பாவமன்னிப்பு
பாவமன்னிப்பு
ஞாயிறு என்றாலே போதும். செல்வ ரத்தினம் வீடு காலையிலிருந்தே ஒரு பரபரப்பிலேயே இருக்கும்.
ஆளாளுக்கு குளித்துவிட்டு கோவிலுக்குப் புறப்படும் முன்னே ஒரு களபரமே நடந்து முடிந்துவிடும்.
"அம்மா இன்னைக்கு என்ன டிரஸ் போடணும்...."
"அம்மா என் கம்மலைப் பார்த்தியளா...."
"அம்மா என் ஷு எல்லாம் துடைச்சு வச்சாச்சா..."
ஆளுக்கொரு மூலையிலிருந்து கத்தி தொலைத்து விடுவார்கள்.
இது இந்த வாரம் மட்டுமல்ல... வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனால் இதே கத்தல்தான்.
செல்வரத்தினம் மட்டும் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து
இன்று என்ன பாவஅறிக்கை செய்ய வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கண்கள் மூடிய நிலையில் மறுபடியும் மறுபடியும் அந்தக் காட்சி
மனக்கண் முன் வந்து நின்று.... மன்னித்துவிடுங்கள் சாமி...
மன்னித்து விடுங்கள் சாமி....
என்ற குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மன்னித்திருக்கலாமோ....நேற்று கொஞ்சம் அதிகப்படியாகத்தான் நடந்துவிட்டேன்....
மனசாட்சி பேசியது.
ஒருமுறை மன்னிச்சிட்டோம்ன்னா....இவங்களுக்கெல்லாம்
இதே வழக்கமாக போய்விடும்.. ஒரு முதலாளியாய் எப்போதும்
கறாராக இருக்கணும்.
மன்னிச்சிட்டோம் என்றால்....இன்றைக்கு ஒருத்தன் நாளைக்கு
ஒருத்தன் என்று வரிசை கட்டி நிற்பானுவ.....
ஐயா எப்படியும் மன்னிச்சிடுவாக... என்று ஒரு அலட்சியம்
வந்துடும். முதலாளி என்பதைவிட்டு கீழே இறங்கி வரக்
கூடாது..மனம் தீர்மானமாக நின்றது.
நடந்தது ஒன்றும் பெரிய குற்றமல்ல.
கடையில் வேலை பார்க்கும் பார்வதி ஒரு
பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து மகனுக்குக் கொடுத்துவிட்டாள்.
என்றுமில்லாதபடி மகன் பள்ளி முடிந்து கடை வாசலில் வந்து
நின்றான்.
பச்சப்புள்ள கடைக்கு வந்து நிற்க ...இன்று ஒரு பிஸ்கெட்
பாக்கெட்டை எடுத்துக் கொடுத்துவிட்டாள்.
ஐயாவிடம் சொல்லி சம்பளத்துல பிடிச்சுகிட சொல்லிவிடலாம்
என்றுதான் நினைத்தாள்.
அதற்குள் எவனோ முதலாளி காதில் போட்டுவிட....விசயம்
விவகாரமாய் போயிற்று.
"இந்த திருட்டு வேலை எத்தனை நாள் நடக்குது..".முறைத்தார்
முதலாளி செல்வரத்தினம்.
"ஐயோ....சாமி திருட்டு பழக்கம் எல்லாம் எனக்கு இல்ல சாமி."
"பிறகு கடையில் இருந்து கேட்காம எடுத்ததற்கு திருட்டு என்று
சொல்லாமல் வேறு என்ன பெயரு"
" ஐயா புள்ள பசின்னு கேட்டதால...."
"அதுக்குதான் சம்பளம் தாறேன் இல்ல..."
"சம்பளத்துல பிடிச்சுகிடுங்க ஐயா.....தெரியாம செய்துட்டேன்."
"பார்த்துட்டா தெரியாம செய்துபுட்டேன் என்று இப்படி
ஒரு பசப்பு. இந்த செல்வரத்தினத்திக்கு திருட்டு என்றாலே
பிடிக்காது....களவு செய்த கை நிற்காது....
நாளையில இருந்து வேலையை விட்டு நின்னுக்க...".கோபமாக
பேசினார் செல்வரத்தினம்.
"ஐயா....மன்னிச்சுடுங்க....வேலைய விட்டு எடுத்திறாதீங்க"
காலைப் பிடித்துக் கதறினாள் பார்வதி.
" அட.. சீ போ.. என் கண் முன் நிற்காத....எப்போ திருடினியோ
அப்பவே உன் கணக்கு தீர்ந்தது.
உனக்கு இங்க வேலை இல்ல..."
" ஐயா...இந்த சம்பளத்த நம்பிதாங்க எங்க குடும்பம்
இருக்கு....இந்த ஒரு தடவை மன்னிச்சுருங்க ஐயா...."
"இந்த கழுதையை வெளியே இழுத்துக் கொண்டுவிடு..."
கடை பையன் வந்து கையைப் பிடித்து இழுத்தான்.
" ஐயா.மன்னிச்சுருங்க...இந்த ஒரு தடவை
மன்னிச்சுருங்க....".காலை விடாமல் கெஞ்சினாள்.
காலை உதறி உள்ளே சென்றுவிட்டார் செல்வரத்தினம்.
கடைசிவரை மன்னிக்கவே இல்லை.
"தப்பு செய்தவர்களை மன்னிக்கக் கூடாது என்பது
செல்வரத்தினம் அகராதியில் எழுதி வைக்கப்படாத
தீர்ப்பு."
நேற்று நடந்ததுதான் இன்று மனதிற்குள் வந்து வந்து
போனது.
"இப்படி செய்தது பாவமா இல்லையா...."
மனதிற்குள் ஒரு தாவா நடந்தது.
பாவ அறிக்கை செய்யும் போது பாதிரியாரிடம் சொல்லி
மன்னிப்பு வாங்கிக் கொள்ளலாமா வேண்டாமா....
சீ....என்ன இது கோவிலுக்குப் போகும் நேரத்தில் கண்ட
கண்ட நினைப்பெல்லாம் வந்து....
ஒருமுறை மறுபடியும் பாவ அறிக்கையிட பாதிரியாரிடம்
சொல்லப் போகும் பாவங்களை மனதில் சொல்லிப் பார்த்துக்
கொண்டார்.
அவர் சொல்லப்போகும் பாவ அறிக்கை பட்டியலில்
அந்த ஏழையை மன்னிக்காதது இடம்பெறவில்லை.
Comments
Post a Comment