கொடியது கேட்கின்....
கொடியது கேட்கின்....
கொடியது எது என்று கேட்டு அறிய வேண்டும் என்று ஒரு
ஒரு பத்திரிகை நண்பர் கையில் மைக்கைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார்.
முதலாவது தண்ணீர் குடத்தை தலையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக சுமந்து வரும் ஒரு பெண்ணைப் பார்த்தார்.
"மேடம்....கொஞ்சம் நில்லுங்க .... உலகிலேயே கொடியது எது என்று சொல்ல முடியுமா ?" என்று கேட்டார்.
"பார்த்தா தெரியல....தண்ணீர் இல்லாம ஒரு கிலோமீட்டர் தூரம் போய் தண்ணீர் சுமக்கிற மாதிரி கொடியது எதுவும் இல்லை."..என்றார் அந்தப்பெண்.
இரண்டாவது நட்டநடு வெயிலில் காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் போய் "கொடியது என்று நீங்க எதை நினைக்கிறீங்க "என்று கேட்டார்.
" இந்த அனலுல வேலை பார்ப்பதை மாதிரி கொடியது
வேறு என்ன இருக்க முடியும்? " திருப்பிக் கேட்டார்
அந்தப் பெண்.
சரி பெண்கள் இரண்டுபேரிடம் கேட்டாயிற்று.
இனி ஆண்களிடம் கேட்போம் என்று நினைத்தபடி
பெட்டிக்கடையில் இருந்து பேசிக் கொண்டிருந்த ஒரு
பெரியவரிடம் போய் நின்றார்.
"ஐயா, இந்த உலகத்திலேயே கொடியது என்று நீங்க எதை நினைக்கிறீர்கள் "என்று கேட்டார்.
பெரியவர் ஏற இறங்க பார்த்துவிட்டு" என்னையா தம்பி கேட்கிறீங்க" என்றார்.
"ஆமாய்யா....உங்களைத்தான்...சொல்லுங்க" என்றார்
பத்திரிகையாளர்.
" என்னைக் கேட்டா இந்த வயசான காலத்துல தனிமையா கிடப்பதுதான் கொடியது என்பேன்" என்றார் பெரியவர்.
" அப்போ தனிமைதான் கொடுமை என்கிறீங்க"
" அதிலென்ன சந்தேகம்" தனது கருத்தில் உறுதியாக இருந்தார் பெரியவர்.
அப்போது கடைக்கு ஒரு பெண் வர கேள்வியை அவர் பக்கம் திருப்பினார் பத்திரிகை தம்பி.
" குடிகார கணவன்மார்கூட குடித்தனம் நடத்துகிறதுதான் கொடியதிலும் கொடியது" என்று ஒரே போடாக போட்டுவிட்டுச் சென்றார் அந்தப்பெண்.
சரி எல்லா பெரியவர்களிடமும் கருத்து கேட்டாயிற்று.
இனி படிக்கும் பிள்ளைகளிடம் போய் கேட்போம் என்று
ஒரு பள்ளி சிறுவனைக் கூப்பிட்டு" தம்பி கொடியது எது என்று கேட்க "
" படிப்புதாங்க எல்லாவற்றிலும் கொடியது "
என்றான் சிறுவன்.
இப்போது பத்திரிகை தம்பிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அப்படியே மெரினா பக்கம் நடக்க ஆரம்பித்தார்.
அங்கே காதலன் ஒருவன் தனியாக உட்கார்ந்திருந்தான்.
கடைசியாக இவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டு வைப்போம் என்று அருகில் சென்று கேள்வியைக் கேட்டு வைத்தார்.
" ஐயோ ,... கொடிதிலும் கொடிது காதலிக்காக காத்திருக்கும் இந்த நிமிடங்கள்தாங்க...."என்றான் அந்த வாலிபன்.
அப்போது பின்பக்கமிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது.
" தம்பி ... உன் சந்தேகம் தீர்ந்ததா இன்னும் இருக்கா..."
குரல் கேட்டுத் திரும்பினார்.
ஒரு வயதான பாட்டி கையில் கம்பு ஊன்றியபடி நின்றிருந்தார்.
" கொடியது பற்றி தெரியணுமா...".என்று கூறி சிரித்தார்.
"இவரிடம் கேட்டால் என்ன சொல்லிவிடப்
போகிறார். முதுமைதான் கொடியது என்பார் "என்ற
நினைப்போடு 'ஆம் 'என்றார் பத்திரிகை தம்பி.
" சொல்கிறேன் .....கேள் "என்று ஒரு பாடலையே
பாட ஆரம்பித்தார் பாட்டி.
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர் கையில் உண்பதுதானே !
பாடலைக்கேட்ட பத்திரிகை தம்பி அசந்து போய் நின்றார்.
கொடியது என்று ஆளாளாளுக்கு அவரவருக்கு நடப்பதுதான்
கொடியது என்று சொல்லிக் கொண்டிருக்க
இது என்ன புதுக்கொடுமையாக இருக்கிறது..
ஆனால் பாடியவர் ஔவை ஆயிற்றே.
"வாழ்க்கையில் கொடியது எது என்று கேட்டால் வறுமை மிகக் கொடியது என்பேன்."
" வறுமை கொடியதா ? "
" அதைவிடக் கொடியது இன்னொன்று உண்டு கேள்.
அதுதான் இளமையில் வறுமை.
இளமையில் வறுமை கொடிதினும் கொடிது."
" இளமையில் வறுமை கொடிதினும் கொடிதா ?"
"தம்பி இன்னும் கேள்.......வறுமையாவது
பரவாயில்லை. அவற்றைவிடவும் கொடிது இன்னொன்று இருக்கிறது . அதுதான் தீராத் தொழுநோய்.
இவை இரண்டையும்விடக் கொடியது தொழுநோய்தான் "
என்றார் பாட்டி.
" தொழுநோய் அவ்வளவு கொடியதா ?"
" இவை மூன்றைவிடவும் கொடியதும் இருக்கு தம்பி அதுதான் அன்பில்லா மனைவியோடு வாழ்வது்
அன்பில்லாதவளோடு வாழ்தல் நான் இதுவரை
கூறியவை எல்லாவற்றை விடவும் கொடியது."
" பாட்டி... இவ்வளவுதானா... இன்னும் பெரிய பட்டியல்
தயாரித்து வைத்துள்ளீரா? "
"இதற்கே இப்படி சலிப்படைந்தால் எப்படி.....
" இன்னும் கொடுமைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பான கொடுமை ஒன்று உண்டு தம்பி....அதுதான் அன்பில்லா மனைவி கையால் பரிமாறும் உணவை உண்பது .....
அதாவது அன்பில்லாதவளோடு குடித்தனம் நடத்துவது போல கொடியது உலகில் வேறு எதுவுமே கிடையாது" என்றார் பாட்டி.
" நாம் கொடிது என்று நினைத்துக் கொண்டிருப்பது எல்லாம் ....
இதுவரை மக்கள் கொடியது் என்று கூறியது எல்லாம்....ஒரே குழப்பமாக இருக்கிறதே"
" அது எல்லாம் அவரவர் தன்னை பற்றி எழுதி
வைத்திருந்த தீர்ப்பு.
இதுதான் உண்மையாக கொடியது பற்றிய எனது
கணிப்பு .."என்று கூறியபடி விடுவிடுவென்று நடந்து
மறைந்தார் பாட்டி.
ஔவை சொன்னா அதில் உண்மை இல்லாமலா
இருக்கும் !
Comments
Post a Comment