வல்லினம் மிகும் இடங்கள்
வல்லினம் மிகும் இடங்கள்
சிலர் பேசும்போது அழகாக
பேசுவதுபோல் இருக்கும்.
எழுதும்போது அங்கங்கே பிழை இருக்கும்.
இதற்குக் காரணம் என்ன?
இரண்டு சொற்கள் சேரும்போது
எந்தெந்த இடங்களில் எல்லாம்
வல்லினம் மிகும் எந்தெந்த
இடங்களில் எல்லாம் வல்லினம்
மிகாது என்பதைப் பற்றிய
போதிய பயிற்சி இல்லாமையே
ஆகும்.
இந்தக் கட்டுரையில் எந்தெந்த
இடங்களில் எல்லாம் வல்லினம்
மிகும் என்பதைப் பார்ப்போம்.
இரண்டு சொற்கள் சேரும்போது
முதலில் எழுதப்படும் சொல்லை நிலைமொழி
என்போம்.
இரண்டாவது அதனோடு இணையும் சொல்
வருமொழி எனப்படும்.
எடுத்துக்காட்டாக
அந்த வீடு என்ற சொல்லை
எடுத்துக்கொள்வோம்.
அந்த என்பது நிலைமொழி.
வீடு என்பது வருமொழி.
இந்த இரண்டு சொற்களையும்
எழுதும் போது ,
அந்த+ வீடு = அந்த வீடு
என்று எழுதுகிறோம்.
ஆனால் ,
அந்த + பள்ளி = அந்தப் பள்ளி
என்று எழுதுகிறோம்.
அந்த வீடு என்று எழுதும்போது
அந்தவ் வீடு என்று எழுதுவதில்லை.
அந்தப் பள்ளி என்று எழுதும்போது
ஒற்று மிகுந்து வந்துள்ளது.
காரணம் என்ன?
வருமொழி முதலில் வல்லினம்
வந்தால் மட்டுமே ஒன்று மிகும்.
அதுவும்
க, ச ட. , த. ப. ற. என்ற
ஆறு வல்லின எழுத்துகளும்
மிகுந்து வருவதில்லை.
வல்லின எழுத்துகளில் ட , ற
ஆகிய இரண்டு எழுத்துகளும்
மொழிமுதல் வராது.
ஆதலால் ஏனைய க,. ச, த ,ப
ஆகிய நான்கு
வல்லின எழுத்துகளும் வருமொழி
முதல் எழுத்தாக வரும்போது மட்டுமே மிகும்
என்பதை நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டும்.
நான்கு வல்லின எழுத்துகளும் வருமொழி
முதல் எழுத்தாக அமையும்போது
எந்தெந்த இடங்களில் எல்லாம்
ஒற்று மிகுந்து வரும்
என்பதைப்பற்றி இந்தக்
கட்டுரையில் காண்போம்.
கட்டுரைக்குள் நுழையும் முன்னர்
க , ச , த ,ப என்ற எழுத்துகள்
அப்படியேவும் வரலாம். தமது
வருக்க எழுத்தாகவும் வருமொழி
முதல் எழுத்தாக வரலாம் என்பதை
நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
வருக்க எழுத்துகள் மறந்து போயிருந்தால்
உங்கள் நினைவூட்டலுக்காக,
ப, பா, பி, பீ ,பு ,பூ ,பெ ,பே ,பை ,பொ ,போ ,பௌ
வல்லினம் மிகும் மிகா
இடங்களைப்பற்றி
நமக்கு நிறைய ஐயப்பாடு
எழுதல் உண்டு.
அந்த ஐயப்பாட்டினை ஓரளவாவது
போக்க உதவுவதாக இந்தக் கட்டுரை
இருக்கும் என்று நம்புகிறேன்.
நிதானமாக படித்துக் கொண்டே வந்தால்
நன்கு புரியும்.
1. அந்த , இந்த , எந்த, போன்ற சுட்டு
சொற்களின் பின் வரும் க, ச , த ப
மிகும்.
அந்த + பையன் = அந்தப் பையன்
அந்த + சட்டி = அந்தச் சட்டி
இந்த + புத்தகம். = இந்தப் புத்தகம்
இந்த + தகடு. = இந்தத் தகடு
எந்த + கம்மல் = எந்தக் கம்மல்
2. அங்கு, இங்கு , எங்கு,
அப்படி, இப்படி, எப்படி
போன்ற வினாச்சொற்களின்
பின் வரும் வல்லினம்
( க, ச, த, ப)மிகும்.
எங்கு + சென்றாய் = எங்குச் சென்றாய்
இங்கு + கண்டேன் = இங்குக் கண்டேன்
அப்படி + போடு = அப்படிப் போடு
இப்படி+ போடு= இப்படிப் போடு
எப்படி + படித்தாய் = எப்படிப் படித்தாய்
3.. அத்துணை. , இத்துணை ,
எத்துணை என்னும் சொற்களுக்குப்
பின் வரும் வல்லினம்
(க, ச, த, ப)மிகும்.
அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
எத்துணை + கொடுமை = எத்துணைக் கொடுமை
4. அவ்வகை , இவ்வகை , எவ்வகை
என்னும் சொற்களுக்குப் பின் வரும்
வல்லினம் (க, ச, த, ப )மிகும்.
அவ்வகை + காடு = அவ்வகைக் காடு
இவ்வகை + பந்தல் = இவ்வகைப் பந்தல்
எவ்வகை + பெயர் = எவ்வகைப் பெயர்
5. அ, இ ,உ என்னும் சுட்டெழுத்தின் பின்னும்
எ என்னும் வினா எழுத்தின் பின்னும்
வரும் வல்லினம்( க, ச, த, ப) மிகும்.
அ + பெட்டி = அப்பெட்டி
இ+ பெண் = இப்பெண்
எ + திசை = எத்திசை
எ + கடல் = எக்கடல்
6. மற்ற , மற்று , மற்றை என்னும்
சொற்களுக்கு பின் வரும்
வல்லினம் (க, ச, த, ப) மிகும்.
மற்ற + கலை. = மற்றக் கலை
மற்று + சிலை = மற்றுச் சிலை
மற்றை + பயன் = மற்றைப் பயன்
7.இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும்
உடன் தொக்கத்தொகையில்
வல்லினம் ( க, ச, த, ப)மிகும்..
இப்போது உருபும் பயனும் உடன்
தொக்கத் தொகை என்றால்
என்ன என்பதை நாம் தெரிந்தாக வேண்டும்.
வேற்றுமை உருபு மட்டுமன்றி
அதன் பொருளும் மறைந்து
வரும் சொற்களை உருபும் பயனும்
உடன் தொக்கத் தொகை என்று கூறுவோம்.
நீர் + குடம் = நீர்க்குடம்
( நீரையுடைய குடம் )
இதில் இரண்டாம் வேற்றுமை
உருபு 'ஐ ' மறைந்திருக்கிறது.
மோர் + குடம். = மோர்க்குடம்
(மோரை உடைய குடம்)
மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல்
(மலரை உடைய கூந்தல் )
தயிர் + பானை = தயிர்ப்பானை
(தயிரை உடைய பானை )
தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த்தொட்டி
(தண்ணீரை உடைய தொட்டி)
8. மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்கத் தொகையில்
வல்லினம்( க, ச, த, ப )மிகும்.
இதிலும் மூன்றாம் வேற்றுமை
உருபு 'ஆல்'.
இந்த மூன்றாம் வேற்றுமை
உருபான 'ஆல்' மறைந்து நிற்கிறது.
இரும்பு. + தூண் = இரும்புத்தூண்
(இரும்பால் ஆகிய தூண்)
மரம் + பெட்டி = மரப்பெட்டி
( மரத்தால் ஆகிய பெட்டி)
தங்கம் + தாலி = தங்கத்தாலி
( தங்கத்தால் ஆகிய தாலி )
9. நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்கத் தொகையில்
வல்லினம் (க, ச, த, ப )மிகும்.
நான்காம் வேற்றுமை உருபு 'கு'
மறைந்து நிற்கிறது.
குடை + கம்பி = குடைக்கம்பி
( குடைக்குக் கம்பி )
சட்டை + துணி = சட்டைத் துணி
( சட்டைக்குத் துணி)
10. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்கத்தொகையில்
வல்லினம்( க, ச, த, ப )மிகும்.
ஐந்தாம் வேற்றுமை உருபு 'இன் '
மறைந்து நிற்கிறது.
அடுப்பு + புகை = அடுப்புப்புகை
(அடுப்பின் புகை)
விழி + புனல் = விழிப்புனல்
வாய் + பூட்டு. = வாய்ப்பூட்டு
11. இரண்டாம் வேற்றுமை விரியில்
வல்லினம்( க, ச, த, ப ) மிகும்.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ'
வெளிப்படையாக வந்துள்ளது.
நூலை + படி = நூலைப்படி
பூவை + கொடு = பூவைக் கொடு
பாலை+ குடி = பாலைக்குடி
மண்ணை +தோண்டு = மண்ணைத்தோண்டு
விண்ணை + பார் = விண்ணைப்பார்
12. நான்காம் வேற்றுமை விரியில்
வல்லினம் ( க, ச, த, ப ) மிகும்.
நான்காம் வேற்றுமை உருபு 'கு'
வெளிப்படையாக வந்துள்ளது.
தம்பிக்கு + கொடு= தம்பிக்குக் கொடு
வீட்டுக்கு + செல் = வீட்டுக்குச் செல்
புத்தகத்தை + தா = புத்தகத்தைத் தா
குளத்தை + பார் = குளத்தைப் பார்
13. நான்காம் வேற்றுமைத் தொகையில்
நிலைமொழி அஃறிணைப் பெயராக
இருந்தால் வருமொழியில்
வல்லினம்( க , ச, த , ச)
வருமானால் மிகும்.
நான்காம் வேற்றுமை உருபு
'கு 'மறைந்து வருவது நான்காம்
வேற்றுமைத் தொகை எனப்படும்.
காஞ்சி+ தலைவன் = காஞ்சித் தலைவன்
( காட்சிக்குத் தலைவன்)
படை + தளபதி= படைத் தளபதி
(படைக்குத் தளபதி)
நிலைமொழியில் உள்ள காஞ்சி,
படை ஆகியவை அஃறிணைப்
பெயர்கள் என்பதை நினைவில் கொள்க.
14. ஆறாம் வேற்றுமைத் தொகையில்
நிலைமொழி அஃறிணைப் பெயராக
இருந்து வருமொழி முதல் வல்லினம்
(க,ச,த ச) வந்தால் மிகும்.
ஆறாம் வேற்றுமை உருபு 'அது'
மறைந்து வருவது ஆறாம்
வேற்றுமைத் தொகை எனப்படும்.
நாய் + குட்டி = நாய்க்குட்டி
( நாயினது குட்டி)
கிளி + பிள்ளை = கிளிப்பிள்ளை
(கிளியினது பிள்ளை )
15. ஏழாம் வேற்றுமைதொகையில்
வல்லினம்( க,ச,த,ச ) மிகும்.
ஏழாம் வேற்றுமை உருபு 'கண்'
சென்னை + பல்கலைக்கழகம் = சென்னைப் பல்கலைக்கழகம்
(சென்னையின்கண் பல்கலைக்கழகம்)
குகை + புலி = குகைப்புலி
(குகையின்கண் புலி)
16 பண்புத்தொகையில்
வல்லினம்(க, ச, த, ப) மிகும்.
வண்ணம் , வடிவம் ,அளவு , சுவை
முதலிய பண்பை
விளக்குவதற்கான சொற்களில்
'ஆகிய' என்னும் இடைச்சொல்
மறைந்து நிற்பது பண்புத்தொகை
எனப்படும்.
(எல்லா பண்புத் தொகைகளிலும்
வல்லினம் மிகாது.
சில விதிவிலக்குகளும் உண்டு)
சிவப்பு + துணி = சிவப்புத் துணி
பச்சை + கிளி = பச்சைக்கிளி
வெள்ளை + குதிரை = வெள்ளைக்குதிரை
பொய் + செய்தி = பொய்ச் செய்தி
புது + குடம் = புதுக்குடம்
மெய் + பொருள் = மெய்ப்பொருள்
இனிப்பு + பட்டம் = இனிப்புப் பண்டம்
17. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்
வல்லினம்(க, ச, த, ப ) மிகும்.
பொதுப்பெயரோடு சிறப்புப்பெயரோ
சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ
சேர்ந்து ஒரு பொருளை உணர்த்துவது
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
எனப்படும்.
தாமரை. + பூ. = தாமரைப்பூ.
தாமரை என்பது சிறப்புப்பெயர்.
பூ என்பது பொதுப்பெயர்.
சாரை. + பாம்பு = சாரைப்பாம்பு.
சாரை என்பது சிறப்புப் பெயர்
பாம்பு என்பது பொதுப் பெயர்
மார்கழி + திங்கள் = ,மார்கழித்திங்கள்
மார்கழி என்பது சிறப்புப் பெயர்
திங்கள் என்பது பொதுப் பெயர்
18 உவமைத்தொகையில்
வல்லினம் ( க, ச, த, ப ) மிகும்.
உவமைக்கும் சொல்லுக்கும் இடையில்
வரும் போன்ற' என்ற உவமை உருபு
மறைந்து வருவது உவமைத்தொகை
எனப்படும்.
மலர் + கண் = மலர்க்கண்
( மலர் போன்ற கண் )
தாமரை + கை = தாமரைக்கை
( தாமரை போன்ற கை)
மலை + தோள் = மலைத்தோள்
(மலை போன்ற தோள்)
சங்கு + கழுத்து = சங்குக் கழுத்து
( சங்கு போன்ற கழுத்து)
புலி + சீற்றம் = புலிப் சீற்றம்
( புலி போன்ற சீற்றம் )
19 அரை, பாதி என்னும்
எண்ணுப் பெயர்களின் பின்வரும்
வல்லினம் ( க, ச, த, ப )மிகும்.
அரை + காணி = அரைக்காணி
அரை + படி = அரைப்படி
பாதி + பங்கு = பாதிப்பங்கு
பாதி + செலவு = பாதிச்செலவு
20.. ஓர் எழுத்து சொற்கள் சிலவற்றில்
வல்லினம்( க, ச, த, ப )மிகும்.
(எல்லா ஓரெழுத்து சொற்களின் பின்னர்
வரும் வல்லினம் மிகாது.
ஒருசில இடங்களில் மிகாமலும் வருதல்
உண்டு என்பதை நினைவில் கொள்க)
தை , தீ , பூ , கை , மை ஆகிய ஓரெழுத்துச்
சொற்களின் முன் வரும் வல்லினம்
மிகும்.
தை + பாவை = தைப்பாவை
தீ + சுடர் = தீச்சுடர்
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
கை + குழந்தை = கைக்குழந்தை
மை + கூடு = மைக்கூடு
கை + பாவை = கைப்பாவை
தை + பொங்கல் = தைப்பொங்கல்
21.. ஈறுகெட்ட எதிர்மறை
பெயரெச்சத்தின் பின் வரும்
(க, ச, த, ப)
வல்லினம் மிகும்.
ஒரு வினைச்சொல் அதன் கடைசி
எழுத்து இல்லாமல் வந்து
அதனை அடுத்துவரும் பெயர்ச்சொல்லுக்கு
விளக்கம் தருவதாக இருந்தால்
அது ஈறு கெட்ட எதிர்மறை
பெயரெச்சம் எனப்படும்.
செல்லாக்காசு
( செல்லாத காசு)
வளையாச் செங்கோல்.
(வளையாத செங்கோல் )
அழியாப்புகழ்.
(அழியாத புகழ் )
ஓயாத் தொல்லை
( ஓயாத தொல்லை )
வணங்காத் தலை
(வணங்காத தலை )
கேளாச்செவி
( கேளாத செவி)
ஓடாக் குதிரை
( ஓடாத குதிரை )
22.. வன்றொடர் குற்றியலுகரத்தின்
பின் வரும் (க, ச, த, ப)வல்லினம் மிகும்.
வல்லினமெய் எழுத்துகளை
அடுத்துவரும் கு, ,சு ,டு. , து, பு. , று
வன்றொடர் குற்றியலுகரமாகும்.
நாக்கு
கச்சு
பாட்டு
பத்து
உப்பு
பற்று
இந்த வன்றொடர் குற்றியலுகரத்தை
அடுத்து வரும் க ,ச ,த ,ப மிகும்.
நாக்கு + பூச்சி = நாக்குப்பூச்சி
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை
பட்டு + சேலை = பட்டுச்சேலை
பாட்டு + பாடினான் = பாட்டுப் பாடினான்
பற்று + கொடி = பற்றுக்கொடி
இனிப்பு +சேவை = இனிப்புச் சவை
உப்பு + கல் = உப்புக்கள்
23.. மென்றொடர் குற்றியலுகரத்தின் பின் வரும்
வல்லினம் (க ,ச, த ,ப )மிகும்.
ங் ஞ் ட் ந் ம் ன் என்னும் மெல்லின
எழுத்துகளின் பின்
குற்றியலுகர எழுத்துகளான கு,சு,டு
து,பு ,று ஆகியவற்றுள் ஏதேனும்
ஒன்று வந்தால் அது மென்றொடர்
குற்றியலுகரம் எனப்படும்.
நொங்கு + தின்றான் = நொங்குத் தின்றான்
பஞ்சு + பொதி = பஞ்சுப் பதி
வண்டு + கடித்தது = வண்டுக் கடித்தது
மருந்து + சீட்டு = மருந்துச்சீட்டு
பாம்பு + கடி. = பாம்புக்கடி
பன்றி + குட்டி = பன்றிக்குட்டி
24. . உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன்
( க , ச, த ,ப )வல்லினம் மிகும்.
பரிசு + தொகை = பரிசுத்தொகை
மரபு + கவிதை = மரபுக் கவிதை
முதுகு + கண்டு = முதுகுத் தண்டு
(சில இடங்களில் மிகாமலும் வரலாம்.)
25. முற்றியலுகரத்தின் பின் வரும்
வல்லினம்( க , ச , த , ப ) மிகும்.
ஒரு சொல்லின் இறுதியில் வரும்
உகரம் தன் மாத்திரை அளவான
ஒரு மாத்திரையில் ஒலிக்குமானால்
அது முற்றியலுகரம் எனப்படும்.
திரு+ கோவில் = திருக்கோவில்
பொது + சொத்து = பொதுச்சொத்து
புது + பை = புதுப்பை
திரு + குறள் = திருக்குறள்
அணு + கழிவு = அணுக்கழிவு
வலு + சேர்க்கும் = வலுச்சேர்க்கும்
பொது + பணி = பொதுப்பணி
தெரு + கூத்து = தெருக்கூத்து
குழு + பட்டியல் = குழுப் பட்டியல்
விழு + புண் = விழுப்புண்
பசு + தோல் = பசுத்தோல்
உணவு + பொருள் = உணவுப் பொருள்
நிறைவு + பேச்சு. = நிறைவுப் பேச்சு
பரிசு + பொருள் = பரிசுப் பொருள்
இரவு + காட்சி = இரவுக்காட்சி
26. உயிரீற்றுச் சொற்களின்
பின் வரும் ( க, ச, த, ப )
வல்லினம் மிகும்.
மழை + காலம் = மழைக்காலம்
இதில் 'ழை' நிலைமொழி ஈறு.
ழ் + ஐ = ழை
ஆதலால் இது உயிரீற்றுச்
சொல் எனப்படுகிறது.
பனி + துளி = பனித்துளி
27.. சால , தவ முதலான
உரிச்சொற்களின் பின் வரும்
வல்லினம் (க , ச, த, ப ) மிகும்.
(சால, உறு, தவ, நனி ஆகிய
நான்கும் உரிச் சொற்கள்
எனப்படும்.)
சால + பேசினான் = சாலப் பேசினான்
தவ + பெரிது = தவப் பெரிது
28.. ட ,ற ஒற்று இரட்டிக்கும்
உயிர்த்தொடர் மற்றும் நெடில் தொடர்
குற்றியலுகரங்களின்
பின் வரும் வல்லினம்
( க, ச, த, ப)மிகும்.
ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாடு + பற்று = நாட்டுப்பற்று
29.தனிக்குறிலை அடுத்து வரும்
'ஆ 'காரத்தின் பின் வரும்
வல்லினம் (க, ச, த, ப )மிகும்.
வினா + குறி = வினாக்குறி
பலா + பழம் = பலாப்பழம்
30.ஆய் , போய் ,எனஎன்னும்
வினை எச்சங்களுக்குப் பின் வரும்
வல்லினம் ( க , ச, த, ப ) மிகும்.
கருத்தாய் + கேட்டான் = கருத்தாய்க் கேட்டான்
அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச் சொன்னார்
போய் + பார் = போய்ப் பார்
என + கூறினார் = எனக்கூறினார்
தருவதாய் + சொன்னார் = தருவதாய்ச்சொன்னார்
போய் + சேரும் = போய்ச்சேரும்
31. முன்னர் , பின்னர் என்னும்
இடைச்சொற்களுக்குப் பின் வரும்
வல்லினம் ( க, ச, த, ப )மிகும்.
முன்னர் + கண்டோம் = முன்னர்க் கண்டோம்
பின்னர் பேசுவோம் = பின்னர்ப் பேசுவோம்
வல்லினம் ... என்று கூறும்போது
க் , ச் , த் , ப் என்ற நான்கு
எழுத்துகளை மட்டும்
நினைவில் வைத்தால்
போதுமானது.
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாசிக்கும் போது சற்று கவனம் செலுத்தினால்
எளிதில் புரிந்து கொள்ளலாம்.
முயற்சியும் பயிற்சியும் இருந்தால்
போதும்.
வல்லினம் மிகும் இடங்களுக்கு பல உதாரணங்கள் கொடுத்து ஐயம் நீங்க பதிவிட்டது மிகச்சிறப்பு.
ReplyDeleteசிறப்பாகத் தெளிவாகத் தொகுத்துப் பதிவிட்டமைக்கு நன்றி! இதிலேயே நான் மூன்று ஒற்றைப் பயன்படுத்தியுள்ளேன். நன்றி!.
ReplyDeleteமீன்பிடி திருவிழா.. இங்கே இடையில் த் என்ற ஒற்று வருமா?
ReplyDelete