பெண்ணின் ஏழு பருவப் பெயர்கள்

                              பெண்ணின் ஏழு பருவங்கள்

          

இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு

இன்பந் தரும்படி வாய்த்த நல் அமுது

கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்

கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு

தனிமை சுவையுள்ள சொல்லை- எங்கள்

தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!


                                                    _   பாரதிதாசன்.
                                                   

தமிழை நாளும் கற்றும் கற்பித்தும் பார்.
தமிழின் இனிமையும் வளமையும் புரியும்.

 சொல்வளம் இல்லாத மொழி 

நாளடைவில் நலிந்து போகும்.

சொல்வளமும் பொருள் வளமும் மிக்க 

மொழியால் மட்டுமே கால வெள்ளத்தில் 

எதிர்த்து நின்று பீடு நடை போட முடியும்.


 தமிழ் சொல்வளமிக்க மொழி என்பதை 

படிக்குந்தோறும் உணர முடியும்.

பருவங்களுக்கு ஏற்ப மலர்

பெறும் பெயர்கள்தான் எத்தனை! எத்தனை!

நகை, முகை, மொக்குள், அரும்பு, மொட்டு,

 மலர், அலர், வீ,செம்மல் என்று பரிணாம

வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு பெயரைத்

தாங்கி நிற்கும் வளமான மொழி

நம் தமிழ்மொழி.

இப்படி பருவங்களுக்கு ஏற்ப

பெயர் கொடுத்தும்  அழைத்தும் 

எழுதியும் வந்த திறத்தால்

 தமிழ் வளமான மொழியாக இன்றும்

இளமையாய் கன்னித்தமிழாய்

வாடாமல் வாழ்ந்து

கொண்டிருக்கிறது.


 மலரினும்  இனியராம்  மங்கைக்கும்

ஏழு பருவப் பெயர்கள் தந்து அழைத்து

வந்திருக்கின்றனர் தமிழர்

என்பதை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் 

கூறி வந்துள்ளன.
            
         
உலா இலக்கியத்துக்கான இலக்கணம் 

கூறும்போது இலக்கண நூல்கள்

 ஏழு பருவப் பெண்கள் பற்றி கூறுகின்றன.

  பேதை  ,  பெதும்பை  ,  மங்கை  , 

  மடந்தை  ,  அரிவை  ,

 தெரிவை  ,பேரிளம் பெண்  

எனும் ஏழு பருவத்துப்

 பெண்களும் உலா வரும் தலைவனைக் 

கண்டு  அவன்மீது காதல் கொண்டு 

வருந்துவதாக உலா இலக்கியம்

கூறுவதைக் காணலாம்.


பருவங்கள் ஏழு என்பதில்

யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால்     இந்த ஏழு பருவ மகளிரின்

 அகவையைக் குறிப்பிடுவதில் 

இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன.


பன்னிரு பாட்டியல் என்ற இலக்கணநூல் ஏழு பருவ 

பெயர்களை அவற்றிற்குரிய வயதுபடி தெளிவாக

 குறிப்பிட்டுள்ளது.
          
  1.       பேதை         (   ஐந்து முதல்

 எட்டு வரை)

  "   பேதைக்கு யாண்டே ஐந்து முதல் எட்டே "
                       
   2.       பெதும்பை      (ஒன்பதும் பத்தும்)          

 "  பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும் "

          
   3.        மங்கை  ( பதினொன்று முதல்

  பதினான்கு வரை )              

"மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்

திரண்ட பதினா லளவும் சாற்றும்  "
          

  4.     மடந்தை    ( பதினைந்து முதல் 

பதினெட்டு வரை)                

"   மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
     திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும் "
           
          
  5.    அரிவை  (பத்தொன்பது முதல் இருபத்து

நான்கு வரை )                    

 "அரிவைக்கு யாண்டே அறு நான்கு என்ப "


  6.  தெரிவை  (இருபத்தைந்து முதல்

இருபத்தொன்பது வரை )                  

  " தெரிவைக்கு யாண்டே இருபத்தொன்பது "

           

   7.   பேரிளம் பெண். ( மும்பது முதல்

முப்பத்தாறு வரை )        

  "   ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது

  பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப "

          
   ஆனால் சூடாமணி என்னும் நூல்  கீழ்க்கண்டவாறு

  பெண்களின் பருவ வயதை வகைப்படுத்தியுள்ளது.
        
  பேதைவய தேழாம் பெதும்பை

பதி னொன்று-  மங்கை

மாதே பதின்மூன்றா கும் 

மடந்தை     _ யோதுபதி

னாறரிவை  யாமிருபத் தைந்து

முப்ப தொன்தெரிவை

பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு  "

என்கிறது.


பேதைக்கு வயது ஏழு

பெதும்பை பதினொன்று

மங்கை பதிமூன்று

மடந்தை பதினாறு

அரிவை இருபத்தைந்து

தெரிவை முப்பது

பேரிளம்பெண் நாற்பது

என்று சூடாமணியில்

 குறிப்பிடப்பட்டுள்ளது.

      
 பேதை  :   

பிறந்து, தவழ்ந்து, எழுந்து,

 நடந்து , விழுந்து, ஓடியாடி

 ஏன் ...எதற்கு... எப்படி ...என்று

 நம்மை ஓராயிரம்

கேள்விகள் கேட்டு நிற்கும் பருவம்.
           
பெதும்பை   :  

 பள்ளியிலும் வீட்டிலும் குறும்பு செய்து 

  அடி  வாங்கி ஆனந்தித்து 

உல்லாசமாய் உலகை சுற்றி

வரும் பருவம்.

 மங்கை    :    

பூப்பூப்பது போல மலர்ந்து

 நிற்கும் பருவம்   

           
 மடந்தை     :    

தான் நினைப்பதுதான்  சரி 

என்று ஒரு மாயையான   

உலகில் சஞ்சரிக்கும் பருவம் .
            
 அரிவை    :  

வெளி உலகைப் பற்றிய புரிதல்

கொஞ்ச ம்ம்மகொஞ்சமாக    வளரும் பருவம் .
           
தெரிவை         :

 திருமணம் முடித்து  வாழ்க்கையை

என்றால் என்ன என்பதைப்

புரிந்து கொள்ளும் பருவம்.   

 
பேரிளம் பெண்.      :  

ஒரு முழுமையான அறிவு பெற்று   

சமூகத்தில் ஒரு உயர்நிலையை

அடைந்து நிற்கும் பருவம்.

          
 ஆண்களின் பருவப் பெயர்கள்

    
 ஆணின் பருவ வயதினை
கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளனர்.
                  

  விடலை            12     _     24

 காளை               24     _    36

  மீளி                    36    _    48

 மறவோன்          48    _    60   

 திறவோன்           60     _    72

 முதுமகன்             72     அகவைக்கு  மேல்

மீளி என்பதற்கு வீரன்   ,மறம்  , தலைவன்  

 போன்ற பல பொருள்கள் உண்டு .


ஆண்கள் பருவப் பெயர்களின்  

இன்னொரு   பட்டியலும் உண்டு.


   பிள்ளை          _     குழந்தைப் பருவம்

    சிறுவன்        _       பாலப்பருவம்

    பையன்      _      பள்ளிப்பருவம். 

     காளை      _          காதற் பருவம்

    தலைவன்  _         குடும்பப் பருவம்

    முதியோன் _      தளர்ச்சிப் பருவம்

      கிழவன்    _          மூப்புப் பருவம்

பெண்களைப்பற்றி இன்னும் சில...

 பிறந்தது முதல் எட்டு வயது வரை சிறுமி.

பூப்படைந்து திருமணம் ஆகும்வரை கன்னி.

 திருமணம் ஆகிய பின்னர்  பெண்.

குழந்தைப் பருவத்திற்கும் வளர்ச்சி 

முற்றுப்பெற்ற பருவத்திற்கும்  

இடைப்பட்ட காலத்தை வளரிளம் 

பருவம்   

இப்படி மாறுபட்டப் பெயர்கள்.


அப்பப்பா இத்தனை பெயர்களா?

வியப்பாக இருக்கிறதல்லவா!


 
மொழி ஆளுமை என்பது தெளிவான 

புரிதலோடு  சொற்களை மிகுதியாக 

அறிந்து கொண்டு அவற்றை

பயன்படுத்தும்போதுதான் ஏற்படும்.

 ஆரவாரமில்லாமல் சிந்தையில் விந்தை

 ஏற்படுத்தும் மொழி தமிழ்மொழி

என்பதில் இப்போது யாருக்கும் மாற்றுக் கருத்து

இருக்க முடியாது.

 தமிழுக்கும்   அமுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள்  உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் -இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்-இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர் -இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் !

                                ( தமிழுக்கும் அமுதென்று...)

என்று பாரதிதாசன் இதனால்தான்

பாடியிருப்பாரோ!



   "
                                                            _   
          

           


           

Comments

Popular Posts