விறகு அடிச்ச கம்பு

   

                     விறகு அடிச்ச கம்பு


 "பாட்டி...பாட்டி" ஓங்கி கதவைத் தட்டினேன்.

 "  யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கேம்மா...

செத்த நில்லு...." குரல் கொடுத்தாவ பாட்டி.

ஒரு பத்துநாளா பாட்டிக்குச் சுத்தமா கண்ணு

பத்தல. ஒரு ஆளு எதுருல வந்தாலும் திருதிருன்னு

முழிச்சிகிட்டு நிப்பாவ.

தட்டுத்தடுமாறி வந்து எப்படியோ வந்து

கதவைத் திறந்துட்டாவ.

"பாட்டி வாங்க...வாங்க எங்க வீட்டுக்கு வாங்க..."
 கையைப் பிடித்து இழுத்தேன்.

 "யாரும்மா....மூத்தவன் பிள்ளையா?"

"மூத்தவன் பிள்ளையோ இளையவன்

பிள்ளையோ...நான் செல்வன்  அதுதான்

எனக்குத் தெரியும் "வேண்டுமென்றே

எறுக்குமாறாக பதில் சொல்லி வைத்தேன்.

 "செல்வனா....பள்ளிக்கூடத்துக்குப் போகல"

 "போகல...அதனால்தான உங்களை கூப்பிட

வந்துருக்கேன்."


  " ஏன் போகல...அம்மா வீட்டுல இல்லையா?"

  
"இருக்காவ...இருக்காவ.... எல்லாரும் 

வீட்டுலதான் இருக்காவ... "


"பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?"

 " வாத்தியாரும் அடிக்கல...வாசல் கதவும்  அடிக்கல...போகல்ல
என்றால் போகல்ல....விடுவியா...

தொணதொணத்துக்கிட்டு .."

" பள்ளிக்கூடம் போகாமல் இருக்கலாமா மக்கா..."

"நானும் பள்ளிக்கூடம் போயிட்டா உங்களை

யாரு கூப்பிட வருவா "

"என்னைக் கூப்பிடணுன்னு பள்ளிக்கூடம்

போகாமல் இருந்தியாக்கும். 

என்னை கொஞ்சம் தேரம் சொல்லி

கூப்பிட வந்தா பத்தாதா?  "

"பத்துமா பத்தாதா என்பதைப் பற்றிப்

பிறகு பேசுவோம்....அதுவரை நீங்க

பட்டினியாவா கெடப்பிய..."

"பள்ளிக்கூடம் போகாமல் இருப்பது

தப்பில்லியா மக்கா..."

"இங்கே எதுதான் தப்பில்லாமல் இருக்கு?"

 "உங்க அப்பாவும் இப்படித்தான்.

பள்ளிக்கூடம் போன்னா ...எங்கேயாவது

போய் ஒளிஞ்சிகிடுவான்.

பொழுது சாய... பள்ளி விடும் நேரத்தில

டாண்ணு வீட்டுல வந்து நிப்பான்.

இப்புடி கள்ளத்தனம் பண்ணி பண்ணி

 படிக்காமையே போயிட்டான்."

"படிச்சிருந்தா இந்த ஊரையே வாங்கி

போட்டுருப்பாவளோ?

"ஒரு வாத்தியாரு வேலையாவது 

பாத்திருக்கலாமில்லியா"

"இப்போதும்  என்ன...  வீட்டுல சட்டாம்பிள்ளை

வேலைதான் பார்த்துகிட்டு இருக்காவ...

போதும்...போதும் உங்க வியாக்கியானம் எல்லாம் புறப்படுங்க...புறப்படுங்க.."

" எங்க போகணும்னு இப்படி ஆலா பறந்துகிட்டு

நிக்கா"

" இன்றைக்கு என்ன நாளு....சொல்லுங்க பார்ப்போம் "

" எனக்கு என்ன தெரியும். கண்ணா தெரியுது.."

" எங்க வீட்டுக்கு போக வேண்டிய நாள் ...
வாங்கன்னா...வாங்க..."

"உங்க அம்ம கூட்டிட்டு வரச் சொன்னாளா?"

"அம்ம எதுக்குச் சொல்லணும். அதுதான்

ஊர்காரங்களே சொல்லிட்டாவள..."

பாட்டிக்கு  இதற்குமேல் ஒன்றும் கேட்கத்

தோன்றல.

அந்த நினைப்பு வந்ததும் மனசுக்குள்

 ஒரு வலி வந்து சுருக்கென்று குத்திய போல

பறக்க பறக்க முழிச்சாவ.


பாட்டிக்கு எங்க அப்பாவோட சேர்த்து

நாலு பிள்ளைகள்.

அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்குமுன்

நான் பட்டப்பாடு நாய்பட்டப்பாடு...பேய்பட்டப்பாடுதான்

என்று சொல்லி சொல்லி வருத்தப்படுவாவ.

சூரியன் உதிக்கும் முன்னே காட்டில் போய்

நிற்பாவளாாம்.

கீரை பறித்து வந்து வீடுவீடா வித்தாதான்

வயிறார கஞ்சி குடிக்க முடியுமாம்.

நாலு புள்ளைகளுக்கும் வயிறுநிறைய சோறு 

கொடுத்துட்டு பாட்டி நீத்தண்ணி குடிச்சியே

காலத்தை ஓட்டுனேன் என்பாவ.
   
 தாத்தாவுக்கு  கடலைக்காட்டு கங்காணி வேலை.

 காடு நல்லா விளைஞ்சா கூடுதலா  நாலு பக்கா

போட்டு குடுப்பாவளாம். அல்லது குடுத்ததை வாங்கிட்டு

வர வேண்டியதுதான் என்பாவ.

சில ஆட்கள்...

விளைஞ்சாலும் போட்டுக் கொடுக்க மாட்டாவளாம்.

கறாரா பேசுவாவளாம். நீரு என்ன எங்க 

விளையை மட்டுமா காவல் காத்தீரு என்று

கொடுப்பதற்கு முன்பாக ஆயிரம் கேள்வி

கேட்பாவளாம்.

தாத்தா எங்ககிட்ட கதை  கதையா சொல்லுவாவ.  

வயிற்றுப்பாட்டுகே

தகினத்தோம் போட்டுட்டுத்தான் இருந்துருக்காவ..

எங்க  பாட்டியும்  "ஓடி ஓடி உழைச்சதால

 கால்காசு சேர்க்க முடிந்தது.
 
 ஊரு மெப்புக்கு இல்லை என்று சொல்லாமல்

ஆளுக்கொரு வீடும் நாலு ஏக்கர் நிலமும்

 வாங்கி வைச்சிட்டேன்" என்று சொல்லி 

பாட்டி பீத்திக்கிடுவாவ.

 எப்படியோ பிள்ளைகளைக்  காப்பாற்றி

நாலு சனங்களப்போல 

ஆளாக்கி கலியாணத்தையும் பண்ணி வைச்சாச்சி

என்று பாட்டி மெத்தனமா எல்லா நிலத்தையும்

பிள்ளைகள் பெயருக்கு எழுதி கொடுத்துபுட்டாவ...


ஒரு உருண்டை சோறானாலும் 

நாலு பேருக்கும் சமமாக உருட்டி

கொடுத்துட்டு  வளர்த்த பாட்டி நிலத்தையும்

சமமாக பிரிச்சுக் கொடுத்திருந்தாவ.


கடைசி காலத்தில கஞ்சி தண்ணி

ஊத்துவாவ என்று தம்பி மகளை மூத்த

மகனுக்கு கலியாணம் பண்ணி வச்சாவளாம்.

அதுதான் எங்க அம்ம...

பாக்கியாட்டி எங்க அம்ம பாட்டியை

கண்ணுல காணவிடமாட்டாவ....

வீட்டுக்கு வந்துட்டா போதும். தூரத்துல வரச்சுலயே

கிழவி வாரால...அப்பா இல்லன்னு

சொல்லிடு என்று சொல்லி திருப்பி

அனுப்பிவிடப் பார்ப்பாவ....

அப்பா இதை எல்லாம் கேட்டுகிட்டுதான்

வீட்டுக்குள்ள இருப்பாவ....

 "ஏன் இப்படி செய்யா என்று ஒரு

வார்த்தை கேட்க மாட்டாவ...

எனக்கு கோபம் கோபமா வரும்.

 எங்க அம்மகிட்ட "எதுக்கு இப்படி பண்ணுற....

பாட்டி வயசான காலத்துல...பாவம் இல்ல..."

என்று சொல்லி சண்டை போடுவேன்.

"பாட்டி இங்க வரதுல உனக்கு என்ன

பிரச்சினை என்று ஒவ்வொரு நேரத்தில

கேட்பேன். "

"பேசாம வாயை பொத்திட்டுப் போயி

நான் சொல்லச் சொன்னதை சொல்லு

இல்ல...வெளுத்துபுடுவேன் "என்று 

விளக்குமாறைத் தூக்கிட்டு வந்துடுவாவ.


நான் பாட்டிகிட்ட போயி "அப்பா இல்ல

பாட்டி"ன்னு சொன்னா போதும் உடனே பாட்டி

அதை நம்பிகிட்டு "காலையிலே கஞ்சிதண்ணி குடிக்காம

வயலுக்குப் போயிட்டானாக்கும்" என்று

அவர்கள் பாட்டுக்குத் திரும்பிப் போயிடுவாவ.


 தாத்தா இருப்பது வரை எங்ககிட்ட

இருந்து பாட்டி எதுவும் எதிர்பார்க்க மாட்டாவ...

சொல்லப்போனால் பாட்டிதான் எங்களுக்கு

பள்ளிக்கூடம் போகும்போது 

ஐஞ்சு பத்து கையில் கொடுத்து ஏதாவது

வாங்கிதின்னுங்க என்று தருவாவ.

அப்போ எல்லாம்  நாங்க பார்க்காம இருப்பது 

பாட்டிக்குப்  பெருசா தெரியல...

இருவரும் பொங்கி ஆக்கி தின்னுகிட்டு

 நல்லாதான் இருந்தாவ.


இருக்கிறதை வைத்து ஏதோ காலத்தை 

ஓட்டினாவ .

போனமாசம் தாத்தா திடீரென இறந்துபோனாவ.

இப்போ விசயம் விவகாரமாகிப் போச்சு.

தாய்க்கு நான் சோறு கொடுக்க மாட்டேன்.

நீ கொடுக்க மாட்டேன் என்று 

ஆளாளாளுக்கு ஒதுங்க ஆரம்பிச்சுட்டாவ..

ஊரு கூடி பேச்சு வார்த்தை நடத்தவேண்டிய

அளவுக்கு எங்க வீட்டு விவகாரம் சந்தி

சிரிச்சிப் போச்சு.

எங்க அப்பாவுக்கு கொஞ்சம் ஆசைதான்.

ஆனால் அன்னப்பழம் ஒத்துகிடமாட்டாள என்று

கொஞ்சம் பம்முனாவ. 

கடைசி சித்தப்பாவுக்கும் மனசுக்குள்ள 

ஆசைதான்.
ஆனால்..சித்தி பிடிவாதமா" உங்க அம்மையை

கூட்டி வந்தா நான் எங்க அம்ம வீட்டுல

போய் இருந்துகிடுவேன் "என்று பயங்காட்டி

வச்சிருந்தாவ.

அதனால அவியளாலேயும் பேச முடியல.  

யாரும் முழுசா  ஒத்துப்போகவில்லை...

அப்போதுதான் ஊர்ப்பெரிய தாத்தா,
 
" யாராவது ஒருத்தர் தாயை வீட்டுல 

வச்சி பாருங்கப்பா..."

என்று சொல்லிப் பார்த்தாவ.

"அது எப்படி ஏத்துக்க முடியும்..."

முந்திக் கொண்டவ நடுல சித்தப்பா.

"ஆமா...பார்க்கிறது பார்த்துடலாம்.
கிடையில விழுந்துட்டா என்றால்
யாரு பார்க்கிறது..."  படுக்கையில்

விழுந்தால் என்னால் பாடு பார்க்க முடியாது

என்பதை சொல்லி ஒதுங்கி நிற்க பார்த்தாவ

மூணாவது சித்தப்பா.

"பெத்த தாயை ஆளாளுக்கு இப்படி ஏலம் போடுறீகள...

இது நல்லாவா இருக்கு..."

தன் அக்காளுக்கு இப்படி ஒரு நிலைமையா

என்ற வருத்தத்தில் பேசினாவ ஒரு தாத்தா .

" ஏன் அவ்வளவு பாசம் பொங்கிட்டு 

வருதுன்னா நீங்க கொண்டு 

வைத்து பார்க்கிறது."

சீறினாவ இளைய சித்தப்பா.

"என்னல...ஒருமாதிரியா பேசுறா....

சொத்தை எல்லாம் என் பேருக்கு எழுதி வை.

நான் உங்க அம்மைக்குச் செல்லச் சோறு

குடுக்கிறேன் "என்றாவ அந்த தாத்தா.

பதிலுக்கு ஒண்ணும் பேச முடியாம

திருட்டு முழி முழிச்சிகிட்டு நின்னாவ சித்தப்பா.

எனக்கு சிரிப்பாக வந்தது.

" அட...சும்மா இருங்கப்பா...

ஆளுக்கு ஒண்ண பேசிகிட்டு...

தாயை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பயக்க...

நீங்களெல்லாம் வாயும் பேச வேண்டியதுதான்"

கோபப்பட்டாவ  பெரிய தாத்தா.

" பெரிவங்க ...நீங்க   உங்க தீர்ப்பை
சொல்லுங்க  ....கட்டுப்படுவானுவ..."

என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாவ

இன்னொரு  தாத்தா.

"அப்போ...ஆளுக்கு ஒருமாசம் அவரவர் வீீட்டில் 

கூட்டிக்கொண்டு வைத்து

பெரியம்மாவுக்கு சோறு கொடுக்கணும் "என்று

பேசி முடிவு பண்ணி விவகாரத்தை முடித்து

வைத்தாவ  பெரிய தாத்தா.

எல்லோருடைய மூஞ்சும் உம்முன்னு 

போயிட்டு.பிறகு என்னங்க

பெத்த தாயை ஊரு காரங்க பார்ப்பாங்க

என்று நினைச்சாவளோ....

நான் மட்டும் வளர்ந்தவனாக இருந்திருந்தால்

நாலு கேள்வி நறுக்கென்று கேட்டுருப்பேன்.

இப்போ...எங்க  அன்னப்பழத்தைக் கண்டால்

எனக்கு பயம்..அதுதான் வாயை மூடிகிட்டு

இருக்கேன்.

மாசம் பொறக்க இரண்டுநாள்

இருந்ததால் யாரும்  வந்துபாட்டியை

 கூட்டிட்டுப் போகல...

 இன்று ஒன்றாம் தேதி.

இன்றிலிருந்து பாட்டிக்கு எங்க வீட்டுலதான்

சாப்பாடு.

அன்னப்பழம் பாட்டியை என்ன பாடு

படுத்தப்போறாளோ....நினைக்கவே

பாவமாக இருக்கு... அதுதான் நான் பள்ளிக்கூடம்

போகல..

பாட்டி வாங்க...

 கையைப் பிடித்தபடி  தெருவில் நடந்தேன்.
   
 எதிரில் வந்த ஒரு தாத்தா,

  "என்ன பெரியம்மா சௌக்கியமா" 

என்று விசாரிச்சாவ.
 
"ஆமாங்க...ஆளு தெரியல...யாருங்க"

" நான் தெற்குதெரு பலவேசம் மகன் 

மூத்தவன் மாடசாமி"

" ஐயா...நல்லா இருக்கியளா...
  கண்  கொஞ்சம் மங்கலா இருக்கு..
  ஒரு ஆளு இனம் தெரிய மாட்டேங்குது"
 
" ஆமா  ....பெரியம்மா  இப்போ எங்க
புறப்பட்டாப்புல  இருக்கு"

" மூத்தவன் மவன் வந்து கூப்பிட்டான்.
அதுதான் மூத்தவன் வீட்டுக்குப் போறேன்ய்யா..."

" அட...இன்று ஒண்ணாம் தேதி இல்ல..
இந்த மாசம் மூத்தவர் முறையா ? "

 பாட்டிக்குப் பதில் சொல்ல வாய் வரல.

" இன்றிலிருந்து  இன்னும் ஒரு மாசம்
எங்க வீட்டில்தான் பாட்டிக்கு  சாப்பாடு.  "

பெருமையாக கூறினேன்.

" ஆமா....நாலு புள்ளைகளும்
ஆளுக்கொரு மாசமா பெரியம்மாவ
பங்கு போட்டுகிட்டாவ....அதுதான்
பாவம் பெரியம்மா மூத்தவ மவன் 

வீட்டுக்குப் போகுதா.....

விறகு அடிச்ச கம்பு மேலும் கீழும்தான்"

என்று போகிற போக்கில் சொல்லிட்டுப்

போனாவ அந்த தாத்தா.

"அது என்ன பாட்டி ,விறகு அடிச்ச கம்பு

மேலும் கீழும்தான் என்று

இந்த தாத்தா சொல்லிட்டு போறாவ..."

என்று கேட்டேன்.

"அது ...சொன்னா உனக்குப் புரியாது...விடு"

என்றார் பாட்டி.

"சொல்லுங்க பாட்டி "என்று பிடிவாதம்

பிடித்துப் பார்த்தேன்.

"எனக்குத் தெரியாது உங்க அம்ம கிட்ட போய்

கேளு "என்றாவ பாட்டி.

அதுக்குள்ள எங்க வீடு வர

வாசலிலேயே முறைச்சிகிட்டு நின்னாவ

எங்க அம்ம...

அன்னப்பழம்  இருக்கிற மனநிலையில்

' விறகு அடிச்ச கம்பு மேலும்

கீழும்தான் 'என்றால் என்ன என்று

கேட்டால் பதில் சொல்லுவாவ என்றா 

நினைக்கிறீங்க..?

ம்கூம்...சட்டாப்பையால் சாத்து சாத்துன்னு

சாத்திப்பிடுவாவ...

உங்களுக்குத் தெரிஞ்சா நீங்களாவது எனக்கு

எழுதி அனுப்புங்களாம்...ப்ளீஸ்...




   
    
       
                 

Comments

  1. சிலர் தங்கள் கடமையை மறந்து முதியோர்களை தவிக்க விட்டுவிடுகிறார்கள்.பரிதாபம்!

    ReplyDelete
  2. விறகுக்குள்ளே கம்பு எத்தனை அடிகள் பட்டாலும் அது அங்கேயே மேலும் கீழும் தான் கிடக்கும்.
    அது போல குடும்ப பந்தத்தில் இணைக்கப்பட்டவர்கள் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அக்குடும்பத்திலேயே இருப்பர்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts