அமைதி வேண்டி...

அமைதி வேண்டி....


அமைதி இல்லா உலகில் நிம்மதி
இல்லை. நிம்மதி இல்லா மனதில்
மகிழ்ச்சி இல்லை.
அமைதி இருக்குமிடத்தில்தான்
நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

அமைதி எப்போது வரும்?
புயலுக்குப் பின் வருவதுதான் அமைதி.
அப்படியானால் பெரும் போராட்டத்திற்குப்
பின் வருவது அமைதி.
அல்லது போருக்குப் பின் வருவது அமைதி
என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அமைதியை விரும்பாதோர் எவரேனும்
உண்டோ!
சாதி சண்டை .சமய இனக் கலவரங்கள்.
தனிமனிதப் போராட்டம்.
திரும்பிய பக்கம் எல்லாம் அமைதி
இல்லா சூழ்நிலை.
மக்களிடையே பகை.குடும்பங்களுக்கு
இடையே பகைமை உணர்ச்சி.
நாளை என்ன நடைபெறுமோ என்ற அச்சம்.
இப்படி திகிலும் பயமுமாக நாட்கள்
கடந்து கொண்டிருக்கிறது.
மனம் எங்கே அமைதி....எங்கே அமைதி
என்று அல்லாடுகிறது.

அமைதியைத் தேடி கோவில் குளம்
என்று ஓட வைக்கிறது.
குளம் என்றதும்தான் ஒன்று நினைவுக்கு
வருகிறது.
தெளிந்த நீராக கிடக்கும் குளத்தில்
எவரேனும் இறங்கி கலக்கி விட்டால் ஒழிய
தானாக குளத்து நீர் கலங்காது.
யாரோ ஒருவர் கல்லை எடுத்து வீசி
விட்டால் குளம் முற்றிலுமாகக் கலங்கிப்
போய்விடும்.
அந்தக் கலங்கல் சிறிது நேரத்தில் தானாகத்
தெளிவடைந்துவிடும்.

மனதிற்குள் கலக்கத்தை உண்டுபண்ணிவிட்டால்...

உடல் நலம் கெடும்.
தூக்கம் தொலைந்து போகும்.
நிம்மதி காணாமல் போய்விடும்.
இப்படி உடல்நலம் கெட்டு
அமைதி இழந்து தானும் அழிந்துபோன
பல குடும்பங்கள் உலகம்
முழுவதும் உண்டு.
காரணம் உலகப்போர்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள்
உலக நாடுகள் அனைத்தையும்
அமைதியற்றதாக ,நிம்மதியற்றதாக மாற்றியது.
இரண்டாம் உலகப் போரில் ஐப்பானின்
ஹிரோசிமா ,நாகசாகி என்ற நகரங்களில்
வீசப்பட்ட அணுக்குண்டு உலகையே ஸ்தம்பிக்க
வைத்தது.

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரம்.
ஜப்பானின் ஒரு நகரில் சசாகி
என்றொரு சிறுமி இருந்தாள்.
அணுக்குண்டு வீசப்பட்டப்போது
அவளுக்கு வயது இரண்டு.அணுக்குண்டு
வீச்சில் இருந்து பிழைத்துக் கொண்டாள்.
எனினும்அவள் பதினோராம் வயதை எட்டியபோது
புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள்.
காரணம் என்ன என்று மருத்துவர்கள்
ஆராய்ந்தபோது அதிர்ந்து போயினர்.
அணுக்குண்டு வீச்சின்போது வெளியான
கதிர் வீச்சால் புற்றுநோய் வந்துள்ளது என்ற
உண்மை தெரிய வந்தது.
இது சிறுமிக்குத் தெரிய வர
கலங்கிப் போனாள்.

இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை.
இடையில்  நான் என்ன தப்பு செய்தேன்?
எனக்கு ஏன் பாதிப்பு வர
வேண்டும்?. நினைத்து நினைத்து
நொறுங்கிப் போனாள்.
நொந்து போய் படுக்கையில்
கிடந்தாள்.

எப்படியாவது பிழைத்துவிட வேண்டும்
என்று ஆசை.
என்னைப்போல் இன்னொரு குழந்தை பாதிக்கப்
பட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கம்.

உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தால்
தனக்கு இந்தக் கொடுமை வந்திருக்காதே என
வெதும்பினாள்.

அப்போது ஜப்பானியர்களின் கடவுள் நம்பிக்கை
நினைவுக்கு வந்தது.
அதாவது ஆயிரம் காகிதக் கொக்கு செய்து
இறைவன் முன் படைத்தால் இறைவன்
நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்
என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை.

இந்தவேளையில் சசாகியின் நண்பன்
மருத்துவமனையில் இருக்கும்
தனது தோழியைப் பார்க்க வருகிறான்.
கையில் தான் செய்து கொண்டுவந்த
காகிதக் கொக்கைக் கொடுத்துவிட்டுச் செல்கிறான்.
இப்போது சசாகி மனதில் ஆயிரம் கொக்குகள்
செய்தால் தானும் பிழைத்துவிடலாம்
என்ற ஒரு நம்பிக்கை மேலோங்குகிறது.

உடனே காகிதங்கள் வாங்கி
அந்த நம்பிக்கையோடு நாளும்
காகிதக் கொக்குகள் செய்ய
ஆரம்பிக்கிறாள்.கொக்குகளின் சிறகுகளில்

அமைதிக்கான வாசகங்களை எழுதி வைக்கிறாள்.

நாளும் இருபது கொக்குகளாவது
செய்துவிட வேண்டும் என்ற ஆவலோடு
செய்து கொண்டிருந்தவளுக்கு
நாளாக ஆக உடலில் தளர்ச்சி ஏற்பட்டு
எண்ணிக்கை குறைந்து கொண்டே
வருகிறது.
ஒருகட்டத்தில் சோர்ந்தே போய்விடுகிறாள்.
646 கொக்குகள் மட்டுமே அவளால்
செய்ய முடிந்தது.
அதற்குள் மரித்துப் போய் விடுகிறாள்.

தோழிகள் எல்லோரும் அழுகின்றனர்.
உலகம் சமாதானமாக இருக்க வேண்டும்
என்ற தன் தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற
மீதமுள்ள கொக்குகளையும் செய்து
சமாதான வாசகங்களை எழுதி வைத்தனர்
தோழிகள்.

ஐப்பான் மக்கள் சசாகிக்காக
கண்ணீர் விட்டனர்.
ஒரு சிறுமியின் ஆசை நிராசையாகிப்
போனது. அவள் நினைவாக ஏதாவது
செய்ய வேண்டும் என்று நினைத்த அரசு
அவளுக்கு நினைவிடம் அமைத்தது.

இன்றும்  அவள் நினைவு நாளில்
ஆயிரம் ஆயிரம் கொக்குகள் செய்து
அவள் நினைவிடத்தில் வைத்து
வேண்டுதல் செய்கின்றனர் ஜப்பானிய
மக்கள்.

 இந்தக் கொக்குதான் இன்று
உலகின் அமைதிக் குறியீடாகிப் போனது.

உலக நாடுகள் மத்தியில் மீண்டும்
இப்படியொரு  போர் வராமல் இருக்க
வேண்டும் .உலக மக்கள் எல்லாம்
அமைதியாக இருக்க வேண்டும் என்ற ஒரு
பிஞ்சு உள்ளத்தின் ஏக்கம் ,வாஞ்சை
முளையிலேயே கருகிப் போனது.
அமைதியைத் தேடிய அந்த பிஞ்சு
உள்ளம் இறைவனிடம் அமைதியாகத்
தஞ்சமடைந்துவிட்டது.

" சாந்த குணம் உள்ளவர்கள்
பாக்கியவான்கள் அவர்கள் பூமியைச்
சுதந்தரித்துக் கொள்வார்கள்."
என்கிறது வேதம்.

சாந்தமாய் இருந்து பூமியைச் சுதந்தரித்துக்
கொள்ள வேண்டும் என்ற எண்ணம்
இல்லாததால் இன்றும் உலக நாடுகள்
அணு ஆயுதத்தைக் கையில் வைத்துக்
கொண்டு உலகையே அச்சுறுத்திக்
கொண்டிருக்கின்றன.

உலகத் தலைவர்கள் சசாகியைப்
போன்று இன்னொரு குழந்தை
கண்ணீர் விடக்கூடாது என்ற
முடிவை எடுக்க வேண்டும்.

அதுவரை  ஆயிரம் ஆயிரம் சசாகிகள்
காகிதக் கொக்குகளைச் செய்து
வைத்துக் கொண்டு அமைதியான வாழ்வு
வேண்டி இறைவனிடம் வேண்டிக்
கொண்டுதான் இருப்பர்.

உலக நாடுகள் உணருமா!

!

Comments

  1. Very nice article about Peace. Let us live in peace. I appreciate Mrs Selvabai Jeyaraj.

    ReplyDelete
  2. Very wonderful article. Really everyone has to think about peace.

    ReplyDelete
  3. அமைதி வேண்டி அற்புதப் படைப்பு. பாராட்டுகள. 👏👏👏👏உணருமா உலகம்???

    ReplyDelete
  4. அமைதியின் மகத்துவத்தை இந்த பதிவு மூலம் அழகாக உணர்த்தியது வெகு சிறப்பு.

    ReplyDelete
  5. மிக அருமையான படைப்பு

    ReplyDelete

Post a Comment

Popular Posts