அரியது கேட்கின்....
அரியது கேட்கின்....
"பாட்டி....பாட்டி.."
"என்னப்பா... என்ன வேணும்..."
" அந்த சுட்டப்பழம் .....நீங்கதானே பாட்டி.."
" நான்தான்...இப்போ என்ன வேணும்."
"அதியமான் நெடுமான் அஞ்சி யாரு பாட்டி..."
"வள்ளல்...குடிகாக்கும் மன்னன்."
"அவர் உங்களுக்கு கொடுத்த நெல்லிக்கனி..."
"இனிமையானது....அரிதாக கிடைப்பது..."
" அரிதாக கிடைப்பதா...
அப்போ இந்த உலகிலேயே அரிது
நெல்லிக்கனிதான் இல்லையா பாட்டி..."
" உன் பேச்சில் விசமம் தெரிகிறதே...
வேறு ஏதாவது வேண்டுமா..."
"வேண்டும் பாட்டி ....
இந்த உலகில் அரிதானவை வேறு ஏதேனும்
உண்டா என்று தெரிந்து
கொள்ள வேண்டும் பாட்டி"
"ஏனில்லை...இதோ சொல்கிறேன் கேள்"
"அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடுநீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செயல் அரிது
தானமும் தவமும்தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே "
என்று ஒரே மூச்சில் பாடி முடித்துவிட்டு
விடுவிடுவென நடந்தார் ஔவை.
எளிமையாக இருக்கு இல்ல...
பாட்டு என்னவோ மேலோட்டமாக வாசிக்கும்போது
எளிமையானதாகத்தான் தெரியும்.
அதன் உள்ளே ஆழமான கருத்து புதைந்து
கிடப்பது இரண்டு மூன்றுமுறை வாசிக்கும்போது
புரியும்.
மானிடப் பிறப்பு என்பது அரிதாக கிடைக்கப்
பெற்ற ஒரு வாய்ப்பு.
இவ்வுலகில் ஒரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள
உயிர்கள் காணப்படுகின்றன.
உயிர்களுள் சிறப்பு வாய்ந்தது ஆறறிவு உள்ள
மானிடப்பிறவி.
இது எல்லா உயிர்களுக்கும் கிடைத்திட முடியாத
அரிய வாய்ப்பு.
அந்த அரிய வாய்ப்பைப் பெற்ற மானிடராக பிறத்தல்
நமக்குக் அரிதாகக் கிடைத்த சிறப்பல்லவா!
அதனால்தான் அரிதரிது மானிடராதல்
அரிது என்கிறார் ஔவை.
மானிடராக பிறந்தாலும் கூன், குருடு , செவிடு
மற்றும் வேறு எந்த குறைபாடுகளும் இல்லாமல்
பிறத்தல் அரிதினும் அரிது.
நாளும் நம் கண்முன்னே எத்தனை விதமான
மனிதர்களைப் பார்க்கிறோம்.!
எத்தனை எத்தனை நோய்கள்.!
எத்தனை விதமான குறைபாடுகள்.!
"காலுக்குச் செருப்பில்லையே என்று
வருந்தினேன். கால்களே இல்லாதவனைக்
காணும் வரை."என்பார்கள்.
எப்படித்தான் மாற்றுத்திறனாளிகள் என்று
சமுதாயம் பெருமையாகக் கூறிக் கொண்டாலும்
அதனால் அவர்கள் படும் வேதனை
அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
உடம்பு இப்படித்தான் இருக்கவேண்டும்
என்று யாரும் கேட்டுப் பெற முடியாது.
இந்த உயரத்தில், இந்த கலரில் இருக்க வேண்டும்
என்று யாரும் கேட்டோ ,பொருள்
கொடுத்தோ வாங்கி வந்துவிட முடியாது.
இதெல்லாம் ஒரு வரம்.
ஆதலால் கூன் ,குருடு ,செவிடு,பேடு இல்லாத
மானிடப்பிறவி வாய்த்தல் அரிதினும் அரிது.
எல்லாம் நலமாக அமைந்து விட்டது..
இனி என்ன என்று இருந்துவிட முடியுமா?
ஞானமும் கல்வியும் வேண்டுமே..
எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு
கிடைக்கிறது ?
இங்கே தான் ஔவை கையாண்ட ஒரு
சொல்லைக் கவனிக்க வேண்டும்.
" நயத்தல் அரிது" என்கிறார் ஔவை.
"கிடைத்தல் அரிது "என்றோ "பெறுதல்
அரிது "என்றோ ஔவை சாதாரணமாகச்
சொல்லிவிட்டு கடந்து செல்லவில்லை.
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதாம்.
' நயத்தல்' என்றால் 'விரும்புதல்.'
கற்க கற்கதானே ஞானம் வரும்.
அந்த கற்றலை எத்தனைபேர் விரும்பி
கற்றுக் கொள்கின்றனர்.
வேண்டா வெறுப்பாக கற்பவர்கள்
எண்ணிக்கைதான் மிகுதியாக இருக்கும்.
கடனே என்று பள்ளிக்குச் செல்பவர்கள்
எத்தனை பேர் ?
ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம்.
நயந்து படிக்கும்போது மட்டுமே அதன்
இனிமையை முழுமையாக நுகர முடியும்.
நயந்து படிப்பவர்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதாக
ஒரு சிலரே இருப்பர்.
அதனால்தான் ஔவை ஞானமும்
கல்வியும் நயத்தல் அரிது என்கிறார்.
எப்படியோ ...ஞானமும் கல்வியும்
பெற்றாகி விட்டது.
அதன்மூலமாக நல்ல பதவியும் வசதி
வாய்ப்பும் வந்து சேர்ந்துவிட்டன.
எத்தனை பேருக்கு தானம் செய்ய வேண்டும்
என்ற எண்ணம் வரும்.
தானுண்டு தன் வேலை உண்டு
தன் குடும்பம் உண்டு என்று
போய்க் கொண்டே இருப்பதுதான்
கற்றவர்களின் இயல்பு.
அடுத்தவர்களைப் பற்றிய நினைப்பே
இருக்காது.
எவ்வளவு நுட்பமாக கற்றவர்களைப் பற்றி
அறிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்.
தானம் செய்தால் மட்டுமே அதைச் சார்ந்து
எழும் மோனநிலையை அடைய முடியும்.
அதாவது தவ நிலை பெற முடியும்.
பற்று பாசங்களற்ற ஒரு உன்னத நிலை
வேண்டும்.
நோன்புகள் இருந்து இறைவனை வழிபடும்
பக்தி நிலை வந்து சேர வேண்டும்.
இது எத்தனைபேர் வாழ்க்கையில்
நடைபெற்றிருக்கும்?
அதனால்தான் தானமும் தவமும்
செய்வது என்பது அரிது என்கிறார்
ஔவை.
இந்த அரிதான செயல்களைச் செய்துவிட்டால்
தேவலோகம் தானாக திறந்து கொள்ளுமாம்.
எங்கிருந்து எங்கே கதையைக் கொண்டு
போய் முடிக்கிறார் பாருங்கள்.
பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள
அரிதான செயல்களைச் சொல்லி வந்த
ஔவை அரியவற்றை செய்து
கடந்து வந்துவிட்டால் எளிதாக மோட்சம்
சென்றுவிடலாம் என்று முத்தாய்ப்பான கருத்தைச்
சொல்லி முடிவுரை எழுதி வைத்துவிட்டுப்
போய் விட்டார்.
அரிது அரிது...ஔவை போன்ற
ஞானியைக் காண்டல் அரிது.
வேறென்ன சொல்ல முடியும்.
Comments
Post a Comment