காளமேகத்தின் கவிமழை
காளமேகத்தின் கவிமழை
எண்ணற்றப் புலவர்கள் தமிழுக்குப்
பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுள் தனிப்பிறவி எடுத்து வந்தவர்
கவி காளமேகம் என்றால் மிகை ஆகாது.
நொடிப்பொழுதில் பாடல் எழுதும்
ஆற்றல் மிக்கவர்.
இதனால் இவரை ஆசு கவி என்று கூறுவர்.
சிலைடை கவி அதாவது இரட்டை அர்த்தப் பாடல்கள்
பாடவேண்டும் என்றால் காளமேகத்திற்குக் கொண்டாட்டம்.
இவருடைய பாடல்களில் விவேகமும் இருக்கும்.
கூடவே குறும்புக்கும் பஞ்சம் இருக்காது.
இவரது இயற்பெயர் வரதன்.
சாதாரண வரதனாக இருந்தவர்
காளமேகமாக மாறி கவிமழை பொழிவதற்குப்
பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உண்டு.
இவர் ஒரு கோவிலில் உதவியாளராக வேலை
பார்த்து வந்தார்.
மோகனாங்கி என்ற நாட்டியம்
ஆடும் பெண்மீது
தீராக்காதல் கொண்டிருந்தாராம்.
ஒருநாள் மோகனாங்கி வரவுக்காக
கோவிலின் உட்புற பிரகாரத்தில்
காத்திருந்தாராம்.
நெடுநேரமாகியும் மோகனாங்கி வரவில்லை.
அப்படியே பிரகாரத்தில் அசந்து
தூங்கிவிட்டார் காளமேகம்.
கோவில் நடை சாத்தப்பட்டு விட்டது.
கோவிலின் மற்றொருபுறத்தில் அந்தணர்
ஒருவர் சரஸ்வதிதேவியை நோக்கி தவம்
கிடந்திருக்கிறார்.
சரஸ்வதி தேவியும் அந்தணருடைய
வேண்டுதலுக்கிணங்க அங்கு வந்தார்.
சரஸ்வதிதேவி அருள் தருவதற்காக தன் வாயில்
இருந்த தாம்பூலத்தை அந்தணர்
வாயில் உமிழப் போக அந்தணர் ,
"யாரடி எச்சிற்றம்பலத்தை என் வாயில்
உமிழ்வது "என்று கோபங்கொண்டு
வாங்க மறுத்து விட்டாராம்.
கோபம் கொண்ட சரஸ்வதி அந்த தாம்பூலத்தை
அங்கே படுத்திருந்த வரதன் வாயில் உமிழ,
வரதனும் தன் காதலி மோகனாங்கிதான்
உமிழ்வதாக எண்ணி ஏற்றுக்கொண்டானாம்.
அன்றுமுதல் கற்காமலேயே கவிபாடும்
புலமை வந்ததாம்.
கார்மேகமென கவி மழைப் பொழியத்
தொடங்கினாராம்.
வரதன் என்ற பெயர் மாறி கவி காளமேகம் என
அனைவராலும் அன்புடன் அழைக்கும்
பெருமை பெற்றார்.
இவர் வாழ்ந்த காலம் பதினைந்தாம் நூற்றாண்டு
என்பர்.
ஆசுகவி, மதுர கவி , சித்திரக்கவி , வித்தாரக்கவி
என்றெல்லாம் புகழப்பட்டவர்.
எந்த ஒரு சொல்லைக் கொடுத்தாலும் நொடிப்பொழுதில்
பாடி அசத்திவிடுவார்.
அவருடைய பாடல்களில் நகைச்சுவையும்
இருக்கும்.நையாண்டியும் இருக்கும்.
இதோ ஒரு நையாண்டிப் பாடல்:
பால்காரர்களைப் போலவே மோர் விற்போரும்
நிறைய தண்ணீர் கலப்பது வழக்கம்.
ஒருமுறை ஒரு பெண்ணிடம் மோர் வாங்கி
குடித்தார் காளமேகம்.
மோரிலே நீர் அதிகமாக கலக்கப்பட்டிருப்பதை
உணர்ந்தார்.
அவள் மோர் என்று கொடுத்தது அவருக்கு
நீர் போலவே இருந்திருக்கிறது.
அவள் மோரை இகழ்ந்து பாட ஆரம்பித்தார்.
கார் என்று போர்படைத்தாய் ககனத்துறும் போது
நீரென்று பேர்படைத்தாய் நீள்தரையில் வந்தற்பின்
வாரொன்று மென்கலையாய்ச்சியர்கை வந்தற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பெரும் பெற்றாயே !
வானத்தை அடையும்போது உனக்கு கார்
என்ற பெயர்.
பூமிக்கு வந்த பின்னர் நீர் என்பது
உனது பெயராகியது.
ஆய்ச்சியர் கைகளிலே வந்ததும் மோர்
என்ற பெயர் பெற்றாய்.
ஆக மொத்தம் உனக்கு மூன்று
பெயர் உள்ளதோ என மோரைப் பார்த்துப்
பாடுவது போல மோரில் அதிக அளவு
தண்ணீர் கலந்திருக்கிறது என்பதை
சொல்லி கிண்டல் செய்தாராம்.
மோர்க்காரிக்கே பாடலா!
எந்த சொல்லைச் சொன்னாலும் பாடிவிடுவார்.
சொல்லை வைத்துதானே பாடுகிறார்.
எழுத்தைக் கொடுத்துப் பார்ப்போம்.
பாடத்தெரிகிறதா என்று பார்ப்போம்
என்று நினைத்துக் கொண்டு,
ககர வரிசை எழுத்துகள்
மட்டுமே வரும்படி பாடுங்கள் என்று
கேட்டுக் கொண்டார் ஒருவர்.
க, கா, கி, கீ ,கு கூ.... வரிசைதானே ...
இதோ ...இப்பொழுதே என்று பாடத்
தொடங்கிவிட்டார் காளமேகம்.
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க _ கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா "
என மறுநிமிடம் கடகடவென்று பாடல்
வந்து விழ கேட்டவர்
வாயடைத்துப்போய் நின்றாராம்.
பொருள் :
காக்கைக்கு ஆகா கூகை _ காகத்திற்கு இரவில்
கூகையை வெல்ல முடியாது
கூகைக்கு ஆகா காக்கை _ கூகைக்கு பகலில் காகத்தை வெல்ல முடியாது
கோக்கு கூ காக்கைக்கு _ அரசன் தன் நாட்டை பகைவரிடமிருந்து காப்பதற்கு
கொக்கொக்க _ கொக்கைப் போல
கைக்கைக்கு காக்கைக்கு _ பகையை எதிர்த்து நாட்டைக்
காப்பதற்கு
கைக்கு ஐக்கு ஆகா _ சிறந்த அரசனாலும் முடியாமல்
போய்விடும்
விளக்கம் :
காக்கையானது பகலில் கூகையை வெல்ல முடியும்.
கூகையானது இரவில் காக்கையை வெல்ல முடியும்.
கோ என்று சொல்லப்படுகிற அரசனானவன்
பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில்
ஆந்தையைப் போலவும் பகலில்
காக்கையைப்போலவும் காக்க வேண்டுமாம்.
எதிரியின் பலவீனமறிந்து கொக்கு காத்திருப்பது
போல தக்க நேரம் வரும்வரைக்
காத்திருந்து எதிரிகளைத் தாக்கி
வெற்றி பெற வேண்டும்.
ஏற்ற காலம் இல்லை எனில்
திறமையான மன்னனாக இருந்தால்கூட
வெற்றி பெறாமல் போகலாம்
என்பது பாடலின் பொருள்.
காக்கைக்கையோடு கூகையையும்
அழைத்து வந்து
கூடவே கொக்கையும் கூட்டி வந்து
மன்னன் முன் நிறுத்தி பாடம்
சொல்லித் தருவதற்கு
ககர வரிசை எழுத்துகளா...
அம்மாடியோவ்....இவர் புலமைக்குமுன்
யார் நிற்றல் கூடும்?
வியந்துபோய் பார்த்துக்கொண்டிருந்த
இன்னொரு மனிதருக்கு தகர வரிசை
எழுத்துகள் வைத்து பாடச்சொல்ல ஆசை.
தன் ஆசையை காளமேகத்திடம் தெரிவித்தார்.
கேட்டதுதான் தாமதம்
த , தா , தி, தீ ,து, தூ ...வென
கவிமழை அருவியென கொட்டத் தொடங்கியது.
தத்தித்தா தூதுதி தாதூதித் தந்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது ?
என்ன..தத்தக்கா...பித்தக்கா என்று பாடல்
இருக்கிறது என்று சிரிப்பாக வருகிறதல்லவா!
பாடல் தத்தக்கா ..பித்தக்கா என்று இருப்பது
போல் தெரியும்.பொருளைக்
கேட்டதும் அசந்து போவீர்கள்.
தகரவரிசை கண்டமேனிக்கு புரண்டு கிடக்கிறது.
பொருள் சீராக வருகிறது.
வண்டைப் பார்த்துப் பாடுவதாக பாடல்
அமைந்துள்ளது.
பொருள் :
தத்தி _ தாவிச்சென்று
தாது _ பூவில் இருக்கும் தேன்
ஊதுதி _ நுகர்கின்றாய்
தாது ஊதித்_ தேனை உண்ட பின்னர்
துத்தி _ ரீங்காரமிட்டு
துதைதி _ நெருங்கி
துதைது _ மிகுதியாக அப்பூவில் பரவி
அத்தா தூதி _ அந்தப் பூவின்தேனையும் உண்கின்றாய்
தித்தித்தது _ தித்திப்பாக இருந்திருக்கும்.
இத் தித்தித்த தாது _ அந்தவகையில் உனக்கு
மிகவும் தித்திப்பாக இருந்த தேன்
எத்தாதோ _ எந்த மலரில் உள்ள தேனோ
தித்தித்தது யாது _ அவ்வாறு இனித்தமைக்குக்
காரணம் யாது?
விளக்கம் :
தத்தித் தாவி பூவிலிருக்கும் தேன்துளியாகிய
தாதுவை உண்ணும் வண்டே , நீ ஒரு
பூவிலுள்ள தேனை உண்ட பின்னர்
மீண்டும் இன்னொரு பூவிற்கு சென்று
தேனை எடுத்து உண்ணுகின்றாய்.
இப்படி இருவேறு பூவின் தேனை
உண்ணும்போது எந்தப் பூவிலுள்ள
தேன் மிகவும் தித்தித்தது என்பதைச் சொல்வாயாக.
அப்படித் தித்தித்தமைக்கான காரணத்தையும்
கூறுவாயாக எனக் கேட்பதுபோல்
பாடல் அமைந்துள்ளது.
தத்தக்கா ...பித்தக்கா ...தித்திப்பாக
இருக்கிறதல்லவா!
காளமேகத்திற்கு சட்டென்று கோபம்
வந்துவிடுமாம்.ஒருவிதத்தில் விசுவாமுத்திர
முனிவரும் இவரும் ஒன்றுதான் என்பார்கள்.
விசுவாமுத்திரர் கோபம் வந்தால் சாபம்
கொடுத்து விடுவார்.
காளமேகம் கோபம் வந்தால் வசை பாடிவிடுவார்.
ஒருமுறை இப்படித்தான் திருமலைராயன்பட்டினம்
என்ற ஊருக்கு வந்தார் காளமேகம்.
அங்குள்ள அரசவைக்கவியாகிய அதிமதுரகவி
என்பவரிடம் போட்டி போட்டுப் பாடல் பாட வேண்டும்
என அந்த நாட்டு அரசன் கேட்டுக் கொண்டான்.
பாடல் பாடியாயிற்று .
வெற்றி பெற்றுவிட்டார் காளமேகம்.
மன்னன் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மன்னனுக்கு தன் ஆஸ்தான கவியை
வென்று விட்டானே என்று மனதிற்குள் கோபம்.
பரிசு தர மனமில்லாமல் ஏளனம்
செய்து காலம் தாழ்த்தி இருக்கிறார்.
சும்மாவே காளமேகத்திற்கு கோபம்
மூக்கில் இருக்கும்.
இப்போது தன்னை அரசன் அவமானப்படுத்தி
விட்டான் என்ற தன்மானப் பிரச்சினை வேறு.
சும்மா விடுவாரா ...
வெகுண்டெழுந்தார்....
வார்த்தைகள் தடிமனாக வந்து விழுந்தன.
கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் _ நாளையே
விண்மாரி யற்று வெழுத்து மிகக்கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான் "
என்று வசை பாடி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இது கொலைகாரர்கள் இருக்கும் ஊர்.
கோள் மூட்டல், வஞ்சகம் செய்தல் என்பவற்றைக்
கற்றிருப்பவர் நிறைந்த ஊர்.
கட்டுப்பாடற்று காளைமாடுகள் போல்
சுற்றித் திரிவோர் மிகுந்திருக்கும் ஊர்.
இப்படிப்பட்டோர் இருக்கும் ஊரில்
நாளை முதல் மழை பெய்யாமல்
வறண்டு போகட்டும்.
புழுதி மழைமாரி வீசட்டும் .
மண்ணே மழையாகப் பெய்யட்டும்.
என்று சாபம் கொடுப்பதுபோல் பாடி இருக்கிறார்.
பின்னர் மண்மழை பெய்து அவ்வூரே மண்ணால்
மூடப்பட்டதாகக் கூறுவர்.
கவிமழை பொழிந்து மண்மழை வரவழைத்த
மகா கில்லாடி காளமேகம்.
அப்பப்பா...கோபம்..கிண்டல் ...கேலி....
எதற்கெடுத்தாலும் பாடல்தானா !
மழைக்காலம் எப்போதாவது வரும்.
கவிமழைக்கு கால நேரம் கிடையாது.
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில்
பெய்யும்.
கவிமழையில் நனைய ஆவலா?
மழை தொடர்ந்து பெய்யும்...
Comments
Post a Comment