யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்...


யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்....
"யாகாவா  ராயினும் நாகாக்க  காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு "
                          குறள்  :  127 

யா    _ எதை ,எவை
காவார்  _ காத்துக்கொள்ள மாட்டார்
ஆயினும்  _  ஆனாலும்
நா  _  நாக்கு 
காக்க  _  காத்துக் கொள்க  
காவாக்கால்  _ காத்துக் கொள்ளாவிட்டால்
சோகாப்பர்  _ துன்பம் அடைவர்
சொல்   _ மொழி  , வாக்கு ,பேச்சு ,
இழுக்கு  _  குற்றம்
பட்டு  _  உற்று  , அகப்பட்டு

எவற்றைக் காத்துக் கொள்ளாவிடினும் 
நாவினை மட்டுமாவது காத்துக் கொள்க.
அப்படி காத்துக் கொள்ளாது போனால்
சொற்குற்றத்தில் அகப்பட்டு  துன்பம்
அடைய நேரிடும்.

விளக்கம்  : 

காக்கவேண்டியவை எவ்வளவோ உள்ளன.
அவற்றை எல்லாம் காக்க வேண்டிய பொறுப்பு
நமக்கு உண்டு.
ஆனால் அவற்றை எல்லாம் காக்காமல்
போனாலும் பரவாயில்லை.
நாவினை மட்டுமாவது காத்துக்
கொள்ளுங்கள்.
ஒருமுறை நாவிலிருந்து புறப்பட்ட வார்த்தையைத்
திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது.
பேசுவதற்குமுன் ஆயிரம் முறை 
யோசிக்க வேண்டும்.

ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்.
பேசாமல் இருத்தல் மட்டுமே அழகு.
பேசாத வார்த்தைக்கு ஆயிரம்
அர்த்தங்கள் உண்டு.
நாக்கு அடங்காத தன்மை கொண்டது.
அது கொடுமையான ஆயுதம் என்றுகூட
சொல்லலாம்.
வில்லிலிருந்து எய்தப் பட்ட அம்பு
போன்றது நமது பேச்சு.
ஒருமுறை  எய்த அம்பு 
ஒருபோதும் உறைக்குத் திரும்ப வராது.
அதனால் ஏற்படும் பாதிப்பைச் 
சரிசெய்துவிடவும் முடியாது.

மனிதர்கள் நட்பு, உறவு எல்லாம்
இழந்து போவதற்கு காரணம்
நமது பேச்சுதான்.
பலநேரங்களில் தீராத பகையைக்
கொண்டுவந்து சேர்க்கும்.
ஆதலால் நாவினைக் காத்துக்
கொள்ளுங்கள் இல்லை என்றால்
பெருந்துன்பத்திற்குள்ளாவீர்கள்
என்கிறார் வள்ளுவர்.

English couplet. : 

"What're they fail to guard ,o'er lips men guard should keep
If not , through fault of tongue ,they bitter tears shall weep"

Explanation : 

Whatever besides you leave unguarded , guard
Your tongue ; otherwise errors of speech
And the consequent misery will ensure.

Transliteration: 

"Yaakaavaa Raayinum Naakaakka kaavaakkaal
Sokaappar sollizhukku pattu "



Comments

Popular Posts