கேளீர் கேளிராவரோ
கேளீர் கேளிராவரோ
சில சொற்களை எழுதும்போது
அப்படி இருக்குமோ இப்படியிருக்குமோ
என்ற ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்.
இறுதியில் எப்படியும் இருக்கட்டும்
என்று ஏதோ ஒன்றை எழுதிவிடுவோம்.
இப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்திய
சொற்கள் பல உண்டு.
அதற்கான காரணம் அந்தக்
குறிப்பிட்ட சொல்லுக்கான சரியான
பொருளை நாம் அறியாதிருத்தலே ஆகும்.
அவை எந்தெந்த இடங்களில் எவ்வாறு
கையாளப்பட்டிருக்கின்றன
என்பதை சற்று கவனமாக உற்று
நோக்கினால் பெரும்பாலான
தவறுகளைத் தவிர்க்க முடியும்.
சரியான சொல்லைச் சரியான இடத்தில்
பயன்படுத்தத் தெரிந்தால் பிழைபட
எழுதுவதைத் தவிர்க்கலாம்.
வாருங்கள் அப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்திய ஒருசில சொற்களும்
அதன் பயன்பாடும் பற்றித் தெரிந்து கொள்வோம்.
1.தருவாய்,தறுவாய்
மரணத் தருவாயில் என்று எழுதுவது சரியா?
மரணத் தறுவாயில் என்று எழுதுவது சரியா ?
எத்துணை நேரம் தடுமாறியிருப்போம்.
தருவாய் என்றால் கொடுப்பாய்
என்று பொருள்படும்.
தறுவாய் என்றால் இடம், காலம்
என்ற பொருள்களில் கையாளப்படுகிறது.
"புறப்படும் தறுவாயில் போய்ப்
பார்க்க வேண்டும்"
என்று எழுதினால் புறப்படும் நேரத்தில்
என்று பொருள்படும்.
அவர் மரணத் தறுவாயில் இருக்கிறார்
என்று காலத்தைக் குறிப்பிடும்போது
தறுவாய் என்று எழுதுவது சரியாக இருக்கும்.
உன் பேனாவைத் தருவாயா என்ற
சொற்றொடரில் தருவாயா என்பது
கொடுப்பாயா என்ற பொருளில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
2.கேளீர், கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இவற்றில் எது சரி என்ற குழப்பம்
பல நேரங்களில் ஏற்பட்டிருக்கலாம்.
கேளீர் என்பது கேட்பீராக
என்று பொருள்படும்.
கேளிர் என்றால் உறவினர்.
கணியன் பூங்குன்றனார்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எழுதியிருப்பாரா
இல்லை
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று எழுதியிருப்பாரா?
உறவினர் என்ற பொருளில் தானே எழுதியிருப்பார்.
ஆதலால் உறவினர் என்ற பொருளில்
எழுதும்போது 'கேளிர் 'என்று எழுதுவது சரி.
கேட்பீராக என்ற பொருளில் எழுதும்போது
'கேளீர்' என்று 'ளீ' நெட்டெழுத்து பயன்படுத்தி எழுத வேண்டும்.
3.வெந்நீர், வென்னீர்
வெம்மையான நீர் அதாவது சுடு தண்ணீர்
என்பது வெந்நீர்.
வெம்மை + நீர்=வெந்நீர்
வெந்நீர் என்று எழுதுவதுதான்
சரியாக இருக்கும்.
வென்னீர் என்பது தவறான சொல்.
4.பெரும்பாடா? பெறும்பாடா ?
பாடு என்பது துன்பம் , நோய்
என்று பொருள்படும்.
.இதில் வந்துள்ள பெரும் என்பதற்கு
அதிகம், மிகுதி என்று
பொருள் .
ஆதலால் மிகுதியான துன்பம் என்று எழுதும் நேரங்களில்
பெரும்பாடு என்று எழுதுவது தான் சரி.
பெறும்பாடு என்றால் பெற துன்பம்.
பெரும்பாடு என்பது
மிகுந்த துன்பம் தரும்
நோய் என்று சொல்லப்படும் இடங்களில்
பயன்படுத்தப்படும் சொல்.
பெறும் என்றால் பெற்றுக் கொண்டுள்ள
என்ற பொருளில் வருவதால்
நோயையோ துன்பத்தையோ குறிப்பிடும் நேரங்களில் பெறும்பாடு என்று
எழுதுவது தவறாக இருக்கும்
5.எத்தனை , எத்துணை
எத்தனை என்பது எண்ணிக்கையில்
விடையளிக்கக் கூடியவற்றிற்குப்
பயன்படுத்தும் சொல்.
எத்தனை ஆண்டு?
எத்தனை ரூபாய் வேண்டும்?
எத்தனை புத்தகங்கள் இருந்தன ?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நான்கு,
ஐந்து, ஆறு என்று ஏதாவது ஒரு
எண்ணை விடையாகச்
சொல்லிவிட முடியும்.
எத்துணை என்றால் எண்ண
இயலாதவற்றைக் குறிப்பிடும்போது
பயன்படுத்த வேண்டும்.
எத்தனை அன்பு என்று கேட்பது
சரியாக இருக்காது.
அன்பை அளவிட்டுச் சொல்ல முடியாது.
அதனால்
எத்துணை அன்பு!
எத்துணை நல்லவர்!
எத்துணை வலிமை!
என்று எண்ணி சொல்ல முடியாத இடங்களில் எத்துணை என்ற
சொல்லை எழுதுவதே சிறப்பாக இருக்கும்.
6.மெல்ல, மெள்ள
மெல்ல என்ற சொல்லும்
மெள்ள என்ற சொல்லும்
ஒரே பொருள் தருவதுபோல்தான்
இருக்கும்.
ஆனால் இரண்டும் அடிப்படையில்
பொருள் வேறுபாடு கொண்டவை.
மெல்ல - மென்மையாக
மெள்ள - மெதுவாக
என்று இரண்டுக்கும் வேறுவேறு
பொருள் உண்டு.
பிள்ளைகள் வேகமாக ஓடினால்
மெள்ள...மெள்ள....வேகமாக ஓடாதே
என்போம் அல்லவா!
கொஞ்சம் குரலை உயர்த்தி கோபமாகப் பேசினால்
மெல்லப் பேசு
எதற்கு இப்படிக் கடுமையாகப் பேசுகிறாய் என்று கேட்கும் இடங்களில் மெல்ல என்பது மென்மையாக என்ற பொருளில் பயன்படுத்தப்படவதை அறிந்து
கொள்ளலாம்.
இப்போது வேறுபாடு
புரிந்திருக்கும்.
ஆதலால் மெதுவாகப் போ என்று
சொல்லுமிடத்து
மெள்ள என்ற
சொல்லையும்
மென்மையாகப் பேசு என்று
சொல்லும் போது மெல்ல என்ற
சொல்லையும் பயன்படுத்துவதுதான்
ஏற்புடையதாக இருக்கும்.
பொருள் அறிந்து சொற்களைப் பயன்படுத்தினால் பிழையின்றி எழுதலாம்.
(இன்னும் வரும்)
Comments
Post a Comment