ஆற்றுதல் என்பது....
ஆற்றுதல் என்பது.......
நல்லந்துவனார் என்னும் சங்ககாலப் புலவர்
சேரர் வழி வந்தவர்.
இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில்
39 பாடல்கள்
கிடைக்கப் பெற்றுள்ளன.
இவர் கலித்தொகையில் பாடிய
ஒன்பது வரிகள் நவமணிகளாக
அறம்பேசும் அரிய கருத்துக்களைக்
கொண்டதாக அனைவராலும்
கொண்டாடப்படுகின்றன.கலித்தொகை
என்றதும் தூக்கி முன் நிறுத்தப்படும்
முத்தாய்ப்பான ஒன்பது வரிகள்
கலித்தொகைக்கே மணிமுடி சூட்டி
அழகு பார்த்த வரிகள்.
பலராலும் பலகாலம் எடுத்தாளப்
பட்டு அணிந்து அணிந்து ஆனந்தித்த
நவமணி மாலையாக இந்த ஒன்பது
வரிகளும் அமைந்திருப்பது
கலித்தொகைக்கும் பெருமை.
தமிழுக்கும் பெருமை.
தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை.
தமிழரின் பண்பாட்டை,
மெய்யுரைகளை அறம்சார்ந்து
நெறிப்படுத்திச் சொல்லிச் சென்ற வரிகள்
காலத்தால் அழியாத அறம் பேசும் மொழிகள்.
கீழ்க்கண்ட கலித்தொகைப் பாடல் அதற்குச்
சான்றாக அமையும்.
ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப்படுவது தன் கிளை செறா மை
அறிவனெப்படுவது பேதையார் சொல் நோற்றல் செறிவெனப்படுவது கூறியது மறாமை
நிறைவெனப்படுவது மறை பிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோகாது உயிர் வௌவல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
கலித்தொகை பாடல் 133
விளக்கம் :
ஆற்றுதல் என்பதாவது
வறுமையில் வாடுபவருக்குப் பொருள்கொடுத்து
அவர்கள் துன்பம் நீங்க
கைகொடுத்து உதவுதலாகும்.
வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை.
போற்றுதல் என்பதாவது
தன்னோடு நெருங்கிய உறவு வைத்துக்
கொண்ட உறவினைக் கைவிட்டுவிடாது
சேர்ந்து வாழ்வதாகும்.
பண்பு என்று சொல்லப்படுவது யாதெனில்
உலகோர் வாழும் வழக்கறிந்து புகழ்தரு
நெறி நின்று உலகத்தோடு
ஒத்து வாழ்தலாகும்.
அன்பு எனப்படுவது நம்மீது
அன்பு செலுத்தும் நம் உறவுகள் மீது
சினம் கொள்ளாது அவர்களை அரவணைத்து
வாழ்தலாகும்.தொடர்புடையாரிடத்து
எப்போதும் அன்பு குறைவுபடாதபடி
பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
அறிவு என்று சொல்லப்படுவது யாதெனில்
அறிவில்லாதவர் சொல்லும் பொருளற்ற
சொற்களைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்துக்
கொள்ளுதலாகும்.
செறிவு எனப்படுவது யாதெனில்
முன்னும் பின்னும்
புரட்டி,மாறுபடக் கூறாது
தான் சொன்ன சொல்லை மறவாது
காப்பாற்றுதலாகும்.
நிலம் பெயரினும் சொல் பெயரா
பண்பு இருக்க வேண்டும்.
நிறை எனப்படுவது யாதெனில் மறைக்க
வேண்டிய செயல்களைப் பிறர்
அறியாவண்ணம் மறைத்து
வாழ்வதாகும்.
முறை எனப்படுவது யாதெனில் குற்றம்
செய்தவனுக்கு இரக்கம் காட்டாது
உறவென்றும் பாராது நடுநிலை நின்று
நீதி வழங்கித் தண்டனைப் பெற்றுத்
தருதலாகும்.
பொறை எனப்படுவது யாதெனில் தன்னைப்
போற்றாதவர் அதாவது தன்னை மதிக்காதவர்
செய்யும் பிழைகளைப் பெரிதுபடுத்தி
அவர்கள்மீது பகை கொள்ளாது
பொறுத்துக் கொள்ளுவதாகும்.
Comments
Post a Comment