சேவல்

                சேவல் 
கொக்கரக்கோ...கோ 

சேவற்கோழி நான்கைந்து முறை 

கூவிக் கொண்டிருந்தது.

எரிச்சல்பட்ட பெட்டைக்கோழி

" விடியும் முன் ஏன் இப்படி கூவி 

கூப்பாடு போடுறீங்க..

  நாங்கள் எல்லாம் தூங்குறது

 கண்ணுக்குத் தெரியல...."

  என்று கத்தியது.
 
 " அடி பைத்தியக்காரி .

உனக்கு தூக்கம் வந்தால்

நீ போய் சத்தம் போடாமல் தூங்கு.

அதற்குபோய் ஏன் இப்படி கனைக்கிற..."

"நான் கனைக்கிறேனா...

நான் கனைக்கிறேனா...."

"சரி...சரி ...கோபப்படாத....

போய் தூங்கு...

நான்என் வேலைய பார்க்கிறேன்..."

"வேலை....பொல்லாத வேலை...

கால்காசுக்கு பயனில்லாத வேலை..."

"என்ன சொன்னா...?.என்ன சொன்னா....?

கால் காசுக்குப் பயனில்லையா...."

"பின்ன...நீ கூவி....கூவி 

தொண்டைத் தண்ணி

 வற்றுறதுதான் மிச்சம்

யாராவது ஒரு கை இரை போடுவாகளா... "

" நான் கூவல என்றால் எப்படி விடியும்?

 இருட்டாகவே இருக்கும் பரவாயில்லையா"

 "ஆமா ...ஆமா நீங்க கூவி தான் 

பொழுது விடியுது"

  
 "நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும்

 நான் கூவிதான் பொழுது 

விடியுது. இது ஊருக்கே தெரியும்"


"ஹி....ஹி...ஐயோ....நினைப்பை பாரு"

"எதுக்குச் சிரிக்கிற....எதுக்குச் சிரிக்குற.."

"உங்களை நினைச்சேன் சிரிச்சேன்."

"அதுதான் ஏன் என்று கேட்கிறேன் இல்ல..."
   

"  நினைப்பு தான்  பொழப்பைக் கெடுக்குமாம்.

  இப்படி ஒரு நினைப்பு  வச்சிருக்கிறதை

நெனைச்சு சிரிக்கிறேன் "
    

  "சும்மா பேசாம கெட....நான் கூவணும்.

 அப்போது தான் சூரியன் உதிக்கும்.....

கோக்கரக்கோ...கோ."
 

"  ஐயோ...ஐயோ இப்படி ஒரு முட்டாள நான்

எங்கேயும் பார்க்கல  ...தலையில் 

அடிச்சிக்கலாம் போல் இருக்கு ..."
    

" என்ன சொன்னா ...என்ன சொன்னா ? "

மறுபடியும் ஒருமுறை சொல்லு " 
   

" ஒருமுறை என்ன ...ஆயிரம் முறை சொல்லுவேன்.

நீங்கள் ஒரு முட்டாள்.

 முட்டாள்...முட்டாள்...முட்டாள் "
      

 "  நான் கூவவில்லை என்றால் 

சூரியன் அப்படியே தூங்கிவிடும்"

கொண்டையைக் கொண்டையை ஆட்டியது சேவல்.
  

"  சும்மா கொண்டையைக்

 கொண்டையை ஆட்டாதே.

நாளை ஒரு நாள் மட்டும் நீ கூவாமல் இரு.

சூரியன் உதிக்கிறதா...

இல்லையா என்று பார்ப்போம்."
   
" பார்ப்போம்...பார்ப்போம்"
  
 "  பார்க்கத்தானே போறேன்.

சூரியன் உதிக்காவிட்டால் நீ சொலுறத

 நான் நம்புகிறேன்...சவாலா ..." 
  
 " ஒரு நாளைக்கு என்ன நாலு

 நாளைக்கு நான் கூவப்போவதில்லை

நீங்க எல்லாம் அப்படியே இருட்டில் 

கிடந்து சாகப் போறீங்க "
  
"அப்படியாவது கூவாம கிடங்க சாமி.

நாலுநாள் உலகம் நிம்மதியா தூங்கட்டும்"
  

" நீயே வலிய வந்து கூவுங்க ...

.கூவுங்க...என்று கெஞ்சும் வரை 

நான் கூவப் போறதில்லை"
   
  
"  சவால்...சவால் தான்  .நாளைக்கு 

விடியட்டும் பார்ப்போம் "
  
 
  மறுநாள் வரை அதே வீறாப்பாக சுற்றிக்
  கொண்டிருந்தது சேவல்.
 
  ஆனால் மனதிற்குள் ஏதோ ஒரு கலக்கம்.

" ஒரு வேளை  பெட்டை கூறியது 

போல சூரியன் தானாகத்தான் உதிக்குமோ? 

  நான் தான் அவசரப்பட்டு வார்த்தையை

  விட்டுட்டேனோ  ?

.சே...சே அப்படி இருக்காது.

இத்தனை நாள் நான் கூவிய 

பிறகு தானே சூரியன் உதித்து. 

நாளையும் அதுதான் நடக்கும்.

நடக்கப் போகிறது."

தனக்குத் தானே சமாதானம்

சொல்லிக் கொண்டது சேவல்.


மறுநாள் அதிகாலை.
 

வழக்கம் போல்  கூவுவதற்காக கோ..

என்று தொண்டை வரை வந்த குரலை அப்படியே

அடக்கிக் கொண்டது சேவல்.
 
பெட்டைக்கோழி பார்த்தும் பார்க்காதது 

போல் முகத்தைத் திருப்பி 

வைத்துக் கொண்டது.
 

கொஞ்சம் கொஞ்சமாக நேரமாகிக் 

கொண்டே வந்தது.

சேவல் மனதில் படபடப்பு அதிகமாகியது.

கண்கள் முழுவதும் கிழக்கு திசையை

நோக்கியே இருந்தது.


மணி ஆறு ஆயிற்று.
 

"  ஏதும் ஏறுக்கு மாறாக நடந்து 

விடக்கூடாதே "உள்ளுக்குள் உதறல்


"  கீழ் வானில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?"

 அப்பப்போ...தலையை வெளியில்

நீட்டி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.
  
நேரம் நகர நகர இருட்டும் 

கொஞ்சம் கொஞ்சமாக

  நகர்ந்து வெளிச்சத்திற்கு இடம் கொடுக்க

  ஆரம்பித்தது.
 
  கிழக்கு வெளுப்பதற்கான 

அறிகுறிகள் தென்பட்டன.

"வெளுப்பதுபோல் இருக்கிறதே....

பெட்டை சொன்னதுதான் உண்மையாக

இருக்குமோ?"
   
சேவலுக்கு இப்போது கால்கள் 

தள்ளாட்டம் போட ஆரம்பித்தன.

ஐயோ...என்ன நடக்கப் போகிறதோ ?

 அடிக்கடி ஓரக்கண்ணால்

 பெட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"என்ன சாமி....கிழக்கில் வெளுத்தது

மாதிரி தெரியுது இல்ல"


"பொறு...பொறு...அவசரப்படாத"
 
 நான் அவசரப்படல....சூரியன்

அவசரப்பட்டு  உதித்திடப் போகுது"

"குசும்பு.... எந்த நேரத்துல என்ன

பேசணும் என்று உனக்குத் தெரியாது"

"நான் வாயை மூடிகிடுதேன் சாமி.

"நீங்க வானத்தை மூடுவதற்குப்

பாருங்க....அல்லது உங்க சாயம்

வெளுத்துப் போயிரும்."
    
 சற்று நேரத்திற்கெல்லாம்

பெட்டைக்கோழி சொன்னது போல சாயம்

 வெளுக்கத்தான் செய்தது.

 
ஆம்...  கீழ் வானம் சிவக்கத்தொடங்கியது.

சூரியன் நான் வரலாமா? என்பது போல்

மெதுவாக வந்து எட்டிப் பார்த்தது.
 


சேவலுக்கு பகீர் என்று இருந்தது.

அவமானத்தால் உடல் குறுகிப் போனது.

இத்தனை நாள் இருந்த கர்வம் 

ஒரே நொடியில் தரையில் 

விழுந்து தவிடுபொடியாகிப் போனது.
 
"பார்த்தாயா ... நான் சொல்லல...

 சூரியன் தானேதான் உதிக்கும் ..

.இப்போ புரிகிறதா.....

   இப்போ புரிகிறதா.."என்று சேவலை
 
  ஒரு பார்வைப் பார்த்தது.
    
   சேவலுக்கு என்ன சொல்லுவதென்றே 
தெரியவில்லை.

 " இதெல்லாம் இயற்கை நியதி.
 
யார் சொல்லியும் எதுவும் நடப்பதில்லை.

காற்று வீசாமல் இருக்கப்போவதில்லை.

கடலில் அலை  அடிக்காமல் 

நிற்கப் போவதில்லை..

 மரங்கள் காய்க்காமல் ஓயப் போவதில்லை.

இதெல்லாம் இயற்கை நியதி

அதேபோன்றுதான் சூரியனும்

 உதிக்காமல் இருக்கப் போவதில்லை.

யார் சொல்லியும் இந்த வேலைகள் எதுவும்
 
நடைபெறுவதில்லை.

இயற்கை யாவும் அதனதன் வேலையை

செய்து கொண்டிருக்கும். யாருக்காகவும்

எதுவும் காத்திருப்பதில்லை...

 அதனதன் நேரத்தில் அதனதன் வேலை

நடந்து கொண்டுதான் இருக்கும்." 

புரியும்படியாக எடுத்துக் கூறியது  பெட்டை.
  
"இப்படி ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேனே!"
 
அவமானத்தால் தலை குனிந்தது சேவல்.
    
 " அட...விடுங்க...குயிலைப் போன்று
 நம்மால் பாட முடியுமா...?
இல்லை இல்லையா?

 அதுபோல உங்களைப்போல 
யாராலும் கூவ முடியுமா...?
சொல்லுங்க கூவ முடியுமா?

"இல்லை"

 "நீங்க நீங்கதான்...விட்டுத் தள்ளுங்க

"நாளையிலிருந்து கூவுங்க...கூவுங்க...
தாராளமா கூவுங்க...
ஆனால் நான் கூவித்தான் விடியுது என்று
சொல்லிகிட்டு திரியாதுங்க....
யாரும் கேட்டா சிரிச்சுபுடுவாவ"
 
" மாட்டேன்...மாட்டேன்" என்று
கொண்டையை ஆட்டியது சேவல்.
    
         

        
        





        
        
        
         ண 

Comments

  1. சிறுவர் கதை பாடம் கற்பிக்கும் விதமாக இருந்தது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts