ஆற்றுதல் என்பது....

                            ஆற்றுதல் என்பது.......

"யாதும் ஊரே யாவரும் கேளிர் "
என்று சொல்லி உலகத்தையே தன்பக்கம் 
திரும்பிப் பார்க்க வைத்தவர்
கணியன் பூங்குன்றனார்.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே "
என்று தானங்களில் முதல்தானம்
அன்னதானம் என்று
சொல்லித் தந்தவர் குடபுலவியார்.

"கற்கை நன்றே
கற்கை நன்றே
பிச்சைப் புகினும்
கற்கை நன்றே"
என்று சொல்லி நறுந்தொகை பக்கம்
திரும்பிப் பார்க்க வைத்தவர்
அதிவீரராம பாண்டியன்.

"உண்ணீர் உண்ணீர் என்று
ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடியுறும்"
என்று கோடிகளை நம்
கைகளில் அள்ளித் தந்தவர் ஔவை.

இன்னும் ஏராளம் சொல்லிக் 
கொண்டே போகலாம் 

இப்படி ஒவ்வொரு புலவரும்
தம் பாடல்களில் எங்கோ ஓர்
இடத்தில் தம் பெயரை
முத்திரை பதித்து விட்டுச் 
சென்றிருக்கின்றனர்.

அந்த வரிசையில் 
நவமணிமாலை ஒன்று கோத்து
தமிழை அழகு செய்த புலவர்
நல்லந்துவனார்.

யார் இந்த நல்லந்துவனார்?

நல்லந்துவனார் என்னும் 
ஒரு சங்ககாலப் புலவர் 
சேரர் வழி வந்தவர்.
இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் 
39 பாடல்கள்
கிடைக்கப் பெற்றுள்ளன.
இவர் கலித்தொகையில் பாடிய 
ஒன்பது வரிகள் நவமணிகளாக
அறம்பேசும் அரிய கருத்துக்களைக் 
கொண்டதாக அனைவராலும்
கொண்டாடப்படுகின்றன.

கலித்தொகை என்றதும்
 தூக்கி முன் நிறுத்தப்படும்
முத்தாய்ப்பான ஒன்பது வரிகள்
கலித்தொகைக்கே மணிமுடி சூட்டி
அழகு பார்த்த வரிகள்.
பலராலும் பலகாலம் எடுத்தாளப்
பட்டு அணிந்து அணிந்து ஆனந்தித்த
 நவமணி மாலையாக இந்த ஒன்பது
வரிகளும் அமைந்திருப்பது
கலித்தொகைக்கும் பெருமை. 
தமிழுக்கும் பெருமை.
தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை.
 தமிழரின் பண்பாட்டை,
மெய்யுரைகளை அறம்சார்ந்து
நெறிப்படுத்திச் சொல்லிச் சென்ற வரிகள்
காலத்தால் அழியாத அறம் பேசும் மொழிகள்.
              
கீழ்க்கண்ட கலித்தொகைப் பாடல் அதற்குச்
சான்றாக அமையும்.

 ஆற்றுதல் என்பது 
ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது
 புணர்ந்தாரைப் பிரியாமை      
பண்பெனப்படுவது 
பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப்படுவது 
தன் கிளை செறாமை 
அறிவனெப்படுவது
 பேதையார் சொல் நோற்றல்
செறிவெனப்படுவது 
 கூறியது மறாமை 
 நிறைவெனப்படுவது
 மறை பிறர் அறியாமை 
 முறையெனப் படுவது 
கண்ணோடாது
உயிர் வௌவல்
 பொறையெனப்படுவது 
போற்றாரைப் பொறுத்தல்
 
                      கலித்தொகை பாடல்  133
                                                     
   விளக்கம் :
                                                     
ஆற்றுதல் என்பதாவது
வறுமையில் வாடுபவர்க்குப் பொருள்கொடுத்து
அவர்கள் துன்பம் நீங்க
கைகொடுத்து உதவுதலாகும்.
வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை.
   
போற்றுதல் என்பது யாதெனில் 
தன்னோடு நெருங்கிய உறவு வைத்துக் 
கொண்ட உறவினை ஒருபோதும்
கைவிட்டுவிடாது கடைசிவரை
சேர்ந்து வாழ்வதாகும்.
  
பண்பு என்று சொல்லப்படுவது யாதெனில்
ஊருடன் கூடி வாழும் வழக்கறிந்து 
புகழ்தரு நெறி நின்று அனைவரோடும்
ஒத்து வாழ்தலாகும்.

அன்பு எனப்படுவது யாதெனில் 
நம்மீது அன்பு செலுத்தும் 
நம் உறவுகள் மீது
சினம் கொள்ளாது அவர்களை அரவணைத்து
வாழ்தலாகும்.தொடர்புடையாரிடத்து
எப்போதும் அன்பு குறைவுபடாதபடி
பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

அறிவு என்று சொல்லப்படுவது யாதெனில் 
அறிவில்லாதவர் சொல்லும்  பொருளற்ற 
சொற்களைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்துக் 
கொள்ளுதலாகும்.
   
செறிவு எனப்படுவது யாதெனில் 
முன்னும் பின்னும்
 புரட்டிப் புரட்டி மாறுபடக் கூறாது 
தான் சொன்ன சொல் பிறழாது
ஒரே நிலையில் இருந்தலாகும்.
நிலம் பெயரினும் சொல் பெயரா 
பண்பு இருக்க வேண்டும்.

நிறை எனப்படுவது யாதெனில் 
மறைக்க வேண்டிய செயல்களைப் பிறர் 
அறியாவண்ணம் மறைத்து
வாழ்வதாகும்.
   
முறை எனப்படுவது யாதெனில்
 குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாது
உறவென்றும் பாராது நடுநிலை நின்று  
நீதி வழங்கித் தண்டனைப் பெற்றுத்
தருதலாகும்.
   
பொறை எனப்படுவது யாதெனில்
 தன்னைப் போற்றாதவர் அதாவது 
தன்னை மதிக்காதவர் தன்னோடு
மாறுபாடு கொண்டவர்
செய்யும் பிழைகளைக்கூட பெரிதுபடுத்தாது
அவர்கள்மீது எந்தவிதத் பகைமையும்
கொள்ளாது 
பொறுத்துக் கொள்வதாகும்.
   
ஆற்றுதல்,போற்றுதல்,
பண்பு,அன்பு,
அறிவு, செறிவு,
நிறை,முறை,பொறை
ஆகிய ஒன்பது பண்புகள் பற்றிய
நம் ஐயப்பாட்டைத் தீர்த்து வைப்பதற்காக 
நவமணி மாலை ஒன்றைப்
பாடலாகத் தொடுத்து நம்
கைகளில் தந்து
அணிந்து மகிழுங்கள்.
போற்றிக் கொண்டாடுங்கள் 

இதுதான் அறம்.
இவைதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய
நெறிமுறை. இவைதான் உங்கள் மதிப்பை
உயர்த்தும். இப்படிப்பட்ட அறத்தினைக்
கொண்டதாக உங்கள் வாழ்க்கை
இருக்க வேண்டும் . அதுதான் சிறப்பு என்று
சொல்லிவிட்டார்  நல்லந்துவனார்.

ஒன்பது வரிகளிலும் ஒன்பது விதமான
வாழ்க்கை நெறிகள்.வழிகாட்டுதல்கள்.
நவமணி மாலையாகக் தொடுத்து
அணிந்து உங்களை அழகுபடுத்திக்
கொள்ளுங்கள் என்று கைகளில் தந்துவிட்டார்.

அப்பப்பா ....யாரிந்த நல்லந்துவனார்?
யாரிந்த நல்லந்துவனார்?....
புருவம் உயர்த்திப் பார்க்க வைக்கிறதல்லவா?

திரும்பவும் முதலிலிருந்து படியுங்கள்.
நல்லந்துவனார் யார் என்பதற்கு
விடை கிடைக்கும்.

Comments

Popular Posts