன்னாட்டுப் படியே,கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க,இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே,மாண்ட நின்
இன்புறுபேடை அணியத் தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே!

                           - புறநானூறு

பாடியவர் : பிசிராந்தையார்
பாடப்பட்டோன்: கோப்பருஞ்சோழன்


அன்னச்சேவலே! அன்னச்சேவலே!
போரில் வென்று நாடு காக்கும் நல் மன்னனின்
முகம் ஒளிவிவிடுவதுபோல முழுநிலா
ஒளிசிந்தி நிற்கிற்கும் மாலைப் பொழுது.
இந்த முழுநிலவும் மாலையும்
என் மன்னனை நினைவுபடுத்துகிறது..
நானோ என் நண்பனான மன்னனிடம்
செல்ல முடியாமல் இங்கே தவித்துக்
கொண்டிருக்கிறேன்.

நீயோ தென்திசை குமரிப் பெருந்துறையில்
நீராடி வடதிசை நோக்கி சென்று கொண்டிருக்கிறாய்.
போகும் வழியில் தான் உறையூர்
உள்ளது.அப்படி உறையூருக்குச்
சென்றாயானால்  அங்கே உறையூரிலுள்ள
மன்னனின் உயர்மாடத்தே
நின் பேடையோடு சென்று 
தங்குவாயாக.

அங்கேதான் என்மன்னன் கிள்ளி
தன் அரண்மனையில் இருப்பான்.
நீ அரண்மனையினுள் சென்று மன்னன்
காதில்விழும்படியாக பிசிராந்தையாரின்
 அடியேன் வந்திருக்கிறேன் என்று 
உரக்கச் சொல்.
 நீ அப்படிச் சொன்னால் போதும்.
 உன் பேடை அணிந்து மகிழ அணிகலன்களையும்
தந்து உன்னையும் சிறப்பு செய்வான் என் மன்னன்.
அதுதான் என் நண்பன் கோப்பெருஞ்சோழன்
பண்பு  "என்று தன் நண்பன் 
கோப்பெருஞ்சோழன் பற்றி
பெருமையாகச் சொன்னார் பிசிராந்தையார்.

சும்மா தூதாகப் போய் வா என்றால்
சேவல் போகவா போகிறது .?
நீ போ....உனக்கு சிறப்பு செய்வான்
சோழன் என்றால் ஒருவேளை சேவல்
மறுத்துவிடலாம்.
அதனால்தான் பிசிராந்தையார்
உன் பெடைக்கு
அணிகலன் தருவான் என்று
சேவலுக்கு ஆசையைத் தூண்டுகிறார்.


சேவலும் கொண்டையைக் கொண்டையை
ஆட்டியபடி நடந்து தூதாக
சென்றிருக்கும்.

நமக்கும் தலையைத் தலையை ஆட்டி
தோதாகப் படிக்க ஒரு பாடல்
கிடைத்திருக்கிறது.

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் இருவரும்
ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை என்றாலும்
ஒருவர்மீது ஒருவருக்கு பெரும் மதிப்பு
இருந்தது என்பதற்கு இந்தப் பாடல்
ஒரு சாட்சி.
அதனால் மனதிற்குள் விரிகிறது  நல்லதொரு காட்சி.
அதில் இடையில் வந்து நிற்பது
அன்னப் சேவல் என்பது
கூடுதல் மாட்சி.
இதுதான் பாடலின் உயிர்மீட்சி.







Comments

Popular Posts