யாதும் ஊரே யாவரும் கேளிர்

           யாதும் ஊரே யாவரும் கேளிர்


உலக சகோதரத்துவத்தை இரண்டாயிரம் 

ஆண்டுகளுக்கு முன்பே   உலகிற்குச் 

சொல்லித் தந்தவன் தமிழன்.

உலகம் வியந்து பார்க்கும்

 ஒப்பற்ற தமிழ்க் கவிதைகளைப்    

  படைத்து உலக அரங்கில் தமிழருக்கென்று

 தனித்துவத்தைப் பெற்றுத் தந்தவர்கள் பலர்.


  தமிழர்கள் சிந்தனை ஆற்றல் மிக்கவர்கள் 

என்பது  உலக மக்கள் அனைவராலும் 

ஒப்புக் கொள்ளப்பட்ட செய்தி.


  நமது பரிணாம வளர்ச்சி அறிவியல்,சமூகவியல்,

உளவியல்,  தத்துவம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது

 என்பதற்கு இலக்கியங்களில் பல ஆதாரங்கள்

  உள்ளன. அந்தவகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில்

தனக்கென தனி இடம்பெற்ற புலவர்களுள்

கணியன்பூங்குன்றனார் என்னும் 

 சங்க காலப் புலவர் 

தனிப் பெருமை மிக்கவர்.

எந்த அரங்கிலும் இவர் புகழ்பாடாதவர் எவரும் இலர்  என்றுதான் சொல்ல வேண்டும்.

நாள், கிழமைகளைக் கணித்துக் கொடுக்கும் 

சோதிடக்கலை தெரிந்தவர்களைக்

கணியன் என்று அழைப்பர்.


பூங்குன்றம் என்பது இவருடைய ஊர்.

 சோதிடக் கலை செய்யும் குலத்தைச் சார்ந்தவர் 

என்பதால்  கணியன்  என்பதும் ஊர்ப்பெயரோடு

சேர்க்கப்பட்டு கணியன் பூங்குன்றன் 

என்று அழைக்கப்பட்டார்.


 இவர் உலகையும் உலக மக்களையும் நன்றாக

 கணித்துப் பார்க்கக் கூடிய திறன் மிக்கவர்

என்பது இவர் பாடலில் இருந்து தெரிகிறது.


இவர் பாடிய "யாதும் ஊரை யாவரும் கேளிர் ,"

என்னும் பாடலில் பதினொன்று வரிகள் உள்ளன.

இந்தப் புறநானூற்றுப் பாடல்  உலக

அனுபவித்தைப் பிழிந்து வடித்துத் தரப்பட்ட 

ஒரு அனுபவச்சாறு

என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லா இடங்களிலும் முதல்வரியை மட்டும் கையாண்டு வருவதால்

மற்ற வரிகள் சாரமற்றவை என்று விட்டுவிட

முடியாது.
ஒவ்வொரு வரியும் ஒரு உலகியல் உண்மையைச்

சொல்லித்தரும்.


உலகுள்ளவரை  

தமிழ் உள்ளவரை 

தமிழர் என்றோர் இனம்

 இருக்கும் வரை

 நிலைத்திருக்கும் அருமையான கருத்துக்களைத்

தன்னகத்தே கொண்டுள்ள பாடல் இது.
       
பாடல் இதோ உங்களுக்காக...


"  யாதும் ஊரே யாவரும் கேளிர்
    
  தீதும் நன்றும் பிறர்தர வாரா
    
 நோதலும் தணிதலும் 
அவற்றோ ரன்ன
    
 சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

 இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    
 இன்னா தென்றலும் இலமே 
 மின்னொடு
    

வானம் தண்துளி 
தலைஇ யானது
    
 கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
    
 நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    
 முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    
 காட்சியில் தெளிந்தனம் ஆகலின், 

மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
    
 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ."
    
                     
                            -    புறநானூறு                                      பாடல்               : 192

 விளக்கம்:

 இது என்னுடைய ஊர். 

அது உன்னுடைய ஊர் என்று யாரும் 

 எந்த ஊருக்கும் உரிமை 

கொண்டாட வேண்டாம். 

 எல்லா ஊரும் நமது ஊர்தான்.

 எனது ஊர்...உனது ஊர் என்று எனக்கும் உனக்கும் ஊரைப்

 பட்டா போட்டுத் தந்தது யார்? 

நிலம் அனைவருக்கும் பொதுவானது.இதுதானே உண்மை.

 அதனால்தான் கணியன் பூங்குன்றனார் 

"எல்லா ஊரும் நமது

 ஊர்  "என்று அடித்துச் சொல்வதுபோல

"யாதும் ஊரே ...."

என்கிறார்.

அடுத்து "யாவரும் கேளிர்.."

என்று சொல்லியிருக்கிறார்.


 உலகிலுள்ள மக்கள் அனைவரும் 

ஒரு தாய் வயிற்றுப் 

பிள்ளைகள் என்பது்

காலங்காலமாக நம் முன்னோர்களால் சொல்லப்பட்டு வந்த ....கற்பிக்கப்பனட்டு வந்த கட்டப்பட்டு வந்த நம்பிக்கை.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..."

என்று வள்ளுவர் நமக்குக் கற்றுத்

தந்திருக்கிறார்.

அப்படியானால் நாம் அனைவரும் 

 உறவினர்கள் என்பதில்  

யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க  முடியாது.

 இதையும் கருத்தில்  கொண்டுதான்

0நாம்     யாவரும் கேளிர்  என்கிறார் 

கணியன் பூங்குன்றனார்.    

'கேளிர்' என்றால் உறவினர் என்பது பொருள்.

அடுத்த வரியைப் பாருங்கள்.

"...தீதும் நன்றும் பிறர் தர வாரா...."

என்னது தீதும் நன்றும் பிறர் தர வாராவா?

நம்மை திருப்பிக் கேள்வி கேட்க வைத்த வரி.

சிந்திக்க வைத்த வரி.

நமக்கு வரும் நன்மையோ தீமையோ

 எதுவானாலும் பிறரால்  வருவதில்லையாம்.


 ஒரு நன்மை வருகிறதென்றால் 

அதற்கு காரணம்   நாம்தான்

நாம் மட்டும்தான்..  

  நன்மை வந்தால் என்னால்தான் நன்மை வந்தது...

   என்னால்தான் வந்தது... இப்படிச்சொல்லி...

 சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வோம்.


  நன்மைக்குப் பொறுப்பேற்கும் நாம் தீமைக்குப்

  பொறுப்பேற்க மனமில்லாமல் கையை உதறிவிட்டு

ஓடப் பார்ப்போம்.

ஒரு தீமை வருகிறது என்றால் 

அதற்கு காரணமும்  நாமாகத்தான்

 இருக்க முடியும் என்கிறார் பூங்குன்றனார்.

.எந்தத் தீமையும் எந்த

  நாட்டிலிருந்தும் வருவதில்லை.

"வினை விதைத்தவன்

 வினை அறுத்தே தீருவான்."

  நன்மை தீமை இரண்டுக்குமான

  காரணகர்த்தா நாம் மட்டுமே 

என்று நச்சென்று அடித்துச்

 சொல்கிறார் பூங்குன்றனார்.
        
 சரி.நன்மை தீமை இரண்டும்

  நம்மால்தான் வருகிறது.

தீமையை ஏதோ தெரியாத்தனமாக

வரவழைத்துவிட்டோம்.

வந்த தீமையை இனி

 தீர்ப்பது எப்படி?

அதையும் சொல்லித் தாருங்கள்

என்று கேட்போமல்லவா? அதையும் முன்கூட்டியே

கணித்து, அதற்கான

தீர்வையும் அடுத்த வரியில் 

சொல்லி நம்மைக் கையோடு

கூடவே அழைத்துச் செல்கிறார்

பூங்குன்றனார்.

நோய்க்கான மருந்து யாரிடம்

இருக்கிறது?


"நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"

என்று விடை சொல்லிவிட்டார்.

அது என்ன அவற்றோரன்ன?

எவற்றோரன்ன என்று எங்களுக்குத்

தெளிவாகச் சொல்ல வேண்டாமா?

என்று கேட்பீர்களல்லவா?

சொல்கிறேன் கேளுங்கள்.

நன்மைக்கும் தீமைக்கும் காரண கர்த்தா

நீங்கள்தான் என்று சொன்னேன் அல்லவா?

அது போன்றதுதான் நோய் வருவதும்

நம்மால்தான்.

நோயைத் தீர்க்கவும் நம்மால் தான் முடியும்.

இதுதான் அந்த அவற்றோரன்ன

என்பதற்கான பொருள்.

இது என்ன வேடிக்கையாக இருக்கிறது.?

நோய் நம்மால் வருகிறதா?

வேறு யாரால் வரும் என்று நினைக்கிறீர்கள்?

உணவுப் பழக்க வழக்கங்கள் தாறுமாறாகப்

போனால் உடலும் தாறுமாறாகிப் போகும்.

நமது உணவுப் பழக்க வழக்கங்களும் 

சுகாதாரக்கேடும்தான் நோய் வரக் காரணமாக

அமைகின்றன என்று உலக சுகாதார

அமைப்பு நம்மை எச்சரிக்கவில்லையா?

ஓ...உண்மைதான்....

ஒத்துக்கொண்டு தான் 

ஆக வேண்டும்.


நோய்க்கு இடங்கொடுத்தாயிற்று.

அதைத் தீர்க்கும் திறனும் நம்மிடம் தான்

இருக்கிறதாம்.. நாம்தான் நோய் தீர்க்கும்

வழிவகைகளைத் தேடிக்கொள்ள வேண்டுமாம்.

நன்றாக இருக்குது இல்ல...

ரொம்ப நன்றாக இருக்குது இல்ல.


"....தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன....."


என்ன அருமையான வரி.பாடல் வரிக்கு வரி 

தொடர்புடையதாகவே நம்மைக் கூடவே

அழைத்துச் செல்கிறது.


அடுத்து நிலையாமையைச் சொல்ல

 வந்த புலவர்,

"....சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;

முனிவின்,

இன்னா தென்றலும் இலமே;...."

என்கிறார்.

  இவ்வுலகில் இறந்துபோதல் என்பது ஒன்றும்

 புதியதாக நடக்கும் ஒரு செயல் அல்ல.

அதனால் புதிதாக நமது வீட்டில் மட்டுமே 

இறப்பு நடந்துவிட்டது என்று 

யாரும் வருந்திட வேண்டாம்.

 அது காலங்காலமாக நடைபெற்றுவரும்

ஒரு நிகழ்வு்தான் .

என்று கடந்து போக வேண்டும்
என்கிறார்.


இதைத்தான் வள்ளுவரும்,

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 

பெருமை உடைத்துஇவ் வுலகு" என்றார்.


நேற்று இருந்தவன் இன்று இல்லாமல்போனான்

 என்றுசொல்லப்படும் நிலைமையாகிய

பெருமையைக் கொண்டதுதான் இவ்வுலகு என்று வள்ளுவரும்

இதே கருத்தைச் சொல்லி நம்மைத் தேற்றியிருக்கிறார்.

இப்படி நிலையாமையைச் சொன்னதோடு 

கடந்து போய்விட்டாரா? இல்லையே.

 வாழ்க்கை என்றுமே இனிமையானது என்று

மகிழ்ச்சியில் அதிக ஆட்டம் போட வேண்டாம்.

 அது நிரந்தரமல்ல.

.இன்பம் வந்தால் துன்பமும் 

தொடர்ந்தே வரும்.

விளக்கின் அடியில் இருட்டு 

இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்..அதுபோலத்தான் இன்பமும்

துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை 

என்பதையும்  ஒருபோதும்

மறந்துவிடக் கூடாது.
       
 வாழ்வு துன்பம் மட்டுமே

தருவது என்று வெறுத்து ஐயோ ... 

எனக்கு மட்டும் ஏன் இப்படி...?

என்னன்னவோ நடக்கிறதே என்று

வாழ்க்கையே வேண்டாம் என்று விரக்தியடைந்து

 ஒதுங்கி வாழ நினைக்க வேண்டாம்.

 இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை.

  என்கிறார் .


இதுவரை சாதாரணமாக உலகியலைச்

சொல்லிக் கொண்டு வந்தவர்,

 இப்போது பாடல் நயம் கருதி 

அழகிய கற்பனை

 காட்சி ஒன்றை நம் கண்முன் 

விரிய வைத்து வாழ்க்கையைப்

புரிய வைக்க முனைந்திருக்கிறார்.


"மின்னொடு

வானம் தண்தூளி தலைஇ,

ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற்

பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின்...."

 

அதாவது,

 வானிலிருந்து மழை பொழிகிறது.

அந்த நீரானது

 மலையின் மீதுள்ள பாறைகளில் விழுந்து,

உருண்டு திரண்டு, அருவியாக வீழ்ந்து 

 பெரிய ஆறாக ஓடுகிறது.

 இப்படி பெருந்திரளாக ஓடும் 

காட்டாற்று நீரில்

 தெப்பம்  ஒன்று செல்கிறதாம்.

தெப்பம் சீராக செல்ல முடியாமல் 

தடுமாற்றம் காணுமல்லவா?

ஆனாலும் அந்தத் தெப்பமானது

கவிழ்ந்துவிடாதபடி

 ஆற்று போக்குக்குக்கு ஏற்ப 

வளைந்து ...நெழிந்து...

  சரிந்து ஓட்டிச் செல்லப்பட்டால்தானே போய்ச்சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர முடியும்.

 சாதுரியமாக தெப்பம் ஓட்டிச் 

செல்லப்பட்டு  போய்ச் சேர வேண்டிய 

இடத்தைப் பாதுகாப்பாக சென்றடைகிறதாம்.


இப்படி மேடுபள்ளம்,

உயர்வு தாழ்வு உள்ள

பாதையில் பயணிப்பது

போன்றதுதாங்க வாழ்க்கை.

இதனை  நான் சொல்லவில்லை.

 நம் முன்னோர்கள் சொல்லிச்

சென்றிருக்கிறார்கள்  என்று

முன்னோர்களை தன் தன்கருத்துக்கு வலு சேர்க்க

நம்முன் கொண்டு வந்துநிறுத்தியிருக்கிறார்

பூங்குன்றனார்.

அதாவது நாட்டு நடப்புக்கு ஏற்ப 

மனிதர்களுக்கு ஏற்ப 

சூழ்நிலைக்கு ஏற்ப

அனுசரித்துப் போனால்தான்  

 வாழ்க்கை என்னும் வண்டியை 

சுமுகமாக கொண்டு

செல்ல முடியும் என்று சொன்னவர்

அடுத்து...



"....பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் 
அதனினும் இலமே!
என்கிறார்.
    
இத்தனை தெளிவு பெற்ற பின்னரும் 
நான் பெரிது ...  நீ பெரிது 
என்ற அகம்பாவம் வேண்டாம்.
பெரியோரை  அடேயப்பா ....
என்று வியந்து
 போற்றுதலும் வேண்டாம்.
 சிறியோரை கீழ்த்தரமாக எண்ணி 
வெறுத்து ஒதுக்குதலும் வேண்டாம்.  

அதாவது,
இவன் உயர்ந்த குலத்தைச்
சார்ந்தவன்
அவன் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன்.
 இவன் படித்தவன்.
அவன் படிக்காதவன்
இவன் கறுப்பினத்தைச் சேர்ந்தவன்.
இப்படி பாகுபாடு  வேண்டாம்.
மொத்தத்தில்  உயர்வு தாழ்வு
 பாராட்டாதிருத்தல் நன்று என்கிறார்
கணியன் பூங்குன்றனார்.

எவ்வளவு அருமையான கருத்து
பாருங்கள்!

 உலகியலையும்
உளவியலையும் விரவி
படைக்கப்பட்ட அருமையான பாடல்.

 இதுதானய்யா உலகம் என்று வாழ்வின்
தத்துவத்தை,உளவியல்  உண்மைகளை,
சமூக நெறிகளை இயற்கை வழி நின்று அறிய
 வைத்துள்ளார்.புரிய வைத்துள்ளார். 
புரிய வைத்து சிந்திக்க
வைத்துள்ளார் . சிந்திக்க வைத்துத் தெளிய வைத்துள்ளார்.

இந்தப் பாடலின் மூலம் 
யாரப்பா இந்தக் கணியன் பூங்குன்றனார்?
என்று அனைவரையும் அண்ணாந்து
பார்த்து வியப்படைய வைத்துவிட்டார்.

மொத்தப் பாடலும் அருமையான
கருத்தைச் சுமந்து நிற்கிறது.
ஆனால்,

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்ற முதல் வரி மட்டும் ஐக்கிய நாட்டு
சபை வாயிலில் நின்று
அனைவரையும் வரவேற்று ,
தமிழின் பெருமையை
உலகெங்கும் உரக்க உச்சரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுக்
கொண்டிருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு வரியும் உயர்த்திப்
பிடிக்கப்பட வேண்டிய வரிதான்.
உள்ளத்தில் நிலைநிறுத்தப்பட
வேண்டிய வரிதான் என்று சொன்னால்
மிகையாகாது.

தமிழர் ஒவ்வொருவரையும் 
உள்ளி உள்ளி பெருமிதம் 
கொள்ள வைத்த அருமையான பாடல்!


"  தமிழன் என்று சொல்லடா
  தலை நிமிர்ந்து நில்லடா"

  மார்தட்டிக் கொள்ளலாமல்லவா!
        

      
     ஜீ.யூ. போப் அவர்களின்
    ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
      

  To us all towns are our own, everyone our kin
  Life's good comes not from other's gifts, nor I'll,
  Pain Spain's relief are from within
  Death's no new thing , nor do our bosoms thrill
  When joyous life seems like a luscious draught
  When grieved we patient suffer for, we deem
  This much praised life of ours a fragile raft
  Bronze down the waters of some mountain stream
  That o'er huge boulders roaring seeks the plain
  Tho' Strom's with lightning's flash from darkened skies
  Descend, the raft goes on as fates ordain
  This have we seen in visions of the wise
  We marvel not at the greatness of the great
  Still less despise we men of low estate.
                                Purananuru : 192

(Adapted from translation by G.U. Pope _ 1906)
      

Comments

  1. Influential Philosopher. I love his philosophy of Yadum ure yavarum kelir. What a secular ethics and secular morality. All are our brothers and sisters in this world.

    ReplyDelete
  2. Influential Philosopher. I love his philosophy of Yadum ure yavarum kelir. What a secular ethics and secular morality. All are our brothers and sisters in this world.

    ReplyDelete
  3. Marvellous. I liked the way you explained.

    ReplyDelete

Post a Comment

Popular Posts