போராட்டம்

 
                                   போராட்டம்
காலையில் இருந்தே ஊர் களை கட்ட
ஆரம்பித்தது.

"அண்ணே நீங்க வாரீங்க ...
தம்பி நீயும் வாயேன் "
என்று ஆளாளாளுக்கு
எங்கேயோ சிற்றுலா செல்ல  ஆள் திரட்டுவதுபோல
யாரையும் விட்டு வைக்காமல்
ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

"மாமா நீங்க வாறீங்களா ?"என்றான்
முத்துசாமி.

"என்ன தம்பி அப்படி கேட்டுபுட்ட
நான் இல்லாமலா...அப்போ எத்தனை 
மணிக்குப் போகணும்" என்றார்
பெரிய வீட்டுப் பிரகாசம்.

"ஒன்பது மணிக்குப் போகணுமாம்.
 தலைவர் ஐயா சொல்லி இருக்காங்க..."

"நேரம் இருக்குல்ல...ஒரு எட்டு போயி
வயலை பார்த்து  வாரேன்."
சொல்லியபடி வயலை நோக்கிச்
சென்றார் பிரகாசம்.

"சுருக்கா வந்துடுங்க தாத்தா...
பிறகு எல்லாரும் உங்களை விட்டுட்டுப்
போயிடுவாங்க..." தாத்தாவை விட்டுவிட்டு
எல்லோரும் போயிடக் கூடாதே என்ற
அக்கறையில் பேசினான் பேரன் பாலன் .

பிரகாசத்தின் இளைய மகன்  கந்தசாமி
கல்லூரிக்குப் போகும் வாலிபன்.

அவன்  போராட்டத்தைப் பற்றிக்
கேட்டதில் இருந்து ஒரு
நேரம் வீட்டில் இல்லை.

பெரியவீட்டுத் திண்ணையில்தான்
 வாலிபர்களின் மாநாடு நடந்தது.

அவனை ஒத்த வயசு பிள்ளைகள்
எல்லாம் , " இந்த தடவை இரண்டுல 
ஒண்ணு பாத்துடணும்...விவசாயின்னா
இழிச்சவாயனுவ....முட்டா பசங்க என்று 
நினைச்சுகிட்டு இருக்கானுவ... நாம
இண்ணைக்கி படுத்துகிற பாட்டுல
கவண்மென்ட் தானா வந்து 
நம்மகிட்ட பேசணும் "என்று
வீராப்பாக  பேசினான் முகிலன்.

"ஓட்டு வாங்க வரச்சுல மட்டும் இந்த
விவசாயி வேணும்... மற்ற நேரத்துல
எவனும் கண்டுகிட மாட்டான்."

"நம்மளால வேறு என்ன காரியம் ஆகப்
போகுது நம்மள திரும்பி வந்து
பார்க்கிறதுக்கு "

"திரும்பி வரணும்...வர வைக்கணும்"
உலகம் தெரியாத இளசுகள் ஆளாளுக்கு
வாயில் வந்ததைப் பேசி தங்கள்
உணர்வுகளைக் கட்டுப் படுத்த முடியாமல்
பேசிக் கொண்டிருந்தனர்.


"சாமி....சாமி...கொஞ்சம் இங்குட்டு 
வந்துட்டுப் போப்பா " சாமியின் 
அம்மா அழைத்தார்.

கந்தசாமியை வீட்டில் செல்லமாக சாமி
என்றுதான் அம்மா அழைப்பார்.

"இந்த அம்மா வேற...நேரம்
காலம் தெரியாம கூப்பிட்டுட்டு கிடப்பாவ...என்று முணுமுணுத்தபடியே வீட்டுக்குள் வந்தவன்,
என்ன...இப்ப உனக்கு என்ன வேணும்
சாமி...சாமின்னு ஏலம் போட்டுட்டுகிடக்குற ..."என்று
அம்மா மேல் எரிந்து விழுந்தான்.

" இந்த சீறல் தான வேண்டாங்கிறது...
அங்கேயும் போயி இப்படித்தான் ஒண்ணகடக்க 
ஒண்ணு பேசுவா...போலீஸ்காரர்
அடிச்சுபுடுவான்....நீ ஒண்ணும் போகாண்டாம்.
படிக்கிற புள்ள... கேசுகீசு என்று 
ஏதும் ஆகிபுட்டுன்னா..."
பயந்துபோய் அனுமதி மறுத்தார் 
சாமியின் அம்மா.

"இப்போ நான் உங்கிட்ட போகணுமா? 
போகாண்டாமா என்று அபிப்பிராயம்
கேட்டேனா ?"

"நான் போகாண்டாம் என்று சொல்லிகிட்டு
இருக்கேன். நீ ஏறுக்குமாறா பேசிகிட்டு
நிக்குற...."

"அப்போ நம்மளுக்கு கரண்ட் வேண்டாமா?"

"நீ போகாண்டாம் என்று சொல்றேன்...
நம்ம வீட்டுல இருந்து அப்பா போவாவ..."

"சாமியும் வரட்டும்...ஒண்ணும் ஆகாது பெரியம்மா
நாங்க எல்லாம் இருக்கிறோம்ல்ல..." 
தைரியம் சொன்னபடியே 
வீட்டிற்குள் வந்தான் சாமியின் சித்தப்பா
மகன் பால்பாண்டி.

"ஏலே அங்க இங்கன்னு 
 மசமசன்னு நிற்காம... சட்டுபுட்டுன்னு 
 புறப்படுங்க...ஒன்பது மணிக்குள்ள
 விலக்குல போயி நிற்கணும் "
 கையில் கம்பை ஆட்டியபடியே
 தெருவுக்குத் தெரு வந்து சத்தம்
 கொடுத்தபடியே சென்றான் செம்புலிங்கம்.
 
" இதோ வந்துட்டோம்..." என்றபடி
 கையில் ஆளுக்கொரு கம்போடு புறப்பட்டனர்.
 
"கையில் கம்பு எதுக்கு...சீ..
கடக்க எறிங்க..சும்மா ஆளு எண்ணிக்கைக்கு
நின்னுட்டு மூச்சுகாட்டாம திரும்பி
வந்துருக்கணும் ." கறாராக
பேசிய சாமியின் அம்மா,
"நானே ...நீங்க போயிட்டு வருகிறதுவரை
என்ன ஆகுமோ ....ஏது ஆகுமோ என்று 
ஈரக்குலையை கையில ஏந்திக்கிட்டு
இருக்கேன் " என்று ஒரு தாயாக தன்
பரிதவிப்பை வெளிப்படுத்தினார்.

"ஒண்ணும் பயப்பட வேண்டாம் ...பெரியம்மோ
என்கிட்ட கேட்டா பெரியம்மா மாதிரி நாலு 
பெண்களும் வரணும்...அப்போதான்
உடனே கதை நடக்கும்  "

"ஏன் உன் பொண்டாட்டிய கூட்டிட்டுப்
போறது...."சட்டுன்னு மூஞ்சில் அடிக்கிற மாதிரி
பேசினார் சாமியின் அம்மா.

"அவ கைபுள்ளகாரி ....அவளை எப்படி
கூட்டிப் போக முடியும் " எதார்த்தமாக
பேசினான் பொன்னுசாமி.

"நாங்க மட்டும் வேலை வெட்டி இல்லாம
வீட்டுல குத்தவச்சி இருக்கமாக்கும் "
மொகவரக்கட்டையை ஒரு திருப்பு 
திருப்பிவிட்டு வீட்டுத் திண்ணையில் போய்
உட்கார்ந்து கொண்டார்.

அதற்குள்,
"தலைவர் ஐயா வரச்
சொன்னாங்க....சுணங்காம வாங்க"
 என்று மறுபடியும் வாசலில்
 வந்து நின்று குரல் கொடுத்தான் செம்புலிங்கம்.

"இதோ பின்னாலேயே வந்துட்டோம்....
"
சொல்லிவிட்டு செம்புலிங்கம் பின்னாலேயே 
அனைவரும் சென்றனர்.

"ஏலே...பத்திரம் ...
போலீஸ் கையில மாட்டிபிடாதுங்க...
அவன் யாரு எவரு என்று பார்க்க மாட்டான்..
கண்ணுமண்ணு தெரியாம 
அடிச்சுபுடுவான்....சொல்லிபுட்டேன்...
பாத்து போயிட்டு வாங்க"
என்று அறிவுரையோடு வழியனுப்பினார்
ஒரு பாட்டியம்மா.

அப்போதுதான் வீட்டு வாசல் கதவை பிடித்து
கொண்டே வெளியில் எட்டிப் பார்த்த
சாமியின் பாட்டி,
"தம்பி சாமி....கூட்டத்தில ஒதுங்கியே நில்லுப்பா..."
என்று தன் தரப்பு பயத்தையும் பதிவு
செய்தார்.
 
"தூரமா நின்னு உத்துப்பாத்துட்டு வாரேன்....
போதுமா....சும்மா போவியா கிழவி....
காலையிலே இருந்து உங்க ராமாயணத்தைத்தான்
கேட்டுகிட்டே இருக்கேன் .பேசாம போய்
படுத்துக்கிட" பாட்டியைப்  பேச 
விடாமல் வாயடைக்க வைத்துவிட்டு 
கிளம்பினான் சாமி.
 
 இவர்கள் போவதற்கு முன்பாக
 பத்து இருநூறுபேர் பெரியவீட்டுத்
  திண்ணை முன்னால் கூடி நின்றனர்.
  
எல்லோரும் வந்து கூடியதும் 
ஊர்த்தலைவர்  பேச ஆரம்பித்தார்.

" தம்பிகளா...நான் சொல்லுவதை
  கவனமாக  கேட்டுகோங்க...
  எந்தவிதத்திலும் அசம்பாவிதம் ஏதும்
 நடந்துடக் கூடாது... அப்புறம்
 நாங்கதான் அரசாங்கத்துக்குப் 
 பதில் சொல்லியாவணும்"
 ஊர்த்தலைவர் என்ற பொறுப்பு
 இருப்பதால் கவனமாகப்
 பேசினார் தலைவர்.

"இப்போ அரசாங்கத்தை  நமக்கு பதில்
சொல்ல சொல்லுங்க...
நாலுமணி நேரம் தொடர்ந்தாப்புல 
கரண்ட் விட வழியில்ல.."
கோபத்தில்  பொங்கி எழுந்தார்
ஒரு  நடுத்தர வயதுக்காரர்.

பயிரெல்லாம் கருகிப் போகிறதே....
இப்படியே போனால் எப்படி
பொழப்பு நடத்தமுடியும் 
என்ற ஆதங்கத்தை வார்த்தையாகக்
கொட்டினார்.

" சும்மா கையை கட்டிகிட்டு நிற்கிறதுக்கு
 அங்க எதுக்கு... .இங்கேயே
 கையை கட்டிகிட்டு இருந்துட 
 வேண்டியதுதானே...".கூட்டத்தில் இருந்த
 சாமி உரத்து குரல் கொடுத்தான்.
 
" நமக்கு காரியம் ஆவணும் ...அதுதான்
 முக்கியம்."
 
" காரியம் ஆவணும் என்றால்
 நாலு பஸ்ஸை உடைக்கணும்."
 
" அது யாரு....உடையார் மவன்
 பாலனா...நீங்க எல்லாம் அப்படித்தான் 
 பேசுவியப்போ... மாட்டுனீங்க என்றால்
 நோகாம நொங்கெடுத்துருவானுவ 
 போலீஸ்காரனுவ..."போலீஸ்காரன் கையில்
 அடி  வாங்கிய அனுபவத்தில் குரல்  
 கொடுத்தார் ஒரு பெரியவர்.
 
" நம்மளும் யாருன்னு காட்டணுமில்ல..
விவசாயிக்கும் போராட்டம் பண்ணத்
தெரியும் என்று அரசாங்கத்துக்குத்
தெரியணும் "

"பார்க்கத்தான போறோம் உங்க
போராட்டத்த..."
 
" சரி...சரி...ஆளாளாளுக்கு பேசிகிட்டு
நிற்காம சுருக்கா  புறப்படுங்க..."
என்றார்  தலைவர்.
 
 கூடி நின்ற பெண்களெல்லாம்
 ஏதோ போர்க்களத்துக்கு வழியனுப்புவதுபோல
 வழிஅனுப்பி வைத்தனர்.
 
" பையனுவ...காட்டமா போறானுவ..
 ஒண்ணுகிடக்க ஒண்ண பண்ணிடப் போறானுவ...
 பிறகு போலீஸ்காரங்க...ஊரு உள்ள
 இறங்கி தூக்கிட்டுப் போயிருவாங்க..."
 விவரம் தெரிந்த ஒரு பெரிய தாத்தா
 பேசினார்.
 
" அதுவும் சரிதாங்க...போறவனுக எல்லாம்
 விடலப் பயலுவளா போறானுவ...
 கையில கிடைச்சதை தூக்கி வீசிபுட்டானுவன்னா
 ஊருக்குள்ள ஒரு ஆம்புள இருக்க முடியாது."
 அனுபவப்பட்ட பெரிய ஆட்கள் எல்லாம்
தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர்.
 
" நம்ம இங்கு நின்னுகிட்டு வழவழன்னு
 பேசிகிட்டு நிற்காம..நாமளும் போவோம்.
 என்னதான் ஆகுதுன்னு பார்க்கணுமில்ல...
 நம்ம போனாதான் நம்ம பயக்க கொஞ்சம்
 அடங்கி நிப்பானுவ..."
 
" சரி...சரி...பெரியவுங்க நாலஞ்சுபேர்
 போங்க..எனக்கு யூனியன் ஆபீசுல 
ஒரு சோலி இருக்கு...".என்றபடி 
அந்த இடத்திலிருந்து மெதுவாக 
 நழுவினார்  தலைவர்.
 
 உங்களுக்கு ஒன்னுண்ணா  நான் நிற்பேன்
 என்று சொல்லி ,வாக்கு வாங்கி ஜெயிச்சவரு 
 இல்லியா...
 அதுதான் ஊரே போயிட்டாலும்
 நம்ம மட்டுமாவது நிற்கணும் என்று 
 ஒதுங்கி நின்று  கொண்டார்.
 
வயதான பெரியவர்கள் ஐந்து ஆறுபேர் 
விலக்கை நோக்கி சென்றனர்.

ரோட்டில் ஒரு பஸ்ஸையும் காணோம்.
"நம்ம பயக்க நல்லாதான் போராடுறானுவ...
எல்லா பஸ்ஸையும் நிறுத்திட்டானுவ என்று 
நினைக்கிறேன் "

"இளவட்டம்மில்ல....ஒரு பஸ்ஸை
விட்டுருவானுவளா...
குறுக்கே படுத்துருப்பானுவ...
சாயங்காலத்துக்குள்ள அரசாங்கம்
அலறிகிட்டு வந்து நம்ம கோரிக்கைக்குப்
பதிலளிக்கும்... பார்த்துகிட்டே இருங்க"

"ஏதோ நல்லபடியா கரண்ட் கட் இல்லாம
ஆக்குனா சரிதான்..."
ஆளாளுக்கு பேசியபடி நடந்து சென்றனர்.

அப்போது எதிரே ஒரு போலீஸ் வேன் வந்தது.
அதிலிருந்து இறங்கிய ஒரு அதிகாரி
"நில்லுங்க...எங்க போறீங்க..."
என்றார் மிரட்டலாக.

"போராட்டத்துக்குப் போறோம்."
பெருமையாகச் சொன்னார் பிரகாசம்.

"எந்தப் போராட்டத்துக்கு..."

"விவசாயப் போராட்டத்துக்குத்தான்."

"அடேங்கப்பா.....போராட்டத்துக்கு கிளம்பிட்ட 
ஆளுங்களைப் பாருங்க...
நீங்களெல்லாம் போராடி.....வாங்க...வாங்க
வந்து வண்டில ஏறுங்க ..."
 அதிகாரத் தோரணையில் பேசி 
  அனைவரையும் ஜீப்பில் 
 ஏற்ற முனைந்தார்  காவல்துறை அதிகாரி.

"எதுக்கு ஜீப்புல ஏறணும்...நாங்க நடந்தே
வாறோம் "
" நடந்தே வாறீகளா...எங்க மாமியார் வீட்டுக்கா?"
நக்கலாகப் பேசிய ஒரு போலீஸ்காரர்,
"ஏறுங்கன்னா ஏற மாட்டீகளா..?"என்று
லத்தியை ஓங்கினார்.

பேச்சு மூச்சு இல்லாமல் அனைவரும்
ஜீப்பில் ஏறிக் கொண்டனர்.

ஜீப்...ஒரு கல்லூரி வளாகத்தின் முன் போய் 
நின்றது.

அங்கே மைதானத்தில் போராட்டக்காரர்கள்
என்று ஊர்க்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு 
வைக்கப்பட்டிருந்தனர்.

மொத்தமாக  ஊர்க்காரங்க எல்லாம் 
அங்குதான் தரையில் உட்கார்ந்திருந்தனர்..

பெரியவர்கள் எல்லோரையும் பார்த்ததும்
உங்களை யார் இங்க வரச் சொன்னது
என்று கோபமாக பேசினான் சாமி.

"அதா...நாங்கதான்...நாங்கதான்
உங்களைப் பார்த்துட்டுப் போகட்டுமே என்று
கூட்டிட்டு வந்தோம் " சொல்லி சிரித்தார்
இன்னொரு போலீஸ்.

வந்த ஆத்திரத்தை வாய்க்குள்ளே அடக்கி
விரல்களை முறுக்கினான் சாமி.

அப்போது காவல்துறை அதிகாரி முன்னால் 
வந்து நின்று,
"என்ன...உங்க  எல்லோருக்கும் பெரிய
 கொம்பன் என்ற நினைப்போ..."
 என்று பேச்சைத்  தோரணையாகத் தொடங்கினார்.

" பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு
பண்ணி இருக்கிறீங்க...
கல்லை தூக்கி வீசி பொதுச் சொத்துக்கு
சேதம் விளைவித்திருக்கீங்க...
இதுக்கெல்லாம் உங்களுக்கு என்ன 
தண்டனை கிடைக்கும் தெரியுமா?"
என்றார் கோபமாக...

அனைவரும் தலையைக் கீழே போட்டபடி
உட்கார்ந்திருந்தனர்.

"ஐயா...பெரியவரே....நீர்தான்
போராட்டக்குழு தலைவரோ..."
என்று சாமியின் அப்பாவைப்
பார்த்துக் கேட்டார் அதிகாரி.

பதிலேதும் சொல்ல முடியாமல் தரையைப்
பார்த்தபடி அமர்ந்திருந்தார் 
சாமியின் அப்பா.

"கரண்ட் வரலன்னா அதிகாரியைப்
பார்த்து மனு கொடுக்க வேண்டியதுதானே...
அதை விட்டுவிட்டு ரோட்டுல இறங்கி
போராட வந்துட்டாகளாம் போராட...
ஆளாளுக்கு போராட வந்துட்டீங்கன்னா...
பொது சனங்க எப்படி வெளியில் நடமாடுவது?
யார் யார்தான் போராடுவது என்ற விவஸ்தையே
இல்லாமல் போச்சு ."
வார்த்தையில் நீங்களெல்லாம்
போராட வந்துட்டீங்களாக்கும் என்ற
ஒரு நக்கல் இருந்தது.

சாமிக்கு ஆக்ரோசமாக வந்தது.
பக்கத்தில் இருப்பவனிடம் மெதுவாகப்
 "என்னாப் பேச்சு பேசுறான் பாரு "என்று
 முணுமுணுத்தான்.

"அங்க என்னல பேச்சு.  துணிச்சல்
இருக்கிறவன் முன்னால வந்து பேசுல..."
என்றார் போலீஸ் அதிகாரி.

"எல்லாத்தையும்  போல தான் நாங்களும்
போராட வந்தோம். எங்களுக்கு சரியா
கரண்ட் விட்டா நாங்க ஏன் போராடப்
போறோம்"கொஞ்சம் துணிச்சலை
 வரவழைத்துக்  கொண்டு பேசினான் சாமி.
 
"ஐயா பெரியவரே ! உங்க பேரு என்னங்க ?"

" சாமி......கந்தசாமி.."என்றான் சாமி.

" ஐயா ஆறுச்சாமி....நியாயமாத்தான்
பேசுறீங்க...ஆனா நீங்க போராட வந்தா
உங்களுக்கு ஆதரவு தர ஒருத்தன்
முன் வருவானா....கொஞ்சம் கேட்டுச்
 சொல்லுங்க...."நமட்டுச் சிரிப்பு
 சிரித்தபடி கேட்டார்   அதிகாரி.

"எங்க கதையை நாங்கதான் பார்க்கணும்..
எங்களுக்காக யாரும் வர வேண்டாம்.
நாங்க நியாயத்தைத்தான் கேட்கிறோம்.
அதுக்கு எதுக்கு அடுத்தவுங்க ஆதரவு"
ஏதோ நியாயம் பேசிவிட்டதுபோல 
பக்கத்தில் இருப்பவர்களைத் திரும்பித்
திரும்பிப் பார்த்தான் செம்புலிங்கம்.

"தனியா நின்னு போராடுனா .
 லத்தியால முட்டிக்கு முட்டி தட்டி
 உள்ளே தூக்கி வச்சுடுவாங்க..
 நானும் விவசாயி மகன்தான்.
 உங்க மேல உள்ள அக்கறையில்தான்
 இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கிறேன்.
 நாலு சங்கங்களின் ஆதரவு
 இல்லை என்றால் யாரும்
 உங்க போராட்டத்தைத்  திரும்பிப் 
 பார்க்க மாட்டார்கள் "
 ஒரு விவசாயியாக கீழே இறங்கி வந்து
 பேசினார் அதிகாரி.

இப்போது போராட்டக்காரர்களுக்கு
அதிகாரிமீது ஒரு 
நம்பிக்கை வந்தது.
 
 " அப்போ இதுக்கு என்னதான் வழி.
நீங்களே சொல்லுங்காயா...."
 அப்பாவியாகக் கேட்டார் ஒரு பெரியவர்.

"பேசாம போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டோம்
 என்று எழுதி கொடுத்துட்டுப் போறதுதான் வழி"
 என்றார் அதிகாரி.

"அது எப்படி முடியும்?"
எங்க கோரிக்கை என்ன என்றாவது
யாராவது கேட்க வராம...நாங்க 
எப்படி வாபஸ் வாங்க முடியும்?"

"அப்போ வாபஸ் வாங்க மாட்டீங்க..."
இதற்கு யாரும் பதில் சொல்லாமல்
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்
கொண்டு நின்றனர்.
 
"அப்போ எங்களுக்கு கரண்டே வராதா...."
மறுபடியும் அப்பாவியாகக் கேட்டார்
பொன்னுசாமி.
 
"   மின்சார வாரியத்துல மனு எழுதி கொடுங்க.
 முடிஞ்சா செய்து தருவாங்க.... "

"எத்தனை முறை மனு கொடுத்தாச்சி...
வேறு வழி இல்லாமல்தானே போராட்டத்தில்
இறங்கி இருக்கோம் "

"  மனு கொடுத்தால் கரண்ட்
 வந்துரும்மாய்யா...." சாமியின் அப்பா
அதிகாரியிடம் கேட்டுப் பார்த்தார்.

" வந்துரும் ....வந்துரும்...நம்பிக்கையோடு
போகிற வழியைப் பாருங்க...
போராட்டம் வாபஸ் என்று இந்த பேப்பரில்
கையெழுத்துப் போட்டுட்டு போங்க ... "
வலுகட்டாயமாக கையெழுத்து வாங்குவதிலேயே
குறியாக இருந்தார் அதிகாரி.

"ஐயா சொன்னா சரியாத்தான் இருக்கும்...
....ஏலே எல்லாரும் வாங்க..
கையெழுத்துப் போடுங்க...ஐயா விட்டுடுவாங்க..."
பொன்னுசாமி எழும்பி முதல்
கையெழுத்தைப் போட்டார்.

"கையெழுத்து போடுவதற்கு இங்க எதுக்கு
வரணும்.
பேசாம வீட்டுலேயே இருந்துருக்கலாம்..."
 முணு முணுத்தான் சாமி.

"நீங்க வேணணும்ன்னா கையெழுத்துப்
 போட்டுவிட்டுக் கிளம்புங்க.. நான்
வரல..."பிடிவாதம் பிடித்தான் சாமி.

"ஏன் ஜெயிலுக்குப் போகப் போறியா ?"

"போனால் என்ன தப்பு ...தப்பு
பணாணிட்டு ஜெயிலுக்குப் போகலிய..."

"கேஸ் எழுதுனா படிப்பு பாழாப் போகும் 
தெரியமில்ல... கையெழுத்துப் போடுன்னா
போடமாட்டாராம்..." லத்தியோடு அருகில் வந்தார்
ஒரு போலீஸ்காரர்.

"ஐயா...ஐயா..அவன் அறியாப் புள்ள ஐயா...
அவன் மேல கையை வச்சுறாதீங்க ஐயா...நான்
கையெழுத்து வாங்கித் தாறேன் "என்று பதறியபடி
குறுக்கே வந்து நின்றார் சாமியின் அப்பா.

"தம்பி...உன்னை கையெடுத்து
கும்பிட்டுக்கிறேன்.
கையெழுத்தை போட்டுருப்பா..."
ஒரு தகப்பனாக மகன் மீதுள்ள
அக்கறையில் கெஞ்சினார்.

பதில் ஏதும் சொல்லாமல் பேப்பரை வாங்கி
கையெழுத்துப் போட்டான் சாமி.

"விவசாயி போராட்டம் எல்லாம்
இப்படிதான் இருக்கும்.
நாலு மிரட்டு மிரட்டுனா போதும் ....
வாபஸ் வாங்கிட்டு போயிட்டே இருப்பானுவ...
என்பது சரியா போச்சா..".புலம்பிக்கொண்டே 
வந்து செம்புலிங்கமும் கையெழுத்துப் போட்டான்.

"அனைவரும் வீட்டுக்குப் போங்க...இனி
அங்க இங்க கண்டேன் தொலைச்சுபுடுவேன்
தொலைச்சு "என்ற மிரட்டலோடு அனைவரையும்
விடுவித்து  வெளியில்
அனுப்பினார் அதிகாரி.

எல்லோரும் விடுதலை செய்யப்
பட்டனர்.

"விவசாயி போராட்டத்தையும் கண்டுகிட
மாட்டாங்க..விவசாயி படும் கஷ்டத்தையும்
கண்டுகிட மாட்டாங்க....நாம
காலங்காலமாக உழைச்சி சாவுகிற
வர்க்கம் என்று நம் தலையில எழுதி 
வச்சதை  யார் மாற்ற முடியும்..?."என்று 
வழி எல்லாம் புலம்பி கொண்டே வந்தான் சாமி.

மனசுக்குள் இருப்பதைச் சொல்லமுடியாமல்
ஒருவர் முகத்தை ஒருவர் முகத்தைப்
பார்த்தனர் பெரியவர்கள்.

போகும்போது இருந்த உற்சாகம்
முற்றிலும் காணாமல் போயிருந்தது.

மௌனத்தைத் தவிர வேறு எதுவும்
கொண்டுவர முடியாதவர்களாக
ஊரை நோக்கி நடந்தனர் இந்த அப்பாவி
விவசாயிகள்.










 
 
  









 
 




Comments

Popular Posts