பீலேயாமும் கழுதையும்

                பீலேயாமும் கழுதையும்

                           

நாடகம்

                  காட்சி ஒன்று
                         
இடம் :  பாலாக் மன்னனின் அரண்மனை
உறுப்பினர்கள்  :( பாலாக், அமைச்சர்,
தளபதி, வீரர்கள்)

பாலாக்:   :  அமைச்சரே !  என்ன இது ...
மாடுகள்  மந்தை மந்தையாக    மேய வருவதுபோல ஒரு கூட்டம் மக்கள் நம் தேசத்தை நோக்கி வருவதாக செய்தி வந்திருக்கிறதே ,

உண்மைதானா?

அமைச்சர். : 
"ஆம் மன்னா...நானும் கேள்விப்பட்டேன்.
இஸ்ரவேலர் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் மக்கள் வந்ததாக கூறுகின்றனர்.

பாலாக் : " இஸ்ரவேலரா?

அவர்களுக்கு நம் நாட்டிற்குள்
என்ன வேலை....?உடனே
துரத்தி அடியுங்கள்.

அமைச்சர்  .: இதோ வீரர்களை அனுப்புகிறேன்
மன்னா..

(அமைச்சர் போகிறார்)

அமைச்சர் ( தளபதியைப் பார்த்து ):

தளபதியாரே! உடனே நம் வீரர்களோடு
சென்று அந்த இஸ்ரவேலரை
நாட்டுக்குள் நுழையவிடாமல் விரட்டி
யடியுங்கள்.

தளபதி :  மன்னிக்கவும் அமைச்சரே !இதைப்பற்றி நான் யோசித்துவிட்டேன்.நம்மிடம்
அவர்களைத் துரத்தியடிக்கும்
அளவுக்கு படைபலம் இல்லை.

அமைச்சர் : அப்படியானால்
என்னதான் செய்வது?

மன்னருக்கு என்ன பதில் சொல்வது ?

தளபதி : அதைத்தான் நானும்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அமைச்சர் :ஏதாவது பண்ணி அவர்களைத்
துரத்தியே ஆகவேண்டும்.

மன்னர் அதிக கோபத்தோடு இருக்கிறார்

தளபதி:  (அமைச்சரின் காதுகளில் ரகசியமாக

ஏதோ பேசுதல்.)

அமைச்சர் : எனக்கும் அதுதான் சரியாகத்
தோன்றுகிறது.
மன்னரிடம் போய் சொல்கிறேன்.

      (அமைச்சர் மன்னரிடம் செல்லல்)
     
பாலாக்.:  (அமைச்சரைப் பார்த்து ):
"அமைச்சரே....இஸ்ரவேலரைத் துரத்தியடித்தாயிற்றா?

அமைச்சர் :"முடியாது  மன்னா..

 அது மட்டும் நம்மால் கூடாது  என்று தளபதி சொல்கிறார் மன்னா..."

பாலாக் : "என்ன....தளபதியாரே சொன்னாரா?....ஏன் கூடாது ...அவர்கள்
என்ன நம்மைவிட பலசாலிகளா..?."

அமைச்சர் :"பலசாலிகள் இல்லை மன்னா ஆனால் ..

பாலக் :  என்ன ஆனால்....போனால் என்று இருக்கிறீர்?

அமைச்சர் :அவர்கள் தேவனுடையப்

பிள்ளைகளாம்..."

பாலாக் :" தேவனுடையப் பிள்ளைகள்
என்றால்..?"

அமைச்சர் : "ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
என்று பொருள்.."

பாலாக்( கோபத்துடன் ) " ம்உம்....
அதிகமாகப் பேசாதீர்...

அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றால்.....நாம்

என்ன சபிக்கப்பட்டவர்களா..?.."

அமைச்சர் : "அப்படிச் சொல்லவில்லை
மன்னா.. "

பாலாக் :" இல்லை மன்னா ...
இந்த நொல்லை மன்னா...
எல்லாம் வேண்டாம்...

என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ 

அந்த‌ இஸ்ரவேலரைத்
துரத்தியடிப்பதற்கான வழியைப் பாருங்கள்."

அமைச்சர் :" மன்னா... ஒன்று சொன்னால்....
கோபித்துக்  கொள்ளமாட்டீர்களே..."

பாலாக் : " கோபப்படுவதும்...
கோபப்படாமல் இருப்பதும்
நீர் சொல்லப் போகும்
செய்தியைப் பொருத்தது...

ம்உம்....கூறும்...

அமைச்சர் (தயங்கியபடி )

" மன்னா..."

பாலாக் :.( கோபமாக)"  என்ன சொல்லப் போகிறீர்....
சொல்ல வந்ததைச் சொல்லுமைய்யா...

அமைச்சர் :
"பீலேயாம் என்று குறி சொல்லுகிற
ஒரு மனிதன் இருக்கிறான்.
இவர்களை விரட்ட அவன்தான் சரியான ஆள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

பாலாக் :"ஹா...ஹா...ஹா...

குறி சொல்பவனா...?

குறி சொல்பவன் நம் வீரர்களை விட வலிமை வாய்ந்தவனோ ?

அது எப்படி இப்படி சொல்கிறீர் ."

அமைச்சர் :"அவன் தேவனுடைய மனிதனாம்.அவன் ஆசீர்வதித்தால்
அந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்
பட்டவராகி விடுவராம்."

பாலக் :  " அப்படியானால் அவன்
சபித்தால் அவர்கள் சபிக்கப்பட்டவர்கள்
ஆகி விடுவர்  இல்லையா...?"

அமைச்சர் :" அப்படித்தான் ஊருக்குள்
சொல்லிக் கொள்கிறார்கள்."

பாலாக்  : அப்படியானால் இஸ்ரவேலரை
  சபித்து
  பலமிழக்க செய்து துரத்திவிடலாம்
என்கிறீர்....இதைத்தானே
 சொல்ல வருகிறீர்...
 
 அமைச்சர் : ஆமாம் மன்னா ஆமாம்....நிச்சயமாக...

பாலாக் :  ம். (யோசித்தபடி)

 அப்படி ஒரு மனிதனா...?

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.

அப்படியானால் அந்த மனிதனை
உடனே அழைத்து வாருங்கள்..."

அமைச்சர்.:    "இதோ உடனே
ஆள்  அனுப்புகிறேன் மன்னா.."

பாலாக் :(கண்டிப்பாக)  " எவ்வளவு பொருள்
கேட்டாலும் கொடுத்து கையோடு
கூட்டி வரச் சொல்லும். கண்டிப்பாக

வர வேண்டும் என்று சொல்லி அனுப்பும்.


அமைச்சர் : "  அப்படியே செய்கிறேன்
மன்னா..."

                            காட்சி இரண்டு

இடம்  : பீலேயாம் வீடு

உறுப்பினர்கள் :   ( மூப்பர்கள் , பீலேயாம் , கழுதை,
இரண்டு சேவகர்கள் )

       (   மூப்பர்கள் பீலேயாம் வீட்டில்
         போய் கதவை தட்டுதல் )
      
பீலேயாம்  (வீட்டிற்குள் இருந்தபடி )  :
      " யாரங்கே..?."

மூப்பர்கள் :" நாங்கள் மோவாப்
தேசத்திலிருந்து
 வந்திருக்கிற மூப்பர்கள் "


 பீலேயாம் :( வெளியில் வந்து ): வாருங்கள் ...
வாருங்கள்.

அமருங்கள்.வந்த
காரணத்தைத் நான்
தெரிந்து கொள்ளலாமா.?.."

மூப்பர்  1 :"எங்கள் தேசத்திற்கு வேற்று நாட்டு மக்கள்
ஏராளம் பேர் வந்திருக்கிறார்கள்...."

பீலேயாம் : "நாடு என்று இருந்தால்
வேற்று நாட்டவர் வரத்தான்
செய்வார்கள்"

மூப்பர் 2 :
"அவர்களைத் துரத்த வேண்டும் என்று எங்கள்
ராஜா  விரும்புகிறார்."

பீலேயாம் : "  துரத்துங்கள்....அதற்கு என்னிடம்
ஏன் வந்திருக்கிறீர்கள்.?
நான் போர் வீரனில்லையே..."

மூப்பர் 1:"தெரியும்...நீங்கள் அந்த மக்களை
சபித்து அவர்களை இங்கிருந்து ஓடிப்
போகச்  செய்ய வேண்டும்..."

பீலேயாம் : "யார் அவர்கள் ?"

மூப்பர்  1 : "இஸ்ரவேல் தேசத்தார்."

பீலேயாம்  : யாரையும் என் விருப்பப்படி. ஆசிர்வதிக்கவோ சந்திக்கவே எனக்கு அதிகாரமில்லை.

நீங்கள் கேட்பதும் செய்ய

என்னால் முடியாது..."

மூப்பர் 2:    :"ஏன் முடியாது.?.."

பீலேயாம் :   "என் தேவன் சொல்லுகிறதைத்
தவிர நான் வேறு எதையும்
சொல்லுவதுமில்லை..செய்வதுமில்லை."

மூப்பர் 1 :
      "அப்படியானால் இப்போது உம் பதில்..?"

பீலேயாம் :
" கர்த்தர் சொல்லுகிறபடி  மட்டுமே
நான் செய்வேன். வேறு எதையும்
என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்...

இதுதான் என் பதில்."

மூப்பர் 2  : "இதுதான் உமது இறுதியான பதிலா...?"

பீலேயாம் :( சற்று யோசித்தபடி )" ம்....இன்று மட்டும்
என்னோடு தங்குங்கள்....

நான்ஜெபித்து விட்டு வருகிறேன்...கர்த்தர்
அனுப்பி வைத்தால் வருகிறேன்"

மூப்பர்கள் : "காத்திருக்கிறோம்.. 

ஜெபித்துவிட்டு நல்ல
பதிலோடு வாரும்."

      (பீலேயாம் அறைக்குள் போய் முழங்காலிட்டு
      ஜெபித்தல்)

பீலேயாம்  : "இறைவா...இந்த மனிதர்கள்
என்னை அழைக்கும் நோக்கம்
தங்களுக்குத் தெரியும்...
தாங்கள் அனுமதி
அளித்தால் மட்டும் நான் செல்கிறேன்."
                
கர்த்தர் குரல் : " பீலேயாமே! நீ அவர்களோடே
 போக வேண்டாம்.. இவர்கள் தேசத்திற்கு வந்திருக்கும் இஸ்ரவேல் மக்கள் 
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."

பீலேயாம்  : " கீழ்ப்படிகிறேன் ஆண்டவரே !
கர்த்தாவே...உங்கள் வார்த்தைக்கு
விரோதமாக இந்த பிலேயாம் எதுவும்
செய்யமாட்டான்."

கர்த்தர் குரல் : "நல்லது ..அவர்களை
அப்படியே திருப்பி அனுப்பு."

பீலேயாம் :"அப்படியே செய்கிறேன் கர்த்தாவே..."

                               (  பீலேயாம் திரும்பி வந்து )
                              
பீலேயாம் (மூப்பர்களைப் பார்த்து ):
"கர்த்தர் எனக்கு அனுமதி தரவில்லை. நீங்கள்
போகலாம்.."

மூப்பர் 1: "இதுதான் உன் இறுதியான

முடிவா..."...

பீலேயாம் : "எனது முடிவல்ல......முடிவு
பண்ணுகிறவர் கர்த்தர் ..."

  மூப்பர் 2 : "உமக்கு போதுமான பணம்
  தருவதாக எங்கள் மன்னர் கூறுகிறார்.

கூடுதலாக எவ்வளவு வேண்டுமானாலும்

தர ஆயத்தமாக இருக்கிறார்."

பீலேயாம் : "தரட்டுமே..."

மூப்பர் 1.: "எல்லா அரசு மரியாதையும்
கொடுக்கப்படும்...
எல்லா வசதி வாய்ப்புகளும் செய்து தரப்படும்."

பீலேயாம் :" நீங்கள் என்ன தருவதாக இருந்தாலும்
எல்லாவற்றுக்கும்...என்னிடம் 

ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது.

மூப்பர் 2 :"நீர் சொல்வதை எல்லாம் செய்ய
மன்னர் ஆயத்தமாக இருக்கிறார்."

             (பீலேயாம் சற்று மனம் மாறியவனாக
              அங்குமிங்கும் நடத்தல் )
             
பீலேயாம் :  மறுபடியும் மறுபடியும் கேட்கிறீர்கள்.
உங்களுக்காக கர்த்தரிடம்
இன்னொருமுறை கேட்டுப்
பார்க்கிறேன்."

மூப்பர்கள் : "காத்திருக்கிறோம். இந்தமுறை

கண்டிப்பாக நல்ல பதிலோடு
வருவீர் என்று நம்புகிறோம்."

பீலேயாம் : "இங்கேயே தங்கி இருங்கள். 

                         வருகிறேன் "

            (பீலேயாம் தனியாகச் சென்று
            முழங்காற்படியிட்டு)
           
பீலேயாம் :    "கர்த்தாவே அவர்கள்

பிடிவாதமாக இருக்கிறார்கள்.நான்

என்ன செய்யட்டும்.

அடியேன் தங்கள்
உத்தரவுக்காக காத்திருக்கிறேன்."

கர்த்தர் குரல்  : "பீலேயாமே.... அவர்கள் விருப்பம் அதுவானால் அவர்களுடனே நீ போகலாம்.."

பீலேயாம் (மகிழ்ச்சியாக ):  "நல்லது ஆண்டவரே...."

கர்த்தர் குரல் : (உறுதியாக)"ஆனால் நான் உனக்குச் சொல்லுகிற
வார்த்தையின்படி மட்டுமே  செய்ய வேண்டும்."

பீலேயாம் : "அப்படியே செய்வேன்..ஆண்டவரே!

"என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவீர்களோ

அப்படியே செய்வேன்"
                       
                         
பீலேயாம்(் மகிழ்ச்சியோடு மூப்பர்களிடம்

வந்து) 
"கர்த்தர் அனுமதி தந்துவிட்டார்...
இதோ ஒரு நொடியில் வருகிறேன்"

மூப்பர்கள் :  "மகிழ்ச்சி....காத்திருக்கிறோம்"

  பீலேயாம் (வேலைக்காரர்களைப் பார்த்து ):
  "  யாரங்கே....கழுதைக்குச் சேணம்
   கட்டிக் கொண்டு வாருங்கள்."
  
       (      வேலைக்காரர்கள் கழுதையோடு வருதல் )
       
  பீலேயாம்( வேலைக்காரர்களைப் பார்த்து)  :
   " நீங்கள் இருவரும் என்னோடு வாருங்கள்.
மூவரும் போவோம்  மோவாப் மன்னரை
சந்தித்து வருவோம்.

மூப்பர்கள்  : "நாங்கள் முன்னால்
செல்கிறோம்.நீங்கள் பின்னால்
வாருங்கள்."

பீலேயாம் :      "இதோ..  வருகிறேன்.
(கழுதை மேல் பீலேயாம் அமர்ந்து செல்லுதல்)

                       (சிறிது தூரத்தில்

வயல்வெளியைப் பார்த்ததும்)

                      
கழுதை.  :ஹே...ஹே..
            (கழுதை கால்களை உயர்த்தி 

              கனைத்தபடி திடீரென
             வயலில் இறங்கியது. )

பீலேயாம்  : (அதட்டலாக )"ஏய்.. சும்மா போகமாட்டாய்..
பாதையில் செல்லும் போது உனக்கு
அப்படி என்ன பசி....
திராட்சை தோட்டத்தைக்
கண்டதும் குண்டக்கா மண்டக்கா
குதிக்கிறாய் ...
நேரே பாதை வழியாகப்  போ"


கழுதை.   : ஹே...ஹே...
           ( மறுபடியும் கழுதை கனைத்தது. )

பீலேயாம்  (கோபமாக) :"உன்னை...நாலு அடி
அடித்தால்தான்
உனக்கெல்லாம் புத்திவரும்."
                           (கழுதையை அடித்தல்)

பீலேயாம்  (கழுதையைப் பார்த்து ):
"வயல் வழியே வேண்டாம் ...
போ...போ..குறுக்கு சந்து வழியாக செல்."

  (கழுதை குறுக்கு சந்து வழியாகச் செல்லுதல்)
 (எதிரே தேவதூதன் வருதல்)
  கழுதை (தேவ தூதனைக் கண்டதும் ) : ஹே...ஹே..
(    கனைத்தபடி மேலே செல்ல மறுத்தது.)


  கழுதை மறுபடியும் கனைத்தபடி சுவர் ஓரமாக

ஒதுங்கியது . அப்போது பீலேயாம் கால்கள்

சுவரில் உரச கால்களிலிருந்து இரத்தம் வடிதல் )


                  

பீலேயாம்..: "ஆ.. இரத்தம்... அம்மா....
ஏய் கழுதையே....
நேரே போகத் தெரியாது..
என் காலை சுவரில் உரச வைத்து விட்டாயே....கழுதை...கழுதை
உன்னை என்ன செய்கிறேன் பார்..."
      ( மறுபடியும் பீலேயாம்
       கழுதையை அடி அடியென்று அடித்தல்)
     
கழுதை ( மனதிற்குள் ) : "ஆ....அம்மா..வலிக்குதே.இந்த மனிதருக்கு
நான் என்ன செய்தேன்.
என்னை இப்படிப்போட்டு அடிக்கிறாரே...."

பீலேயாம் : "சரியான பாதை வழியாகச் செல்.தில்லுக்கு முல்லு பண்ணாதே.

(கழுதை முணுமுணுத்தபடி ):

  " எந்த வழியாகச் சென்றாலும் இந்த
  தேவதூதர் வந்து வழி மறிக்கிறாரே ..

நான் என்ன  செய்வேன்? 
எதிரே ஆள் வர இடமே இல்லாத
இடுக்குவழியாகப் போனால்தான்
இந்த மனிதரிடமிருந்து  தப்பிக்கலாம்.
                    
(  கழுதை ஒரு ஆள் வரும்படியான இடுக்கான
 முடுக்கு வழியாக நுழைந்தது )

(அங்கேயும் தேவதூதர் வந்து வழி மறைக்க....)

கழுதை ( புலம்பியபடி ): "ஆ....என்ன இது ?
இதற்குமேல் என்னால்
ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது..

என்ன நடந்தாலும் நடக்கட்டும்.
அப்படியே படுத்துவிட வேண்டியதுதான்."

(நெடுஞ்சாண் கிடையாக கழுதை
படுத்துக் கொண்டது
)
 
பீலேயாம்  (கோபத்தோடு)  : " ஏய் என்ன பண்ணுகிறாய்...?
இவ்வளவு அடிபட்டும் உனக்குபுத்தி வரல...
எழும்பு.... எழும்பு...
இப்போ நீ எழும்பல...
உன்னை எழும்பவே விடாமல்  அடிச்சியே
கொன்றுவிடுவேன் ..."
            ( கழுதையை  ஓங்கி ஓங்கி அடித்தல்)
           
   கழுதை  ( முதல் முறையாக வாய் திறந்து ):"
" என்னை  ஏன் அடிக்கிறீர்கள்..?.."
          
பீலேயாம்  (கோபமாக ):  "ஏன் என்னை
அடிக்கிறீர்கள் என்றா கேட்கிறாய்...?!

கையில் வாளிருந்தால் உன்னை
அப்படியே வெட்டிப் போட்டிருப்பேன்..."

கழுதை : " என்னை வெட்டிப்
போடுமளவுக்கு நான் அப்படி
என்ன தப்பு செய்தேன்.?"

பீலேயாம்  :  "ஏய்...கழுதையே

என்னை எதிர்த்தா பேசுகிறாய்?.."

கழுதை : " இதுவரை உங்களோடு இருந்தேன்...
என்றாவது ஒரு தவறு செய்திருப்பேனா...?"

பீலேயாம் : " எல்லாவற்றிற்கும் சேர்த்து
வைத்து  இன்றைக்கு மொத்த
தப்பையும் செய்துவிட்டாயே..."

கழுதை  : " இன்றும் உங்களுக்கு
எதிராக வேண்டுமென்றே நான்
எதுவும் செய்யவில்லை....
என்னை நம்புங்கள்.."

பீலேயாம் :   " சும்மா மாய்மாலம் பண்ணாதே
...மாய்மாலக்காரா..."

  தேவதூதன்( முன்னால் வந்து ):  "பீலேயாம்...".

பீலேயாம் ( பயத்தோடு) யாரது...?.
என்னையா அழைத்தீர்கள்?"

தேவதூதன்  : "இதோ  நான் தான் ...
உனக்கு முன்பாகதான்
நிற்கிறேன்...என்னை தெரியவில்லை..

பீலேயாம் (கண்களை கசக்கியபடி):
   ஆ...ஆண்டவரே...இதோ அடியேன்...

                 (அப்படியே காலில் விழுதல் )

தேவதூதன் :" உன் கண்களைத் திறந்து பார்..."

பீலேயாம் :  ".கர்த்தாவே....அடியேனை மன்னித்தருளும்."

தேவதூதன் : " நீ உன் கழுதையை
எதற்காக மூன்று முறை
அடித்து துன்பப்படுத்தினாய் ?.."

பீலேயாம்  : " கழுதை பாதை விலகி
ஓடி எனக்கு இடையூறு
உண்டாக்கியது."

தேவதூதன் : "கழுதை மட்டுமா
பாதை தவறிச் சென்றது?"

பீலேயாம் : " புரியவில்லை ஆண்டவரே..."

தேவதூதன் : "நீயும்தான் பாதை தவறி செல்கிறாய் .."


பீலேயாம் : " நானா....நானா..நான் எங்கே?

தேவதூதன்  : புரியவில்லை....உன்னை தடுப்பதற்காகவே
மூன்றுமுறை எதிரே வந்து நின்றேன்.

பீலேயாம்(  ): நான் காணவில்லையே!

தேவதூதன்  : " என்னை காணக்கூடாதபடிக்கு
உன் கண்கள் கட்டப்பட்டருந்தன."

பீலேயாம்(  பயந்து நடுங்கியபடி ): ஆண்டவரே ....

தேவதூதன்  : " கழுதை என்னைக் கண்டு
மூன்றுமுறை வழி விலகிற்று."

பீலேயாம் : " ஆ....ஆண்டவரே! அடியேனை மன்னியும்.."

தேவதூதன் : " உன்னை கொன்று போட்டுவிட்டு
கழுதையை  உயிரோடு வைக்கவா...?."

பீலேயாம்  (கண்ணீரோடு )": ஐயோ...
நான் பாவம் செய்துவிட்டேனே ...."

தேவதூதன் : "உன்னை நான்
தனியாகத்தானே
போகச் சொன்னேன் "

பீலேயாம் : "ஆம்.... கர்த்தாவே ...
தவறு செய்து விட்டேன்.
நான் செல்வது உமக்கு விருப்பமில்லை
என்றால்   இதோ இப்போதே
திரும்பிப் போய்விடுகிறேன்."

தேவதூதன் : " வேண்டாம்....
இப்போது நான் சொல்வதைக்
கவனமாகக் கேள்..
நீ அந்த மனிதனுடனே போ...
ஆனால் அங்கு
போன பின்னர் நான் பேசும்
வார்த்தையை மட்டுமே
  நீ பேச வேண்டும் "
 
பீலேயாம்  (வணங்கியபடி )": " அப்படியே செய்கிறேன்..."

                             காட்சி  மூன்று
இடம் :  பாலாக் அரண்மனை
உறுப்பினர்கள்  :
( மோவாப்பின் மன்னர் பாலாக், பீலேயாம்,
  அமைச்சர், வீரர்கள் )

(பீலேயாமை எதிர்பார்த்து
பாலாக் வெகு நேரம்
காத்திருத்தல் )

பாலாக் (பீலேயாமைப் பார்த்து ) :
  " என்ன பீலேயாம் இவ்வளவு கால தாமதம்..?."

பீலேயாம்.  (வணங்கியபடி...)":
" இப்போதுதான் வந்துவிட்டேனே...
மன்னா..."

பாலாக் : "  தாமதத்திற்கான
காரணத்தைக் கூறவில்லையே..."

பீலேயாம் : " என்னால் எதுவும்
பேச முடியாத நிலையில் இருக்கிறேன்...."

பாலாக்  (சந்தேகத்தோடு) :"
"  அப்படி என்றால்.."

பீலேயாம்  (உறுதியுடன் ):" தேவன் பேசச்
சொன்ன வார்த்தையைத் தவிர
வேறு எதுவும் என்னிடம் இருந்து
எதிர் பார்க்காதீர்கள்."

பாலாக் : சரி...சரி போகட்டும்.
  களைப்பாக வந்திருப்பீர்...
வாரும் ...வந்து எம்மோடு நன்றாக
  புசித்து இளைப்பாறும்."
 
                (  அனைவரும் இளைப்பாறிய பின்னர்)
               
பீலேயாம் (மன்னரைப்பார்த்து) :
" நீங்கள்  ஏழு பலிபீடங்களை உருவாக்குங்கள்...
ஏழு காளைகளையும் ஏழு கிடாக்களையும்
கொண்டு சர்வாங்க தகனபலியிடுங்கள் "

  பாலாக் : " இதோ ஒரு நொடியில்...

 யாரங்கே?....பீலேயாம் சொல்வது போல்

அனைத்தையும் உடனே தயார் செய்யுங்கள்"

( வீரர்கள் அவசர அவசரமாக தயார் செய்தல்)

பீலேயாம் : " நீர் போய் அதனருகில் நின்று கொள்ளும்.
நான் தேவனிடத்தில் உத்தரவு பெற்று வருகிறேன்."

பாலாக்  :  "சென்று வாருங்கள்..நல்ல
செய்தியோடு வாருங்கள்."
                         
பீலேயாம் (முழங்காலில் நின்று ):" தேவனே...
இந்த பாலாக்கிற்கு நான்
என்ன சொல்ல வேண்டும்...."

கர்த்தர் குரல்:  "தேவன் சபிக்காதவரை
நீ யாரையும் சபிக்கக் கூடுமோ.?."

பீலேயாம் : " கூடாது..."

கர்த்தர் குரல் : " தேவனாலே
ஆசீர்வதிக்கப்படாமல் உன்னால்
ஆசீர்வதித்துவிடக் கூடுமோ...?"

பீலேயாம் : " கர்த்தாவே ....
இது என்ன கேள்வி...?.நான்
ஒன்றுமில்லாதவன்..நீர் பேசுகிறீர்..
நான் சொல்கிறேன்..."

கர்த்தர் குரல்  : " சரி...இப்போதும் போய்
நான் சொன்னதை அப்படியே

போய் சொல்."

பீலேயாம் : " அப்படியே சொல்கிறேன் கர்த்தாவே!"

        (   பீலேயாம் வருதல் )

பாலாக் (நக்கலாக ): " என்ன ..
.உன் கர்த்தர் என்ன சொன்னார்."

     ( பீலேயாம் மூலமாக கர்த்தர் பேசுதல் )
    
பீலேயாம்  : (பேசுதல்)

தேவன் சபிக்காதவனை நான்
சபிப்பதெப்படி?
கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
யாக்கோபின் தூளை எண்ணத் தக்கவன் யார் ?
இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன்யார் ?

பாலாக் : "என் சத்துருக்களை சபிக்கும்படி
உம்மை அழைத்தேன்.
நீர் என்னவோ என்றால் அவர்களை
ஆசீர்வதிக்கிறீர் ....."

பீலேயாம் : கர்த்தர் என் வாயில்
அருளினதையே சொல்வது
என் கடமை அல்லவா!

பாலாக் : போதும்...போதும்....

இப்போது நிறுத்தும்..
இங்கே வேண்டாம்.
என்னோடே வேறு இடத்திற்கு
வாரும் .அங்கிருந்து
எனக்காக நீர் அவர்களைச்
சபிக்க வேண்டும்.

(இருவரும் வேறு இடத்திற்கு சென்று
எல்லாம் ஆயத்தப்படுத்துதல்)

பீலேயாம்.:  (கர்த்தர் பேசுதல் )
  " பாலாக்கே...கேளும்.
சிப்போரின் குமாரனே எனக்கு
செவி கொடும்.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல..
மனம்மாற அவர் மனுபுத்திரனும் அல்ல...
இதோ ஆசீர்வதிக்க கட்டளை பெற்றேன்.
நான் அதை திரும்பப் பெறக் கூடாது.
அவர் யாக்கோபில் அக்கிரமத்தைக்
காண்கிறதும் இல்லை.
இஸ்ரவேலிலே குற்றத்தைப் பார்க்கிறதுமில்லை."

பாலாக் : " நீர் என்ன சொல்ல வருகிறீர்."

  கர்த்தரின் குரல் :  : "யாக்கோபுக்கு எதிரான
  மந்திரவாதமும் இல்லை.
இஸ்ரவேலருக்கு எதிரான குறி
சொல்லுதலும்
இல்லை."

     பாலாக்   ( கோபத்தோடு):
  "நீர் சபிக்கவும் வேண்டாம்..
குறி சொல்லவும் வேண்டாம்...
நிறுத்தும் "

பீலேயாம் : "நான் சொல்லவில்லையே...
கர்த்தர் சொல்வதைத் தவிர
வேறு எதுவும் என் நாவிலிருந்து
புறப்படுவதில்லை "

பாலக் : "இங்கிருக்க வேண்டாம்.
வாரும் வேறு இடத்திற்குச்
செல்லுவோம்...
அப்போதாவது உன் தேவன்
அவர்களைச்  சபிக்கச்
சொல்கிறாரா பார்ப்போம்..."

         ( வேறு இடத்திற்குச் சென்று பலிபீடம்
          ஆயத்தம் செய்தல் )
         
பீலேயாம்:் "தேவனே...இந்த மனுசனின்
எண்ணத்தை நீர்
அறிந்திருக்கிறீர்..இப்போது நான்
என்ன சொல்லட்டும்.."

கர்த்தரின் குரல் : "நீ போ ....
நான் பேசுகிறேன்."

  பாலக் (ஆர்வமாக ):  "இப்போது
  உன் கர்த்தர்
  என்ன சொல்லுகிறார் ?

பீலேயாம் (மூலமாக கர்த்தர்  ):

"யாக்கோபே உன் கூடாரங்களும்
இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும்
எவ்வளவு அழகானவை....
தேவன் அவர்களை எகிப்திலிருந்து
புறப்படப்பண்ணினார்.
காண்டாமிருகத்துக்கு ஒத்த பலன்
அவர்களுக்கு உண்டு.
அவர்கள் தங்கள் சத்துருக்களைப் பட்சித்து
அவர்கள் எலும்புகளை நொறுக்குவார்கள்.
அவர்களை ஆசீர்வதிக்கிறவன்
ஆசீர்வதிக்கப்பட்டவன். அவர்களை
சபிக்கிறவன் சபிக்கப்பட்டக்கடவன்."

பாலாக்கோபமாக ) :" ஏய்...
என்ன சொல்கிறாய்.... ?எங்களையே
சபிக்கிறாயா..?..ஓடிப் போய்விடு
இல்லை என்றால்...என்ன செய்வேன்
  என்று  எனக்கே தெரியாது..."

பீலேயாம் :" நானாக உங்களிடம்
பேசவில்லை...என்
கர்த்தர் சொல்வதையே
சொல்வேன் என்றேனே..."

பாலாக் (  உரத்த குரலில் ):.
"இங்கிருந்து திரும்பி பார்க்காமல்
ஓடிவிடு"

(பாலாக் பீலேயாமை விரட்டுதல்.)

பீலேயாம்  :" போகிறேன்.. கேளும்

.இதோ
கர்த்தர் சொல்கிறார்

ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து
உதிக்கும்.
ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து
எழும்பும்.

இவை நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இவற்றை உம் கண்கள் காணும்.

     (   என்றபடியே பீலேயாம் செல்லுதல் )

    (  திரை விழுதல்)  
 






Comments

  1. நாடகப் பாணிக் கதை சிறப்பாக இருந்தது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts