முதுமொழிக்காஞ்சியின் இல்லைப் பத்து

முதுமொழிக்காஞ்சியின் இல்லைப் பத்து 


முதுமொழி காஞ்சியின் ஆறாம் பத்து

இல்லைப் பத்து எனப்படும்.


ஆரவாரம் மிக்க உலகில் வாழ்பவர்களுக்கு எல்லாம் எது பெரிது இல்லை

என்ற கேள்விக்கு விடையாக பத்து

இல்லைகளை அடுக்கி வைத்திருக்கிறார் மதுரை கூடலூர் கிழார்.


பாடல் உங்களுக்காக...


1. "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-

மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை"


ஆரவாரம் மிக்க இவ்வுலகில் வாழ்பவர்க்கெல்லாம்

மக்கள் செல்வத்தை விட மேலான செல்வம் வேறொன்றும் இல்லை.



2. ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை. 


உலகத்தோடு ஒத்துப்போகும் தன்மையைவிட  பெருமைமிக்க குணம் வேறொன்றும் இல்லை. 


3. வாய்ப்புடை வழக்கின் நல் வழக்கு இல்லை.


நம் முன்னோர் வழக்கமாக்கி வைத்திருந்த வழக்கத்தை விட மேலான வழக்கம் வேறொன்றும் இல்லை. 


4.வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை. 


வாழ்வதற்கு வாய்ப்பளிக்காத வழக்கத்தை விடத் தீய வழக்கம் 

இவ்வுலகில் வேறொன்றும் இல்லை. 


5. "இயைவது கரத்தலின் கொடுமை இல்லை."

தம்மால் கொடுக்க இயன்ற காலத்தில் கொடுக்காமல் மறைத்துவைப்பதை விடக் கொடுமை வேறொன்றும் இல்லை. 


6. "உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை."

தனது நிலைமையைப் பிறரிடம் சொல்ல முடியாத வேதனையை விடவும் இறந்து போதல் கொடுமையானது   இல்லை. 

7. "நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை."


பேராசையால் துன்பப்படுவதைக் காட்டிலும் வறுமையில்வாடுவது பெரிய துன்பமாக இருப்பதில்லை. 


8."இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை." 

புகழை மிஞ்சி நிற்கும் செயல்  வேறொன்றும் இல்லை. 

9. "இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை." 


பிச்சை வாங்கலைக் காட்டிலும் இழிவான செயல்  வேறொன்றும் இல்லை. 


10. "இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை. "

 இரந்து வருவோர்க்கு  ஈவதைக் காட்டிலும் ஒருவன் அடையும் சிறப்பு வேறொன்றும் இல்லை. 

(தொடரும்)

Comments