ஹாலோவீன் திருவிழா என்றால் என்ன
ஹாலோவீன் திருவிழா என்றால் என்ன
பேய் இருக்கிறதா இல்லையா
விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பேய் இல்லை என்போர் ஒருபுறம்
இருக்கிறது என்போர் மறுபுறம்
நின்று விவாதங்களும் பட்டிமன்றங்களும்
நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இன்றுவரை முடிவான எந்தக் கருத்தும் எட்டப்படவில்லை.
ஆனால் பேய் படங்கள் உலகை பேய்கள் உண்டு என்று நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன.அதனால்தான் பேய்
படங்கள் சக்கைப்போடு போடுகின்றன.
பேய் பற்றிய நம்பிக்கை எல்லா நாடுகளிலும் இருக்கிறது.
இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள், திருப்தியடையாமல் இருந்தால்
அவை திரும்பி வந்து மனிதர்களைத் தாக்கும் என்ற நம்பிக்கை எல்லா நாட்டு மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது.
இனம், மொழி, நாடு, படித்தவர், படிக்காதவர் என எந்தவித பாகுபாடுமின்றி பேய்களைப் பற்றிய பயம் மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டுதான் இருக்கிறது .
அந்த பயம் திருவிழா கொண்டாடும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது .
பேய்களுக்கு என்று ஒரு விழாவை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். அதுதான் ஹாலோவீன் திருவிழா.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31-ம் நாளை, ஹாலோவீன் தினமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து போன்ற மேலைநாடுகள் கொண்டாடி வருகின்றன.
பேய்களுக்கு ஏன் திருவிழா?
என்ற கேள்வி எழாமல் இல்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்கின்றனர் இந்த மக்கள்.
அகாலமாக இறந்துபோனவர்கள் சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் அலைந்துகொண்டிருப்பார்களாம்.
அவர்கள் நமக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும். அப்படி அவர்கள் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களை நாம் மகிழ்ச்சி ப்படுத்திவிடவேண்டும்.
இப்படிப் பேயாக அலைந்துகொண்டிருப்பவர்களை மகிழ்ச்சிப் படுத்திக் பார்க்கும் நன்னாள்தான் ஹாலோவீன் நாள் எனப்படுகிறது.
அலையும் ஆவிகளை இப்படிக் கொண்டாடி மகிழ்வதால், தங்களுக்கு எந்த விதமான கெட்டதையும் அவை செய்யாது என்பது நம்பிக்கை. முதன்முதலில் இந்தப் பேய்களின் தினம் அயர்லாந்தில்தான் கொண்டாடப்பட்டது. அகாலமாக உயிர் நீத்த புனிதத் துறவிகளின் நினைவாகவே இந்த நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் கடைபிடிக்கப்பட்டது.
பின்னர், அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் அக்டோபர் 31-ஆம் நாளில் ஹலோவீன் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
ஹலோவீன் திருவிழா கொண்டாட்டங்களின்போது உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவத்தியை வைத்து மந்திரங்கள் ஓதி பேய்களை விரட்டுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
பின்னர் பெரிய பரங்கிக் காய்களை வெட்டி அதனைப் பயங்கரமாக அலங்கரித்து அதை வீட்டுக்கு வெளியே வைத்துப் பேய்களைத் துரத்த ஆரம்பித்தனர்.
நாட்கள் க செல்லச்செல்ல இந்த ஹாலோவீன் தினம் பயங்கரமான கற்பனை வடிவங்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மாறிப்போனது.
காய்ந்த சருகுகள், எலும்புக்கூடுகள், சூனியக்கார பொம்மைகள், பிரமாண்ட சிலந்திகள், ஓநாய் பொம்மைகள் எனப் பலவிதமான உருவங்களை வைத்து ஹாலோவீன் தினம் மிகவும் திகிலாகக் கொண்டாடும் மனநிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த நாளின் இரவு முழுக்க விதவிதமான பேய்களின் அலங்கார அணிவகுப்புகள், காண்பவரை மிரளச்செய்யும் வகையில் இருக்கும்.பேய்களின் முகமூடியை அணிந்துகொள்ளும் இளைஞர் இளைஞிகள் சாலையெங்கும் திரிந்து மக்களிடையே பீதியைக் கிளம்புவார்கள். திடீர் திடீர் என வீடுகளுக்குள் நுழைந்து 'ஹேப்பி ஹாலோவீன் டே' என்று குரல் எழுப்பி வீட்டில் உள்ளவர்களை அதிர்ச்சியடையச் செய்வர்.
கிறித்துமஸ் விழாவில் வரும் தாத்தாவைப் போலவே, பயமுறுத்தும் வகையில் மாறுவேடத்தில் வந்து இந்த நாளில் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்விப்பதும் இந்த விழாவின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு வருகிறது.
பள்ளிகள், கல்லூரிகளிலும் இந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பேய்களைத் திருப்திபடுத்தும் விழா என்பதைத் தாண்டி, இந்த விழா உற்சாகமூட்டும் ஒரு திகில் விழாவாகப் புகழ்பெற்று விட்டது.
மறைந்தவர்களின் கல்லறைக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்ததைப் படைக்கும் வழக்கமும் இந்த நாளில் உள்ளது. கிறித்துமஸ் விழாவுக்கு அடுத்து, இந்த ஹாலோவீன் தினத்தில்தான் மேற்கத்திய நாடுகளில் விற்பனையும் உற்சாகமும் அதிகம் என்கின்றனர்.எது எப்படியோ, பேய்களின் மீதான பயம் ஒரு திருவிழாவாக உருவாகி, இன்று கோலாகலமான திருநாளாக மாறிப்போய் உள்ளது.
ஹாலோவீன் திருவிழா
ஒரு திகில் திருவிழா.
Comments
Post a Comment