தாயோடு அறுசுவை போம்
தாயோடு அறுசுவை போம்
"தாயில் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை"
பாடலில் மனதைப் பறி கொடுக்காதோர்
எவரும் இருக்க முடியாது.
பாடியவர் குரலும் பாடலின் கருத்தும்
திரும்பத் திரும்ப வந்து நம்மைத்
தட்டி எழுப்பும்.
கணக்குப் போடாமல் தருபவள் தாய்.
பெற்றோருக்கு கணக்குப் போட்டு மாதம்
ஒரு மகன் என்று கஞ்சி ஊற்றும்
பிள்ளைகள் உள்ள காலம் இது.
பங்குபோட்டுக் கொடுத்தாலும் தன் பங்கையும்
பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு
மிச்சம் இருப்பதை உண்பவள் தாய்.
தான் உண்ணும் உணவு கஞ்சியாக இருந்தாலும் ...
பிள்ளைகளுக்கு சுவையாக சமைத்துக்
கொடுத்து பிள்ளைகள் உண்பதைக்
கண்டு இன்பம் காண்பவள் தாய்.
அம்மாவின் சாப்பாட்டுக்கு அடிமை ஆகாதவர்
எவரும் இலர்.
சிறு பிள்ளையில் இருந்தே அம்மா
தயாரித்துத் தந்த உணவுக்கு நம் நாக்கு
அடிமைபட்டுப் போனது.
சுவையான உணவு சாப்பிட வேண்டும்
என்பதுதான் அனைவரின் ஆசை.
சுவை இல்லாமல் சப்பென்று இருக்கும்
உணவை உண்ண யாரும் விரும்புவதில்லை.
பசி ருசி அறியாது.
பசித்திருக்கும்போது கையில் கிடைத்ததைச்
சாப்பிட்டுவிட்டு அப்படியே போய்க்
கொண்டே இருப்போம்.
பசியில்லாத நேரத்தில் எந்த உணவைக்
கொடுத்தாலும் ஆயிரம் குறை சொல்லுவோம்.
பிடிக்கலையா... அது சரியில்ல ....
இது சரியில்ல என்று சாப்பாட்டில்தான்
குறை கண்டுபிடிப்போம்.
நம் நாக்கு சுவைக்கு அடிமைப்பட்டாயிற்று.
அதனால்தான் பெரிய நகரங்களில் ருசி
ஓட்டல்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் எப்படித்தான் ருசியாக சாப்பிட்டாலும்
அப்பப்போ... "என் அம்மா கைப்பக்குவம் போல்
உனக்கு வரவே வராது.
எங்க அம்மா குழம்பு வைத்தால் நாலு
தெருவுக்கு மணக்கும்...கூடுதலாக இரண்டு
அகப்பை வாங்கி சாப்பிடலாம் போல்
இருக்கும் " என்று கூறி மனைவியிடம்
வாங்கிக்கட்டிய கணவன்மார்கள்
நிறைய பேர் உண்டு.
தைரியசாலிகள் வாய்விட்டு சொல்லிவிடுவர்.
மற்றவர்கள் மனதிற்குள் வைத்து
வெம்பிக் கொண்டிருப்பர்.
அம்மா சமையலுக்கு அப்படி ஓர் ஈர்ப்பு உண்டு.
அம்மா சமையல் என்றால் ஒரு சுவை மட்டுமல்ல...
அதில் அறுசுவையும் இருக்கும்
என்பது அனைவரின் நினைப்பு...
அப்படி ஒரு கணிப்பு...
அனைவரின் கணிப்பு மட்டும் இல்லைங்க...
நம்ம ஔவைப் பாட்டியின் கணிப்பும்
நினைப்பும் அதுதாங்க...
இதோ ஔவை சொல்வதைக்
கேளுங்கள்.
தாயோ டறுசுவை போம்
தந்தை யோடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் _ ஆயவாழ்
உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும்போம்"
என்கிறார் ஔவை.
தாயை இழந்த பின்னர் அறுசுவை உணவு
கிடைக்கவே கிடைக்காது. பின்னர் அறுசுவை
என்ற பேச்சையே மறந்துவிட வேண்டியதுதான்
பார்த்துப் பார்த்து சமைப்பவர் அம்மா .
அம்மாவின் உணவில் சுவையோடு சேர்ந்து
அன்பும் இருக்கும்.
கரிசனம் இருக்கும் .
உடல் நலம் பேணல் இருக்கும்.
அதனால்தான் அது அறுசுவை உணவாகிவிடுகிறது.
அப்படியானால் அறுசுவை என்றால்
இனிப்பு ,கசப்பு ,புளிப்பு, துவர்ப்பு ,
உவர்ப்பு ,கார்ப்பு என்ற ஆறு சுவைகள்
இல்லையா என்று கேட்கத் தோன்றும்.
கண்டிப்பாக அப்படி இருக்கவே இருக்காது.
எல்லா சுவையும் சரியான அளவில் போட்டுச்
சமைக்கப்படும் உணவு
சுவையான உணவாக இருக்கும்.
மாற்றுக் கருத்து இல்லை.
இருந்தாலும் பிள்ளையின் உடம்புக்கு...
இதுபிடிக்கும் .....இதுபிடிக்காது ....
இது ஒத்துக்கும்...இது ஒத்துக்காது
என்று பார்த்துப் பார்த்து சமைப்பவர் அம்மா.
அந்த உணவுதான் அறுசுவை உணவு.
அதனால் அம்மாவை இழந்தால் கூடவே
அன்போடு கலந்த அறுசுவை
உணவையும் இழந்துவிடுவோம்
என்கிறார் ஔவை.
தாய் போய்விட்டால் அறுசுவை
உணவு என்ற நினைப்பையே
மறந்துவிட வேண்டியதுதான் .
இரண்டாவதாக நாளும் உழைத்து
நம்மைக் காப்பாற்றுபவர் அப்பா.
அப்பா இல்லை என்றால் அடுத்த வேளை
உணவுகூட பல குடும்பங்களில்
கேள்விக்குறியாகிவிடும்.
உடல் உழைப்பைக் குடும்ப நலனுக்காகக்
குத்தகைக்கு விட்டு பொருள் சம்பாதிப்பவர் அப்பா.
கல்வி கற்பதற்குத் தேவையான
பொருளாதாரத்தைக் கொண்டு வந்து
தருபவர் அப்பா.
அதுமட்டுமல்ல...ஊரைக் காட்டி ...
உலகத்தைக் காட்டி ...அறிவைத் தருபவர் அப்பா.
வெளி உலக அறிவு அப்பாவால்தான்
ஒரு குழந்தைக்குக் கிடைக்கிறது.
தந்தையால் மட்டுமே அறிவைத் தர முடியும்.
அதனால்தான் தந்தையை இழந்து விட்டால் ....
பல வீடுகளில் குழந்தைகள் பள்ளிக்குச்
செல்ல முடியாமல் இடைநிற்றலுக்கு உள்ளாகின்றனர்.
தந்தையை இழந்துவிட்டால்
கல்வியறிவு கிடைக்காமலே போய்விடும்
என்கிறார் ஔவை.
மூன்றாவதாக பிள்ளைகள்.
பெற்றோர் கண்ணுக்குமுன் பிள்ளைகளின்
இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பிள்ளைகளை இழந்துவிட்டால் ....
மொத்த செல்வத்தையுமே இழந்தவர்களாகி
விடுவோம்.
அதனால்தான் பிள்ளைகளை
மக்கட்செல்வம் என்று செல்வமாகவே பார்க்கிறோம்.
என் பிள்ளையே போய்விட்டது
இனி எனக்கு உலகில் என்ன இருக்கிறது?
என்று பெற்றோர் புலம்பித் தவிப்பதைக்
கண்டிருப்போம்.
பிள்ளையை இழந்துவிட்டால்...
ஒட்டு மொத்த செல்வத்தையும் இழந்து
நிராதரவாய் நிற்கும் மனநிலைக்குத்
தள்ளப்படுவோம் என்கிறார் ஔவை.
நான்காவதாக....
உறவுகளை இழந்துவிட்டால் ...
கூடிவாழும் வாழ்வையே இழந்து விடுவோமாம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
நல்லது கெட்டதுக்கு முன்னே
வந்து நிற்க உறவுகள் வேண்டும்.
உறவுகளை இழந்துவிட்டால்....
கூடி வாழும் இன்பம் இல்லாமலே
போய்விடும் என்கிறார் ஔவை.
ஐந்தாவதாக...
நம் உடன் பிறப்புகளை இழந்துவிட்டால் ....
மனபலம் மொத்தமும் பறிபோய்விடும்.
உடல் பலம் குன்றிய நிலை
ஏற்படும்.
யாரிடமும் துணிச்சலாக நின்று
தோள் தட்ட முடியாது.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.
உடன்பிறப்பை இழந்துவிட்டால்...
ஒற்றை மரமாக நிற்பது போன்று
ஒரு தனிமைக்குள் தள்ளப்படுவோம்
என்கிறார் ஔவை.
தாயை இழந்துவிட்டால்....
அறுசுவை உணவு போகும்.
தந்தையை இழந்துவிட்டால்....
கல்வி போகும்.
பிள்ளைகளை இழந்துவிட்டால் ...
மொத்த செல்வமே போய்விடும்.
உறவுகளை இழந்துவிட்டால்...
கூடி வாழும் இன்பம் இல்லாமல் போகும் .
உடன்பிறப்பை இழந்துவிட்டால்.....
வலிமை இழந்து போவோம்.
இப்படி ஒவ்வொருவரையும் இழந்துவிட்டால்...
ஏதோ ஒன்றை இழந்தவர்கள் ஆகிவிடுவோம்.
இந்த இழப்புகள் நம்மை வெகுவாக
பாதிப்பதாகதான் இருக்கும்.
மறுப்பதற்கில்லை.
ஆனால் கடைசியாக ஒரு இழப்பைச்
சொல்கிறார் பாருங்க.....
அப்படியே கலங்கிப் போவீங்க. ...
ஆமாங்க.. தாலியை இழந்துவிட்டால்.....
தாலி கட்டியவரை இழந்துவிட்டால் ....
மனைவியானவள் எல்லாமே இருந்தும்
ஒன்றுமே இல்லாதவள் போல்
ஆகிவிடுகிறாள்.
அதன்பிறகு நமக்கு எதுவுமே இல்லை
என்ற ஒரு வெறுமை வந்துவிடும்.
நடைபிணமாகிவிட்டேன் என்று
புலம்ப ஆரம்பித்துவிடுவாள்.
இதுதான் உண்மை.
மனைவியை இழந்துவிட்டால்....
கணவருக்கும் எல்லோரும் இருந்தும்
ஒருவரும் இல்லாதது போல்
ஒரு வெறுமைதாங்க...
சரியான உணவு கிடைக்காது.
கவனிப்பு இருக்காது.
மனைவிக்கு கணவனும்
கணவனுக்கு மனையும்தாங்க... பலம்.
கணவனும் மனைவியுமாய் சேர்ந்து
இருப்பதுவரைதான் வாழ்க்கை.
சுகம்...மகிழ்ச்சி...கொண்டாட்டம் எல்லாம்.
அந்தத் தாலி பிணைப்பு இல்லாமல் போய்விட்டால்....
சுவை போச்சு ....அறிவு போச்சு.
செல்வம் போச்சு...
வாழ்வு போச்சு...வலிமை போச்சு...
மொத்தத்தில் எல்லாமே போயே போச்சுங்க...
கண்கலங்குதுல்ல....
இதுதாங்க உண்மை என்கிறார் ஔவை.
அருமை யான கருத்து இன்னமும் தொடர்ந்து கேட்கவேண்டும் போல இருக்கு.🙏
ReplyDeleteஉங்களுடைய கருத்துக்கு
ReplyDeleteநன்றி.சில பாடல்கள்
நம்மை மறுபடியும்
மறுபடியும்
படிக்கத் தூண்டுவது
உண்மை.