அரியது கேட்கின்...

           அரியது எது?


 "பாட்டி....பாட்டி.."
   
   "என்னப்பா...   என்ன வேணும்..."
   
  " அந்த  சுட்டப்பழம் .....நீங்கதானே பாட்டி.."
   
சிரித்துக் கொண்டே ஔவை,
 "நான்தான்...இப்போ என்ன வேணும்.
உனக்கு?"என்றார்.
   
 "அதியமான் நெடுமான் அஞ்சி
 யாரு பாட்டி..?."
   
 "வள்ளல்...குடிகாக்கும் மன்னன்."
   
  "அவர் உங்களுக்கு கொடுத்த நெல்லிக்கனி...?"
   
   "இனிமையானது....அரிதாகக் கிடைப்பது..."
   
 "  அரிதாக கிடைப்பதா...?
   அப்படியானால் இந்த உலகிலேயே அரிது
   நெல்லிக்கனிதான் இல்லையா பாட்டி...?"
   
" உன் கேள்வியில் ஏதோ உள்நோக்கம்
இருப்பதுபோல்  தெரிகிறதே..
வேறு ஏதாவது வேண்டுமா...?"

"வேண்டும் பாட்டி ....வேண்டும்.
இந்த உலகில் அரிதானவை வேறு ஏதேனும்
உண்டா என்று தெரிந்து 
கொள்ள வேண்டும் பாட்டி"

"ஏனில்லை...அரிதானது எது 
என்றுதானே கேட்கிறாய்?
சொல்கிறேன் கேள்.."


"அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடுநீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செயல் அரிது
தானமும் தவமும்தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே "

என்று ஒரே மூச்சில் பாடி முடித்துவிட்டு
இன்னும் வேண்டுமா? என்பதுபோல
சிறுவனின் முகத்தையே பார்த்து நின்றார்
ஔவை.

பாடலைக் கேட்டு அப்படியே
மலைத்துப் போய் நின்றான் சிறுவன்.

உள்ளுக்குள் சிரித்தபடியே
விடுவிடுவென நடந்து
கடந்து போய்விட்டார் ஔவை.

ஒன்றா...?
இரண்டா...?
எத்தனை அரிது?
விரல்விட்டு எண்ணிப் பார்த்துக் கொண்டு 
நின்றான் சிறுவன்.

எண்ணிப் பார்த்தால் போதுமா?
சொல்ல வந்த பொருள் என்ன என்பதை
எண்ணிப் பார்க்க வேண்டாமா?

பொருள் என்ன என்பதை
நாமாவது எண்ணிப்பார்ப்போம்.
வாருங்கள்.

பாடல்  எளிமையாக இருக்கிறது 
இல்லையா?

பாட்டு என்னவோ மேலோட்டமாக 
வாசிக்கும்போது
எளிமையானதாகத்தான் தெரியும்.
அதன் உள்ளே ஆழமான கருத்து புதைந்து
கிடப்பது இரண்டு மூன்றுமுறை 
வாசிக்கும்போதுதான் புரியும்.

மானிடப் பிறப்பு என்பது அரிதாக கிடைக்கப் 
பெற்ற ஒரு வாய்ப்பு. 
 இவ்வுலகில் ஒரறிவு முதல் 
ஆறறிவு வரை உள்ள
 உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
உயிர்களுள் சிறப்பு வாய்ந்தது 
ஆறறிவு  உள்ள 
மானிடப்பிறவி என்பது நாம் அனைவரும்
அறிந்த ஒன்று.
பெருமைபட்டுக் கொள்ளும்
ஒன்று.
இந்த மானிடப் பிறவி எல்லோருக்கும்
எளிதாகக் கிடைத்துவிடக்கூடியதா?

இது ஓர் அரிய வாய்ப்புங்க.
இது  நமக்குக் அரிதாகக் கிடைத்த  
சிறப்பல்லவா?
அதனால்தான் அரிதரிது மானிடராதல்
அரிது என்கிறார் ஔவை.

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்
இல்லையா?

மானிடராக பிறந்துவிட்டோம்.
எல்லோருக்கும் எந்தவிதமான
குறைபாடும் இல்லாத உடம்பு
கிடைத்திருக்கிறதா?
நாளும் எத்தனை எத்தனை 
உடல் குறைபாடுள்ள மக்களைப் பார்க்கிறோம்?

நடக்க முடியாமல்....பார்க்க முடியாமல்...
பேச முடியாமல்...எழும்ப முடியாமல்....
எவ்வளவு கொடுமையான வாழ்க்கை
என்பது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
மட்டுமே புரியும்.

எத்தனை எத்தனை நோய்கள்.!
எத்தனை விதமான குறைபாடுகள்.!

"காலுக்குச் செருப்பில்லையே என்று
வருந்தினேன். கால்களே இல்லாதவனைக்
காணும் வரை."என்ற ஒரு சொற்றொடரைப்
படிக்கும்போது அதில் பொதிந்திருக்கும் உண்மையும்
வலியும் புரியாமலில்லை.

எப்படித்தான் மாற்றுத்திறனாளிகள் என்று
சமுதாயம் பெருமையாகக் கூறிக் கொண்டாலும்
அவர்கள் படும் வேதனை 
அவர்களுக்கு மட்டுமே  தெரியும்.

 உடம்பு இப்படித்தான் இருக்கவேண்டும்
 என்று யாரும் கேட்டு
வாங்கிவர முடியாது.
 
நான் இந்த உயரத்தில், இந்த கலரில் 
இருக்க வேண்டும்
என்று யாரும் கேட்டோ ,பொருள் 
கொடுத்தோ  வாங்கி வந்துவிட முடியுமா?
 இதெல்லாம் ஒரு வரம்.

அதனால்தான் "கூன் குருடு 
செவிடுபேடு  நீங்கிப் பிறத்தல் அரிது"
என்கிறார் ஔவை.

எல்லாம் நலமாக அமைந்து விட்டது..
இனி என்ன என்று இருந்துவிட முடியுமா? 
அறிவு வேண்டாமா?
ஞானமும் கல்வியும் இல்லாதிருந்தால்
முட்டாள் என்றல்லவா சொல்வார்கள்.?

ஆனால் எத்தனை பேருக்கு 
கல்வி பயிலும் வாய்ப்பு 
கிடைக்கிறது ?

இங்கே தான் ஔவை கையாண்ட ஒரு
சொல்லைக்  கவனிக்க வேண்டும்.
"ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது" 
என்கிறார் ஔவை.
 "கிடைத்தல் அரிது " என்று சொல்லவில்லை.
"பெறுதல் அரிது "என்று சொல்லவில்லை.
 இப்படிச் சொல்லி ஔவை சாதாரணமாகச் 
 கடந்து போய்விடவில்லை.

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதாம்.
உண்மைதாங்க.
 
' நயத்தல்' என்றால் 'விரும்புதல்.'
 
  கல்வியை  எத்தனைபேர் விரும்பி 
 கற்றுக் கொள்கின்றனர்.?

அறிவு வேண்டும் என்று யாரிடமாவது
கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற
எண்ணம் எத்தனை பேரிடம் 
இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

புத்தகம் படிக்கும்போது எத்தனைபேர்
விரும்பிப் படிக்கிறோம்?
ஏன் ஒரு கட்டுரையை வாசிக்கிறோம்
என்றால் விரும்பியா வாசிக்கிறோம்.?
வேண்டா வெறுப்பாக....
போகிற போக்கில் ஏதோ படித்துவிட்டுச்
செல்கிறோம்.

உண்மையா?இல்லையாங்க...

 வேண்டா வெறுப்பாக கற்பவர்கள் 
 எண்ணிக்கைதான் மிகுதியாக இருக்கிறது.
 கடனே என்று பள்ளிக்குச் செல்பவர்கள்
 எண்ணிக்கைதான் மிகுதி.

 ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம். 
 நயந்து படிக்கும்போது மட்டுமே அதன்
 இனிமையை முழுமையாக நுகர முடியும்.
 நயந்து படிப்பவர்கள்
 அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதாக
 ஒரு சிலரே இருப்பர்.
 
அதனால்தான் ஔவை ,
"பேடுநீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் 
நயத்தல் அரிது "என்கிறார்.

எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார் 
என்று மனம் நாம் படித்த...
இப்போது படித்துக்கொண்டு
இருக்கின்ற இந்த நேரத்தை
அசை போட்டுப் 
பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்
கொள்கிறது இல்லையா?

சிரித்துக் கொள்ளுங்கள்.
ஒன்றும் தப்பே இல்லை.

எப்படியோ  ...ஞானமும் கல்வியும்
பெற்றாகி விட்டது.
அதன்மூலமாக நல்ல பதவியும் வசதி
வாய்ப்பும் வந்து சேர்ந்துவிட்டன.
வசதி வந்ததும் எத்தனை பேருக்கு 
தானம் செய்ய வேண்டும்
என்ற எண்ணம் வரும் என்று நினைக்கிறீர்கள்?
வெளியில் தெரியாமல் கமுக்கமாகப்
பதுக்கி வைக்கத்தான் பார்ப்பார்கள்.
நாலு பரம்பரைக்குப் பதுக்கி வைத்துப்
பிதுக்கிப் பிதுக்கிச் செலவழிப்பார்கள்.

தானுண்டு தன் வேலை உண்டு 
தன் குடும்பம்  உண்டு என்று
போய்க் கொண்டே இருப்பதுதான்
கற்றவர்கள் பணம் பெற்றவர்கள் 
இவர்களின் இயல்பு.
 அடுத்தவர்களைப் பற்றிய நினைப்பே 
 இருக்காது.
இதுதாம்பா உண்மை. உண்மையைத் தவிர
வேறு ஒன்றும் இல்லை  என்று
அடித்துச் சொல்கிறார் ஔவை.

 எவ்வளவு நுட்பமாக கற்றவர்களையும்
பெற்றவர்களையும் பற்றி
அறிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்.?
 
அடுத்து  தானம் செய்தால் மட்டுமே 
அதைச் சார்ந்து
எழும் மோனநிலையை அடைய முடியுமாம்.
 அதாவது தவ நிலையைப்  பெற முடியும்.
என்கிறார் ஔவை.
  
  பற்று பாசங்களற்ற ஒரு  உன்னத நிலை
  வேண்டும்.
  நோன்புகள் இருந்து இறைவனை வழிபடும்
  பக்தி நிலை வந்து சேர வேண்டும்.
  
  இது எத்தனைபேர் வாழ்க்கையில் 
  நடைபெற்றிருக்கும் என்று
நினைக்கிறீர்கள்?
  
எங்கேயாவது நடந்திருக்குமா? 
என்ற ஒரு தேடல் எழுகிறதல்லவா?
அவ்வளவு எளிதாக அப்படிப்பட்ட
ஒருவரைக் கண்டுபிடித்துவிட முடியாதுங்க.

  அதனால்தான் "
"ஞானமும் கல்வியும் நடந்த
காலையும்
தானமும் தவமும்
தான் செயல்  அரிது "என்கிறார்
 ஔவை.

 இப்போது இந்த அடியோடு அடுத்த அடியையும்
முடிச்சுப் போட்டு  எழுதியிருக்கிறார் ஔவை.
வாருங்கள்.இப்போதுதான்
முக்கியமான ஒன்றைச் சொல்லப் போகிறேன்
என்று கையோடு அழைத்துச்
செல்கிறார்.

அரிதான செயல்களான தானத்தையும்
தவத்தையும்செய்துவிட்டால்....
தேவலோகம் தானாக திறந்து 
கொள்ளுமாம்.

என்னது? 
தானமும் தவமும் செய்தால்தான்
மோட்சத்திற்குப் போக முடியுமா?

எங்கிருந்து எங்கே கதையைக் கொண்டு
போய்  முடிக்கிறார் பாருங்கள்.
பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள
அரிதான செயல்களைச் சொல்லி வந்த 
ஔவை அரிதான தானமும் தவமும்
 செய்தால்  எளிதாக மோட்சம்
 சென்றுவிடலாம் என்று முத்தாய்ப்பான 
கருத்தைச் சொல்லி முடிவுரை 
எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டார்.

"தானமும் தவமும் தான் செய்வாராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே"

நச்சென்றுச் சொல்லி முடித்துவிட்டார்.

இவை எல்லாம் தான் அரிதானவையா?
சிந்தித்துப் பார்த்தால்....

மானிடப் பிறவி அரிது.
அப்படியே பிறந்துவிட்டாலும்
பேடு இல்லா வாழ்க்கை கிடைப்பது அரிது.
அதுவும் கிடைத்துவிட்டால் ...
ஞானத்தையும் கல்வியையும் 
நயந்து கற்றல் அரிது.
அதுவும் நடந்துவிட்டால்....
தானமும் தவம் செய்தல் அரிதினும்
அரிது.

மூச்சு வாங்குது இல்ல...

அரியவை செய்தால்தான் ஆண்டவனை
அடையலாமாம்.
எவ்வளவு ஆழமாகச் சிந்தித்து
எழுதப்பட்ட வரிகள்.


அரிது அரிது...ஔவை போன்ற 
 அம்மையைக் காண்டல் அரிதினும் அரிது."

 வேறென்ன சொல்லிவிட முடியும்.?
  
   
 

   

Comments

  1. Replies
    1. நன்றி. தொடர்ந்து படித்து, நிறை குறைகளை எழுதுங்கள்.

      Delete

Post a Comment

Popular Posts